Wednesday, December 27, 2017

Periyavaa gives up Menaa

"பெரியவாளை மெட்ராஸூக்கு வரும்படி 'ஹிந்து' பத்திரிகை ஆசிரியர் ஜி.கஸ்தூரி அழைச்சார். 'நான் எதுக்கு மெட்ராஸ் வரணும்?'னு கேட்டார் பெரியவா.

"இல்லே… நீங்கள் மெட்ராஸ் வந்து ரொம்ப நாள் ஆறது. அங்கே பெரியவாளோட பாதம் படணும்னு நான் விரும்பறேன்!'னு வற்புறுத்திச் சொன்னார் கஸ்தூரி.

அவர் அழைப்பின்பேரில், பெரியவா சென்னைக்கு வந்தார். கிண்டிதான் நகர எல்லை. அங்கே 'கல்கி' சதாசிவம், 'சுதேசமித்ரன்' சீனிவாசன் எல்லோரும் வாழை மரம் கட்டி, பூர்ண கும்பம் எல்லாம் தயாராக வைத்துக்கொண்டு, பெரியவாளை வரவேற்கக் காத்துக் கொண்டிருந்தார்கள். 

பெரியவா வந்ததும், வழக்கமான மரியாதை எல்லாம் பண்ணி, வாண வேடிக்கை எல்லாம் நடத்தி, ஊர்வலமாக அழைத்துக்கொண்டு போனார்கள்.

அப்போ 'ஹிந்து' ஆபீசுக்கும் பெரியவா வரவேணும்னு கஸ்தூரி கேட்டுக்கொண்டார். 

பெரியவாளும் 'ஹிந்து' ஆபீஸ் போய், எல்லா டிபார்ட்மென்ட்டிலேயும் வேலை செய்கிறவர்களை எல்லாம் பார்த்துப் பேசி, ஆசீர்வாதம் பண்ணினார். அவாளுக்கெல்லாம் ரொம்பச் சந்தோஷம். அப்புறம் 'சுதேசமித்ரன்' ஆபீசுக்கும் வரணும்னு சீனிவாசன் கேட்டுக் கொண்டார். அங்கேயும் பெரியவா போனார். 

'கல்கி' ஆபீசுக்கும் பெரியவரைச் சதாசிவம் அழைத்துக்கொண்டு போனார்.

அந்த நேரத்துலதான் ஒரு நாள், மயிலாப்பூருக்கு ஊர்வலமா பரிவாரத்துடன் பெரியவா நடந்து போனார். ஜனங்கள் கூட்டமா திரண்டு, அவர் பின்னாலேயே வந்துகொண்டு இருந்தார்கள்.

அப்போ, மாங்கொல்லையில் திராவிடர் கழகக் கூட்டம் நடக்கிறதாக இருந்தது. கழகத் தொண்டர்கள் எல்லாரும் கூடியிருந்தார்கள். பெரியார் வருவதற்காக அவர்கள் காத்துக்கொண்டு இருந்தார்கள்.

இங்கே பெரியவாளோடு வந்து கொண்டிருந்தவர்களுக்குக் கொஞ்சம் பயம் பிடித்துக் கொண்டுவிட்டது. திராவிடக் கழகத் தொண்டர்கள் ஏதாவது ஆவேசமாகப் பேசி, விவகாரமாக நடந்துகொண்டால் என்ன செய்வது என்று கவலைப்பட்டார்கள்.

பெரியார் ஈ.வே.ரா. அதற்குள் அங்கே வந்து சேர்ந்துவிட்டார். "என்ன விஷயம்? ஏன் எல்லாரும் பதற்றமாக இருக்கிறீர்கள்?" என்று தன் கழகத் தொண்டர்களிடம் விசாரித்தார்.

"காஞ்சி சங்கராச்சார்யர் ஊர்வலமாக வந்துகொண்டிருக்கிறார். அவருக்குக் கறுப்புக்கொடி காட்டணும்னு தொண்டர்கள் எல்லாரும் சொல்கிறார்கள். உங்கள் அனுமதிக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம்!" என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

"என்னது… கறுப்புக்கொடியா! அதெல்லாம் ஒண்ணும் கூடாது. சங்கராச்சார்யர் ஊர்வலம் முதல்ல போகட்டும். யாரும் எதுவும் இடைஞ்சல் செய்யக்கூடாது. அவரைத் தடுக்கவோ, கறுப்புக்கொடி காட்டவோ கூடாது. உம்… முதல்ல அவரைப் போக விடுங்க!" என்று உத்தரவிட்டார் பெரியார்.

பெரியவாளோட ஊர்வலம் எந்தவிதத் தடங்கலும் இல்லாமல், சம்ஸ்கிருத காலேஜுக்கு வந்து சேர்ந்தது. ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

பெரியவாகிட்டே இதைச் சொன்னபோது, "எல்லாம் அந்தக் காமாட்சி பார்த்துப்பானு நான்தான் ஏற்கெனவே சொன்னேனே..!" என்று புன்னகைத்தார்.

பெரியவா அப்போதெல்லாம் 'மேனா'வில் போவார். பல்லக்கு மாதிரி அதிக பாரமாக இல்லாமல், கனம் குறைவாக இருக்கும். நாலு பேர் அதைத் தூக்கிக்கொண்டு போவார்கள். பெரியவா அதில் ஒடுங்கி உட்கார்ந்துகொள்வார்.

ஒரு தடவை, தி.க. கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்த ஒருத்தர், 'இவர் மட்டும் பல்லக்குல போவாராம். இவரை மத்தவங்க தூக்கிட்டு போகணுமாம். ஏன், அவங்க மட்டும் மனுஷங்க இல்லையா? நடந்துபோனா என்ன இவருக்கு?' என்று ஆவேசமாகப் பேசினார்.

பெரியவாளின் காதுக்கு இது எட்டியது. உடனே மேனாவை நிறுத்தச் சொல்லிக் கீழே இறங்கி, நடந்து போக ஆரம்பிச்சார். 'அவர் சொல்றதைப் பெரியவா காதுலேயே போட்டுக்க வேணாம். 

உங்களைச் சுமந்து போறது எங்க பாக்கியம்! மேனாவிலே ஏறுங்கோ'ன்னு அதைச் சுமக்கிற பக்தர்கள் எவ்வளவோ தயவுபண்ணிக் கேட்டுண்டும் பெரியவா மேனாவில் ஏற மறுத்துட்டார். 'இல்லை. அவா சொல்றதும் சரிதானே! 

துறவிக்கு மேனா எதுக்கு?'ன்னு சொல்லி, அன்னியிலேர்ந்து 'மேனா'வில் ஏறுவதையே தவிர்த்துவிட்டார் பெரியவா. வெயில், மழைன்னா அங்கங்கே கிடைக்கிற இடத்தில் தங்கிக்கொண்டு பிரயாணத்தைத் தொடர்வாரே தவிர, எங்கே போனாலும் சரி, எவ்வளவு தூரம் போவதாக இருந்தாலும் சரி, நடந்தேதான் போக ஆரம்பிச்சார்.

 கடைசி வரை அந்த வைராக்கியத்தை அவர் விடவே இல்லை.

No comments:

Post a Comment