Friday, November 9, 2018

Srimad Bhagavatam skanda 4 adhyaya 30 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம்4 அத்தியாயம் 30

விதுரர் வினவினார். 
"பர்ஹிஷத்தின் புத்திரர்களான ப்ரசேதஸர்கள் ருத்ரகீதையினால் ஹரியை சந்தோஷப்படுத்தி சித்தி அடைந்தனர் என்று கேட்டுள்ளோம்., அதைப்பற்றி அறிய விரும்புகிறேன்.'

மைத்ரேயர் கூறலுற்றார்.
பர்ஹிஷத்தின் பிள்ளைகளான பிரசேதஸர்கள் பிதாவின் கட்டளைப்படி சமுத்திரத்தின் மத்தியில் ருத்ரன் உபதேசித்த ஜபயக்ஞமாகிய தவத்தால் பகவானை சந்தோஷப்படுத்தினர். பகவான் தன் திவ்யமங்கள ஸ்வரூபத்துடன் கருடன் மேல் மேருமலையின் மேல் ஒரு கார்மேகம் போல் ஆவிர்பவித்து அருளினார்.

பகவான் கூறியது.
"பிதாவின் கட்டளையை ஏற்று ருத்ரகீதையால் என்னை மகிழ்வித்த நீங்கள் பெரும் புகழுடன் விளங்குவீர்கள்.உங்களுக்கு பிரம்மதேவரை ஒத்த ஒரு புதல்வன் பிறப்பான். அவனுடைய சந்ததிகள் இந்த பூமி முழுவதும் பெருகுவார்கள்."

" கண்டு என்ற மகரிஷிக்கும் பிரம்லோச்சா என்ற அப்ஸரஸ்த்ரீக்கும் பிறந்த பெண் குழந்தை அதன் தாயால் கைவிடப்பட்டு மரங்களின் தேவதைகளால் வளர்க்கப்பட்டது. பசியால் அழுத அந்தக் குழந்தைக்கு சந்திரன் அமுதம் ஊறும் தன் விரலை சுவைக்கக் கொடுத்தான்.ப்ரஜோற்பத்திக்காக உங்கள் பிதாவால் ஏவப்பட்ட நீங்கள் அவளை மணம் செய்வீராக.

பல்லாயிரக்கணக்கான வருடங்கள் பின்னர் பற்று நீங்கி என்னை வந்தடைவீர்கள்." என்று கூறி பக்தியை மட்டுமே வரமாகக் கேட்ட அவர்களுக்கு அதை அருளி பகவான் அங்கிருந்து சென்றுவிட்டார்.

அதன் பின் தங்கள் நாட்டை அடைந்த அவர்கள் ராட்சத மரங்கள் பூமி முழுவதும் ஆக்கிரமித்து வானத்தையும் மறைக்குமாறு வளர்ந்திருப்பதைக் கண்டு கோபம் கொண்டு அவர்களின் தவ வலிமையால் நெருப்பையும் காற்றையும் உண்டுபண்ணி அவைகளை அழிக்க முற்பட்டனர்.

மரங்கள் முழுவதும் அழியும் நிலையைக் கண்ட பிரம்மதேவர் அங்கு வந்து பிரசேதஸர்களை சமாதானம் செய்தார். அப்போது மரங்கள் தங்களால் வளர்க்கப்பட்ட மகளை அவர்களுக்கு மணம் செய்து கொடுத்தன. அவளுக்கு ருத்ரனின் சாபத்தால் அழிந்த தக்ஷ பிரஜாபதி மறுபிறவியில் மகனாகப் பிறந்தார். அவரும் பிரம்மதேவரால் மக்களை சிருஷ்டிக்குமாறு பணிக்கப்பட்டார்.

தக்ஷ ப்ரஜாபதியின் மறு பிறப்பைப் பற்றி பின்னொரு அத்தியாயத்தில் காணலாம்.

  

No comments:

Post a Comment