உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு.கருப்பசாமி.*
________________________________________
*தினமும் ஒரு பாடல் பெற்ற திருக்கோயில் தரிசனம்.*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல...............)
___________________________________________
*தேவாரம் பாடல் பெற்ற தல எண்: 204.*
*பாடல் பெற்ற சிவ தல தொடர்.*
*சிவ தல அருமைகள் பெருமைகள்.*
🍁 *திரிபுராந்தகர் சுவாமி திருக்கோவில், திருவிற்கோலம்.*🍁
__________________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள முப்பத்திரண்டு தலங்களுள் இத்தலம் பதினான்காவது தலமாகப் போற்றப் படுகிறது.
திருவிற்கோலம் தலவூரை தற்போது *கூவம்* என்று அழைக்கிறார்கள்.
*இறைவன்:* திரிபுராந்தக சுவாமி, தீண்டாத் திருமேனி நாதர்.
*இறைவி:* திரிபுரசுந்தரி அம்பாள்.
*தல விருட்சம்:* வில்வம்.
*தல தீர்த்தம்:* கூவாக்னி தீர்த்தம்.
*ஆகமம்:* காரண காமிகம்.
*பெயர்க் காரணம்:*
சிவபெருமான் திரிபுரங்களை அழிக்கத் தேரின் மீது ஏறிச் புறப்பட்டபோது, தேரின் கூவரமாகிய ஏர்க்கால் முறிந்தமையால், இத்தலம் கூவரம் என வழங்கப்பட்டுப் பின் கூவம் எனப் பெயர் பெற்றது.
இத்தலத்து இறைவன் வில்லேந்திய திருக்கோலத்துடன் இத்தலத்தில் விளங்குவதால், திருவிற்கோலம் எனவும் அழைக்கப்படுகிறது.
*தேவாரம் பாடியவர்கள்:*
திருஞானசம்பந்தர். மூன்றாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம் மட்டும்.
*இருப்பிடம்:*
சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து ஒன்பது கி.மி. தொலைவில் இந்த தலம் அமைந்துள்ளது.
அருகில் உள்ள ஊர் திருவள்ளூர். திருவள்ளூரில் இருந்து காஞ்சீபுரம செல்லும் பேருந்து கடம்பத்தூர், பேரம்பாக்கம் வழியாக கூவம் செல்கிறது.
கூவம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சுமார் ஒரு கி.மி. சென்றால் இந்த தலத்தை அடையலாம்.
*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு
திரிபுராந்தக சுவாமி திருக்கோவில்,
கூவம் கிராமம்,
கடம்பத்தூர் அஞ்சல்,
வழி திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம்,
PIN - 631 203
*ஆலயப் பூஜை காலம்:*
தினந்தோறும் காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரையிலும் மாலை 4.00 முதல் இரவு 7.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
*கோவில் அமைப்பு:*
கூவம் என்ற பெயரில் தற்போது அறியப்படும் இத்தலம் திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையிலிருந்து சுமார் ஐம்பது கி.மி. தொலைவில் இருக்கிறது.
இத்தலத்தின் அருகே தான் கூவம் ஆறு உற்பத்தியாகிறது.
சுத்தமான நீரோட்டம் உள்ள இந்த ஆறு சென்னையை நெருங்கும் போது மிகவும் அசுத்தமடைந்து விடுகிறது.
இத்தலத்து இறைவன் ஒரு சுயம்பு லிங்கம். இங்குள்ள இறைவனை, லிங்கத் திருமேனியை ஆலய அர்ச்சகர்கள் கூட தொடுவதில்லை. அதனால் இறைவன் தீண்டாத் திருமேனி நாதர் என்றும் பெயர் கொண்டுள்ளார்.
இங்குள்ள லிங்கம் காலத்திற்கு ஏற்ப நிறம் மாறுவதாகவும் கூறப்படுகிறது.
அதிக மழைபெய்வதாக இருந்தால் இறைவரின் திருமேனியில் வெண்மை நிறம் தோன்றுவதும், யுத்தம் ஏற்படுவதாயிருந்தால் சிவப்புநிறம் படர்வதும் ஆகிய அற்புதம் பொருந்திய தலம்.
இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் முதலில் இறைவி திருபுரசுந்தரியை வணங்கிவிட்டுத் தான் பிறகு மூலவர் திரிபுராந்தகரை வழிபடவேண்டும் என்ற நியதி வழக்கத்தில் உள்ளது.
திருமணமான தம்பதியர்களுக்கு இடையே ஏற்படும் எந்தவிதமான பிரச்னைகளும் இத்தலத்து இறைவனை வழிபடுவதின் மூலம் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.
ஆலயத்துக்கு எதிரில், தீர்த்தக் குளம் இருக்க, அவ்விடம் அகழ்ந்து சென்று தீர்த்தத்தை அள்ளியெடுத்து சிரசிற்கு வார்த்து இறைவனை நினைந்து வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
தெற்கு திசையிலுள்ள ஐந்து நிலைகளைத் தாங்கிய இராஜகோபுரத்தைக் காணக் கிடைத்ததும் *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.
இந்தக் கோபுரத்துடன் இவ்வாலயத்தின் பிரதான வாயிலாக இருக்க, உள் புகுந்தோம்.
கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்து தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள வாயில் வழியாக அம்பாள் சந்நிதிக்குச் சென்றோம்.
வாயிலின் முன் பலிபீடமிருக்க, நம் ஆணவமலம் ஒழிய வேண்டிக் கொண்டோம்.
கொடிமரத்தையும் வணங்கிக் கொண்டோம்.
அம்பாளைக் கண்டு, மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.
அடுத்து, சுவாமி சந்நிதிக்கும் சென்றோம். ஆலய வாயில் முன் இருந்த பலிபீடத்தருகே வந்து நின்று, நம் ஆணவமலம் ஒழிய பிரார்த்தித்து வணங்கிக் கொண்டோம்.
அடுத்திருந்த கொடிமரத்தரத்து முன் வீழ்ந்து, சிரம் கரங்கள் செவிகள் புஜங்கள் பூமியில் புரள வணங்கியெழுந்து நிமிர்ந்தோம்.
வாயிலின் இருபுறத்தில் துவாரபாலகர்கள் இருக்க வணங்கிக் கொண்டு, ஈசனைக்காண அனுமதியும் வேண்டிக் கொண்டோம்.
இந்த இரு துவாரபாலகர்கள் இருவரும், திரிபுராதிகள் மூவருள் இருவர்கள் இருவர்களாம்.
தொடர்ந்து சந்நிதிக்குள் சென்று, இங்கும் அம்மையைக் கண்டு வணங்கியக் கொண்டதுபோல, சுவாமியையும் வணங்கிக் கொண்டு, அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.
சுவாமி சந்நிதி விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையதாக இருந்தது..
அம்பாள், சுவாமி ஆகிய இரண்டு சந்நிதிகளையும் சேர்த்து வலம் வர பிரகாரம் அமைந்துள்ளன.
உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் அச்சிறுத்த விநாயகர் சந்நிதி அமைந்திருக்க, சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிக் கொண்டோம்.
சுவாமி சந்நிதி நுழை வாயிலுக்கு முன் வலதுபுறம் வருகையில், தெற்கு நோக்கியபடி நம் ஆடவல்லான் நடராஜர் சந்நிதி இருந்தது.
இவர் ஆடற் நடனக்கோலம் கண்டு சில நொடிகள் அப்படியே மெய் சிலிர்த்து நின்றோம். பின்பு சிரமேற் கைகள் உயர்த்தி குவித்து சிவ சிவ என மொழிந்து வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
அடுத்து, வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகர், தட்சினாமூர்த்தி ஆகிய மூர்த்தங்களும் பார்க்க வேண்டியவை. மிக மிக சிறப்பாக இருந்தது. வணங்கி நகர்ந்தோம்.
சுவாமி கருவறை கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவர் சிற்பமும் கலையழகுடன் இருந்தது.
மஹாவிஷ்னு வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைவதும், பிரம்மா அன்னப் பறவை உருவில் ஜோதி உருவமான சிவபெருமானின் முடியைக் காண முயலுவதும் லிங்கோத்பவர் சிற்பத்தில் இருக்கின்றன.
பக்கத்தில் பாலமுருகன் சந்நிதியும் அடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதிக்குச் சென்று கைதொழுது கொண்டோம்.
சண்டிகேஸ்வரர் சன்னதிக்குச் சென்று, இவரை வணங்கும் மரபு முறைப்படி வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
துர்க்கை சந்நிதிக்கு எதிரில் சந்தன மேடை இருப்பதைக் கண்டோம்.
இதில் அரைத்த சந்தனத்தைத்தான் சுவாமிக்குச் சார்த்தப்படுகிறது.
*தல அருமை:*
இத்தலம் சிவபெருமான் நிகழ்த்திய திரிபுர சம்ஹாரத்துடன் சம்பந்தம் கொண்டதாகும்.
சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்ய புறப்பட்ட போது முழுமுதற் கடவுள் விநாயகரை வழிபட்டு கிளம்பாததால் சிவன் ஏறிய தேரின் அச்சு முறிந்து விட்டது.
பிறகு விநாயகர் வழிபாடு செய்து புறப்பட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன.
சிவபெருமான் வில் கையிலேந்தி காட்சி கொடுப்பதால் இத்தலம் திருவிற்கோலம் என்ற பெயரில் ஒரு பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது.
இத்தலத்திலுள்ள விநாயகருக்கு அச்சிறுத்த விநாயகர் என்று பெயர்.
*ஆலய சிறப்பு:*
இந்த கோவிலிலுள்ள தீர்த்தம் அக்னி தீர்த்தம் (கூபாக்கினிதீர்த்தம் ) எனப்படும்.
ஆலய அர்ச்சகர்கள் இந்த அக்னி தீர்த்தத்தில் நீராடிய பிறகே தினசரி பூஜைகள் செய்வார்கள்.
கடுமையான வறட்சி காலத்திலும் இந்த அக்னி தீர்த்தம் வற்றுவதில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் நான்கு கி.மி தொலவிலுள்ள கூவம் ஆற்றிலிருந்து கொண்டு வரும் நீரால் மட்டுமே இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் வழக்கத்தை அர்ச்சகர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக என்றேனும் இவ்வாறு கூவம் ஆற்று நீர் அபிஷேகத்திற்கு இல்லையெனில் இளநீர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
பகல்நேர அபிஷேகம் செய்ய அருகில் உள்ள பிஞ்சவாக்கம் என்ற கிராமத்தில் இருந்து கொண்டு வரப்படும் பால் பயன்படுத்தப்படுகிறது.
பிஞ்சவாக்கம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் இவ்வாலய இறைவன் அபிஷேகத்திற்கு பால் கொடுப்பதை தங்கள் கடமையாக நினைத்து செயல்படுகின்றனர்.
அதிக மழை, வெள்ளம் வரும் அறிகுறி இருந்தால் சுவாமி மீது வெண்மை படரும் என்றும், போர் நிகழ்வதாயின் செம்மை படரும் என்றும் சொல்லப்படுகின்றது.
இது பற்றியே ஞானசம்பந்தர் தம் பதிகத்தின் மூன்றாவது பாடலில் ஐயன் நல் அதிசயன் என்று குறிப்பிடுகின்றார்.
(இவ்வண்ண மாற்றம் தற்போது காணப்படவில்லை என்று சொல்கிறார்கள்.)
மூலவர் திரிபுரம் எரித்த மூர்த்தி. அபிஷேகங்கள் செய்வதால் உண்டாகும் மேற்புறப் படிவுகள் தானாகவே பெயர்ந்து விழுந்து திருமேனி சுத்தமாகி விடும் என்று சொல்லப்படுகிறது.
கோயிலுக்கு வெளியே திரிபுர சம்ஹார காலத்தில் தேர் அச்சு முறிந்திட, உடனே பெருமானை விடையாக இருந்து தாஙகியதாகச் சொல்லப்படும் கரிய மாணிக்கப் பெருமாள் கோயில் உள்ளது.
*சம்பந்தர் தேவாரம்:*
பண் :காந்தார பஞ்சமம்
1.🔔உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்
திருவினான் வளர்சடைத் திங்கள் கங்கையான்
வெருவிவா னவர்தொழ வெகுண்டு நோக்கிய
செருவினான் உறைவிடம் திருவிற் கோலமே.
🙏🏾அழகே உருவான உமாதேவியோடு ஒன்றிநின்ற, செல்வரான சிவபெருமான் தம் சடைமுடியில் திங்களும், கங்கையும் சூடியவர். வானவர்கள் அஞ்சித் தொழுது போற்றுமாறு, வெகுண்டெழுந்து போர்க்கோலம் பூண்டு வில்லேந்தி, அப்பெருமான் வீற்றிருந்தருளுகிற இடம் திருவிற்கோலம் ஆகும்.
2.🔔சிற்றிடை யுமையொரு பங்க னங்கையில்
உற்றதோர் எரியினன் ஒரு சரத்தினால்
வெற்றிகொள் அவுணர்கள் புரங்கள் வெந்தறச்
செற்றவன் உறைவிடம் திருவிற் கோலமே.
🙏🏾சிறிய இடையையுடைய உமாதேவியைத் தம் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு, அழகிய கையில் நெருப்பு ஏந்தி விளங்கும் சிவபெருமான், ஓர் அம்பால் அசுரர்களின் மூன்று புரங்களும் வெந்தழியுமாறு போர்செய்து வெற்றி கொண்டவர். அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் திருவிற்கோலம் என்னும் கோயிலாகும்.
3.🔔ஐயன்நல் லதிசயன் அயன்விண் ணோர்தொழும்
மையணி கண்டனார் வண்ண வண்ணம்வான்
பையர வல்குலாள் பாகம் ஆகவும்
செய்யவன் உறைவிடம் திருவிற் கோலமே.
🙏🏾இறைவர் யாவற்றுக்கும் தலைவர். பல பல வேடம் கொள்ளும் அதிசயர். பிரமனும், மற்றுமுள்ள விண்ணோர்களும் தொழுகின்ற மை போன்ற இருண்ட கண்டத்தர். நல்ல வண்ணமுடைய, பாம்பின் படம் போன்ற அல்குலையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு செம்மேனியராய் அவர் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம் ஆகும்.
4.🔔விதைத்தவன் முனிவருக் கறமுன் காலனை
உதைத்தவன் உயிரிழந் துருண்டு வீழ்தரப்
புதைத்தவன் நெடுநகர்ப் புரங்கள் மூன்றையும்
சிதைத்தவன் உறைவிடம் திருவிற் கோலமே.
🙏🏾இறைவன் சனகாதி முனிவர்கட்கு அறக்கருத்துக்களை நன்கு பதியும்படி உபதேசித்தவன். மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த காலனைக் காலால் உதைத்து உருண்டு விழும்படி செய்தவன். திரிபுரங்கள் மூன்றையும் எரித்துச் சாம்பலாகுமாறு சிதைத்தவன். அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் திருவிற்கோலம் என்பதாம்.
5.🔔முந்தினான் மூவருள் முதல்வன் ஆயினான்
கொந்துலா மலர்ப்பொழிற் கூக மேவினான்
அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை
சிந்துவான் உறைவிடம் திருவிற் கோலமே.
🙏🏾இறைவன் எல்லாப் பொருள்கட்கும் முற்பட்டவன். மும்மூர்த்திகளுக்குள் தலைவனாவன். கொத்தாகப் பூக்கும் மலர்கள் நிறைந்த சோலைகளையுடைய கூகம் என்னும் ஊரில் வீற்றிருப்பவன். மாலையில் வானில் தோன்றும் பிறைச் சந்திரனைச் சூடியவன். அடியவர்களைப் பற்றியுள்ள வினைகள் நீங்கும்படிச் செய்பவன். அப்பெருமான் வீற்றிருந்தருளுமிடம் திருவிற்கோலம் ஆகும்.
6.🔔தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம்
வகுத்தவன் வளர்பொழிற் கூக மேவினான்
மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தறச்
செகுத்தவன் உறைவிடம் திருவிற் கோலமே.
🙏🏾இறைவன் அரிய நான்கு வேதங்களையும் அவற்றின் ஆறங்கங்களையும் தொகுத்தவன். சிவாகமங்களை அருளிச் செய்தவன். வளமையான சோலைகளையுடைய கூகம் என்னும் ஊரில் வீற்றிருக்கும் அவன், தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன். செருக்குற்று மிகுந்த கொடுமைகளைச் செய்த அசுரர்களின் முப்புரங்களை வெந்தழியும்படி செய்தவன். அப் பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம் ஆகும்.
7.🔔விரித்தவன் அருமறை விரிச டைவெள்ளம்
தரித்தவன் தரியலர் புரங்கள் ஆசற
எரித்தவன் இலங்கையர் கோன்இ டர்படச்
சிரித்தவன் உறைவிடம் திருவிற் கோலமே.
🙏🏾அரும்பொருளுரைக்கும் வேதங்களை இறைவன் விரித்து அருளியவன். விரிந்து சென்ற கங்கையைச் சடைமுடியில் தாங்கியவன். பகையசுரர்களின் முப்புரங்கள் அற்றொழியும்படி எரித்தவன். இலங்கை மன்னனான இராவணன் கயிலையின் கீழ்த் துன்புறும்படி செய்து, பின் அருள் புரிந்த விளையாடல் செய்தவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம் ஆகும்.
8.🔔* * * * * * * * *
🙏🏾.காணக் கிடைக்கவில்லை.
9.🔔திரிதரு புரம்எரி செய்த சேவகன்
வரியர வொடுமதி சடையில் வைத்தவன்
அரியொடு பிரமன தாற்ற லால் உருத்
தெரியலன் உறைவிடம் திருவிற் கோலமே.
🙏🏾இறைவன் வானத்திலே பறந்து திரிந்து தேவர்கட்குத் தீங்குகள் செய்த அசுரர்களின் முப்புரங்களை எரித்தவன். வரிகளையுடைய பாம்பையும், சந்திரனையும் சடையிலே அணிந்தவன். திருமாலும், பிரமனும் தமது ஆற்றலைப் பெரிதாகக் கொண்டு முனைந்ததால் காண்பதற்கு அரியவனானவன். அப் பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருவிற்கோலம் ஆகும்.
10.🔔சீர்மையில் சமணொடு சீவ ரக்கையர்
நீர்மைஇல் உரைகள்கொள் ளாத நேசர்க்குப்
பார்மலி பெருஞ்செல்வம் பரிந்து நல்கிடும்
சீர்மையி னான்இடம் திருவிற் கோலமே.
🙏🏾இறையுண்மையை உணரும் தன்மையில்லாத சமணர்களும், புத்தர்களும் கூறும் உரைகளைக் கொள்ளாது, இறை நம்பிக்கையுடன் அவன்மீது பக்தி செலுத்துபவர்கட்கு உலகில் பெருஞ்செல்வத்தைப் பரிவுடன் இறைவன் தருவான். அத்தகைய மேன்மையுடைய பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம் ஆகும்.
11.🔔கோடல்வெண் பிறையனைக் கூக மேவிய
சேடன செழுமதில் திருவிற் கோலத்தை
நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன
பாடல்வல் லார்களுக் கில்லை பாவமே.
🙏🏾வளைந்த வெண்ணிறப் பிறைச்சந்திரனைச் சடையில் சூடி, கூகம் என்னும் ஊரில், அழகிய, வளமையான மதில்களை யுடைய திருவிற்கோலம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபெருமானை நினைத்துத் தமிழ் ஞானசம்பந்தன் பாடல்களைப் பாட வல்லவர்கட்குப் பாவம் இல்லை.
திருச்சிற்றம்பலம்.
*திருவிழாக்கள்:*
சித்திரை மாதத்தில் பத்து நாட்கள், பிரமோற்சவம் நடைபெறுகிறது.
ஆடிப்பூர நட்சத்திரத்தில், பத்து நாட்களும் பூப்பாவாடை தரிசனமும்.
புரட்டாசி நவராத்திரி ஒன்பது நாட்களும் விசேஷம்.
ஐப்பசி கந்தசஷ்டிபெருவிழா ஏழு நாட்கள்.
மார்கழி திருவாதிரை,
தைப்பூசம்,
மகாசிவராத்திரி,
பங்குனி உத்திரம்,
பிரதோஷம்,
அமாவாசை போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறுகிறது.
*தொடர்புக்கு:*
சம்பந்த குருக்கள்.
94453 07033
94446 07369
044- 27651034
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *வடாரணியேசுவரர் திருக்கோயில், திருவாலங்காடு.*
________________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment