Tuesday, November 20, 2018

Srimad Bhagavatam skanda 5 adhyaya 7,8 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத் பாகவதம் - ஸ்கந்தம் 5- அத்தியாயம் 7,8

அத்தியாயம் 7- பரதோபாக்யானம் 
மஹா பாகவதரான பரதர் பூமியை பரிபாலிக்க வேண்டியது பகவத்சங்கல்பம் என்று உணர்ந்தவராய் அந்த கடமையை நிறைவேற்றுவதில் முழு மனத்தராய் விச்வரூபரின் பெண்ணான பஞ்சஜனியை மணந்துகொண்டார் . அவளிடம் தனக்கு நிகரான ஐந்து புத்திரர்களைப் பெற்று தருமம் தவறாதவராக பிரஜைகளை ஒரு தந்தையைப்போல் பரிபாலித்து வந்தார்.

அவருக்கு வாசுதேவரிடத்தில் பக்தியானது மேன் மேலும் வளர்ந்து வர ஒரு கட்டத்தில் கர்மத்திலிருந்து விடுதலையை நாடி தன் புத்திரர்களுக்கு ராஜ்ஜியத்தையும் செல்வத்தையும் பிரித்துக் கொடுத்து விட்டு அரண்மனையிலிருந்து வெளியேறி புலஹாச்ரமம் அடைந்தார்.

அங்கு ஏகாந்தமாக இருந்து கொண்டு பகவானை ஆராதிப்பவராக பற்றற்று பரம சாந்தராக இருந்து பரமானந்தத்தை அனுபவித்தார். இவ்விதம் இடையறாத பகவதாராதனையால் தியானத்தில் ஆழ்ந்து ஆனந்த வெள்ளத்தில் புத்தியும் முழுகிப்போக தன்னையும் தன் ஆராதனையையும் கூட மறந்தார்.
பிறகு மான்தோல் ஆடையுடன் செம்பட்டை பாய்ந்த ஜடையுடன் ப்ரகாசிப்பவராய் பொன் போலொளிரும் பரம புருஷனை சூரிய மண்டலத்தில் சூரிய ரிக் மந்திரத்தால் வழிபட்டார்.

'பரோ ரஜ: ஜாதவேத: தேவஸ்ய பர்கோ மனஸா இதம் ஜஜான. ஸுரேதஸாத: புனராவிச்ய சஷ்டே ஹம்ஸம் க்ருத்ராணம் ந்ருஷத்ரிம் கிராம் இம: '
இதன் பொருள், 
'பரம தேஜஸ் வடிவமான சூர்யநாராயணரும் ( சூரியனாக வடிவெடுத்த பகவான் நாராயணன்) , ரஜஸ் கலக்காத சுத்த் சத்வமாணவரும், கரம பலன்களைத் தருபவரும் , இந்த உலகை சங்கல்பமாத்திரத்தில சிருஷ்டித்தவரும், பின் அந்தர்யாமியாக ஜீவர்களை ரக்ஷிப்பவருமான அந்த ஜ்யோதியை சரணடைவோமாக.'

(சாந்தோக்ய உபநிஷத்,' ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மய: புருஷ: த்ருச்யதே ஹிரண்யச்மச்ரு, ஹிரண்ய கேச ஆப்ரணகாத் சர்வம் ஏவ ஸுவர்ண:,' இதன் பொருள், ஆதித்ய மண்டலத்தில் ஒரு பொன் மயமான புருஷன் காணப்படுகிறான். பொன் மயமான தாடி, பொன்மயமான கேசம் , நகநுனி வரை எல்லாம் தங்க மயம்)

அத்தியாயம் 8.

ஒரு சமயம் பரதர் மகாநதியில் நீராடிவிட்டு நித்ய நைமித்திக கர்மங்களை முடித்து பிரணவ ஜபம் செய்துகொண்டு நதிக்கரையில் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு பெண்மான் நீர் அருந்த அங்கு வந்தது. அது நீர் அருந்தும்போது சிங்கத்தின் கர்ஜனை கேட்டு பயந்து அக்கரையில் தாண்டி குதித்தது. அப்போது கர்ப்பமாயிருந்த அதன் கருவிலிருந்த சிசு நழுவி நதியில் விழுந்தது. அந்த மான் பயத்தினாலும் சோகத்தினாலும் ஒரு குகையில் வீழ்ந்து இறந்தது.

நீரோட்டத்தில் அடித்துச்செல்லப்படும் மான்குட்டியைக் கண்ட பரதர் கருணை கொண்டு அதைக் காப்பாற்றி ஆச்ரமத்திற்குக் கொண்டுபோனார்.

எல்லாவற்றையும் துறந்து ஆஸ்ரமம் வந்த பரதர் அந்த மான் குட்டியிடம் அளவிலாத அன்பு கொண்டு அதை பராமரிப்பதிலும் போஷிப்பதிலும் நாட்டம் உள்ளவராக சிறுகச் சிறுகத் தன் நியமங்களையும் மறந்து அந்த மான் குட்டியிடம் பற்றுக்கொண்டு சம்சாரி ஆகிவிட்டார்.

அதை காணாத போது பரிதவிப்பதும் அதைக்கண்டபோது ஆசையுடன் குழந்தையைப் போல் கொஞ்சுவதுமாக யோகானுஷ்டானத்தில் இருந்து நழுவியவரானார்.

மான்குட்டி ரூபத்தில் வந்த அவர் பிராரப்த கர்மம் அவரை ஆத்ம சிந்தனையை இழக்கும்படி செய்துவிட்டது. இதற்கிடையில் எலிவளையில் பாம்பு நுழைவதைப் போல் மரணகாலம் வந்து விட்டது அப்போது கூட அந்திம ஸ்ம்ருதி அந்த மான் குட்டியைப் பற்றியே இருந்ததனால் அடுத்து மான் பிறவியை அடைந்தார்.

அந்தப்பிறவியிலும் முன் ஜன்ம நினைவு உள்ளவராக மான் ஜன்மம் வந்த காரணத்தை உணர்ந்து ஆசையை ஒழித்து காய்ந்த புல்லையும் இலையையும் தின்று தன் முடிவு காலத்தை எதிர்பார்த்திருந்தார். அந்திம காலம் வந்தபோது புண்ணியமான நதியில் தன் மான் உடலை நீத்தார்.

அடுத்து ஜடபரதரின் வரலாறு.

  

No comments:

Post a Comment