"விலங்கியல் வித்தகர்"---பெரியவா
(மான்கள்,முயல்கள்,குதிரைகள்-விளக்கம்)
("நாமெல்லாம் பேருக்கு ஆசிரியர்;பெரியவாதான் பேராசிரியர்! அது நாம் பெற்ற பேறு!"--ஒரு பேராசிரியர்.)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-181
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
சென்னையிலுள்ள ஐ.ஐ.டி. கல்லூரி வளாகத்தில்
ஜலகண்டேஸ்வரர் கோயில் கும்பாபிகேஷம்
நடந்த சில நாள்களுக்குள்ளாகவே,மகாசுவாமிகள்
அந்தக் கோயிலுக்கு விஜயம் செய்தார்கள்.
தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்து புல் தரையில் உட்கார்ந்துவிட்டார்கள். பச்சைப்பசேல் என்ற பசும்புல் மரகத வண்ணமாகப் பளிச்சிட்டது.
பெரியவாளுக்கு எதிரில் கல்லூரிப் பேராசிரியர்கள்;
உயர் அதிகாரிகள்.
கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, உடனே
பெரியவாள் புறப்பட்டுப்போய் விடுவார்களோ என்று
தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெரியவாள்
புல் தரையில் தாமாகவே விச்ராந்தியாக உட்கார்ந்து
கொண்டதில் ரொம்ப மகிழ்ச்சி.
காட்டுப் பகுதியாக அடர்ந்த மரம்,செடி,கொடிகள்
மண்டியிருந்த இடத்தில் கட்டப்பட்டிருந்தது
அந்தக் கல்லூரி.
சிறிது நேரத்தில் சில மான்கள் துள்ளிக்கொண்டு வந்தன. பெரியவாளைப் பார்த்து மெய்மறந்து நின்றன,பெரியவாளும் மான்களின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
பெரியவாள் சொன்னார்கள்;
"மான்களுக்கு கண் ரொம்ப அழகு. மான்கள் வெஜிடேரியன்! புல்தான் சாப்பிடும். மனோ வேகத்தில் ஓடும்.."
அடுத்ததாக முயல் கூட்டம் வந்தது.
முயல்கள் எந்த விலங்கினத்தைச் சேர்ந்தவை;(விளக்கம்) கால்கள் அமைப்பு; (விளக்கம்)
முயல் குட்டியின் காதைப் பிடித்துத்தான் அதைத் தூக்கணும்; இனப்பெருக்கத்தில், முதல் வரிசையில் இருப்பவை எலியும்,முயலும்தான்; ஒரு முயல் தம்பதி, இரண்டு வருஷத்தில் சுமார் நாற்பது
முயல்களை உருவாக்கி விடும்...
என்னென்ன தகவல்கள்!
பேராசிரியர்கள்,மாணவர்களாய் எதிரில் நின்று
கொண்டிருந்தார்கள். எல்லாருக்கும் முயலைத் தெரியுமே தவிர, முயலைப் பற்றி தெரியாது.
பெரியவாள், முண்டகோபநிஷத் படித்திருப்பார்கள்.
முயல் உபநிஷத் என்று - அபூர்வ உபநிஷத்தையும்
கண்டுபிடித்துப் படித்திருப்பார்களோ?
முயல்கள் ஓடிப் போனபின் கணைப்பு ஒலி கேட்டது.
குதிரைகள்...!
"குதிரைகள் மூன்று கால்களில்தான் நிற்கும்.
நாலாவது கால் தரையில் படாது. நாய் மாதிரி குதிரைக்கும் எஜமான விசுவாசம் அதிகம். குதிரை மணலில் புரண்டு உடல் அசதியைப் போக்கிக் கொள்ளும். ரதத்தில் கட்டப்படும். குதிரைகளுக்கு சாரதியின் மனத்தைப் புரிந்து கொள்ளும் சக்தி உண்டு. அரபிக் குதிரைகள் என்று உயர்வாகச் சொல்கிறோமே தவிர, நம் நாட்டுக் குதிரைகளுக்கு
அறிவு நிறைய உண்டு. தெய்வாம்சம் உண்டு. புத்திர காமேஷ்டி யாகத்தின்போது, தசரத பத்தினிகள் குதிரைகளை வழிபட்டார்கள். குதிரை வாங்குவதற்காக கொடுக்கப்பட்ட அரசாங்கப் பணத்தில்தான் திருப்பெருந்துறையில் கோயில் கட்டினார்,மணிவாசகப் பெருமான். தஞ்சைப் பெரிய கோயிலில் ரத அமைப்புக் கொண்ட முருகன் கோயிலில்,குதிரையின் பாய்ச்சலைத் தத்ரூபமாகக் காட்டியிருக்கிறான் சிற்பி; கடிவாளக் கயிற்றின் முறுக்குக் கூட தத்ரூபமாக இருக்கும்.."
பேராசியர்கள் பிரமித்து நின்றார்கள்.
"விலங்கியல், தொல்லியல், புராணம்..ஒன்றைக்கூட விட்டு வைக்கவில்லையே,பெரியவா!" என்று பரவசத்துடன் கூறினார் ஒரு பேராசிரியர்.
"என்ன ஞாபக சக்தி! என்ன கோர்வை!"
"நாமெல்லாம் பேருக்கு ஆசிரியர்;பெரியவாதான் பேராசிரியர்! அது நாம் பெற்ற பேறு!"
உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை
No comments:
Post a Comment