Tuesday, August 21, 2018

Srimad bhagavatam skanda 2 adhyaya 2,3 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத் பாகவதம்- ஸ்கந்தம்2 அத்தியாயம் 2, 3

சுகர் கூறினார்.

கேசித் ஸ்வதேஹாந்தர்ஹ்ருத்யாவகாசே ப்ராதேசமாத்ரம் புருஷம் வஸந்தம்
சதுர்புஜம் கஞ்சரதாங்கசங்கம் கதாதரம் தாரணயா ஸ்மரந்தி.

சிலர் தம் தேகத்தினுள் ஹ்ருதயாகாசத்தில் வசிப்பவரை ஒரு சாண் அளவே உள்ளவராய் நான்கு புஜங்களுடன், தாமரை, சக்கரம், சங்கு கதை இவற்றோடு கூடிய புருஷனாக தியானம் செய்கிறார்கள்.

பரீட்சித்துக்கு உத்தரையின் கர்பத்தில் காட்சி அளித்த அதே உருவம், தேவகிக்கும் வசுதேவருக்கும் பிறந்த அந்த க்ஷணத்தில் காட்சி அளித்த உருவம்.

புன்னகையுடன் கூடிய தாமரைக்கண்கள், மஞ்சள் பட்டாடை, ஆபரணங்கள் கிரீடகுண்டலங்கள் , யோகிகளின் ஹ்ருதயத்தாமரையாகிய ஆலயத்தில் ஸ்தாபிக்கப்பட்ட துளிர் போன்ற மிருதுவான பாதங்கள், ஸ்ரீவத்சம் , கௌஸ்துபம், வனமாலை இவற்றோடு பொன்னாலும் மணியாலும் ஆன ஆபரணங்கள் அணிந்து கருத்து சுருண்ட மயிரிடை விளங்கும் அளவு கடந்த கருணயுடன் கூடிய சுந்தர முகம்.

இப்பேர்ப்பட்ட வடிவை மனக்கண்ணால் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.
பிறகு பாதத்தில் இருந்து தொடங்கி ஒவ்வொரு அவயவத்தையும் தியானிக்க வேண்டும்.

யாவன்ன ஜாயேத பராவரே அஸ்மின் விச்வேச்வரே த்ரஷ்டரி பக்தியோக: 
தாவத் ஸ்தவீய: புருஷஸ்ய ரூபம் கியாவஸானே பிரயத: ஸ்மரேத

உயர்ந்ததும் தாழ்ந்ததும் ( ஸகுணமும் நிர்குணமும்) அனைத்துலகும் அவரேயாகவும் ( பார்க்கபடுவது) அனைத்தையும் பார்ப்பவராகவும் உள்ள இவரிடத்தில் பக்தியோகம் எதுவரை உண்டாகவில்லையோ அதுவரை இந்த ஸ்தூல ரூபத்தை ஒழிவு நேரமெல்லாம் விடாமுயற்சியுடன் சிந்திக்க வேண்டும். ஒழிவு நேரம் என்பது நித்ய நைமித்திக கர்மங்களை முடித்த பின்னர் என்று அர்த்தம். உலக வ்யவஹாரங்களில் ஈடுபட்டு பகவானை நினைக்கவே நேரமில்லை என்போர்க்கு சொன்னது அன்று.

சுகர் பிறகு இருவகையான யோக மார்க்கங்களைப் பற்றி கூறுகிறார்.

1. விதேஹ முக்தி
தேசகால உணர்வை விட்டு மனம் புத்தியில் லயித்து புத்தி அஹம்காரத்தில் (நான் என்ற உணர்வு) லயிக்கிறது. தனி மனித அஹம்காரம் சமஷ்டி அஹம்காரத்தில் ஒடுங்குகிறது., நான் என்ற உணர்வு போய் அவன் என்ற உணர்வு).

அந்த நொடியில் உயிரை விடும் யோகியானவன் விஷ்ணுவின் பரமபதத்தை அடைகிறான்.இது குண்டலினி யோகத்தின் மூலம் ஆறு சக்ரங்களான மூலாதாரம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞா, சஹஸ்ராரம் இவைகள் மூலம் அடையும் முக்தி.

2. க்ரம முக்தி
யோகியானவன் மனம், இந்த்ரியங்கள் இவைகளுடன் வெளிக்கிளம்பி அக்னி லோகத்தை அடைகிறான். இங்கு ஆசைகள் பஸ்மமாகி சிம்சுமாரம் எனக் கூறபப்டும் ஹரியின் சக்ரலோகத்தை அடைகிறான். இங்கு சூக்ஷ்ம உருவை அடைந்து மஹர்லோகத்தை அடைகிறான். அங்கு பிரம்ம உபாசகர்களுடன் சேர்கிறான்.

நைமித்திக பிரளயம் வரும்போது ஆதிசேஷனின் தீ நாக்குகள் மஹர்லோகம் வரை அழிக்க யோகியானவன் தபோலோகத்தை அடைந்து அதன் பின் பிரம்மஞானிகள் உள்ள பிரம்ம லோகத்தை அடைகிறான். இரண்டு பரார்தங்களின் முடிவில் பிரம்மாவுடன் கூட பிரம்மனிடம் ஐக்யமாகி முக்தியை அடைகிறான்.

முடிவில் சுகர் கூறியது என்னவென்றால் வாசுதேவரிடம் பக்தி உண்டாகுமேயானால் அதைவிட சிறந்த மார்க்கம் வேறு இல்லை.
ஆகையால் பகவான் ஹரியே எல்லா சமயங்களிலும் ஸ்ரவணம் கீர்த்தனம் தியானம் இவைகளுக்கு உரியவர்.

இது பரீக்ஷித்தின் கேள்வியான கேட்ட 'ச்ரோத்வ்யாதிஷு ய: பர:,' கேட்கப்பட வேண்டியவைகளில் மிகவும் முக்கியமானது என்ன,' என்பதற்கு பதிலாக அமைந்துள்ளது. ச்ரோதவ்யாதிஷு , கேட்கப்பட வேண்டியவைகள் முதலியவை என்பதில் ச்ரவணம் , கீர்த்தனம், ஸ்மரணம் என்பவை அடக்கம்.

அத்தியாயம் 3.
சுகர் எந்தெந்த பலனுக்காக எந்தெந்த தெய்வ ரூபத்தை உபாசிக்கவேண்டும் என்று கூறி பலனை விரும்பாவிட்டாலும் விரும்பினாலும் அல்லது மோக்ஷத்தையே விரும்பினாலும் உபாசிக்க வேண்டியது ஹரியையே என்று கூறுகிறார்.

அவர் கூறியதாவது,
வேத அறிவு பெற பிரம்மாவையும், இந்த்ரிய சுகம் பெற இந்திரனையும், பிள்ளைப் பேற்றுக்காக பிரஜாபதியையும், செல்வம் பெற ஸ்ரீதேவியையும், ஒளி பெற அக்னியையும், வலிமை பெற பதினொன்று ருத்ரர்களையும், , உணவுக்கு அதிதியையும், சுவர்க்கம் செல்ல பன்னிரண்டு ஆதித்யர்களையும், ராஜ்யத்திற்காக விச்வதேவர்களையும், பிரபலம் அடைய ஸாத்யர்களையும், தீர்காயுள் பெற அஸ்வினி தேவர்களையும், தேக பலம் பெற பூதேவியையும், அழகான உருவம் பெற கந்தர்வர்களையும், பெண் சுகத்திற்கு ஊர்வசியையும், சர்வாதிகாரம் பெற பிரம்மாவையும், வணங்க வேண்டும் என்று இவ்வாறு எல்லாவற்றையும் கூறிக் கடைசியில், கூறுகிறார்.

அகாம: ஸர்வகாமோ வா மோக்ஷகாம உதாரதீ: 
தீவ்ரேண பக்தியோகேன யஜேத புருஷம் பரம்.

சிறந்த புத்தியுடையவன் (உதார தீ:) எதையும் விரும்பாதவன் ஆயினும் (அகாம: எல்லாவற்றையும் விரும்புவனாயினும் ( ஸர்வகாம:) அல்லது மோக்ஷ காம: , முக்தியையே விரும்பினாலும் தீவிரமான பக்தியோகத்தால் பரமபுருஷனாகிய ஹரியையே பூஜிக்க வேண்டும். பக்தி பாகவதர்களின் சேர்க்கையால் வருகிறது.

( எல்லா தேவர்களுடைய சக்தியும் அவனிடம் இருந்தே வந்தபடியால் அவனைபூஜித்தால் எல்லாமே கிடைத்து முடிவில் முக்தியும் கிடைத்து விடும். ராஜாவிடம் கேட்காமல் அவனுடைய அதிகாரிகளிடம் கேட்பானேன்.)

சௌனகர் கூறினார்.

பகவானின் நினைக்காத வாழ்க்கை வீண். மரம் செடிகொடிகளும், மிருகங்களும் கூட வாழ்கின்றன. வெறும் வாழ்க்கையால் ஆவதென்ன? மனிதனின் ஆயுள் சூரியன் உதயம் ஆகும்போதும் அஸ்தமனம் ஆகும்போதும் தினமும் குறைந்துகொண்டே வருகிறது. பகவானின் நாமம் கேளாத செவியால் பயன் என்ன. அவன் நாமத்தைக் கூறாத நாவு தவளையுடையதைப் போன்றது. அவன் உருவத்தைக் காணாத கண் மயில் தோகையில் உள்ள கண்போல. அவனை நினைந்து உருகாத நெஞ்சம் கல்

இவ்வாறு கூறிவிட்டு சௌனகர் சுகர் மேலும் கூறியதைப்பற்றி சொல்லும்படி சூதரைக் கேட்டுக்கொண்டார்.




No comments:

Post a Comment