Tuesday, January 9, 2018

Deivanadeswaraf temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு. கருப்பசாமி.*
________________________________________
*தேவாரம் பாடல் பெற்ற சிவ தல எண்: 203*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல.....................)
___________________________________________
*தேவாரம் பாடல் பெற்ற சிவ தல தொடர்.*

*சிவ தல அருமைகள் பெருமைகள்.*

*தெய்வநாதேஸ்வரர் திருக்கோவில், இலம்பையங்கோட்டூர்.*
________________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள முப்பத்திரண்டு தலங்களுள் இத்தலம் பதிமூன்றாவது தலமாகப் போற்றப் படுகிறது.

இலம்பையங்கோட்டூர் ஊரை தற்போது எலுமியன்கோட்டூர் என்று அழைக்கிறார்கள்.

*இறைவன்:* தெய்வநாதேஸ்வரர், சந்திரசேகரர், அரம்பேஸ்வரர்.

*இறைவி:*
கனக குசாம்பிகை, கோடேந்து முலையம்மை.

*தல விருட்சம்:* மல்லிகை.

*தல தீர்த்தம்:* மல்லிகை தீர்த்தம்.

*ஆகமம்:* காமிக ஆகம முறைப்படி.

*தேவாரம் பாடியவர்கள்:*
திருஞானசம்பந்தர். முதலாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம் மட்டும்.

*இருப்பிடம்:*
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூவம் (திருவிற்கோலம்) தலத்திலிருந்து தென்மேற்கே நான்கு கி மி. தொலைவில் இந்த தலம் அமைந்துள்ளது.

இதனருகில் உள்ள பெரிய ஊர் திருவள்ளூர்.

திருவள்ளூரிலிருந்து பேரம்பாக்கம் சென்று அங்கிருந்து ஆட்டோ மூலம் இலம்பையங்கோட்டூர் செல்லலாம்.

சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் மார்க்கத்திலுள்ள கடம்பத்தூரில் இறங்கி அங்கிருந்து பேரம்பாக்கம் சென்று பின் ஆட்டோ மூலம் இலம்பையங்கோட்டூர் செல்லலாம்.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு தெய்வநாதேஸ்வரர் திருக்கோவில்,
எலுமியன்கோட்டூர்,
கப்பாங்காட்டூர் அஞ்சல்,
வழி எடையார்பாக்கம்,
ஸ்ரீபெரும்புதூர் வட்டம்,
காஞ்சீபுரம் மாவட்டம்,
PIN - 631 553

*ஆலயப் பூஜை காலம்:*
தினமும் காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும்  தரிசனத்திற்காக ஆலயம் திறந்திருக்கும்.

ஆலய குருக்கள் வீடு அருகிலேயே இருப்பதால் எந்நேரமும் தரிசனம் செய்யலாம்

*கோவில் அமைப்பு:*
இந்த ஆலயத்திற்கு சென்றதும்தான் தெரிந்தது இராஜகோபுரம் இல்லை என்பது *சிவ சிவ*.

கிழக்கில் ஒரு முகப்பு வாயில் மட்டுமே இருந்தது.

வாயிலுள் புகுந்து  உள் சென்றால் பலிபீடத்தைக் காணப் பெற்றோம். 

ஆணவமலம் ஒழிய பிரார்த்தித்து வணங்கிக் கொண்டோம்.

அதிகார நந்தி மண்டபத்திற்குச் சென்று, வணங்கிக் கொண்டு, ஈசனைக் காண உள் புக அனுமதியும் வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.

அடுத்ததாக கொடிமரமும் இருக்கப்பெறவில்லை.

வெளிப் பிரகாத்தில் இடதுபுறம் அரம்பை வழிபட்ட அரம்பேஸ்வரர் பதினாறு பட்டைகளுடன் மேற்கு நோக்கி காட்சி தந்தார். கைகுவித்து வணங்கிக் கொண்டோம்.

கருவறையில் இறைவன் தெய்வநாதேஸ்வரர் கிழக்கு நோக்கி அருளியவாறு  இருந்தார்.

இவர் தீண்டாத் திருமேனி ஆவார். பெரியதான அமைப்புடன் ஆவுடை, அடிப்பாகம் பத்மபாக அமைப்பில் இருந்தன.

மனமுருகப் பிரார்த்தித்து தொழுது வணங்கி அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை பெற்று வெளிவந்தோம்.

இவ்வாலயத்திற்கு ஒரு பிரகாரம் மட்டுமே இருக்கிறது.

பிரகாரம் வலம் செல்கையில் குருந்த விநாயகர் சந்நிதியில் விநாயகரைக் கண்டோம். 

விடுவோமா?, சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.

அடுத்து, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகர் சந்நிதி, பைரவர் சந்நிதி ஆகியவை இருந்தன.

இருவரையும் தொடர்ந்து வணங்கிக் கொண்டோம்.

கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், அவரை அடுத்து தட்சிணாமூர்த்தி, கருவறை பின்புறம் லிங்கோத்பவருக்கு பதில் அவ்விடத்தில் மகாவிஷ்ணு, அடுத்து பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர்களைக் கண்டு, ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.

இங்குள்ள தட்சிணாமூர்த்தி யோக தட்சிணாமூர்த்தியாக சின் முத்திரையை இதயத்தில் வைத்து காட்சி தருகிறார்.

இவர், வலது காலை மடித்து பீடத்தில் வைத்து, இடது கையை ஆசனத்தில் அழுத்திக் கொண்டு, கணகளை மூடிக் கொண்டு கல்லால மரத்தின் கீழ் சனகாதி முனிவர்களோடு, பாதத்தில் முயலகன் அழுந்திக் கிடக்க மிக அமைதியாக அமர்ந்திருக்கின்ற பாவனையோடு இவரது சிற்பம் இருக்கிறது.

இச்சிற்பத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றின. அவ்வளவு அழகான சிற்பம்.

அடுத்து, அம்பாள் சந்நிதிக்கு வந்தோம்.

கனககுசாம்பிகை என்ற திருநாமத்துடன் தெற்கு நோக்கியபடி தனிச் சந்நிதியில் அருள்பாலித்துக் கொண்டிருந்தாள்.

இவ்வாலயத்திற்கு வெளியே இருபுறமும் திருக்குளங்களாக இத்தலத்தின் தீர்த்தங்களான மல்லிகை தீர்த்தமும், சந்திர தீர்த்தமும் அமைந்துள்ளன.

தட்சனால் சாபம் பெற்ற சந்திரன் இங்குள்ள மல்லிகை தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கியுள்ளான்.

வருடத்தில் ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி முதல் ஏழாமீம் தேதி வரையிலும், செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி முதல் பதினோறாம் தேதி வரையிலும் சூரியனின் ஒளிக்கற்றைகள் சுவாமி மீது படுகின்றன.

தேவர்கள் வழிபட்ட தெய்வநாதேஸ்வரரை வணங்கிட தோஷங்கள் நீங்கும்.

குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யோக தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கப்பெறுவர்.

*சம்பந்தர் தேவாரம்:*
பண்: குறிஞ்சி.
1.🔔மலையினார்பருப்பதந் துருத்திமாற்பேறு மாசிலாச்சீர்மறைக் காடுநெய்த்தானம்
நிலையினானெனதுரை தனதுரையாக நீறணிந்தேறுகந் தேறியநிமலன்
கலையினார்மடப்பிணை துணையொடுந்துயிலக் கானலம்பெடைபுல்கிக் கணமயிலாலும்
இலையினார்பைம்பொழி லிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென்னெழில்கொள்வதியல்பே.

🙏🏾கயிலாய மலையை இடமாகக் கொண்டுறையும் இறைவன், சீபருப்பதம், துருத்தி, மாற்பேறு, குற்றமற்ற சிறப்புடைய திருமறைக்காடு, நெய்த்தானம் ஆகிய தலங்களில் நிலையாக எழுந் தருளியிருப்பவன். தன் உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தி அருள்புரிபவன். திருநீறு அணிந்து ஆனேற்றில் மகிழ்வோடு ஏறிவரும் நிமலன். அத்தகையோன் ஆண்மான்கள் தம் இளைய பெண் மான்களோடு துயில்வதும், சோலைகளில் வாழும் ஆண் மயில்கள் பெடைகளைத் தழுவி அகவுவதுமாய இலைகள் நிறைந்த பசிய பொழில்கள் சூழ்ந்த இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் அழகினைக் கவர்ந்து செல்வது முறையோ?

2.🔔திருமலர்க்கொன்றையா னின்றியூர்மேயான் றேவர்கடலைமகன் றிருக்கழிப்பாலை
நிருமலனெனதுரை தனதுரையாக நீறணிந்தேறுகந் தேறியநிமலன்
கருமலர்க்கமழ்சுனை நீண்மலர்க்குவளை கதிர்முலையிளையவர் மதிமுகத்துலவும்
இருமலர்த்தண்பொய்கை யிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென்னெழில்கொள்வதியல்பே.

🙏🏾அழகிய கொன்றை மலர் மாலையை அணிந்தவன். திருநின்றியூரில் எழுந்தருளியிருப்பவன். தேவர்கட்குத் தலைவன். திருக்கழிப்பாலையில் குற்றமற்றவனாய் உறைபவன். தன்னுடைய உரைகளை என்னுடைய உரைகளாக வெளிப்படுத்தி அருள்புரிபவன். திருநீறு அணிந்து ஆனேற்றில் மகிழ்வோடு ஏறிவரும் நிமலன். அத்தகையோன் பெரிய தாமரை மலர்களால் மணம் கமழும் சுனைகளில் உள்ள நீண்ட குவளை மலர்கள் இளம் பெண்களின் மதி போன்ற முகத்தில் உலவும் பெரிய கண்களை நிகர்க்கும் இலம்பையங் கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் அழகைக் கவர்ந்து செல்லுதல் முறையோ?

3.🔔பாலனாம்விருத்தனாம் பசுபதிதானாம் பண்டுவெங்கூற்றுதைத் தடியவர்க்கருளும்
காலனாமெனதுரை தனதுரையாகக் கனலெரியங்கையி லேந்தியகடவுள்
நீலமாமலர்ச்சுனை வண்டுபண்செய்ய நீர்மலர்க்குவளைக டாதுவிண்டோங்கும்
ஏலநாறும்பொழி லிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப் பேணியென்னெழில் கொள்வதியல்பே.

🙏🏾பால வடிவோடும், விருத்த வடிவோடும் வரும் பசுபதி எனப் பெறுபவன். முற்காலத்தில் கொடிய கூற்றுவனை உதைத்து மார்க்கண்டேயருக்கு அருள்புரிந்த காலகாலன். தன்னுடைய உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன். கையில் விளங்கும் எரியை ஏந்திய கடவுள். அத்தகைய இறைவன் நீல நிறம் பொருந்திய சிறந்த மலர்கள் பூக்கும் சுனையில் வண்டுகள் பாட நீரில் பூக்கும் குவளை மலர்கள் மகரந்தம் விண்டு மணம் பரப்புவதும், ஏலமணம் கமழும் பொழில்கள் சூழ்ந்ததுமான இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அவனைத் தரிசிக்க வந்த என் எழிலைக் கொள்வது முறையோ?

4.🔔உளங்கொள்வாருச்சியார் கச்சியேகம்ப னொற்றியூருறையுமண் ணாமலையண்ணல்
விளம்புவானெனதுரை தனதுரையாக வெள்ளநீர்விரிசடைத் தாங்கியவிமலன்
குளம்புறக்கலைதுள மலைகளுஞ்சிலம்பக் கொழுங்கொடியெழுந்தெங்குங் கூவிளங்கொள்ள
இளம்பிறைதவழ்பொழிலிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப் பேணியென் னெழில்கொள்வதியல்பே.

🙏🏾உள்ளத்தில் தியானிப்பவர்களின் முடிமீது விளங்குபவன் கச்சியேகம்பன். ஒற்றியூர், திருவண்ணாமலை ஆகிய தலங்களில் விளங்கும் தலைவன். என்னுடைய உரைகளாகத் தன்னுரைகளை வெளியிடுபவன். கங்கை வெள்ளத்தைத் தனது விரிந்த சடைமிசைத் தாங்கிய விமலன். அத்தகையோன், கலைமான்கள் குளம்புகள் நிலத்தில் பதியுமாறு கால்களை அழுத்தித் துள்ளவும், மலைகள் அவ்விடங்களில் எழும்பும் ஒலிகளை எதிரொலிக்கவும், வளமையான கொடிகள் வளர்ந்த வில்வமரங்கள் முழுதும் படியவும் அமைந்துள்ள, இளம்பிறை தவழும் வான் அளவிய பொழில்கள் சூழ்ந்த இலம்பையங் கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அவனைத் தரிசிக்க வந்த என் எழிலைக் கவர்ந்து கொள்வது நீதியோ!

5.🔔தேனுமாயமுதமாய்த் தெய்வமுந்தானாய்த் தீயொடுநீருடன் வாயுவாந்தெரியில்
வானுமாமெனதுரை தனதுரையாக வரியராவரைக்கசைத் துழிதருமைந்தன்
கானமான்வெருவுறக் கருவிரலூகங் கடுவனோடுகளுமூர் கற்கடுஞ்சாரல்
ஏனமானுழிதரு மிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே

🙏🏾தேன் , அமுது ஆகியன போல இனிப்பவனாய் , தெய்வம் தானேயானவன் . தீ , நீர் , வாயு , வான் , மண் ஆகிய ஐம்பூத வடிவினன் . தன் உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன் . உடலில் வரிகளை உடைய பாம்பைத் தன் இடையிலே கட்டிக் கொண்டு திரிபவன் . மான்கள் அஞ்சும்படி கரிய விரல்களை உடைய பெண் கருங்குரங்கு ஆண் குரங்கோடு காட்டில் உகளும் பாறை களை யுடைய கடுமையான மலைச்சாரலில் பன்றிகளும் காட்டுப் பசுக் களும் திரியும் இலம்பையங்கோட்டூரைத் தன் இருப்பிடமாகக் கொண்டு தன்னை வழிபட வந்த என் அழகைக் கவர்ந்து கொள்ளல் முறையோ ?

6.🔔மனமுலாமடியவர்க் கருள்புரிகின்ற வகையலாற்பலிதிரிந் துண்பிலான்மற்றோர்
தனமிலானெனதுரை தனதுரையாகத் தாழ்சடையிளமதி தாங்கியதலைவன்
புனமெலாமருவிக ளிருவிசேர்முத்தம் பொன்னொடுமணிகொழித் தீண்டிவந்தெங்கும்
இனமெலாமடைகரை யிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே.

🙏🏾தங்கள் மனங்களில் இறைவனை உலாவச் செய்யும் அடியவர்க்கு அருள்புரிதற்பொருட்டே பலியேற்றுத் திரிபவனேயன்றி உண்ணும்பொருட்டுப் பலி ஏலாதவன். வீடுபேறாகிய செல்வமன்றி வேறு செல்வம் இல்லாதவன். தன்னுடைய உரைகளை என்னுடைய உரைகளாக வெளிப்படுத்தியவன். தாழ்ந்து தொங்கும் சடைமீது இளம் பிறையைத் தாங்கியுள்ள தலைவன். அத்தகையோன் தினைப்புனங் களில் பாய்ந்து வரும் அருவிகள் அரிந்த தினைத்தாள்களில் ஒதுங்கிய முத்து பொன்மணி முதலியவற்றைக் கொழித்துக் கொண்டு வந்து எல்லா இடங்களிலும் சேர்க்கும் கரைகளோடு கூடிய வயல்களை உடைய இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் எழிலைக் கொள்வது முறையோ?

7.🔔நீருளான்றீயுளா னந்தரத்துள்ளா னினைப்பவர்மனத்துளா னித்தமாவேத்தும்
ஊருளானெனதுரை தனதுரையாக வொற்றைவெள்ளேறுகந் தேறியவொருவன்
பாருளார்பாடலோ டாடலறாத பண்முரன்றஞ்சிறை வண்டினம்பாடும்
ஏருளார்பைம்பொழி லிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே.

🙏🏾நீர், தீ, ஆகாயம் ஆகியவற்றுள் இருப்பவன். நினைப்பவர் மனத்தில் உறைபவன். நாள்தோறும் அடியவர்கள் வந்து வணங்கும் ஊர்களை இடமாகக் கொண்டவன். தன்னுடைய உரைகளை என்னுடையனவாக வெளிப்படுத்தியவன். தனித்த ஒரு வெள்ளேற்றை உகந்து ஏறிவருபவன். அத்தகையோன், மண்ணக மக்களின் பாடல் ஆடல்கள் இடையறாது நிகழ்வதும், அழகிய சிறகுகளை உடைய வண்டுகள் பண்ணிசை போல ஒலி செய்து பாடும் அழகிய பொழில்கள் சூழ்ந்ததுமான இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் எழிலைக் கவர்தல் முறையாகுமோ?

8.🔔வேருலாமாழ்கடல் வருதிரையிலங்கை வேந்தனதடக்கைக ளடர்த்தவனுலகில்
ஆருலாமெனதுரை தனதுரையாக வாகமோரரவணிந் துழிதருமண்ணல்
வாருலாநல்லன மாக்களுஞ்சார வாரணமுழிதரு மல்லலங்கானல்
ஏருலாம்பொழிலணி யிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே.

🙏🏾நிலத்தின் வேர்வரை உலாவுகின்ற ஆழ்ந்த கடலின் அலைகள் தவழ்கின்ற இலங்கை வேந்தனாகிய இராவணனின் நீண்டகைகள் இருபதையும் நெரித்தவன். உலகின்கண் நிறைந்து விளங்கும் தன்னுடைய உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன். தன்னுடைய மார்பில் பெரியதொரு பாம்பினை அணிந்து திரியும் தலை வன். அத்தகையோன், கழுத்தில் வார் கட்டப்பட்ட நல்ல வளர்ப்பு விலங்குகளும், யானைகளும் திரியும் வளமான காடுகளும் அழகிய பொழில்களும் சூழ்ந்த இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிட மாகக்கொண்டு என் எழிலைக் கவர்தல் முறையோ?

9.🔔கிளர்மழைதாங்கினா னான்முகமுடையோன் கீழடிமேன்முடி தேர்ந்தளக்கில்லா
உளமழையெனதுரை தனதுரையாக வொள்ளழலங்கையி லேந்தியவொருவன்
வளமழையெனக்கழை வளர்துளிசோர மாசுணமுழிதரு மணியணிமாலை
இளமழைதவழ்பொழி லிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே.

🙏🏾ஆயர்பாடியை அழித்தற்கெனக் கிளர்ந்தெழுந்த மழையைக் கோவர்த்தனம் என்னும் மலையால் தடுத்த திருமாலும், நான்முகனும், கீழே அகழ்ந்து சென்று அடியையும், மேலே பறந்து சென்று முடியையும் அளந்தறியமுடியாதவாறு அழலுருவாய் ஓங்கி நின்றவன். மனத்தால் அழைத்தற்குரியனவாய் அமைந்த தன்னுடைய உரைகளை என்னுடையவாக வெளிப்படுத்தியவன். அழகிய கையில் ஒளி பொருந்திய அழலை ஏந்திய ஒப்பற்ற தலைவன். அத்தகையோன், வளமான மழை போல, மூங்கிலில் தேங்கிய பனி நீர், காற்றால் பொழிவதும், மலைப் பாம்புகள் ஊர்வதும், அழகிய மணிகள்மாலை போல நிறைந்து தோன்றுவதும், மேகக் கூட்டங்கள் தவழும் பொழில் சூழ்ந்ததுமான இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் எழிலைக் கவர்ந்தான். இது முறையோ?

10.🔔உரிஞ்சனகூறைக ளுடம்பினராகி யுழிதருசமணருஞ் சாக்கியப்பேய்கள்
பெருஞ்செல்வனெனதுரை தனதுரையாகப் பெய்பலிக்கென்றுழல் பெரியவர்பெருமான்
கருஞ்சினைமுல்லைநன் பொன்னடைவேங்கை களிமுகவண்டொடு தேனினமுரலும்
இருஞ்சுனைமல்கிய விலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே.

🙏🏾ஆடைகளை உரிந்துவிட்டாற் போன்ற அம்மண உடம்பினராய்த் திரியும் சமணர்களும், சாக்கியர்களாகிய பேய்களும் அறிய இயலாத பெரிய வைப்பு நிதியாய் விளங்குவோன். தன்னுடைய உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன். ஊரார் இடும் பலியை ஏற்பதற்கெனப் பிட்சாடனனாய்த் திரிபவன். பெரியோர்களுக்கெல்லாம் தலைவன். அத்தகையோன், பெரிதான அரும்புகளை உடைய முல்லையும், பொன்போன்று மலரும் வேங்கையும், மகிழ்ச்சி நிறைந்த முகத்தோடு வண்டுகளும், தேனீக்களும் முரலும் பெரிய சுனைகளும், நிறைந்து காணப்படும் இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு, என் எழிலைக் கவர்தல் முறையோ?

11.🔔கந்தனைமலிகனை கடலொலியோதங் கானலங்கழிவளர் கழுமலமென்னும்
நந்தியாருறைபதி நான்மறைநாவ னற்றமிழ்க்கின்றுணை ஞானசம்பந்தன்
எந்தையார்வளநக ரிலம்பையங்கோட்டூ ரிசையொடுகூடிய பத்தும்வல்லார்போய்
வெந்துயர்கெடுகிட விண்ணவரோடும் வீடுபெற்றிம்மையின் வீடெளிதாமே.

🙏🏾மணம் நிரம்பியதும், கடல் ஒலியோடு அதன் வெள்ளம் பெருகிக் கடற்கரைச் சோலைகள் உப்பங்கழிகள் ஆகியன நிரம்புவதும் ஆகிய கழுமலம் என்னும் சிவன் உறைபதியாகிய சீகாழியில் தோன்றிய நான்மறை ஓதும் நாவினனும் நற்றமிழ்க்குஇனிய துணையாயிருப்பவனுமாகிய ஞானசம்பந்தன் எந்தையார் உறையும் வளநகராகிய இலம்பையங்கோட்டூரில் வீற்றிருந்தருளும் இறைவன் மீதுபாடிய இசையொடும் கூடிய பத்துப் பாடல்களையும் ஓத வல்லவர்கள் தம் கொடிய துயர்கள் ஓடிக்கெட விண்ணவரோடும் வீற்றிருந்து பின் விண்ணிலிருந்து விடுபட்டு வீடு பேற்றையும் இப்பிறப்பு ஒன்றாலேயே எளிதாகப் பெறுவார்கள்.

            திருச்சிற்றம்பலம்.

*திருவிழாக்கள்:*
குருபெயர்ச்சி,
மகாசிவராத்திரி,
ஆருத்ரா தரிசனம்,
திருக்கார்த்திகை,
ஆடிப்பெருக்கு முதலியன.

*தொடர்புக்கு:*
பிரம்மேச சிவம்.
94448 65714
044- 27692412

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *திரிபுராந்தகர்சுவாமி திருக்கோயில், திருவிற்கோலம்.*

___________________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment