Monday, October 16, 2017

Thirukudavayil temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
            *தல எண்.112.*
*பாடல் பெற்றசிவ தல தொடர்*
🌹 *சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*🌹
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*திருகுடவாயில்.*
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் தொன்னூற்று நான்காவது தலமாகப் போற்றப் படுகிறது.

*இருப்பிடம்:*
திருவாரூர் மாவட்டத்தின் தலைநகரான திருவாரூரிலிருந்து பதினாறு கி.மீ தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து பதினைந்து கி.மீ தொலைவிலும் உள்ள இத்திருவூரை தற்போது *'குடவாசல்'* என்று வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் கொரடாச்சேரி ரயில் நிலையத்திலிருந்து ஒன்பது கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. 

கொடராச்சேரி, நீடாமங்கலம், வலங்கைமான் மற்றும் நன்னிலம் ஆகிய இடங்களிலிருந்து குடவாசல் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

*ஊர்:* குடவாயில். 

*கோயில்:* குடவாயிற் கோட்டம்.

*இறைவன்:* கோணேசுவரர்.

*இறைவி:* பெரிய நாயகி.

*திருமேனி:* சுயம்புவானவர்.

*ஆலயப் பழமை:* 

*தலமரம்:* வாழை மரம்.

*தீர்த்தம்:* காவிரி,அமிர்த தீர்த்தம்.

*பூஜை காலம்:*
காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும்,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

*அஞ்சல் முகவரி:*
குடவாசல் அஞ்சல், குடவாயில் வட்டம், திருவாரூர் மாவட்டம்,
 -612 601

*தொடர்புக்கு:*
94439 59839.

*பதிகங்கள்:* திருஞானசம்பந்தர் -இரண்டு.

*திருத்தலச் சிறப்புகள்:*
இத்திருத்தலம் கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோயிலாகும்.

சுவாமியை வணங்க இருபத்து நான்கு படிகளைக் கடந்து மேலேறிச் சென்று தரிசிக்க வேண்டும்.

திருணபிந்து என்ற முனிவர் வழிபட, சிவபெருமான் திருக்குடத்தில் இருந்து வெளிப்பட்டு அவர்தம் தொழுநோயினை நீக்கி அருளினார் இத்தலத்தில்.

கருடன் வழிபட்டு அமுதம் பெற்று தானும், தன் தாயும் சாபம் நீங்கப்பெற்ற இத்தலம்.

 உலக பிரளய காலத்தில் இறைவன் உயிர்கள் அனைத்தையும் ஒரு குடத்திலிட்டு அக்குடத்தின் முகப்பில் சிவலிங்கமாக இருந்து காத்தார் சிவபெருமான்.

குடத்திலிட்டு காத்த உயிர்களை மீண்டும் படைப்புக் காலத்தில் வெளிப்படுத்த தொடங்கியபோது குடம் மூன்றாக உடைந்தது.

முதற்பாகமாகிய அடிப்பாகம் விழுந்த இடத்தில் இறைவன் திருமேனியாகக் கொண்டார். அதுவே குடமூக்கு எனப்படும் கும்பகோணம் ஆகும்.

அடுத்து நடுப்பாகம் விழுந்த இடமே கலைய நல்லூராகும்.

குடத்தின் முகப்பு (வாயில்) பாகம் விழுந்த இடமே குடவாயிலாகும்.

இங்கிருக்கும் ஈசன், பெரிய சிவலிங்கத் திருமேனியானவர்.

இதற்கு கதலிவனம், வன்மீகாசலம் என்பன வேறு பெயர்களும் வழங்கியதுண்டு.  

சுவாமி நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். 

மேலும் இத்தலம் கருடன், சூரியன், தாலப்பிய முனிவர், பிருகு முனிவர் முதலியோர் வழிபட்ட தலம்.

பிரகாரத்தில் விநாயகர், முருகன், இடும்பன்,  தண்டபாணி, கலைமகள், கஜலட்சுமி, நவக்கிரகம், பைரவர், சனீசுவரர், சண்டேசுவரர், நடராஜர், ஏகபாதர் முதலிய சந்நிதிகள் இருக்கின்றன.

இத்தலம் சங்ககாலச் சிறப்பும் பழைமையும் வாய்ந்தது. சோழன் கோச்செங்கணான், சேரமான் கணைக்கால் இரும் பொறையை வென்று, அவனை இக்குடவாயிலிற் சிறைக் கோட்டத்தே சிறை வைத்தான் என்னும் செய்தி புறநானூற்றால் தெரிகிறது.

இதனால் அன்றைய குடவாயில், சோழப்பேரரசின் சிறைக்கோட்டமாக இருந்ததெனத் தெரிகின்றது. 

குடவாயில் கீரத்தனார், குடவாயில் நல்லாதனார் போன்ற புலவர்கள் பாடியுள்ள பாடல்கள் அகநானூறு முதலிய சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன.

அகநானூற்றில் வரும் செய்தி ஒன்றால், சங்ககாலத்தில் குடவாயில் சோழர்களின் கருவூல நிலையமாக இருந்த தென்று அறிய முடிகிறது.

கல்வெட்டுச் சிறப்பு உடைய தலம் இஃது. மூன்று கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கல்வெட்டில், இறைவன் பெயர் *'குடவாயில் உடையார்'* என்றும், இறைவி பெயர் *'பெரிய நாச்சியார்'* என்றும், கோயிலின் பெயர் *'பெருந்திருக்கோயில்'* என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

*கோவில் அமைப்பு:*
பேருந்தைவிட்டு இறங்கியதும்  அடுத்து பக்கத்தில் கோயில் இருந்தது.

ஆலயத்துக்கு அருகில் வந்ததும் தான்  தெரிந்தது இக்கோயிலுக்கு ராஜகோபுரமில்லையென்று.மிகுந்த ஏமாற்றமாய் இருந்தது. 

வழக்கம்போல நம் நாவு, *சிவ சிவ* என மொழிந்தது.

ஆலயத்து முகப்பு மட்டுமே இருக்க, உள் புகுந்தோம். மேற்புறத்தில் பஞ்சமூர்த்திகள் உருவங்கள் வண்ணச்சுதையில் அழகுற அமைக்கப்பட்டிருப்பதைக் காணும்போது, அற்புதமாக இருந்தது.

அடுத்து, உள்நுழைந்து தொடர செப்புக் கவசமிட்ட கொடிமரத்தைக் கண்டோம். அதன் முன் நின்று வணங்கிக் கொண்டோம்.

இதையடுத்து கொடிமரத்து விநாயகர், சந்நிதியாக கொண்டு அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.

இவரிடம் இவருக்கும் டான் வணக்கத்தை முறைப்படி அளித்து வணங்கிக் கொண்டோம்.

நாங்கள் சென்றிருந்த சமயம், ஆலய பராமரிப்பு வேலையோ அல்லது, விழா விசேஷத்துக்குண்டான ஏற்பாடோ தெரியவில்லை. ஆலயம் முழுவதும் வண்ணமயமாக அழகுப் பொலிமை தாங்கி  காட்சியளித்தது.

தனிக்கோயிலாக இருந்துகொண்டு அருளிக்கொண்டிருந்த சண்டேசுவரரைக் கண்டோம்.

அவர்முன் வந்து அவருக்குண்டான வணக்க முறைப்படி வணங்கிக் கொண்டோம். இவருருக்கும் தவம் கலையாதிருக்க நாம் சப்தம் செய்யாது அமைதியான முறையில் வணங்கி நகர்ந்தோம்.

அடுத்ததாக நடராஜசபைக்கு வந்தோம். மிக  அழகாக சபை. அதைவிட அவர் அழகு. ஆடவல்லான நடராஜப் பெருமானின் அவிர்சடை அழகுகள் நம் மனத்தை விட்டு அகலவே இல்லை.

அப்படியே அவரை எவ்வளவு நேரமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது.

அவரருட்பார்வை நம்மை மேலும் கவர்ந்து ஈர்க்கப்பட, இன்னும் சில அடிகள் முன் வைத்து சபையின் படிமுனைக்கருகே வந்து நின்றோம்.

பெருமானின் திருமேனியில் பீடத்தில் 10 -11 ஆம் நூற்றாண்டு என எழுத்தினைக் கண்டோம்.

மேலும் அதனடியின் கீழே *"களக்காடுடையார் மாலை தாழ்மார்பன்"* என எழுத்து பொறிக்கட்டிருப்பட்டிருப்பதைக் காணப்பெற்றோம்.

எழுத்து வரிகளுடன் மத்தியில் இருகரங் கூப்பிய அடியவர் ஒருவரின் உருவமும் இருந்தது. அது யாரென தெரியப்படவில்லை.

இராஜராஜ சோழனின் காலத்துக் கலைப்பாணியைக் கொண்ட,  இத்திருமேனி இத்தலத்திலிருந்து தொலைவில் உள்ள களக்காட்டில் வாழ்ந்த *'மாலைதாழ் மார்பன்'*, என்பவரால் வடித்து வழங்கப்பட்டதென அருகிருந்தோர் ஒருவர் கூற அறிந்து கொண்டோம்.

மனநிறைவான ஆடவல்லானின் தரிசனத்தை முடித்து திரும்பி நடக்க நகர்ந்தோம்.

இன்னும், அவன் ஆடல் நிலை நம் கண்களை விட்டு அகலவில்லை. அவன் தூக்கிய திருவடியின் நிலை நம் கண்களில் நிழலாடிய வண்ணமே இருந்தது.

அவன் சபையை விட்டு கொஞ்ச தூரம் வந்தாகியும் விட்டது. ஆனால், அவன் நம் கண்களிலிருந்து மறையாமல் நிறைந்திருந்தான். அதற்கேற்றாற்போல் நம் மனமும் அவனை துதித்துக் கொண்டே இருந்தது.

சந்நிதிக்கு வெளியில் பக்கவாட்டிலுள்ள காசி விசுவநாதர் சந்நிதியில் சிவலிங்கத் திருமேனியைக் காணப்பெற்றோம். 

அவர்முன் நின்று வணங்கித் தொழுதோம். இவர் செம்மண் நிறத்தினோடு காட்சி தந்தார். மிக அபூர்வமாகவும் அழகாகவும் இருந்தது.

அடுத்து தொடர்கையில் படிகள் இருக்க மேலேறிச் சென்றோம். மொத்தம் இருபத்து நான்கு படிகள் இருந்தது. படிகளைக் கடந்து மேலே சென்றால் மூலவர் சந்நிதியில் இருந்தார்.

மூலவரான கோணேசுவரரைத் தரிசித்தோம். மனமுருக பிரார்த்தனை செய்தோம். மேற்கு நோக்கிப் பார்த்த சந்நிதியில் வண்ணம் அருளிக் கொண்டிருந்தார்.

பெரிய சிவலிங்கத் திருமேனி, அர்ச்சகர் இவருக்கு காட்டிய தீபாரதனை, நம் மனதிற்கு நிறைவான தரிசனமாக அமைந்தது.

இவருடைய கம்பீரமான தோற்றத்  திருமேனியில் கருடன் தீண்டி வழிபட்ட சுவடுகள் இருப்பதாக அர்ச்சகர் கூறினார்.

நமக்கும் அவ்வடுக்களைப் பார்க்க ஆவலாய் இருந்தது. ஆனால், மலர்மாலைகளில் மூழ்கியிருந்த நம் ஈசனை,  திருமேனியிலிருந்து மலர்மாலை களை விலக்கியெடுக்க மனமில்லாததாலும், அர்ச்சகருக்கும் அந்த சிரத்தையைத் தர எண்ணமில்லாததாலும் பார்வை செய்யும் எண்ணத்தை கைவிட்டோம்.

இத்தலத்திலுள்ள ஏகபாதர் உருவம் - அரி அயன் மூவரும் ஒற்றைத் திருவடியில் ஒரு வடிவாய் நிற்கும் சிற்பம் ஏகபாத்திரமூர்த்தி மிகவும் அற்புதமாக இருந்தது.

மூலவர் சந்நிதியில் தரப்பட்ட வெள்ளியவிபூதியை நெற்றிக்குத் தரித்துக் கொண்டு வெளிவந்தோம்.

அடுத்ததாக அம்பாள் சந்நிதிக்கு வந்தோம். தெற்கு நோக்கிப் பார்த்த வண்ணம் அமைந்திருந்தது.

இங்கிருக்கும் அம்பிகையே *"பிருகத்துர்க்கையாக"* வழிபடப் பெறுவதால் கோயிலில் தனியாக துர்க்கைக்கென சந்நிதி அமைப்பு கிடையாது.

அம்மையை மனமுருக வேண்டிப் பிரார்த்தித்து அவளருட் பிரசாதமான ஓங்கிப்பெரு ஒளி பொருந்திய குங்குமத்துடன் விடைபெற்று வெளிவந்தோம்.

வெளி வருகையில், இத்தலத்தில் உள்ள *"கோணேசர் வார வழிபாட்டுக் கழகம்"* என்ற உழவாரம் செய்து கொண்டிருந்தனர்.

ஆலயத்தின்பாலும், ஈசன்பாலும் மிக்க பற்று  கொண்டு பணிகளையும் வழிபாட்டையும் செய்து கொண்டிருந்த அவ்வடியார்களைக் கண்டு  பெருமிதம் கொண்டோம். வாழ்க அவர்கள்!, வளர்க அவர்கள் தொண்டு!.

ஆலயத் தொழுகை முழுமையாக முடித்தபின், நாம் வெளியே வந்த போது, தொழுகைக்காக முதலில் உள் நுழைந்த இடமான கவசமிட்ட கொடிமரத்தருகே வரவும்,........

அக்கொடிமரத்தின் முன் என்புஜமும் தரையில் பதிய விழுந்தெழுந்து வணங்கி வெளி வந்தோம்.

"பொன்னொப் பவனும் புயலொப் பவனும்
தன்னொப் பறியாத் தழலாய் நிமிர்ந்தான்
கொன்னற் படையான் குடவாயில் தனில்
மன்னும் பெருங்கோயில் மகிழ்ந்தவனே." (சம்பந்தர்)

*கோணேசர் துதி:*
(தல புராணம்.)
"சீர்கொண்ட வெளி முகடு கடந்தண்டத்
தப்பாலாய்ச் சித்தாந்தத்தின்
வேர்கொண்ட பேரொளியாய்ச் சின்மயமா
யகண்டமாய் விமலமாகிப்
பேர்கொண்ட நாதமாய் விந்துவா
யைந் தொழிலம் பிறங்கச் செய்து
பார்கொண்ட குடவாயி லமர்ந்த கோ
ணேசர் பதம் பணிந்து வாழ்வோம்."

*பெரியநாயகி துதி:*
(தல புராணம்.)
"பரையாகி இச்சா ஞானங் கிரியை
அதிகாரப் பான்மையெய்திப்
புரைதீர்ந்து விந்து மோகினி யடுமா
னனைத்துலகும் பொருந்தச் சார்ந்து
கரை தீர்க்குஞ் சமய வித சத்தியமாய்க்
காணமுக்கட் கடவுளாகித்
தரைமேவும் குடவாயில் வரும் பெரிய
நாயகிதாடலைமேற் கொள்வாம்."

*திருப்புகழ்:*
"அயிலார் மைக்கடு விழியார் மட்டைக
ளயலார் நத்திடு விலைமாதர்
அணைமீதிற் றுயில் பொழுதே தெட்க
ளவரேவற் செய்து தமியேனும்
மயலாகித்திரி வதுதானற்றிட
மலமாயைக் குண மதுமாற
மறையால் மிக்கருள் பெறவே யற்புத
மதுமாலைப் பத மருள்வாயே
கயிலாயப் பதியுடையாருக் கொரு
பொருளே கட்டளை யிடுவோனே
கடலோடிப்புகு முதுசூர் பொட்டெழ
கதிர்வேல் விட்டிடு திறலோனே
குயிலாலித்திடு பொழிலே சுற்றிய
குடவாயிற் பதி உறைவோனே
குறமாதைப் புணர் சதுராவித்தக
குறையா மெய்த் தவர் பெருமாளே.

*தல அருமை:*
இவ்வூரை திருக்குடவாயில் என்றும் இங்குள்ள கோயிலை குடவாயிற்கோட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

உயிர்கள் அனைத்தும் அழிந்துவிடக் கூடிய பிரளயம் வந்தபோது அனைத்து உயிர்களும் அழிந்துவிடகூடாதே என்று சர்வேஸ்வரன் அமிர்தகுடம் ஒன்றைச் செய்து அதில் உயிர்களையும் அமிர்தத்தையும் வைத்து குடத்தின் முகப்பில் சிவலிங்கமாக இருந்து பாதுகாத்து வந்தார்.

காலங்கள் கடந்தன. குடத்தின் வாயிலில் இருந்த சிவலிங்கத்தை புற்று மூடியது. அப்புற்று வளர்ந்து பெரிய மலை போல் வளர்ந்தது.

புற்றால் மூடப்பட்டிருந்த குடத்தை கருடபகவான் மூக்கினால் கொத்தி பிளந்து சிவலிங்கத்தை வெளிபடுத்தினார். இதனால் இந்த இறைவனை வன்மீகாசலேசர், கருடாத்திரி என்று அழைக்கப்படுகிறார். 

அமிர்த துளி விழுந்த இடம் அமிர்த தலமாயிற்று. அமுத நீர் தேங்கிய இடம் அமிர்த தீர்த்தம் ஆயிற்று.

உயிர்களை பலகாலம் காத்து வந்ததால் இறைவன் கோணேசர் ஆனார். தன் மூக்கால் கொத்தி ஈஸ்வரனை வெளிக்கொணர்ந்த கருடன், ஈஸ்வரன் அருளால் இந்த ஆலயத்தை கட்டி வழிபட்டார் என்பது புராணம்.

ஈஸ்வரனால் பாதுகாக்கப்பட்ட அந்த அமிர்த கலசம் தக்க காலம் வந்ததும் மூன்றாக உடைந்தது. 

முதல் பாகமாகிய அடிபாகம் விழுந்த இடம் கும்பகோணமாகவும் ஈசனை ஆதிகும்பேசர் எனவும் அழைக்கப்படலானது.

நடுபாகம் விழுந்த இடம் கலயநல்லூர் இன்றைய சாக்கோட்டை ஆகும். இங்குள்ள ஈசன் அமுதகலசேஸ்வரர் ஆவார்.

குடத்தின் முகப்பு அதாவது வாயில் தங்கிய இடமே குடவாயில்(குடவாசல்) ஆயிற்று. 

இங்குள்ள தலதீர்த்தத்தின் சிறப்பாக தலபுராணத்தில் கூறும்பொழுது அமிர்த தீர்தத்தை தொட்டவருக்கு முற்பிறவியில் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும். 

இத்தீர்த்தத்தை அருந்தியவர்கள் புன்ணியவான் ஆகிறார்கள்.

இதில் ஸ்தானம் செய்ய விரும்பி இது இருக்கும் திசையில் ஓரடி எடுத்து வைத்தாலே கங்கா ஸ்நானம் செய்த பலனும், சிவலோக வாழ்வும் பெற்றவர்கள் ஆகிறார்கள்.

சிவராத்திரியில் பக்தியுடன் இத்தீர்த்தத்தில் மூழ்கினால், பதினாயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் மூழ்கி ஈசனை தரிசிப்பவர் தேவர் ஆகிறார்கள். 

இதில் ஸ்நானம் செய்பவர் அனைவரும் அமிர்தமயமான சரீரம் உடையவர்கள் ஆகிறார்கள். இக்கோவிலுக்கு தொழுநோயால் அவதியுற்ற திருணபிந்து என்ற முனிவர் வழிபட, ஈசன் குடமூக்கில் இருந்து வெளிப்பட்டு முனிவருடைய தொழுநோயை தீர்த்ததால் குடவாயில் என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேற்கு நோக்கிய இறைவன் சந்நதி, மாடக்கோவில் அமைப்பு.

*கல்வெட்டு:*
இக்கோயிலில் அம்மன் கோயில், நில மட்டத்தில் இருக்கிறது. முன் கோபுரம் பூர்த்தியாகவில்லை. கோயிலின் முன்னால் ஒரு குளம் இருக்கிறது.
திருக்கோயிலின் மதில் மண்டபம் கருடன்போல் இருக்கிற தென்பர். 

கோச்செங்கணான் இக்கோயிலை மாடக்கோயிலாக்கினான். இராஜ கோபுரத்திலும், இரண்டாம் கோபுரத்திலும் மூன்று கல்வெட்டுக்கள் இருக்கின்றன. படி எடுக்கவில்லை. 

குடவாயிலில் நல்லாதனார், கீரத்தனார் என இருவர் சங்கப்புலவர் வாழ்ந்திருந்தனர்.

நல்லாதனார் திரிகடுகம் பாடியவர். புறம் 74-இல் சேரமான் கணைக்கால் இரும்பொறை, சோழன்செங் கண்ணானோடு போர்புரிந்து குடவாயில் கோட்டத்தில் சிறைகிடந்த செய்தி உள்ளது. 

ஆகவே சோழர் காலத்தில் இவ்வூர் சிறைக்கோட்டமாக இருந்ததெனலாம். 

இவ்வூர்ப் புராணம் உரைநடையில் உள்ளது. செய்யுள்நூல் அச்சாகவில்லை.

*தேவாரம்:*
🍁திகழுந் திருமா லொடுநான் முகனும் புகழும் பெருமான் அடியார் புகல மகிழும் பெருமான் குடவாயில் மன்னி நிகழும் பெருங்கோயில் நிலாயவனே. 

🍁ஓடுந் நதியும் மதியோ டுரகம் சூடுஞ் சடையன் விடைதொல் கொடிமேல் கூடுங் குழகன் குடவாயில் தனில் நீடும் பெருங்கோயில் நிலாயவனே. 

🍁கலையான் மறையான் கனலேந் துகையான் மலையா ளவள்பா கம்மகிழ்ந் தபிரான் கொலையார் சிலையான் குடவாயில் தனில் நிலையார் பெருங்கோயில் நிலாயவனே. 

🍁சுலவுஞ் சடையான் சுடுகா டிடமா நலமென் முலையாள் நகைசெய் யநடங் குலவுங் குழகன் குடவாயில் தனில் நிலவும் பெருங்கோயில் நிலாயவனே. 

🍁என்றன் உளமே வியிருந் தபிரான் கன்றன் மணிபோல் மிடறன் கயிலைக் குன்றன் குழகன் குடவாயில் தனில் நின்ற பெருங்கோயில் நிலாயவனே. 

🍁அலைசேர் புனலன் னனலன் னமலன் தலைசேர் பலியன் சதுரன் விதிருங் கொலைசேர் படையன் குடவாயில் தனில் நிலைசேர் பெருங்கோயில் நிலாயவனே. 

🍁அறையார் கழலன் னமலன் னியலிற் பறையாழ் முழவும் மறைபா டநடங் குறையா அழகன் குடவாயில் தனில் நிறையார் பெருங்கோயில் நிலாயவனே. 

🍁வரையார் திரள்தோள் அரக்கன் மடியவ் வரையா ரவொர்கால் விரல்வைத் தபிரான் வரையார் மதில்சூழ் குடவாயில் மன்னும் வரையார் பெருங்கோயில் மகிழ்ந்தவனே.

🍁பொன்னொப் பவனும் புயலொப் பவனுந் தன்னொப் பறியாத் தழலாய் நிமிர்ந்தான் கொன்னற் படையான் குடவாயில் தனில் மன்னும் பெருங்கோயில் மகிழ்ந்தவனே. 

🍁வெயிலின் நிலையார் விரிபோர் வையினார் பயிலும் முரையே பகர்பா விகள்பாற் குயிலன் குழகன் குடவாயில் தனில் உயரும் பெருங்கோயில் உயர்ந்தவனே. 

🍁கடுவாய் மலிநீர் குடவாயில் தனில் நெடுமா பெருங்கோயில் நிலாயவனை தடமார் புகலித் தமிழார் விரகன் வடமார் தமிழ் வல்லவர் நல்லவரே.

        திருச்சிற்றம்பலம்.

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் நாளைய தலப் பதிவு *திருச்சேறை, செந்நெறியப்பர்.*

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment