அத்தியாயம் 12
சௌனகர் சூதரைப் பார்த்து வினவினார்.
"உத்தரையின் கர்ப்பத்தில் இருந்த சிசு பகவானால் காப்பாற்றப்பட்டது என்று அறிந்தோம். அந்த பாக்கியம் செய்த பாலகனின் பிறப்பு, செயல்கள், மரணம் , முக்தி அடைந்த விதம் எல்லாவற்றையும் கேட்க விரும்புகிறோம். " என்றார்.
சூதர் கூற ஆரம்பித்தார். அவர் கூறியது:
பரீக்ஷித் கர்ப்பத்தில் இருக்கும்போது பகவான் கட்டைவிரல் அளவு உருவத்துடன், கிரீட குண்டலங்கள் , அழகிய நீல வண்ண மேனி , நான்கு புஜங்கள், இவைகளுடன் தோன்றினார். பிறக்கும் தருணம் வரை காத்து பிறகு மறைந்து விட்டார் .
பிறகு ஒரு சுப முஹுர்த்தத்தில் க்ரஹங்கள் அனுகூலமாக இருக்கும் வேளையில் பாண்டு வம்சத்தைத் தாங்கும் புதல்வன் பிறந்தான்.
சந்தோஷம் அடைந்த யுதிஷ்டிரர் தௌம்யர் கிருபர் முதலியவர்களைக் கொண்டு ஜாதகர்மம் நாமகரணம் முதலியவைகளை செய்தார்.
அவர் செய்த தான தர்மங்களால் திருப்தி அடைந்த அந்தணர்கள் குருகுலத்தின் சந்ததி நூலாகிய இந்த புத்திரன் பகவான் விஷ்ணுவால் காப்பாற்றப்பட்டதால் விஷ்ணுராதன் எனப் புகழ் பெற்று மகா பாகவத்னாக விளங்குவான் என்று ஆசீர்வதித்தனர்.
மேலும் அவன் பல அஸ்வமேத யாகங்களை செய்து ஜனமேஜயன் என்னும் புகழ் வாய்ந்த புதல்வனைப் பெற்று கலி புருஷனை வென்று, மரணத்தருவாயில் ஹரியை நினைத்து முக்தி பெறுவான் என்றனர்.
கர்ப்பத்தில் கண்ட மகாபுருஷன் யாராய் இருக்கக்கூடும் என்று எல்லோரையும் பரீட்சித்துப் பார்த்ததனால் அவனுக்கு பரீக்ஷித் என்ற பெயர் பிரசித்தி அடைந்தது.
No comments:
Post a Comment