தாயுமானவர்....
மதுரை ஸேதுபதி ஹைஸ்கூலில் பெரியவா முகாம்.
பெரியவாளை தர்ஶனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தார்கள். பெரியவா அமர்ந்திருந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில், ஒரே ஒரு வெற்றிலை தரையில் கிடந்தது.
அது பெரியவா கண்களுக்கு மட்டும், வெறும் வெத்து இலையாகப் படாமல், உயிர் இலையாகப் பட்டது!
பகவத் ஸ்ருஷ்டியில் ஒரு சின்ன வஸ்து கூட மாபெரும் கார்யத்தை செய்யும் ஶக்தி படைத்தது.
"இந்தா.... அங்க கெடக்கு பாரு! அந்த வெத்தலைய எடுத்து பத்ரமா வெச்சுக்கோ!"
பாரிஷதர் தன் வேஷ்டி மடிப்பில் அந்த வெற்றிலைக்கு இடம் கொடுத்தார்.
"வெத்தலை மங்கல த்ரவ்யம்-ங்கறதால கால்ல மிதிபடாம இருக்கணும்-னு சொல்லுவா.... ஸரிதான்! ஆனா.... பத்ரப்படுத்தி வெக்கறதுக்கு ஏன் சொன்னா?......"
குழம்பின பாரிஷதருக்கு, பெரியவாளின் ஒவ்வொரு சொல்லும் அழகான அர்த்தங்களோடு உருப் பெறும் என்பது கொஞ்ச நாழியிலேயே ப்ரத்யக்ஷமாகத் தெரிந்தது!.
தர்ஶனத்துக்காக அலைமோதிக் கொண்டிருந்த கூட்டத்தில், எங்கோ ஒரு கோடியில், ஒரு பெண் ரொம்ப ஶ்ரமப்பட்டு பெரியவாளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தாள்!
தானாகவே நகரவில்லை! கூட்டத்தால் நகர்த்தப்பட்டாள்.
எல்லோரையும் முண்டியடித்து தள்ளிக் கொண்டு அவளால் முன்னேற முடியவில்லை. ஆனால், பெரியவாளை எப்படியாவது தர்ஶித்து விடவேண்டும் என்ற பக்தி பூர்வமான ஏக்கம் இருந்தது.
பெரியவா சட்டென்று கூட்டத்தைப் பிளந்து கொண்டு நடக்க ஆரம்பித்ததும், உடனே எல்லோரும் அவருக்கு வழி விட்டு விலகினார்கள்.
பெரியவா நேராக அந்த பெண்ணின் முன்னால் போய் நின்றார்.
வெத்தலை ஶிஷ்யரிடம் ஏதோ ஸமிக்ஞை !
"என்னம்மா? எந்த ஊர்? ஒம்பேரென்ன?"
பாரிஷதர் கேட்டார்.
".....சின்னப் பொண்ணுங்க...."
"ஒம்பேரென்ன?"
"பேர்தாங்க..... சின்ன பொண்ணு"
பெரியவா கையை உயர்த்தி சின்னப் பொண்ணை special-ஆக ஆஶீர்வதித்தார். தன்னருகில் இருந்த பாரிஷதரைப் பார்த்தார்.....
அவர், தன் வேஷ்டி மடிப்பில் பத்ரமாக சுருட்டி வைத்திருந்த வெற்றிலையை எடுத்து அவளிடம் கொடுத்தார். அவள் உடனே வாயில் போட்டு மென்று தின்றாள்.
இரு கைகளையும் கூப்பி, கண்ணீரோடு நெஞ்சார்ந்த நன்றியோடும் பார்த்துக் கொண்டிருந்தாள்...... திரும்பி செல்லும் பெரியவா என்னும் "தாயாரை"..!
அந்த பெண்ணுக்கு மட்டும் special-ஆக ஏன் வெற்றிலை?
சின்னப் பொண்ணு, நிறைமாத கர்ப்பிணி !
பெரியவாளை எப்படியாவது தர்ஶனம் பண்ணிவிடவேண்டும் என்ற தாபம்! வந்து விட்டாள்...!
ஆனால், அந்த பெருங்கூட்டத்தில் அவளுக்கு மூச்சு விட காற்று பற்றாமல், மூச்சு முட்டி, வாந்தி வரும்போல் ஆகிவிட்டது...! வெளியேற மனஸும் இல்லை; வழியும் இல்லை!
யாரிடம் சொல்வது?
'கடவுளே! பெரியவா..... இந்தப் பிரட்டல் போகணும்னா.... ஒரே ஒரு வெத்தலை இருந்தா போறும்...! யாரு குடுப்பாங்க? தட்டு தட்டாக பழம், பூ.... பலபேர் கையில இருந்தாலும், ஒருத்தங்ககிட்டயும் வெத்தலை இருக்கற மாதிரி இல்லியே!... அப்டியே இருந்தாக்கூட, பெரியவாளுக்குன்னு குடுக்க வெச்சிருக்கறதை... எனக்கு குடுப்பாங்களா?....."
உள்ளே உறையும் ஆத்மநாதனுக்கு இந்தக் குழந்தையின் அவலக்குரல், தவிப்பு எட்டாமலா போகும்?
இன்னும் அதைவிட, அவலக்குரல் எழும்புவதற்கு முன்னமேயே.... பந்தோபஸ்து பண்ணும் தயாபரனும் அவன்தானே!
ப்ரஸவமே பார்க்க வந்த நம் தாயுமான ஸ்வாமிக்கு, வயற்று பிரட்டலுக்கு வெற்றிலை கொடுக்கத் தெரியாதா என்ன?
ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்
No comments:
Post a Comment