Monday, June 25, 2018

Bharaneetaran chittapa's granddaughter -Periyavaa

வீடு தேடி வந்த பெரியவா - மஹாபெரியவா அனுபவங்கள்

அன்பே அருளே - 
ஆசிரியர் - பரணீதரன்
தட்டச்சு - ஹாலாஸ்ய சுந்தரம் ஐயர் திருநெல்வேலி

என் (பரணீதரனின்) சித்தப்பாவின் பேத்தி அனுராதா. பள்ளிப்பருவத்தில் அழகுப் பதுமையாக வீட்டில் வளைய வந்து கொண்டிருந்தவளை, அநியாயமாக இளம்பிள்ளைவாதம் தாக்கியது. பெற்றோர் அணுகாத டாக்டர்கள் இல்லை. பார்க்காத வைத்தியமில்லை. குணம் தெரியவில்லை. அந்தக் கால் சூம்பிப் போயிற்று. பெற்றோருக்கு நம்பிக்கை போய்விட்டது. குடும்பத்திலே சோக நிழல் படர்ந்தது. சில ஆண்டுகள் கடந்தன.

அப்போது பெரியவா மேற்கு மாம்பலம் சங்கரமடத்தில் தங்கியிருந்தார். தனிமையில் தரிசித்து அனுவின் நிலைமையைப் பற்றிக் கூறினேன். 'நாளைக்கு குழந்தையை அழைச்சிண்டு வா" என்றார்.

மறுநாள் பெற்றோர் அனுவை காரில் அழைத்து வந்தனர். ஆனால் உள்ளே எப்படிச் செல்வது? அவளால் நடக்க முடியாது. தந்தை தூக்கிக் கொண்டு தான் வரவேண்டும். அத்தனை பேர் நடுவில் அப்படி வர அனுவுக்கு வெட்கம்!

நான் ஸ்ரீமடத்துக்குள் சென்றேன். பெரியவா சாஸ்திர வாக்யார்த்த சதஸில் அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும் அருகில் வரும்படியழைத்தார்.

'குழந்தை வந்துட்டாளா? என்று கேட்டார்.

''வந்துட்டா...ஆனா நடந்து வர முடியாது...யாராவது அவளை எடுத்துண்டு தான் வரணும்.... வெக்கப்படறா...' என்றேன்.

'எங்கே இருக்கா..?'

'வாசல்லே கார்ல ஒக்காந்திண்டிருக்கா'

சட்டென்று பெரியவா எழுந்தார். மிக வேகமாக நடந்தார். நேரே கார் நிற்குமிடத்துக்கு வந்தார். பெரியவா வருகையை சற்றும் எதிர்பார்க்காத பெற்றோர் பதைபதைத்துப் போயினர். எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்த அனு சட்டென்று திரும்பிப் பார்க்க, எதிரில் பெரியவா பிரத்யசமாகியிருப்பதைப் பார்த்து 'இது உண்மையா...கனவா' என்று சுதாகரித்துக் கொள்ள முடியாமல் கண்கள் கலங்க, மலங்க மலங்க விழித்தாள்.

கார் கதவைத் திறந்தேன். பெரியவா உள்ளே எட்டிப் பார்த்தார்.

'எந்தக் காலு?'

சொன்னாள். ஆடையைச் சற்று அகற்றினாள். பெரியவா திருஷ்டி அதன் மீது பதிந்தது. அன்புத் தெய்வத்தின் அபயஹஸ்தம் அருள்மாரி பொழிந்தது.

ஒரு மாதத்திற்குள் ஒரு நற்செய்தி. வேலூர் மருத்துவமனையில் இந்த நோக்கு ஒரு நவீன அறுவை சிகிச்சை செய்யும் நிபுணர் வந்திருக்கிறார் என்றும் அவரிடம் காட்டலாம் என்றும் கேள்விப்படவே, பெற்றோர் அனுவை அங்கு அழைத்துச் சென்றனர். பெருமளவு குணம் தெரிந்தது. காலில் 'ஷூ' பொருத்தப்பட்டது. ஊன்றுகோலுடன் அனு நடக்க ஆரம்பித்து விட்டாள். 'நடக்கவே மாட்டாள்; என்று நினைத்தவர்களின் நெஞ்சம் குளிர்ந்தது.

முதல் தரிசனத்தையடுத்து அனுவுக்குப் பெரியவாளிடம் அபரிதமான பக்தி ஏற்பட்டு விடுகிறது. சதா சர்வகாலமும் அவர் பற்றிய நினைவு தான்.. சுலோகங்களை மனப்பாடம் செய்யத் தொடங்குகிறாள். வீட்டில் இருந்தபடியே படித்து, பரீட்சைகள் எழுதி முதல்தரமாக பாஸ் பண்ணுகிறாள். வாழ்க்கையில் பிடிப்பும் நம்பிக்கையும் ஏற்படுகிறது. குடும்பத்தில் ஒளிபடருகிறது.

ஒருமுறை புத்தூருக்கு அருகிலுள்ள கார்வேட் நகருக்கு அனுவை அழைத்துச் சென்றேன். குளத்தின் கீழ்ப்படியில் அமர்ந்து பெரியவா மாலை அனுஷ்டானங்கள் செய்து கொண்டிருந்தார். நான் கீழிறங்கிச் சென்று 'பெரியவாளைத் தரிசிக்க அனுராதா வந்திருக்கிறாள்' என்றேன். நிமிர்ந்து பார்த்தார். மேல்படியில் நின்றிருந்த அனு 'மன்னிக்கணும்...பெரியவாளுக்கு என்னாலே நமஸ்காரம் பண்ண முடியலே..' என்று வருத்தத்துடன் சொன்னாள். 'பரவாயில்லேம்மா.. நீ இத்தனை தூரம் வந்ததே ஆயிரம் நமஸ்காரங்களுக்குச் சமம்' என்று கூறி ஆசி வழங்கினார்.

பெண்ணுக்கு திருமணம் செய்யவேண்டும் என்ற ஆசை வந்தது தாயாருக்கு. எந்த தாயாருக்குத்தான் வராது? பெரியவாளிடம் வேண்டிக் கொண்டாள். பவானி படத்தை அனுக்கிரகித்துக் கொடுத்தார் பெரியாவா.

டி.வி.எஸ்-ஸில் பணியாற்றிக் கொண்டிருந்த அனுவின் தந்தைக்கு ஐதராபாத்துக்கு மாற்றலாகிவிட்டது. அனுவுக்குப் பெரும் ஏமாற்றம். பெரியவாளைத் தரிசிக்க முடியாதே.

தரிசிக்க முடிந்தது. ஆறேழு மாதங்களில் பெரியவா ஐதராபாத்துக்கு எழுந்தருளினார். தனக்கு ஆசி வழங்கத்தான் தெய்வம் அங்கு தேடிக் கொண்டு வந்திருப்பதாகவே அனு எண்ணினாள். அதை நினைத்து நினைத்து பூரித்துப் போனாள்.

ஸ்ரீமடத்துக்குச் சென்று தரிசனம் செய்தாள். பெண்ணின் திருமணத்தைப் பற்றித் தாயார் பெரியவாளுக்கு நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தாள்.

ஒருநாள் ஐதராபாத்தில் வீதிவலம் புறப்பட்டுச் சென்றார் பெரியவா.. அப்போது  தாங்கள் குடியிருந்த பகுதிக்கு வந்து கொண்டிருப்பதாகச் செய்தி அறிந்த அனு பெரியவா தங்கள் வீட்டுக்கு வர வேண்டும் என்று கொள்ளை ஆசைப்பட்டாள்.

தொலைவில் இருந்து தரிசனமாவது செய்யலாம் என்று கேட் அருகில் வந்து நிற்கிறாள். பெற்றோரும் அங்கு வருகின்றனர். முதலிலேயே அழைத்திருக்க வேண்டுமோ, அல்லது வரும் வழியில் சென்று வேண்டிக் கொள்ளலாமா என்று அவர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே அவர்கள் வீட்டிலிருந்து ஐம்பது அடி தொலைவில் ஒரு தெருவில் பெரியவா நுழைகிறார். அப்போது கேட்டருகில் அனு நின்று கொண்டிருப்பதைப் பார்த்து விடுகிறார். 'சட்'டென்று திரும்பி அந்த 'கேட்'டை நோக்கி வருகிறார். அனுவுக்குப் பரவசம் மேலிடுகிறது. நம்பிய தெய்வம் கைவிடவில்லை. மனமறிந்து வாழ்த்தியருள வீடு தேடி வருகிறது.

பெற்றோர் நமஸ்காரம் செய்ய, அனு கையெடுத்துக் கும்பிடுகிறாள். பெரியவா புன்முறுவலோடு ஆசி வழங்கிவிட்டு பாதயாத்திரையைத் தொடருகிறார்.

அனுவுக்கு மணமகன் தேடி தந்தை பத்திரிக்கையில் விளம்பரம் தருகிறார். அதைப் பார்த்துவிட்டு லண்டனில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆசாரமிக்க குடும்பத்தைச் சேர்ந்த நம்ம ஊர்ப்பையன், சென்னையில் வசிக்கும் பெற்றோருக்குக் கடிதம் எழுதுகிறார். திருமணம் நிச்சயமாகி விமரிசையாக நடைபெறுகிறது.

இருபது வருடங்களுக்கு மேலாக, இரு செல்வங்களுடன் திரு.வெங்கடேசனும் அனுராதாவும் லண்டனில் வசித்துக் கொண்டிருக்கின்றனார்.

மூத்தவள் ப்ரியா, பிள்ளையின் பெயர் சங்கர். பள்ளியில் அதிபுத்திசாலி என்று பெயர் வாங்கிப் பல பரிசுகள் பெற்றிருக்கிறான்.

பெரியவா சரணம். ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர.

No comments:

Post a Comment