Wednesday, November 14, 2018

Srimad Bhagavatam skanda 5 adhyaya 1 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம் ஸ்கந்தம் 5

அத்தியாயம் 1

ப்ரியவ்ரத வம்சம்

பரீக்ஷித் வினவினார். 
முனிவரே பிரியவ்ரதர் சிறந்த பாகவதரும் ஆத்மஞானியும் ஆயிற்றே? அவர் எவ்வாறு க்ருஹஸ்த தர்மத்தை மேற்கொண்டார்? மனைவி மக்கள் என்ற பற்றுடையவருக்கு எஞ்ஞனம் கிருஷ்ண பக்தி சாத்தியமாகும்?

சுகர் கூறினார். 
ப்ரியவ்ரதர் நாரதருடைய உபதேசத்தால் ஆத்மஞானம் வரப்பெற்று சத்ரயாகத்தால் பகவானை ஆராதிக்க முற்பட்டார். ஆனால் ராஜ வம்சத்தில் பிறந்து ராஜ்யத்தை ஆள வேண்டிய அனைத்து குணநலன்களும் கொண்டிருந்ததால் அவருடைய தந்தையால் அரசபதவியை ஏற்கும்படி பணிக்கப் பட்டார். தந்தையின் ஆணையை மீறுவது என்பது முடியாத காரியம் என்று அறிந்தும் அவர் மனம் உலக வாழ்வை விரும்பவில்லை.

அப்போது பிரஜாஸ்ருஷ்டியை விரிவு படுத்த எண்ணம் கொண்ட பிரம்ம தேவர் அனைத்து தேவர்களுடனும் மகாரிஷிகளுடனும் அங்கு வந்தார். அங்கு வந்திருந்த நாரதராலும் ப்ரியவ்ரதராலும் பூஜிக்கபட்டார்.

பிரம்மா கூறியது 
"ஜீவன் முக்தன் ஆனாலும் இந்த உடல் உள்ள வரையில் பிராரப்த கர்மத்தை அனுபவித்துக்கொண்டு தேக யாத்திரையை கடக்க வேண்டும். ஆனாலும் இவ்வுலக சுகத்தை நாடாதவனாக இருந்தால் வேறு ஜன்மம் இல்லை. இந்த்ரியங்களை ஜெயிக்காதவன் வனத்தில் தவம் செய்யப்போனாலும் உட்பகையான காம க்ரோதாதிகள் அவனை ஜெயித்துவிடும். அதனால் அவற்றை க்ருஹஸ்தாஸ்ரமத்தில் இருந்து கொண்டே ஜெயிக்க வேண்டும். நீ பரந்தாமனின் பாதமாகிற ஸ்திரமான கோட்டைக்குள் இருந்துகொண்டு உட்பகையை வென்றவன்.,ஆதலால் நீ பயமின்றி பகவானால் கொடுக்கப்பட்ட போகங்களை பற்றின்றி அனுபவித்தபின் எல்லாவற்றையும் துறந்து ஆத்மாவில் லயிக்கலாம்.

பிரம்ம தேவரின் ஆக்ஞைப்படி ப்ரியவ்ரதர் ஸ்வாயம்புவமனுவால் அரசராக்கப்பட்டு பற்றற்றவராக ஆட்சி புரிந்தார். பின்னர் விஸ்வகர்மா என்னும் பிரஜாபதியின் மகளான பர்ஹிஷ்மதியை மணந்து அவளிடத்தில் தனக்கு சமமான பத்து புத்திரர்களையும் ஊர்ஜஸ்வதி என்ற பெண்ணையும் பெற்றார். அந்த பத்து புத்திரர்களில் மூவர் பிறவியிலிருந்தே ஆத்ம ஞானிகளாக இருந்தனர்.

மற்ற ஏழு புதல்வர்கள் ஜம்புத்வீபம் முதலிய ஏழு த்வீபங்களுக்கு அதிபதியானார்கள் . ஊர்ஜஸ்வதி என்ற பெண்ணை சுக்ராச்சாரியாருக்கு மணம் செய்து கொடுத்தார். அவளிடத்தில் சுக்ராச்சாரியாருக்கு தேவயானி என்ற புதல்வி பிறந்தாள்.
ப்ரிய்வ்ரதரின் இன்னொரு மனைவியிடத்தில் மூன்று புதல்வர்கள் தோன்றினர். இவர்கள் உத்தவன் , தாமஸன், ரைவதன் என்ற மன்வந்தராதிபதிகள் ஆனார்கள்.

சூரியன் மேரு மலையைச் சுற்றி வரும்போது ப்ரியவ்ரதர் தன் தேரில் சூரியனுடன் சுற்றி வந்தாராம். அந்தத் தேரின் சக்கரம் ஏற்படுத்திய பள்ளங்களே ஏழு சமுத்திரங்கள் ஆயின என்றும் அதனால் பிரிக்கப்பட்ட பூமியே ஜம்புத்வீபம் முதலிய ஏழு கண்டங்கள் ஆயின என்றும் கூறப்படுகிறது.

ஜம்புத்வீபம் என்பது தற்போதைய ஆசியா. இதைப் பற்றி விவரமாகப் பின்னால் கூறப்படுகிறது. 
இவ்விதம் பூமியை புதல்வர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டு ப்ரியவ்ரதர் நாரதரின் உபதேசப்படி துறவறம் பூண்டார்

  

No comments:

Post a Comment