நாரதபக்திசூத்ரம் 7
ஸா ந காமயமானா நிரோதரூபத்வாத்
. அது ஆசை அல்ல . துறவு.
பக்தி என்பது இறைவனிடம் ஏற்படும் காதல். 'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ,' என்று உருகி உருகி வணங்க வேண்டுமென்று திருஞானசம்பந்தர் பெருமான் குறிப்பிடுகிறார்...
காதல் என்பது தற்காலத்தில் ஆண் பெண் உறவைக் குறிக்கும் சொல்லாகவே வழங்கப்படுகிறது. இதுதான் காமம் என்பது. காதல் என்றால் அன்பு என்று பொருள்
. உண்மையான காதல் என்பது உண்மையான அன்பு. இது தாய்க்கும் மகனுக்கும் , சகோதரனுக்கும் சகோதரனுக்கும் சகோதரிக்கும் உள்ளது. தன்னைப்பற்றிய சிந்தனை இல்லாமல் இருக்கும் தன்னலமற்ற அன்பு.
இது இறைவனை நோக்கி இருக்குமானால் அதுவே பக்தி. இறைவனை எந்த முறைப்படியும் காதலிக்கலாம். நாயகனாக, தந்தையாக, தாயாக , என் குழந்தையாகக் கூட பக்தர்கள் நேசிக்கின்றனர். மீரா , ஆண்டாள் , ஆழ்வார்கள் , நாயன்மார்கள் எல்லோரும் இதற்கு உதாரணம்.
மீரா பிருந்தாவனம் சென்ற போது ஜீவகோஸ்வாமியின் சீடர்கள் அவர் ஆஸ்ரமத்தில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று கூறினார். அதற்கு மீரா கண்ணன் ஒருவன்தான் புருஷன் மற்றவர் எல்லோரும் ஸ்திரீகளே என்றுரைத்தாள். அவனே பரம புருஷன் மற்ற ஜீவர்கள் அவனுடைய பத்தினிகள். அதுவே மதுரபக்தி என்று சொல்லப்படுகிறது.
இந்தக் கருத்தை பாகவதத்தில் ராசக்ரீடை அத்தியாயத்தில் விரிவாகக் காணலாம்.. அதனால்தான் ராசகிரீடை அத்தியாயம் பாகவதத்தின் ஆன்மா எனப்படுகிறது. சொன்னவர் சுகர் பிரம்மஞானி. கேட்டவர்கள் முற்றும் துறந்த முனிவர்கள். உடலை விட்டு பரமபதம் அடையப்போகும் ஒருவனுக்காகச் சொல்லப்பட்டது. அதனால் இதன் கருத்து என்னவென்றால் இந்த உடல் பற்றை விட்டு அவன் மேல் பற்று வைக்கவேண்டும் என்பது.
.இதுதான்ஆசை அல்ல துறவு என்பதன் அர்த்தம். திருவள்ளுவர் 'பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று விடற்கு,' என்று கூறுகிறார். இறைவன் மேல் ஆசை வந்தால் மற்ற ஆசைகளெல்லாம் அற்றுப்போகும்.
ஆனால் இதை துறவு என்று கூறுவது எதனால்? ஆசை அறுமின் ஆசை அறுமின் ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்பதற்கு என்ன பொருள் என்று பார்த்தால். பக்தி முற்ற முற்ற அவனை அடையவேண்டும் என்ற ஆசையும் போய் 'அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிற யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்,' என்றுஆழ்வார் கூறியது போல் நாமஸ்மரணமே இன்பம் என்ற நிலைதான் துறவு நிலை.
இதை அடுத்த சூத்திரம் விரிவாக விளக்குகிறது.
No comments:
Post a Comment