Monday, July 2, 2018

Shiva & Oil refinery - A sloka in sanskrit

Source: http://pracina-yogya.blogspot.com/2018/02/blog-post.html

பரமசிவனும் எண்ணை சுத்திகரிப்பு நிலையமும்


இந்த சிவராத்ரியில் என் மனதில் படரும் எண்ணம். பரமசிவனை உவமையாகக் கொண்ட ஒரு ஸம்ஸ்க்ருத் ச்லோகம் உள்ளது - 

गुणादोषौ बुधो गृह्णान् इन्दुक्ष्वेडाविवेश्वरः। 
शिरसा श्लाघते पूर्वं परं कण्ठे नियच्छति॥ 

குணாதோ3ஷௌ பு3தோ4 க்3ருஹ்ணந்
 இந்து3க்ஷ்வேடா3விவேஶ்வர:| 
ஶிரஸா ஶ்லாக4தே பூர்வம் 
பரம் கண்டே2 நியச்ச2தி||

பரமசிவன் அழகிய நிலவினை தலையில் வைத்துப் போற்றுகிறார். ஆனால் விஷத்தை தொண்டைக் குழியிலேயே அடைத்து விடுகிறார். அது போல, அறிஞர்கள் நல்லவைகளைத் தலைமேல் வைத்துக் கொண்டாடுகின்றனர். நல்லதல்லாதவற்றை பேசுவதில்லை. 

இது போல நல்ல விஷயங்கள் கொண்டாடப்படவேண்டும், பரப்பப்படவேண்டும். அவதூறுகளும், புரளிகளும், இழிவான கருத்துக்களும் கிளறப்படாமல் இருக்கவேண்டும். இது சான்றோர்கள் செல்லும் வழி.

இதைப் பற்றி ராமக்ருஷ்ண மடத்தின் 13வது தலைவரும், சிந்தனையாளாருமான ஸ்வாமி ரங்கநாதனந்தர் கூறியது - "நாம் அனைவரும் எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் போலச் செயல்படவேண்டும்."

சுத்திகரிப்பு நிலையத்தில் க்ரூட் ஆயில் எனப்படும் - பண்படுத்தப்படாத எண்ணை, பெட்ரோலாகவும் டீசலாகவும் மக்கள் உபயோகிக்கும் விதமாக ஆக்கப்படுகிறது. அது போல நாம் எதிர்கொள்ளும் எதிர்மறையான கருத்துக்களையும், வருத்தமளிக்கும் விஷயங்களையும் சுத்திகரித்து மேன்மையான விஷயங்களைப் பேசிப் பழகுவது சாலச்சிறந்தது. 
தகவல் பரிமாற்றம் மிகவும் அதிகமாக உள்ள இந்த காலத்தில், அதுவும் சமூக வலைதளங்களின் பயன்பாடு உச்சத்தைத் தொட்டிருக்கும் இவ்வேளையில் இது போன்ற ஒரு சங்கல்பத்தை மேற்கொள்வது செயல்முறை சிவபக்தி எனத் தோன்றுகிறது .

ஓம் நமஶ்ஶிவாய!

No comments:

Post a Comment