உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘
🌹 *பாடல் பெற்ற சிவ தல தொடர்.113.*🌹
🌷 *சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*🌷
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
💐 *திருச்சேறை.*💐
(சில நாட்களாய் இத்தலம் பதிவு வளரும்.)
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
*இறைவன்:* சாரபரமேஸ்வரர், செந்நெறியப்பர்.
*இறைவி:* ஞானவல்லி.
*மூர்த்தி:* விநாயகர், நடராசர், மார்க்கண்டேயர் வழியே லிங்கம், சப்த மாதர்கள், முருகன், கஜலெட்சுமி, ஜேஷ்டாதேவி, நால்வர்.
*தீர்த்தம்:* மார்க்கண்டேய தீர்த்தம்.
*தலவிருட்சம்* மாவிலங்கை.
*தலச்சிறப்பு:* கடன் நிவர்த்தித் தலம், மாசி மாதம் 13, 14, 15 தேதிகளில் சூரியவழிபாடு.
*வழிபட்டோர்:* மார்க்கண்டேயர், சம்பந்தர், அப்பர்.
*தேவாரம் பாடியோர்:* சம்பந்தர், அப்பர்.
*ஆலயத் திறப்பு காலம்:*
காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல்
இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
*பூஜை விவரம்:* மூன்று கால பூஜை.
*திருவிழாக்கள்:* வைகாசியில் விசாகப்பெருவிழா, ஆடிப்பூரம்.
நவராத்திரி.
கந்தசஷ்டிவிழா.
*அருகிலுள்ள நகரம்:* கும்பகோணம்.
*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு செந்நெறியப்பர் திருக்கோவில்,
திருச்சேறை அஞ்சல் -
612 605,
கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்.
தேவாரப் பாடல் பெற்ற சிவ தலங்களில் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் தொன்னூற்று ஐந்தாவது தலமாகப் போற்றப் படுகிறது.
*கடன்நிவர்த்தீஸ்வரர் குடி கொண்ட அற்புதத் திருவூர்:*
தென்னகமாம் தமிழகத்தில் திருக்கோயில்களுக்கு பஞ்சமில்லை.
அதிலும் கலையிலும் ஞானத்திலும்,இசையிலும் மேன்மை பெற்ற ஊர் கும்பகோணம் என்று சொன்னால் மறுப்பவர் யாருமில்லை.
பார்புகழும் கும்பகோணத்தை சுற்றிலும் எண்ணெய்யை பரிகார ஸ்தலங்கள் பல அவற்றுள் தலை சிறந்த பரிகாரத்தலம்தான் *கடன் நிவர்த்தீஸ்வரர்* அமர்ந்தருள் புரியும் திருச்சேறையாகும்.
அனைவரின் கடன்களையும் தீர்க்க அன்போடு வா என்றழைக்கும் திருச்சேறை கும்பகோணத்தில் இருந்து திருவாரூராபேருந்து மார்க்கத்தில், கும்பகோணத்திலிருந்து பேருந்து வரும்போது நஞ்சை புஞ்சை வயல்கள் பச்சை பட்டாடையுடுத்தி நம்மை வரவேற்கும்.
திருச்சேறையைச் சுற்றி எங்கு பார்த்தாலும் தென்னை மரங்களும் மாமரங்களும் நிறைந்து கண்களின் குளிர்ச்சியை தூண்டுவிக்கும்.
*மலர் கூட்டுப் பிரார்த்தனை:*
தேவார பாடல் பெற்ற பைரவ சன்னதியும் உள்ள தலம் இது.
இத்தலத்தில் பிரார்த்தனை தெய்வமாகவும், எல்லா வகை கடன்களையும் நிவர்த்திசெய்கின்ற கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகவும் ரிணவிமோசன லிங்கேஸ்வரர் தனிசன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார்.
இங்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் தற்போது காலை, மதியம், மாலை என மூன்றுவேளைகளிலும் விசேஷ அபிஷேக ஆராதனையும் சிறப்பு கூட்டு மலர் பிரார்த்தனையும் நடைபெற்று வருகிறது.
வாரம்தோறும் கோயில் வாகன மண்டபத்தில் சிறப்பு யாகம் நடைபெற்று பின்னர் மேளதாளங்கள் முழங்க புனித தீர்த்தம் கோவில் உலாவந்து தொடர்ந்து ரிணவிமோசன லிங்கேஸ்வரருக்கு மாபொடி, திரவியபொடி, பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், பால், தயிர் என பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெறும்.
புனித நீரை கொண்டும் மகாஅபிஷேகம் நடைபெறும். பின்னர் பக்தர்களுக்கு மலர்கள் கொடுக்கப்பட்டு சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடந்து மலர் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை நடைபெறும்
*தல அருமை:*
நம் நாட்டை ஆண்ட சோழ மன்னர்கள் இறைவழிபாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர்கள்.
பலர் ஆலயங்கள் கட்டுவதில் தங்களது முழு வாழ்க்கையையுமே அர்ப்பணித்துள்ளனர்.
அவர்கள் கட்டிய ஆலயங்கள் இன்றும் அவர்கள் புகழ் பாடிக்கொண்டிருக்கின்றன என்பது நமக்கு கண்கூடு.
சோழ மன்னர்களுள் ஒருவனான குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட சிவாலயம் ஒன்றாறது திருச்சேறை என்ற ஊரில் உள்ளது.
சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையைக் கொண்டது இந்த ஆலயம்.
வெளிப்பிராகாரத்தின் வடக்குப் பகுதியில் இறைவியின் சந்நதிக்கு அருகாக ஆலயத் தல விருட்சமான மாவிலங்கை மரம் உள்ளது.
இதனை மகாலிங்க மரம் என்றும் சொல்வதுண்டு. இது ஓர் அபூர்வ மரமாகும். இந்த மரத்தில் ஆண்டில் நான்கு மாதங்கள் இலை மட்டுமே இருக்கும். அடுத்த நான்கு மாதங்கள் பூக்கள் மயமாக இருக்கும். அடுத்த நான்கு மாதங்கள் இலையோ பூக்களோ இல்லாமல் காட்சி தரும்.
இந்த ஆலயத்தில் மூன்று தீர்த்தங்கள் உள்ளன.
முதல் தீர்த்தம் பிந்து சுதா தீர்த்தம். இது கோயிலின் உள்ளே அமைந்துள்ள கேணியாகும். அமுதத்தின் ஒரு துளி விழுந்ததால் ஏற்பட்ட தீர்த்தம் இது.
இரண்டாவது, ஞான தீர்த்தம். ஆலயத்தின் எதிரேயுள்ள திருக்குளம் இதுவே.
தெப்பக்குளம் எனப்படும் தீர்த்தம் மூன்றாவது. இது மார்க்கண்டேய தீர்த்தம் என்றும்
அழைக்கப்படுகிறது.
தேவக்கோட்டத்திலும் பிராகாரத்திலும் விநாயகர், ஜுரஹர லிங்கேஸ்வரர், நடராஜர், தட்சிணாமூர்த்தி, அமிர்தகடேஸ்வரர், அபிராமி, மிருகண்டு மகரிஷி, சப்த கன்னியர்கள், சமயக்குரவர்கள், பாலசுப்பிரமணியர், மகாலட்சுமி, வாயுலிங்கம், ஜேஷ்டாதேவி, மூன்று துர்க்கைகள், சண்டிகேஸ்வரர், சூரியன், காளீஸ்வரர், நாகராஜர், நவகிரக நாயகர்கள் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
மூலவரான சாரபரமேஸ்வரர் நீண்ட பாணலிங்கமாக காட்சி தருகிறார். தன்னை வணங்கும் பக்தர்களை செந்நெறிப்படுத்துவதால் செந்நெறியப்பர் என்று பெயர் பெற்று விளங்குகிறார்.
மகாபாரதத்தில் அரக்கு மாளிகையில் இருந்து வெளியேற யுத்திகள் கூறியவரும், பஞ்ச பாண்டவர்களின் அன்னையாகிய குந்திதேவிக்கு உபதேசம் செய்தவருமான தெளமிய மகரிஷி இத்தலத்தில் மோட்சம் பெற்ற இடத்தில் சாரபரமேஸ்வரரின் சந்நதியுள்ளது.
ஞானமிருந்தால் மட்டுமே ஒரு மனிதன் முழுமையடைகிறான். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளித் தருவதால் இத்தல இறைவி ஞானாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள்.
இத்தலத்தின் பரிகார தெய்வமாக ருண விமோசன லிங்கேஸ்வரர் விளங்குகிறார். மார்க்கண்டேய முனிவர் தன்னுடைய ஆசிரமத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார். அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அவரின் ஆத்மார்த்த லிங்கமே ருண விமோசன லிங்கேஸ்வரர்.
பொதுவாகவே மனிதப் பிறவிக்கு, முற்பிறவிக் கடனும், இப்பிறவியில் பொருட் கடனுமாக இரண்டு கடன்கள் உண்டு. ரிண விமோசன லிங்கேஸ்வரரை முறையோடு வழிபட்டால் இந்த இரண்டு கடன்களிலிருந்தும் விடுபடலாம். எனவே, இவர் கடன் நிவர்த்தீஸ்வரர் என போற்றப்படுகின்றார்.
பொதுவாகவே பைரவர் தன் கரங்களில் உடுக்கை, சூலம், சாட்டை, கபாலம் இவற்றையே ஆயுதங்களாகக் கொண்டிருப்பார். ஆனால், இங்கு சாட்டைக்குப் பதிலாக இறைவனை பூஜிக்கும் வண்ணம் தன் இடது மேல் கரத்தில் மணியை ஏந்தி காட்சி தருகிறார். இந்தச் சிறப்பு மிக்க காலபைரவர் சமயக் குரவரான நாவுக்கரசருக்கு காட்சி அளித்தமையால் அனைத்து ஆலய இறைவன் இறைவியை மட்டுமே பாடிய திருநாவுக்கரசர், இந்த ஆலய பைரவரையும் பாடியுள்ளார் என்பதை நாம் நோக்க வேண்டும்.
*தல பெருமை:*
தக்கன் யாகத்தில், தான் செய்த தவறுக்கு கழுவாய் தேடி, சூரியன் பல இடங்களிலும், இறைவனை வழிபட்டான். அவ்வாறு சூரியன் பூஜித்த ஸ்தலங்களுள் சாரபரமேஸ்வரர் ஸ்தலமும் ஒன்றாகும் என்பது இத்திருக்கோயிலின் மற்றொரு சிறப்பாகும்.
ஆண்டுதோறும் மாசி மாதத்து 13, 14, 15 தேதிகளில் காலையில் இங்கே சூரியனது கிரகணங்கள் இத்தலத்து இறைவன் மீதும், அம்பிகையின் பாதங்களிலும் நேரடியாக படுகின்றன. இந்த மூன்று நாட்களிலும் மாலை வேளைகளில் கண்டியூரில் சூரிய பூஜை நிகழ்வதும் குறிப்பிடத்தக்கது. மாசி மாதம் முழுவதும் காலையில் இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
*தேவாரப் பதிகங்கள்:*
திருநாவுக்கரசர் 2
திருஞானசம்பந்தர் -1
*இருப்பிடம்:* கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கே நாச்சியார்கோவில் வழியாக குடவாசல் செல்லும் சாலையில் பத்து கி.மி. தொலைவில் திருச்சேறை இவ்வவாலயம் இருக்கிறது.
குடவாசலில் இருந்து சுமார் நான்கு கி.மீ. தொலைவில் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து வலங்கைமான் வழியாகவும் திருச்சேறை தலத்தை அடையலாம்.
திருச்சேறையில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான சாரநாதப் பெருமாள் ஆலயமும் உள்ளது.
*கோவிலின் அமைப்பு:*
பேருந்தைவிட்டு இறங்கியதும் சிறுது தூரம் நடக்கவும் சாலை ஒரு பக்கம் திரும்ப, திருச்சேறை செந்நெறியப்பரான இவ்வாலயத்துக்குள் நாம் நுழைந்தோம்.
முதலில் நம் கண்களுக்கு சிறிய ராஜகோபுரம் தெரியவும் *சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தைப் பார்த்து, உயர்த்தி கைதூக்கி வணங்கித் தொழுது கொண்டோம்.
கோபுரவாசல் வழியாக வழியாக உள்ளே நுழைந்தவுடன் முதல் பிரகாரத்தில் அலங்கார மண்டபம் இருந்தன.
இந்த வெளிப் பிரகாரத்திலிருந்து உள்பிரகாரம் செல்கையில், இறைவன் செந்நெறியப்பர் எனும் சாரபரமேஸ்வரர் அழகியருளுடன் காட்சி தந்தார்.
செந்நெறியப்பர் சுயம்புலிங்கத் திருமேனி கொண்டு அருட்காட்சி தந்து கொண்டிருந்தார்.
இவர்முன் நின்று, மனதிற்கு நிம்மதி வேண்டும் என மனமுருக பிரார்த்தித்து வணங்கி வேண்டிக் கொண்டோம்.
தீபாராதனையை தரிசித்த பின், அர்ச்சகர் தந்த வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு, அவ்விபூதியை நெற்றியினில் தரித்து ஆனந்தப்பட்டோம். பின் வெளிவந்தோம்.
அங்கே கூட்டம் அதிகமாக நின்றிருந்தது. என்னவென்று அனுகி விசாரிக்க....இக்கோயிலுக்கு வந்திருக்கும் முக்கால்வாசி பேர்கள் கடனில் உலழ்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள் போல.............
"ஆம் அங்கே நின்றிருந்த அத்தனைபேரும் கடன் நிவர்த்தி பெற கூட்டுப்பிரார்த்தனைக்காகத்தான் அத்தனைபேரும் வந்திருந்தனர்.
நான்மட்டும் என்ன?" அவர்களைப் போலத்தான்!' அவர்களைப் போலவே வீடு வாசலை இழந்து, தொழிலைத் தொலைத்து, சாப்பாட்டுக்கே வழியில்லாது கோவைக்கு இடம் பெயர்ந்தேன்.
அப்போது கடன்நிவர்த்தி செய்யும் செந்நெறியப்பர் ஆலயத்தினுள் இருக்கும் ஈசன், ரிணவிமோசனரை கண்டு அவரருளை பெறுங்கள் என பலசாரார் கூறினர்.
அந்தக் கூட்டுப் பிரார்த்தனைக்காகத்தான் நாமும் இவ்வாலயத்துக்கு இப்போது சென்றிருந்தோம்.
நாமும் ஆலயப் பணியாளரிடம் சென்று கடன்நிவர்த்தி கூட்டு பூஜைக்கான கட்டணத்தை செலுத்தி ரசிதினை பெற்றுக் கொண்டோம்.
கூட்டுப் பிரார்த்தனைக்கு இன்னும் நேரம் இருப்பதால், அப்படியே அம்பாள் இருக்கும் சந்நிதிக்கு சென்று வணங்கி வர சென்றோம்.
அம்மை, இறைவன் சந்நிதிக்கு இடப்புறமாக இறைவி ஞானாம்பிகை சந்நிதி அமைந்திருந்தது.
மனமுருக பிரார்த்தனை செய்து, ஈசனிடம் வேண்டிக் கொண்டது போலவே, அதேபோல அம்மையிடமும் நிம்மதி தருவாயென வேண்டிக் கொண்டு திரும்பினோம்.
கருவறையைச் சுற்றி உள்ள பிரகாரத்தில் மேற்குப் பிரகாரத்தில் தல விநாயகர் இருந்தார். அவர்முன் வந்து தலையில் குட்டிக் கொண்டு ஆசீர்வாதிக்க வேண்டிக் கொண்டோம்.
இவரையடுத்து மார்க்கண்டேயரும் அடுத்து அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தௌமிய முனிவரால் வழிபாடு செய்யப்பட்டதுமான ஸ்ரீ ரிண விமோசன லிங்கம் இருந்த இடம் வந்தோம்.
இவர்தான் கடனை நிவர்த்தி செய்யும் *ரிணவிமோசனர்* ஆவார். இவர்முன் பெரியதொரு விசாலமான இடம் இருந்தது.
கடன் நிவர்த்திக்காக வருவோர், ரிணவிமோசனரின் முன்னால் உள்ள விசாலமான இந்த மண்டபத்தில்தான் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வந்த அனைவரும் அமர (வேண்டும்) அமர்ந்திருந்தனர்.
நாமும் அதுபோல அமர்ந்து கொண்டு, ரிணவிமோசனரின் பெரிய அபூர்வ அபிசேகத்தைக் காண ஆவலாய் எதிர் நோக்கியிருந்தோம்.
எத்தனையோ விதவிதமான நறுமணப் பொருட்களைக் கொண்டு ஒவ்வொன்றாலும் ரிணவிமோசகருக்கு அபிசேகத்தை நடத்திக் கொண்டிருந்தனர்.
அர்ச்சகரும், அவர் உதவியாளரும் கூடவே வந்து, கூட்டுப் பிரார்த்தனைக்கு பதிவு செய்து அமர்ந்திருக்கும் பக்தர்களின் இருப்பிடத்திற்கே வந்து,........
நம்மிடம், கையில் புஷ்பங்களை அள்ளிக் கொடுத்து, கைகளில் பொதிந்து வைத்துக் கொள்ளச் சொன்னார்கள்.
பின், நம் குடும்பத்தினர் அனைவருடைய ராசி நட்சத்திரம் கேட்டு மந்திரம் ஜெபித்து அர்சித்தனர்.
அடுத்ததாக இருக்கும் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வந்திருப்போரின் பெயரை ஆலய நிர்வாகிகளுள் ஒருவர் வாசிக்க,...அவர்முன் அர்ச்சகரும் அவர் உதவியாளரும் சென்றார்.
இப்படியே கூட்டுப் பிரார்த்தனைக்கு வந்திருப்போரின் அத்தனைபேரின் கைகளில் மலர்கள் கொடுக்கப்பட்டு, பூஜை ஆரம்பிக்கப்பட்டது.
எலக்ரானிக்காலான மேளம் டமாரமிட்டது. பக்தர்களில் ஒருவர் கரங்களால் கயிற்றை இழுத்து மணியோசையை பெருக்கினார்.
சந்தனம், பன்னீர், இளநீர், பால், தேன், பழரசம், மாப்பொடிகள், வெள்ளியவிபூதி, மேலும் பலவித நறுமணப் பொருட்களுடன் ஒவ்வொன்றாக அபிசேக ஆராதனை நடந்தது.
ஒவ்வொரு பொருட்களுடனான அபிஷேகத்தின்பிறகு மேளம், மணியோசையை நிறுத்தி, ரிணவிமோசனரின் கடன் நிவர்த்தியான பதினோறு பாடல்களைக் கொண்ட *விச்வேச்வராய நரகார்ணவ தாரணாய* எனத்தொடங்கும் பாடல் அர்ச்சகரால் ராகத்தோடு பாடப்பட, ..............
நமக்கும் அவர்கள் கொடுக்கப்பட்டிருந்த காகிதத்தில் பாடல் இருக்க, அந்த ராகத்தோடவே நாமும் பாடல்களை வாசித்தோம்.
*(இந்த பாடல் முழுவதையும் நாளைய பதிவுடன் தருகிறோம்.)*
அபிஷேகம் முடிந்ததும், ஆலய நிர்வாகிகள் பலர், மலர்க்கூடைகளை எடுத்துக் கொண்டு வந்து, நம் கைகளில் இருக்கும் பிரார்த்தனை செய்து தொழுத மலர்களை, நம்மிடமிருந்து பெற்றுக் கொண்ட அவர்கள், அம்மலர்களை மலர்க்கூடைகளில் சேமித்து எடுத்துக் கொண்டு சுவாமியிடம் கொண்டு செல்லப்பட்டார்கள்.
மறுபடியும் மேளதாளம், மணியோசை, கரவொலிகள் ஆர்ப்பரிக்கும் சிவாயநம மந்திரங்களுடன், கூட்டுப் பிரார்த்தனையின் மலர்கள் மொத்தத்தையும் சுவாமி மீது கொட்டி ஆராதிக்கப்பட்டது.
ரிணவிமோசனர் பெரிய பாணத்துடனுமா, அகண்ட ஆவுடையாருடனும் இருந்த இவர் மீது, அத்தனை மலர்களும் அபிஷேகிக்கப்பட ரிணவிமோசனர் மலர்மலைகளுக்குள் மூழ்கிப் போனார்.
ஈசனின் அழகான இக்காட்சிகளைக் கண்டு நம் உரோமக்கால்கள் குத்திட அவனருள் அலங்காரக்களைக் கண்டு, மெய்சிலிர்த்தோம்.
அவனழகுப் பிரவாகங்கள் நம் கண்களில் நீராட, பக்திபாங்குடன் கூடி ஆனந்தக் கண்ணீர் பெருகியொழுகியது. நம் நா தழுதழுத்தது.
இத்தனை ஆராதனைகளையும் அனைவரும் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்தே தரிசித்தோம். யாவரும் எழுந்து வரக்கூடாது நிற்க்கூடாது. இது ஆலய நிர்வாகஸ்தர்களின் விதி.
இந்த விதி இருந்ததினால்தான் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனையை மனப்பூர்வமாக எந்த இடையூறும் இல்லாமல் செய்யவும், பார்க்கவும் முடிந்தது.
அனைவருக்கும் சுவாமியின் அபிஷேகத் தரிசனம் முழுமையாக கிடைக்கப் பெற்றது.
ஆலய நிர்வாகிக்கும், நிர்வாகத்திற்கும், உழவாரப்படையாளர்களுக்கும் நன்றியுடன் ஒரு 'சபாஷ்!"
பிரார்த்தனைக்கும், அபிஷேகத்திற்கும் பின்பு நம் இருப்பிடத்திற்கே பிரார்த்தனை பிரசாத கவர் வந்து சேர்ந்தது. பெற்றுக் கொண்டோம். முதலில் அதிலிருக்கும் வெள்ளிய விபூதியை எடுத்து நெற்றிக்கு தரித்துக் கொண்டோம்.
அவ்வளவுதான் கூட்டத்தைக் கட்டுப் படுத்தமுடியவில்லை. இதுவரை எவ்வளவு பொறுமையாக இருந்தார்களோ தெரியவில்லை. அவ்வளவு பொறுமைகளையும் விலக்கி அனைவரும் எழுந்தோடினார்கள்.
பூசை புணர்காணம் முடிந்து விட்டதால், அனைவரும் எழுந்து ஒருவர் மேல் இடித்து மோதி ஓடிப்போய் ரிணவிமோசகர் ஈசன் முன் சுற்றிக் கூடி சூழ்ந்து நின்று விட்டனர்.
நாமும் எழுந்து ஓரமாக நின்று, பின் கூட்டம் குறைந்த சமயம், ரிணவிமோசகர் முன் வந்து வணங்கி விடை பெற்று நகர்ந்தோம்.
இக்கூட்டுப் பிரார்த்தனை மொத்தம் பதினோறு திங்கட்கிழமை நடக்கும்.
நமக்கு இது முதல் வாரம். இன்னும் பத்து வாரம் இருக்கு.
எல்லா வாரமும் கூட்டுப் பிரார்த்தனைக்கு வரவேண்டுமென்பது இல்லை. வரமுடிகிறவர்கள் வரலாம் தடையில்லை. ஆனால், முதல் வாரமும் கடைசி வாரமும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்.
இது சம்பந்தப்பட்ட விபரக் குறிப்பு அடங்கிய கையேட்டை, கூட்டுப் பிரார்த்தனைக்குழு, பணம் செலுத்தும் போதே ஆலய நிர்வாகத்தினர், உங்கள் கைகளில் அளித்துவிடுவார்.
கடனில் உழல்பவர்கள் இவ்வாலயம் செல்லுங்கள். உங்கள் கடன் பதினோறாவது வாரத்திலிருந்து கரையக் தொடங்குவதை காண்பீர்கள்.
*(ஈசனிடம் உண்மையான பக்தி இருந்தால் மட்டுமே)* நிவர்த்தியாகும் இது சத்தியம்.
கடனை சமாளிக்க முடியாமல் தூக்குபோட்டு சாவிலிருந்து தப்பியவன் அடியேன். இக்கூட்டுப் பிரார்த்தனை மூலம் கலந்து, ஈசனருளால் பணிகள் மேம்பட்டு, அடியேனின் கடன்கள் முழுவதும் அடைக்கப் பெற்று நிம்மதி பெற்றுள்ளேன். அதன் பின்பே அடியேன் சிவனடியார்க்கு அடியாரானேன்.
பரிகாரம் தோஷம் என்ற பேரில் சில ஆலயங்களில் செய்யும் பணபறிப்பு போல இங்கு நடப்பதல்ல.
இவ்வாலயத்தில் ஈசனுக்கே நாம் நம் கைகளினால் மலர்களால் அபிஷேகிக்க அனுமதிக்கப்படுகிறோம். அப்போதே கொஞ்ச நிம்மதி நம்மை உரசுவது தெரியும். *(ஈசனிடம் உண்மையா இருப்போர்க்கு)*
அடுத்து நாம் வலம் வந்து ஸ்ரீ பாலசுப்பிரமணியர் சந்நிதிக்கு செல்ல, இவரை பக்திப் பாங்குடன் தொழுது கொண்டோம்.
அடுத்து மூன்று துர்க்கைகள் இருக்கும் இடம் வந்தோம். மற்ற எங்கும் இல்லாத சிறப்பு அம்சம் இத்தலத்தில் இருந்தன.
மூன்று துர்க்கைகள்.
சிவ துர்க்கை, விஷ்னு துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை என மூன்று வடிவங்களாக ஒரே சந்நிதியில் இத்தலத்தில் காட்சியளிப்பதைக் கண்டு ஆச்சர்யத்துடன் வணங்கித் தொழுதோம்.
வெள்ளிக்கிழமை தோறும் இராகு காலத்தில் துர்க்கைகளை வழிபாடு செய்வது மிகவும் சிறந்ததாகும்.
அடுத்ததாக நம் கண்கள் தேடி அலைந்தது நடராஜப் பெருமானைத்தான்.
சிவனும் அவன்தான். மூலவனும் அவன்தான். ஆனாலும் ஆலயத்தினுள் புகும் போது நமக்கு நடராஜப் பெருமான் எங்கு இருக்கிறான் என்று ஆவலில்லாத அடியார் யாரைனும் இருப்பார்களா? என்றால், அப்படி யாரும் இருக்க மாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன்.
ஏனென்றால், அவன் மேல் எலாலோருக்கும் அவ்வளவு பித்து இருக்கும்!. பித்து இல்லையென்றால் அவன் பக்தனாக இருக்கமாட்டான். அந்தப் பித்தினால்தான் நாம் ஆடவல்லானைத் தேடினோம்.
துர்க்கையை தரிசித்துவிட்டு நகர்ந்து, நம் ஆடவல்லானின் தூக்கிய திருவடி நிலையைக் கண்டு. வணங்கிய பிறகு,......ஒரு வித கதிர்வீச்சு நம் மனதிற்குள் ஊடுருவியது போல் உண்டானது போலிருந்தது நமக்கு.
'ஆம்!.. அது தான்.."நிம்மதி" அந்த *"நிம்மதி"*. இப்போது அவனிடமிருந்து நமக்கு கிடைத்தது.
சிவாயநம! சிவார்ப்பணம்.
சிவாயநம! திருச்சிற்றம்பலம்.
சிவாயநம!
தில்லையம்பலம்.
சிவாயநம!
திருநீலகண்டம்.
பின், ஸ்ரீ பைரவர் சந்நிதிக்குச் சென்று வணங்கிக் கொண்டோம். எந்த ஒரு சிவாலயத்திலும் இல்லாத தனிச்சிறப்பு இங்குள்ள ஆலயத்தில் பைரவருக்கு உண்டு.
ஆம்!, திருநாவுக்கரசரால் தனி தேவாரப் பாடல் பெற்ற பைரவர் இவராவார்.
*விரித்தபல் கதிர்கொள்சூலம் வெடிபடு தமருங்கை தரித்ததோர் கோலே கால பயிரவனாகி வேழம் உரித்துமை யஞ்சக்கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச் சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.*
என்று அவர் பாடிய இரண்டு பதிகங்களில் ஒரு பதிகத்தின் ஆறாவது பாடலில் சிவபெருமானே பைரவர் கோலத்தில் காட்சியளிப்பதாய் திருநாவுக்கரசர் கூறுகிறார்.
ஸ்ரீ பைரவருக்கு அஷ்டமியன்று அபிஷேக ஆராதனை செய்தும், சகஸ்ரநாம அர்ச்சனை செய்தும் வழிபட்டால் காரியானுகூலம் பெறலாம், வழக்கு விவகாரங்களில் வெற்றி முதலானவை வந்து சேரும்.
தோஷம் என்ற பெயரில் அழைக்கும் நவக்கிரகத்துக்குச் சென்று நீங்கள் தோஷங்கள் நீங்குதல் செய்ய
வேண்டியதில்லை.
இங்கு வந்து இத்தலத்தில் உள்ள சாரபரமேசுவரர், ரிணவிமோசனர், செந்நெறியப்பரை வணங்கிட நல் பலன்களை நாம் பெறலாம்.
சூரியன் இறைவனை பூஜை செய்யும் தலங்களில் திருச்சேறை தலமும் ஒன்றாகும்.
ஆண்டுதோறும் மாசி மாதத்தில் 13, 14, 15 தேதிகளில் காலையில் சூரியனது ஒளிகள், இத்தலத்து இறைவன் மீதும், அம்பிகை பாதங்களின் மீதும் நேரடியாகப் படுகின்றன.
அச்சமயங்களில் இவ்வாலயத்தில் சூரியபூஜை மிகச்சிறப்பாக நடைபெறும்.
மார்க்கண்டேயர் வழிபட்டு இவரது பிறவிக்கடன் நீங்க அருள் புரிந்த ரிண விமோசன லிங்கேஸ்வரரை பதினோறு திங்கட்கிழமை வழிபட்டு அபிஷேக ஆராதனை செய்தால் நம்முடைய அனைத்து கஷ்டங்களும் நீங்கி அருள் பெறலாம்.
நமது வாழ்க்கையில் படுகின்ற கடன்கள், நமது முன்னோர்களால் செய்ய முடியாமல் விடுபட்ட நிவர்த்திக் கடன்கள் இருந்தாலும் விடுதலை பெறலாம்.
இவ்வாலயத்தின் தல விருட்சம் மாவிலங்கை இருக்கிறது. இந்த மரம் வருடத்தின் நான்கு மாதங்கள் வெறும் இலைகளாகவும், அடுத்த நான்கு மாதங்கள் வெள்ளை வெளேரென்று பூக்களாகவும், அதற்கடுத்த நான்கு மாதங்கள் பூ, இலை எதுவுமின்றி காணப்படும்.
திருச்சிற்றம்பலம்.
திருச்சேறை சாரபரமேஸ்வரர் செந்நெறியப்பர் ஆலய பதிவு நாளையும் தொடர்ந்து வரும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘
🌹 *பாடல் பெற்ற சிவ தல தொடர்.113.*🌹
🌷 *சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*🌷
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
💐 *திருச்சேறை.*💐
(சில நாட்களாய் இத்தலப் பதிவு வளரும்.)
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
*இறைவன்:* சாரபரமேஸ்வரர், செந்நெறியப்பர்.
*இறைவி:* ஞானவல்லி.
*மூர்த்தி:* விநாயகர், நடராசர், மார்க்கண்டேயர் வழியே லிங்கம், சப்த மாதர்கள், முருகன், கஜலெட்சுமி, ஜேஷ்டாதேவி, நால்வர்.
*தீர்த்தம்:* மார்க்கண்டேய தீர்த்தம்.
*தலவிருட்சம்* மாவிலங்கை.
*தலச்சிறப்பு:* கடன் நிவர்த்தித் தலம், மாசி மாதம் 13, 14, 15 தேதிகளில் சூரியவழிபாடு.
*வழிபட்டோர்:* மார்க்கண்டேயர், சம்பந்தர், அப்பர்.
*தேவாரம் பாடியோர்:* சம்பந்தர், அப்பர்.
*ஆலயத் திறப்பு காலம்:*
காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல்
இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்
*கடன் தொல்லைகளை ஒழிக்கும் திருச்சேறை பரமேஸ்வரன்:*
கடன் நிவர்த்தி ஆகும் திருத்தலம். வறுமையை நீக்கி செம்மையான வாழ்வளிக்கும் இறைவன், கடன் நிவர்த்தீஸ்வரர் ( ரிண விமோசன லிங்கேஸ்வரர் ) என்று அழைக்கப்படுகிறார்.
"பெருந் திரு இமவான் பெற்ற பெண் கொடி பிரிந்த பின்னை
வருந்து வான் தவங்கள் செய்ய, மா மணம் புணர்ந்து, மன்னும்
அருந் திருமேனி தன் பால் அங்கு ஒரு பாகம் ஆகத்
திருந்திட வைத்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே."
திருச்சேறையிலுள்ள செந்நெறி என்னும் கோயிலில் உறைகின்ற செல்வராம் சிவபெருமான் தம்மைத் தாட்சாயணி பிரிந்த பிறகு, மிக்க செல்வத்தை உடைய, இமவான் பெற்ற பெண்மகளாய்த் தோன்றி மிக்க வருத்தத்தைத் தரும் தவங்களைச் செய்ய, பெருமான் அவளைத் திருமணம் செய்து கொண்டு, தன் உடம்பில் ஒரு பாகமாகக் கொண்டார்.
தொடர்ந்து பதினோறு திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, கடைசி பதினோறாவது வாரம் அபிஷேக ஆராதனை சங்கல்பம் செய்ய, அனைத்து வித கடன் தொல்லைகளும் தீர்கிறது.
இச்சந்நதியின் முன் நின்று *கூறை உவந்தளித்த கோவேயென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே* என மனமுருக முறை பாராயணம் செய்ய மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.
*கடன் ஒழிய பாடப்படும் பதிகம்:*
கடன் நிவர்த்தியாகுவதற்கு, தவபுருஷர் மாமுனிவர் வசிஷ்டமகரிஷி *தாரித்ரிய தஹந சிவ தோத்திரத்தை* அருளி உள்ளார்.
கதைப்பாடல் கடன் நீங்கி, இகபர சுகம் உண்டாகும்.
விச்வேச்வராய நரகார்ணவ தாராணாய
கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
கர்பூரகாந்தி தவறாய் ஜடாதராய
தாரித்ரிய துகதஹநாய நமசிவாய
கெளரீப்ரியாய ரஜநீச .கலாதராய
காலாந்தகாய புஜகாதிப கங்கணாய
கங்காத ராய கஜராஜ விமர்தநாய.
தாரித்ரிய துகதஹநாய நமசிவாய
பக்திப்ரியாய பவரோக பயாபஹாய
உக்ராய துர்கபவஸாகர தாராணாய
ஜ்யோதிர்மயாய குணநாம ஸுந்ருத்யகாய
தாரித்ரிய துகதஹநாய நமசிவாய.
சர்மாம்பராய சவபஸ்மவிலேபநாய
பாலேஷணாய மணிகுண்டலமண்டி தாய
மஞ்ஜுரபாதயுகளாய ஜடாதராய
தாரித்ரிய துகதஹநாய நமசிவாய.
பஞ்சாநாய பணிராஜவிபூஷணாய
ஹேமாம் சுகாய புவனத்ராய மண்டிதாய
ஆனந்தபூமி வரதாய தமோமயாய
தாரித்ரிய துகதஹநாய நமசிவாய.
பானுப்ரியாய பவஸாக ரதாரணாய
காலாந்தகாய கமலாஸநபூஜிதாய
நேத்ரத்ரயாய சுபலக்ஷண லக்ஷிதாய
தாரித்ரிய துகதஹநாய நமசிவாய.
ராமப்ரியாய ரகுநாத வரப்ரியாய
நாகப் பிரியாமல் நரகார்ண வதாரணாய
புண்யேஷுபுண்ய பரிதாய ஸுரார்தாய
தாரித்ரிய துகதஹநாய நமசிவாய.
முக்தேச்வராய பலதார கணேச்வராய
கீதப்ரியாய வ்ருஷபேச் வரவாஹநாய
மாதங்க சர்மவஸநாய மஹேச்வராய
தாரித்ரிய துகதஹநாய நமசிவாய.
வசிஷ்டே நக்ருதம் ஸ்தோத்ரம்
ஸர்வ ரோக நிவாரணம்
ஸர்வஸம்பத்கரம் சீக்ரம் புத்ர
பெளத்ராதி வர்த்தனம் த்ரிஸந்த்யம்
யபடேந்நித்யம் ஸஹி ஸவர்கமவாப்னுயாத்.
🌸முறியுறு நிறமல்கு முகிழ்முலை மலைமகள் வெருவமுன்
வெறியுறு மதகரி அதள் பட உரிசெய்த விறலினர்
நறியுறும் இதழியின் மலரொடு நதிமதி நகுதலை
செறியுறு சடைமுடி அடிகள் தம் வளநகர் சேறையே.
🌼 விளக்கம்:
சிவபெருமான், தளிர் போன்ற நிறமும், அரும்பு போன்ற முலையுமுடைய உமாதேவி அஞ்சுமாறு, மதம் பிடித்த யானையின் தோலை உரித்த வலிமையுடையவர். நறுமணம் கமழும் இதழ்களை உடைய கொன்றைப் பூவோடு, கங்கை நதியையும், பிறைச் சந்திரனையும், மண்டையோட்டையும் நெருங்கிய சடை முடியில் அணிந்துள்ள அவ்வடிகள் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.
🌸02.புனமுடை நறுமலர் பலகொடு தொழுவதொர் புரிவினர்
மனமுடை அடியவர் படுதுயர் களைவதொர் வாய்மையர்
இனமுடை மணியினொடு அரசு இலை ஒளிபெற மிளிர்வதோர்
சினமுதிர் விடையுடை அடிகள் தம் வளநகர் சேறையே.
🌼விளக்கம்:
வனங்களிலுள்ள பல நறுமலர்களைப் பறித்துத் தூவித் தொழுகின்ற அடியவர்கட்கும், மன உறுதிப்பாட்டுடன் அன்பால் உருகித் தியானம் செய்யும் அடியவர்கட்கும் துயர் களைந்து அருள் புரியும் நியமமுடைய சிவபெருமான் கழுத்தில் கட்டப்படும் மணியும், அரசிலை போன்ற அணியும் ஒளிர, மிக்க கோபமுடைய இடபத்தை வாகனமாகக் கொண்டவராய் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.
🌸 03.புரிதரு சடையினர் புலியதள அரையினர் பொடிபுல்கும்
எரிதரும் உருவினர் இடபம் அது ஏறுவர் ஈடு உலா
வரிதரு வளையினர் அவர் அவர் மகிழ்தர மனைதொறும்
திரிதரு சரிதையர் உறைதரு வளநகர் சேறையே.
🌼விளக்கம்:
சிவபெருமான் முறுக்குண்ட சடைமுடி உடையவர். புலியின் தோலை அரையில் கட்டியவர். நீறுபூத்த நெருப்புப் போன்ற சிவந்த திருமேனியில் வெண்ணிறத் திருநீற்றினைப் பூசி விளங்கும் உருவினர். இடப வாகனத்தில் ஏறுபவர். சரிந்த வரிகளையுடைய வளையல்களை அணிந்த, பெருமையுடைய மகளிர் மகிழும்படி வீடுகள்தோறும் திரிந்து பிச்சையேற்கும் இயல்புடையவர். அத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.
🌸04.துடிபடும் இடையுடை மடவரல் உடனொரு பாகமா
இடிபடு குரலுடை விடையினர் படமுடை அரவினர்
பொடிபடும் உருவினர் புலியுரி பொலிதரும் அரையினர்
செடிபடு சடைமுடி அடிகள் தம் வளநகர் சேறையே.
🌼விளக்கம்:
உடுக்கை போன்று குறுகிய இடையுடைய உமா தேவியைச், சிவபெருமான் தம் ஒரு பாகமாகக் கொண்டவர். இடி முழக்கம் போன்ற குரலுடைய இடபத்தை வாகனமாகக் கொண்டவர். படமெடுத்தாடும் பாம்பை அணிந்தவர். திருவெண்ணீறு அணிந்த உருவினர். இடையில் புலித் தோலாடை அணிந்தவர். செடி போன்று அடர்த்தியான சடைமுடி உடையவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.
🌸05.அந்தரம் உழிதரு திரிபுரம் ஒரு நொடி அளவினில்
மந்தர வரிசிலை அதன் இடை அரவு அரிவாளியால்
வெந்தழி தரவெய்த விடலையர் விடமணி மிடறினர்
செந்தழல் நிறமுடை அடிகள் தம் வளநகர் சேறையே.
🌼விளக்கம்:
சிவபெருமான் ஆகாயத்தில் சுற்றித் திரிந்த திரிபுரங்களை ஒரு நொடிப்பொழுதில் மலையை வில்லாகவும், அதனிடை வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் பூட்டி, திருமால், வாயு, அக்கினி இவற்றை அம்பாகக் கொண்டு எய்து வெந்தழியுமாறு செய்த வீரமிக்க வாலிபர். தேக்கிய விடம் மணி போன்று விளங்கும் கண்டத்தர். செந்தழல் போன்ற மேனியுடைய அவர் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.
🌸06.மத்தரம் உறு திறல் மறவர் தம் வடிவுகொடு உருவுடைப்
பத்தொரு பெயருடை விசயனை அசைவு செய் பரிசினால்
அத்திரம் அருளும் நம் அடிகளது அணிகிளர் மணியணி
சித்திர வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.
🌼விளக்கம்:
மந்தர மலை போன்ற வலிமையுடைய வேட்டுவ வடிவம் தாங்கி வந்து, பத்துப் பெயர்களைச் சிறப்பாகக் கொண்ட விசயனைப் பொருது தளரச்செய்து, அவன் கௌரவர்களைத் தோல்வியடையச் செய்யும் வண்ணம் பாசுபதம் என்னும் அம்பைக் கொடுத்தருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளுவது இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய வளநகராய், அடர்ந்த சோலைகள் சூழப்பெற்ற திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.
🌸07.பாடினர் அருமறை முறைமுறை பொருளென அருநடம்
ஆடினர் உலகிடை அலர்கொடும் அடியவர் துதிசெய
வாடின படுதலை யிடுபலி யதுகொடு மகிழ்தரும்
சேடர்தம் வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.
🌼விளக்கம்:
இறைவன் முறைப்படி வரிசையாக அரிய வேதங்களைப் பாடியருளியவர். ஐந்தொழில்களை ஆற்றும் திருநடனம் செய்பவர். உலகில் அடியவர்கள் மலரும், பூசைக்குரிய பிற பொருள்களும் கொண்டு போற்றித் துதிக்க அருள்செய்பவர். வாட்டமுற்ற பிரமனின் வறண்ட மண்டையோட்டில் பிச்சையேற்று மகிழ்பவர். அப்பெருமான் பெருமையுடன் வீற்றிருந்தருளும் வளநகர், அடர்ந்த சோலைகள் விளங்கும் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.
🌸08.கட்டுர மதுகொடு கயிலை நன்மலை நலி கரமுடை
நிட்டுரன் உடலொடு நெடுமுடி ஒருபதும் நெரிசெய்தார்
மட்டுர மலரடி அடியவர் தொழுதெழ அருள் செயும்
சிட்டர் தம் வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.
🌼விளக்கம்:
தனது உறுதியான உடல் வலிமை கொண்டு கயிலை மலையைத் தன் மிகுதியான கரங்களால் பெயர்த்தெடுக்க முயன்ற கொடியவனான இராவணனின் உடலும், பெரிய தலைகள் பத்தும் நெரித்தவர் சிவபெருமான். அவருடைய நறுமணம் கமழும் மலர் போன்ற திருவடிகளை அடியவர்கள் தொழுது போற்ற அருள் செய்யும் நல்லியல்புடையவர். அவர் வீற்றிருந்தருளும் வளநகர் அடர்ந்த சோலைகள் சூழ்ந்த திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.
🌸09.பன்றியர் பறவையர் பரிசுடை வடிவொடு படர்தர
அன்றிய அவர் அவர் அடியொடு முடியவை அறிகிலார்
நின்றிரு புடைபட நெடுவெரி நடுவே ஒர் நிகழ்தரச்
சென்றுயர் வெளிபட அருளிய அவர் நகர் சேறையே.
🌼விளக்கம்:
திருமால் பன்றி உருவெடுத்தும், பிரமன் அன்னப்பறவை உருவெடுத்தும் இறைவனைக் காணமுயல, அவ்விருவரும் தன் அடியையும், முடியையும் அறியாவண்ணம் அவர்கள் நடுவே நெடிய நெருப்புப் பிழம்பாய்த் தோன்றுமாறு, ஓங்கி, தன் மேலாந்தன்மை வெளிப்பட அருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் நகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.
🌸10.துகடுறு விரிதுகில் உடையவர் அமணெனும் வடிவினர்
விகடம் அது உறு சிறுமொழி அவை நலமில வினவிடல்
முகிழ்தரும் இளமதி அரவொடும் அழகுற முதுநதி
திகழ்தரு சடைமுடி அடிகள் தம் வளநகர் சேறையே.
🌼விளக்கம்:
அழுக்கு மிகுந்த ஆடையை உடுத்திக் கொள்ளும் புத்தர்களும், தோற்றத்தாலேயே இவர்கள் அமணர்கள் என்று கண்டு கொள்ளத்தக்க வடிவுடைய சமணர்களும், குறும்புத்தனமாகக் கூறும் அற்ப மொழிகள் நன்மை பயக்காதவை. எனவே அவற்றைக் கேளற்க. அரும்பையொத்த இளம்பிறைச் சந்திரனையும், பாம்பையும், கங்கையையும் அழகுற அணிந்த சடைமுடியுடைய அடிகளான சிவபெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.
🌸11.கற்ற நன்மறை பயில் அடியவர் அடிதொழு கவினுறு
சிற்றிடையவளொடும் இடமென உறைவதொர் சேறைமேல்
குற்றமில் புகலியுள் இகலறு ஞானசம்பந்தன
சொற்றகவு உற மொழிபவர் அழிவிலர் துயர் தீருமே.
🌼விளக்கம்:
நன்மை தரும் வேதங்களை ஐயந்திரிபறக் கற்று ஓதும் அடியவர்கள், தன்னுடைய திருவடிகளைத் தொழ, அழகிய குறுகிய இடையுடைய உமா தேவியோடு, சிவபெருமான் வீற்றிருந் தருளும் திருச்சேறை என்னும் திருத்தலத்தைப் போற்றிக், குற்றமற்ற புகலியில் அவதரித்த, எவரோடும் பகைமையில்லாத ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை முறையோடு ஓதுபவர்கள் அழிவற்றவர்கள். அவர்களின் துன்பங்கள் யாவும் தீரும்.
திருச்சிற்றம்பலம்.
*இன்னும் வளரும்.*
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment