Tuesday, November 13, 2018

Vaatapi - story

ஐந்தாம் வேதம் J.K. SIVAN 
மஹா பாரதம்

''வாதாபி ஜீர்ணாபி''

மகரிஷி வைசம்பாயனர் தொடர்ந்து ஜனமேஜயனுக்கு சொல்கிறார்:

"யுதிஷ்டிரன், லோமசர், தௌமியர் மற்றும் அனைவரும் நைமிஷம் நீண்ட நேரம் நடந்தபின் ஒரு நாள் விடிகாலை நைமிஷம் அடைந்தார்கள். பித்ருக்கள், பிராம்மணர்கள் ஆகியோருக்கு ப்ரீதி செய்தார்கள். கன்யாதீர்த்தம், அச்வதீர்தம், கோ தீர்த்தம்ஆகியவையில் ஸ்நானம் செய்தார்கள். பிரயாகை, கங்கை யமுனை சங்கமத்தில் ஸ்நானம், வேதி தீர்த்தம், கயா, மகாநதி, பிரம்ம ஸாரா என்றெல்லாம் தேடிச் சென்று மனதும் உடலும் குளிர ஸ்நானம் செய்து, தேவ, பித்ரு கடன்களை ஸ்ரத்தையாக செய்தார்கள். அங்கிருந்து அகஸ்தியர் ஆஸ்ரமம் சென்றார்கள்.

'' யுதிஷ்டிரா, இதோ பார் இங்கு தான் அகஸ்தியர் வாதாபியைக் கொன்றார்'' என்று லோமசர் கையை நீட்டி ஒரு இடத்தை காட்டினார்.
' மகரிஷி ஏன் அகஸ்தியர் வாதாபியை கொன்றார் என்ற விருத்தாந்தம் கூறவேண்டும்'' 
லோமசர் நீளமாக சொன்னதை சொன்னதை இங்கே சுருக்கமாக தருகிறேன் :

''மணிமதி நகரத்தில், இல்வலன் என்று ஒரு ராக்ஷசன். அவன் தம்பி வாதாபி. ஒரு முனிவரிடம் அந்த ராக்ஷசன் ''சுவாமி எனக்கு இந்திரன் போல் ஒரு பிள்ளை வேண்டும். அனுக்ரஹம் செய்யுங்கள்'' என்றான். அவர் அவ்வாறு வரமளிக்கவில்லை. இல்வலன் கோபம் கொண்டு அன்று முதல் ரிஷிகள்-பிராமணர்களை கொல்ல தொடங்கினான். இதை ஒரு நாடகமாடி ரசித்தான். அந்த திட்டம் என்னவென்றால், இல்வலன் வாதாபியை ஒரு ஆடாக உருமாற செய்வான். வாதாபியும் நினைத்த உருமாறும் ராக்ஷஸன் அல்லவா? ஆகவே கொழுத்த ஆடாக மாறிவிடுவான்.

இல்வலன் ரிஷி-பிராமணர்களை வரவழைத்து, உபசரித்து, அவர்களுக்கு போஜனம் செய்விப்பான். அந்த ஆகாரத்தில் வாதாபி உள்ளே இருப்பான். ரிஷிகள்-பிராமணர்கள் வயிற்றில் அவன் ஆகாரமாக சென்றவுடன், ரிஷிகளுக்கு தாம்பூல உபச்சாரம் செயது சிரமபரிகாரம் செய்விப்பான். பிறகு இல்வலன் '' வாதாபி வெளியே வா'' என்பான். உடனே கூரான கொம்புள்ள ஆடாக ரிஷி-பிராமணர்கள் வயிற்றை பிளந்து, கிழித்துக்கொண்டு வாதாபி வெளியே வருவான். ரிஷிகள் பிராமணர்கள் வயிறு கிழிந்து ஸ்தலத்திலேயே மரணமடைவார்கள். இல்வலன், வாதாபி இருவரும் சிரித்து மகிழ்வார்கள். இது தான் இல்வலன்-வாதாபி விளையாட்டு. இப்படியே நிறைய ரிஷிகள் பிராமணர்கள் மாண்டார்கள்.

இதற்கிடையில், அகஸ்தியர் தமது முன்னோர், அகஸ்தியர் கல்யாணம் செயது கொள்ளாததால் வம்சம் விருத்தி அடையாததால் பித்ருலோகம் செல்ல முடியாமல் புத் என்கிற நரகத்தில் உழல்வதை கண்டு தவிப்பதை பார்க்கிறார். உடனே லோபாமுத்ரையை மணந்துகொள்கிறார். அவளுக்கு தேவையான ஆபரணங்களை அளிக்க அவரிடம் செல்வம் இல்லை. ஒரு அரசனை அணுக, அவன் ''மகரிஷி நீங்கள் இங்கே இல்வலன் என்ற மிகுந்த செல்வம் உள்ளவரிடம் செல்லுங்கள். அவனைக் கேட்டால் கிடைக்கும் என, அவனிடம் செல்கிறார் அகஸ்தியர்.

இல்வலன் குள்ளமாக குண்டாக எதிரே நிற்கும் அகஸ்தியரைப் பார்த்தான். அகஸ்தியர் நல்ல ரிஷி இன்று வசமாக நம்மிடம் தானே வந்து அகப்பட்டார் அவரைக் கொல்லலாம் என திட்டமிட்டான். அவனும் வாதாபியும் வழக்கம்போல் அவரை உபசரித்து போஜனம் செய்விக்கிறார்கள். அவருடைய உணவில் வாதாபி உள்ளே புகுந்து அவர் வயிற்றை நிரப்பினான்.

''அகஸ்திய ரிஷியே , வயிறு நிறைய உண்டீர்களா?'' என்று பவ்யமாக கேட்டான் இல்வலன்.

''ஆமாம் அப்பனே மிகச் சிறந்த உணவு கொடுத்தாய், வயிறு நிறைந்தது என்று வயிற்றைத்தொட்டு நன்றாக தடவினார் அகஸ்தியர்''

''அப்படியா சேதி, இப்போது பாருங்கள் என்று சிரித்து விட்டு ''வாதாபி வெளியே வா!!'' என்று வழக்கம்போல் கூப்பிட்டான் இல்வலன்.

'' ஒரு ஏப்பம் தான் பதிலாக அகஸ்தியரிடம் இருந்து வந்தது''

''வாதாபி, வாதாபி. வா வெளியே'' என்று கத்தினான் இல்வலன்.

''ஏனப்பா உன் தம்பி வாதாபியை கூப்பிடுகிறாய், எங்கே அவன் ?
''நீங்கள் சாப்பிட்ட உணவில் கலந்து உங்கள் வயிற்றில் கூரான கொம்புகள் ஆண்ட ஆடாக உள்ளான். இப்போது உங்கள் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வருவான். பார்க்க தான் நீங்கள் இருக்க மாட்டீர்கள்'' என்று சிரித்தான் இல்வலன்.

'' ஓ அப்படியா. என் உணவாக வாதாபி என் வயிற்றில் இருந்தானா. அடேடே அவன் ஜீர்ணாபி'' --வாதாபி ஜீரணமாகி விட்டானே. எப்படி வருவான், அவன் தான் என் ரத்தத்தில் கலந்துவிட்டானே'' என்று சிரிக்கிறார் அகஸ்தியர்.

இல்வலன் நடுங்கிவிட்டான். கைகூப்பி அகஸ்தியரை வணங்கி நான் செய்த தவறுக்கு மன்னிக்கவேண்டும். எனக்கு கட்டளையிடுங்கள்'' என்கிறான்.

''உன்னுடைய செல்வத்தை எல்லோருக்கும் அளித்து உன் பாபத்திற்கு பரிகாரம் தேடு'' என்கிறார்.

அகஸ்தியரும் லோபாமுத்ரைக்கு ஆபரணங்கள் வழங்கி மகிழ்வித்து அவர்களுக்கு சந்ததி பிறந்து அவரது முன்னோர்கள் ''புத்'' என்ற நரகத்திலிருந்து விடுபட்டனர். வாழ்த்தினர் என்று கதை செல்கிறது.

அகஸ்தியர் ஆஸ்ரமம் அருகே பாகீரதி நதி நீண்டு ஒரு பெரிய சர்ப்பமாக மலை முகடுகளிடையே பின்னிப் பின்னி ஓடுகிறது.

தீர்த்த யாத்திரை தொடர்கிறது.

Image may contain: 2 people, people smiling, outdoor

No comments:

Post a Comment