*நவராத்திரி உருவான கதை*
ரம்பன் என்பவனுக்கும் எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் பிறந்தவன்தான் மகிஷன். அதனால்தான் மனிதஉடலும் எருமை தலையுடன் தோன்றினான். மகிஷன், பிரம்மனை நினைத்து மேருமலையில் பதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்து, "தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது, அப்படியே நேர்ந்தால் அது பெண்ணால்தான் இருக்கவேண்டும்" என்ற வரத்தை பெற்றான். பெண்கள் பூ போல் இருப்பதால் அவர்களால் இரும்பை விட வலிமையான தன்னை கொன்று விட முடியாது என்று மகிஷன் நினைத்ததால் இப்படி ஒரு வரத்தை பெற்றான்.
நினைப்புதான் பிழப்பை கெடுக்கும் என்ற சொல்வார்களே அது, மகிஷனுக்கு பொருத்தமாகிவிட்டது. தேவலோகத்தையே கைப்பற்ற நினைத்தான். இதனால் தேவர்கள் பயந்து மகாவிஷ்ணுவிடம் உதவி கேட்டார்கள். மகாவிஷ்ணு தேவர்களுக்காக உதவி செய்ய மகிஷனிடம் போருக்கு சென்றார். ஆனால் மகிஷனை விஷ்ணுபகவானால் வீழ்த்த முடியவில்லை. எதனால் மகிஷனை அழிக்கமுடியவில்லை என்று அறிந்தபோது, பெண்ணால்தான் தமக்கு மரணம் வரவேண்டும் என்ற வரத்தை பிரம்மனிடம் பெற்றால்தான் தன்னால் மகிஷனை அழிக்கமுடியவில்லை என்பதை உணர்ந்து, விஷ்ணுபகவான் சிவனிடம் முறையிட, சிவன் தன் சக்தியால் "சந்தியாதேவி" என்ற சக்தியை உருவாக்கினார்.
அந்த சக்தியின் கண்கள் கறுப்பு. சிகப்பு, வெண்மை என்ற நிறத்தில் இருந்தது.
"போருக்கு வா" என்று மகிஷனை அழைத்தால் நிச்சயம் அவன் வரமாட்டான். உஷாராகிவிடுவான். அதனால் மகிஷனே தன்னிடம் போர் செய்ய வர வேண்டும் என்ற எண்ணத்தில் சந்தியாதேவி மகிஷனின் பார்வையில் விழும்படி நடந்து சென்றாள். சக்தியின் அழகில் மயங்கிய மகிஷன், சக்தியை திருமணம் செய்ய தூது விட்டான். இதை கேட்ட சந்தியாதேவி, "தன்னை யார் போர் செய்து வீழ்த்துகிறார்களோ அவரைதான் நான் திருமணம் செய்வேன்" என்று மகிஷனின் தூதுவனிடம் சொல்லி அனுப்பினாள்.
இதனால் மகிஷன் தன் வீரர்களை தேவியிடம் போருக்கு அனுப்பினார். ஆனால் தேவியிடம் போர் செய்தவர்கள் உயிருடன் திரும்பாததை கண்ட மகிஷன், கடைசியாக அவனே தேவியிடம் யுத்தத்திற்கு வந்தான். தேவி, மகிஷனை பலமாக போராடி அவனுடைய எருமை தலையை தன் சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினாள். மகிஷன் மாண்டான். இதை கண்ட தேவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். மகிஷனிடம் போராடி போர் செய்து தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் "மகிஷாசுரமர்த்தினி" என்று சக்திதேவியை போற்றினார்கள். ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் விஜயதசமி உருவானது.
கொலுவில் பொம்மைகள் வைக்கும் வழக்கம் உருவான சம்பவம்
தான் உண்டு தன் நாடு உண்டு என்று இருந்த சுரதா என்ற அரசரிடம் எதிரிகள் போர் செய்ய வந்தார்கள். அவர்களிடம் போர் புரிந்து ஜெயிப்பது என்பது ஆகாத காரியம். அத்தனை வலிமை தன்னிடமும், தன் நாட்டிடமும் இல்லை என்பதை உணர்ந்த அரசர், தன் குருவான சுமதாவிடம் ஆலோசனை கேட்டார்.
"நீ காளியை வணங்கினால் எதிரிகள் காலியாகி விடுவார்கள்." என்றார் குருதேவர்
.
தண்ணீரையும், மணலையும் லிங்கமாக செய்து அம்பிகை வழிப்பட்டது போல் தானும் காளிதேவியை மண்ணால் சிலைசெய்து வழிப்படவேண்டும் என்ற விருப்பத்தில் மணலால் அன்னையின் உருவத்தை செய்துவழிப்பட்டார் மன்னர் சுரதா.
காளிதேவி, அரசரின் தவத்தை ஏற்று, மன்னருக்கு எதிரிகளை வெல்லும் சக்தியை அருளினாள். அத்துடன் "பஞ்சபூதங்களில் ஒன்றான மணலால் என்னை பூஜித்ததால், உனக்கு சகல நலங்களும், வளங்களும் கிடைக்கும்." என்ற ஆசி வழங்கினாள் அன்னை. இதன் பிறகுதான் கொலுவில் மண்ணால் உருவாகும் பொம்மைகள் இடம் பெற்றது.
No comments:
Post a Comment