Thursday, August 3, 2017

Thirukarukavur temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                    *(41)*
🍁 *சிவ தல அருமைகள்,பெருமைகள் தொடர்.* 🍁
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
   🍁 *திருக்கருகாவூர்.* 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

*இறைவன்:* கர்ப்பபுரீஸ்வரர், முல்லைவனநாதர்.
*இறைவி:*கர்ப்பரட்சாம்பிகை, கரு காத்த நாயகி.
*தலமரம்:* முல்லை.
*தீர்த்தம்:*க்ஷீரகுண்டம்.

சோழ நாட்டில் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள 128 தலங்களுள் பதினெட்டாவதாக இத்தலம் போற்றப் பெறுகின்றது.

*இருப்பிடம்:*
தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பாபநாசத்திலிருந்து ஆறு கி.மீ தூரத்திலும்,  தஞ்சாவூர்- நாகபட்டிணம் நெடுஞ்சாலையில் சாலியமங்கலத்திற்கு வடக்கே பத்து கி.மீ தூரத்திலும், விருத்த காவிரி என்னும் வெட்டாற்றின் கரையில் அமைந்திருக்கின்றன இத்தலம்.

பஞ்ச ஆரண்யத் தலங்களில் முதன் முதலாகத் தரிசிக்க வேண்டிய தலம்.

சனத் குமார முனிவரால் நாரதருக்கு எடுத்துச் சொல்லப்பட்ட பெருமைக்குரியது இத்தலம்.

*கோவில் அமைப்பு:*
ஊர்த்துவ மகிரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதவை இறைவன் மருத்துவம் பார்த்து கருவைக் காத்ததால் *கருகாவூர்* எனப் பெயர்.

*ஆலய அமைப்பு:*
நான்கு வீதிகளுக்கிடையில் நாநூற்று அறுபது அடி நீளத்துடன்,இருநூற்று என்பத்தினான்கு அடி அகலத்துடன் அமையப் பெற்றுள்ளது.

கிழக்கில் ஐந்து நிலை இராஜ கோபுரம் இருக்க, கண்டு, கோபுரத் தரிசனம் கோடிப் புன்னியம் என்பதால்  வணங்கிக் கொள்கிறோம்.

எதிரிலேயே க்ஷீரகுண்டத் தீர்த்தம் அமைந்திருக்கிறது.

கோபுர வாயிலைக் கடந்து உள் புக, வசந்த மண்டபத்தைக் காண்கிறோம். பெரிய பிரகாரத்தில் சுவாமி கோவிலும், இவரின் வடபக்கம் அம்பிகை கோயிலும் தனித்தனித் பிரகாரத்தில் அருள் பாலிக்கிறார்கள்.

உள்சுற்றில் விநாயகர், இரட்டை நந்தி பலி பீடங்கள், அறுபத்து மூவர்கள், சந்தனாச்சாரியார்கள், முருகன், கஜலட்சுமி, ரத வடிவத்துடன் கூடிய சபா மண்டபம், அந்த மண்டபத்தில் நித்துவ முனிவர் பூசித்த லிங்கம் ஆகிய சந்நிதிகள் உள்ளன.

மகா மண்டபத்தில் நவக்கிரகம், நடராஜர் சந்நிதிகள் உள்ளன. 

சுவாமி சுயம்புவானவர்.

மேற்புறம் ப்ருத்விபாகம் புற்று மண்ணால் உருவானது.

புணுகு சட்டம் மட்டும் சார்த்தப்படுகிறது.

அபிஷேகம் ஆவுடையாருக்கு மட்டுமே நடக்கிறது.

சுவாமி திருமேனியில் முல்லைக் கொடி சுற்றிய வடு உள்ளது.

நல்ல உயரத்துடனான திருமேனி. 

இங்கிருக்கும் நந்தி உளிபடாத விடங்க மூர்த்தம்.

அம்பாள் சந்நிதிக்குச் செல்லும் வழியில் கெளதமமேசர் கோவில் உள்ளது.

*தலப்பெருமை:*
எந்த நாட்டில் இருந்தாலும் மாதவ வனம் எனப் பெயர் பெற்ற இத்தலத்திற்கு செல்லும் விருப்பத்தோடு, மூன்றடி நடப்பார்களானால், முதல் அடியில் அவர் செய்த பாவம் அகலும். இரண்டாம் அடியில் அமரர் உலகமெல்லாம் அவர்கட்கு உரிமையாகும். மூன்றாம் அடியில் சிவசாயுஜ்சியம் பெறுவது உறுதி என தலபுராணம் சொல்கிறது.

*தலவரலாறு:*
பஞ்ச ஆரண்ய தலங்களுள் இது முல்லைவனத் தலமாகும். 

பிரமன் தன் ஆணவம் காரணமாய் படைப்புத் தொழிலை இழந்து தன் பெயரால் இத்தலத்தில் தென்மேற்கு மூலையில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி சிவனை பூஜிக்க மீண்டும் படைப்புத் தொழிலை பெற்றான்.

கெளதமர் பிற முனிவர்களின் சூழ்ச்சியால் பசுக் கொலைப் பாவத்திற்கு ஆளாகி கருகாவூர் வந்து புனிதத் தீர்த்தத்தில் நீராடி சிவனை வேண்டி அந்த பாவத்திலிருந்து நீங்கப் பெற்றார்.

அவர் பூஜிக்கப் பெற்ற லிங்கம் கெளதமேசுவரர் என்ற பெயருடன் தனிக் கோயிலாக உள்ளது.

பிருகுகட்சம் என்ற ஆரண்யத்தில் தவம் செய்து கொண்டிருந்த கார்க்கியர் என்பவர் முன் நின்று புலம்பிய ஒரு பைசாசத்தை கண்டு நீயார்?" உன் வரலாறு என்ன?" என வினவ....

அதற்கு, அப்பைசாசம் நான் கேரள தேசத்தில் பிறந்த சொர்ணாகரன் எனும் வைசியர் என்றும், ஓர் அந்தணரால் அடைக்கலமாகக் கொடுத்த பொருளை மோசம் செய்த காரணத்தால் 21 யுகம் இச்சரீரத்துடன் பல நரகங்களை  அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் என்றும், தன்னைக் காப்பாற்ற வேண்டுமென்றும் முறையிட்டுக் கொண்டது.

அம்முனிவர் பைசாசத்தைக் காசி முதல் குமரி வரையில் அழைத்துச் சென்று தீர்த்தமாடி,  பல தலங்களையும் வழிபட்டு பைசாசு ரூபம் நீங்காமல் இத்தலத்திற்கு வந்து மார்கழி மாதம் ஆதிரையில் பிரம்ம முகூர்த்தத்தில் நீராடி பைசாசு ரூபம் நீங்கி சுயரூபத்தை அடைந்து முக்தி பெற்று முல்லைவன நாதரை வழிபட்டு திருப்பணி செய் என்று அருளினார்.

தட்ச சாபத்தால் இன்னலுற்ற சந்திரன் பங்குனி மாதம் பெளர்ணமியில் சிவபூஜை புரிந்து நற்கதி பெற்றான்.

பீமசேனன், புண்ணியத்துவசன் ஆகியோர் வழிபட்டு உய்ந்தனர்.

*அம்மையின் அருள்:*
கருமாற்றம்' செய்து, இன்றைய நவீன தொழில்நுட்பத்திற்கு வித்திட்டவள், திருக்கருகாவூரில் வீற்றிருக்கும் கர்ப்பரட்சாம்பிகை என்னும் கருக்காத்த நாயகி அம்மன்.

முன்பொரு காலத்தில் சோழ நாட்டில் உள்ள வெட்டாற்றின் தென் கரையில் நிருத்துவர் என்ற முனிவர், தனது மனைவி வேதிகை என்பவருடன் இல்லறம் நடத்தி வந்தார். இந்த நிலையில் வேதிகை கருவுற்றாள். ஒரு நாள் மனைவியை ஆசிரமத்திலேயே விட்டு விட்டு, நிருத்துவ முனிவர் மட்டும் வெளியே சென்றிருந்தார். அந்த நேரம் பார்த்து ஊர்த்துவ பாதர் என்னும் முனிவர், அந்த ஆசிரமத்திற்கு வந்து உணவு கேட்டார்.

கருவுற்றிருந்த வேதிகை உடல் சோர்வு காரணமாக எழுந்து வருவதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. இதை அறியாத ஊர்த்துவ பாதர், வீட்டில் இருந்த பெண் தன்னை அலட்சியப்படுத்தியதாக எண்ணி, சாபமிட்டு விட்டுச் சென்று விட்டார். முனிவரின் சாபம் காரணமாக வேதிகையின் கரு கலைந்தது. இதனால் வேதிகை செய்வதறியாது திகைத்தாள். பின்னர் தான் நித்தம் வணங்கும் அம்பிகையிடம் தனது நிலை குறித்து வேண்டி முறையிட்டாள்.

அன்னையும் காக்கும் கடவுளாக எழுந்தருளி, வேதிகையின் உடலில் இருந்த அகன்ற கருவை, ஒரு குடத்துக்குள் வைத்து ஆவாகனம் செய்து, முழுக் குழந்தையாக உருவாகும் நாள்வரை காத்தாள். முழுக் குழந்தையாக ஜனித்ததும், அந்தக் குழந்தைக்கு 'நைதுருவன்' எனப் பெயரிட்டு, பெற்றோரிடம் சேர்த்தாள் அம்பிகை.

இவ்வாறு பூவுலகத்தில் முதல் 'கருமாற்றம்' செய்து, இன்றைய நவீன தொழில்நுட்பத்திற்கு வித்திட்டவள், திருக்கருகாவூரில் வீற்றிருக்கும் கர்ப்பரட்சாம்பிகை என்னும் கருக்காத்த நாயகி அம்மன்.

இந்த ஆலயத்தில் கிழக்கு பார்த்தபடி ராஜகோபுரமும், தெற்கில் நுழைவு வாசலும் உள்ளன. உள்ளே நுழைந்ததும் தென்புறமும், பின்புறமும் நந்தவனங்களும், வடக்கே வசந்த மண்டபமும் காணப்படுகின்றன. சுவாமி கோவிலுக்கு முன்புறம் கொடிமரம், பலிபீடம், நந்தி இருக்கின்றன.

*முல்லை வன நாதர்:*
முல்லைக் காடாக இருந்த இந்தத் திருத்தலத்தில், சுயம்புவாக உருவான இறைவன் வீற்றிருந்து அருள்பாலிக் கிறார். இத்தல இறைவன் வடமொழியில் மாதவிவேனேஸ்வரர் என்றும், தமிழில் முல்லை வன நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இங்குள்ள மூலவருடையது, புற்று மண்ணால் ஆன சிவலிங்கத் திருமேனியாகும். சிவலிங்கம் மீது முல்லைக் கொடிகள் படர்ந்திருந்த வடுக்கள் இப்போதும் காணப்படுகின்றன. புற்றுமண்ணால் ஆனவர் என்பதால், மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. புனுகு சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது. அவரது சன்னிதிக்கு வலதுபுறம் உளிபடாத சுயம்புவாக, கற்பக விநாயகர் காட்சி தருகிறார்.

சுவாமி சன்னிதிக்கு இடது புறத்தில் கருக்காத்த நாயகி அம்மன் தனிக் கோவிலில் எழுந்தருளியிருக்கிறார். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலைப் போலவே, இந்த ஆலயத்திலும் அம்மனே பிரதானமாக உள்ளார். அம்மன் நின்ற கோலத்தில் கருணையை கண்களில் தாங்கியபடி அருள்பாலிக்கிறார். அம்மன் கோவிலுக்கு தனியாக ஒரு திருச்சுற்றும், எதிரே பெரிய மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.

*சோமாஸ்கந்தர்:*
இறைவன் – இறைவி கோவில்களுக்கு இடையில், முருகப்பெருமான் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். வள்ளி– தெய்வானை இருபுறம் நிற்க, ஆறுமுகனாக, முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். சுவாமி, அம்பாள் சன்னிதிகளுக்கு இடையில் முருகப்பெருமான் சன்னிதி அமைந்துள்ளதால், இந்த ஆலயம் சோமாஸ்கந்தர் தத்துவத்துடன் விளங்குகிறது.

திருக்கோவிலின் தல விருட்சமான முல்லைக்கொடி, சண்டிகேஸ்வரர் சன்னிதிக்கு அருகில் மட்டுமின்றி, திருக்கோவிலின் வெளிச் சுற்றுப் பகுதியிலும், நந்தவனங்களிலும் இருப்பதைப் பார்க்கும்போது, இந்தத் தலம் முற்காலத்தில் முல்லை வனமாக இருந்திருப்பதை உறுதி செய்கிறது.

கோவிலுக்கு எதிரே அமைந்துள்ள திருக்குளம், 'ஷீரகுண்டம்' (பாற்குளம்) என்று பெயர் பெற்று திகழ்கிறது. இதற்கு தெய்வப் பசுவான காமதேனுவின் பால் கலந்த குளம் என்பது பொருள் ஆகும்.


*தேவாரம் பாடியவர்கள்:*
*சம்பந்தர்* 3-ல் ஒரே ஒரு பதிகமும்,
*அப்பர்* 6-ல் ஒரே ஒரு பதிகமும், ஆக மொத்தம் இரு பதிகங்கள் இத்தலத்திற்கு.

திருஞான சம்பந்தர், தனது 11 பதிகங்களிலும், திருநாவுக்கரசர் 'திருத்தாண்டக'ப் பாடல்களிலும், சுந்தரர், 'ஊர்த் தொகை'யிலும் இந்தத் திருத்தலத்தைப் பற்றி பாடியுள்ளனர்.

*'வெந்தநீறு மெய்பூசிய வேதியன் சிந்தைநின்ற வருள் நல்கிய செல்வந்தன் கந்தமெளவல் கமழும் கருகாவூர் எம் எந்தை வண்ணம் எரியும் எரிவண்ணமே'*

என்பது சம்பந்தரின் தேவார வெள்ளத்தில் ஒரு தேன் துளியாகும். சிவனை செந்தீ வண்ணத்தானாகவே, சம்பந்தர் காணும்போது, அப்பர் மட்டும் சும்மா இருப்பாரா? 'குருகு, வைரம், அமிர்தம், பாலின் நெய் பழச்சுவை, பரஞ்சோதி' என அவர் பங்குக்கு இத்தல இறைவனை புகழ்கின்றார்.


*குழந்தைப்பேறு:*
உலக மக்களுக்கு எவ்வளவு செல்வம் இருந்தாலும், மழலைச் செல்வம் இல்லை என்றால் அது வெற்று வாழ்க்கை ஆகிவிடும். ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் அந்தக் குடும்பத்துக்கு குழந்தைப் பேறுதான் முதன்மையானதாக கருதப்படுகிறது. திருமணமாகி பல ஆண்டு களாகியும் கருத்தரிக்காதவர்கள், கருத்தரித்தாலும் உடனுக்குடன் அது தங்காமல் சிதைந்து போவது, தாய்க்கும், குழந்தைக்கும் பிரச்சினை ஏற்படுவது.. இப்படி எத்தனையோ நடக்கின்றன.

மருத்துவ உலகம் இதில் எவ்வளவோ முன்னேறி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும் அத்தகைய மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர்களே, சில நேரங்களில் மனித சக்தி, மருத்துவ சக்தியை விட தெய்வ சக்தி ஒன்றுள்ளது என்று நம்புகிறார்கள். தம்மை நம்பி வந்தவர்களுக்கும் வழிகாட்டுகிறார்கள். அப்படி தெய்வ சக்தியை நம்பும் மக்களுக்கு, பலனளிக்க எத்தனையோ ஆலயங்கள் இருப்பினும், திருக்கருகாவூர் கருக்காத்த நாயகி அம்மன் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள்.

இந்தத் திருக்கோவில் அமைந்திருக்கும் ஊரில் வசிக்கும் பெண்களுக்கு, கருச்சிதைவு ஏற்பட்டதில்லை என்று உறுதியுடன் சொல்கிறார்கள். குழந்தைப் பேறு வேண்டியும், சுகப்பிரசவம் நடைபெற வேண்டியும் தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து போகிறார்கள்.

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து, அம்பிகையில் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்துக் கொடுக்கப்படும் நெய்யை, 48 நாட்கள் தொடர்ந்து இரவில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டு. 

அதே போல கருவுற்ற பெண்கள் சுகப் பிரசவம் அடைய, அம்பிகையின் அருள்பெற்ற விளக்கெண்ணெயை, அடிவயிற்றில் தடவிக்கொள்வது உரிய பலனைத் தரும் என்பது நம்பிக்கை.

திருமணம் நடப்பதற்கும், திருமணமாகி கருத்தரிப்பதற்கும் பெண்கள் இந்தத் திருக்கோவிலுக்கு நேரில் வந்து, அம்பாள் சன்னிதியில் உள்ள வாசல்படியை நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

*நன்றி காட்டுதல்:*
பக்தர்களின் பிரார்த்தனை பலித்ததும், தம்பதி சமேதராகவும், தாய் தனது குழந்தையை ஏந்திக் கொண்டும் ஆலயத்திற்கு வருகிறார்கள். 

பின்னர் அம்பாளின் சன்னிதிக்கு வந்து தங்களின் சக்திக்கேற்ப கற்கண்டு, வாழைப்பழம், பணம், சர்க்கரை போன்றவற்றை எடைக்கு எடை துலா பாரம் தருகிறார்கள். 

மேலும் அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனை செய்வதும், புடவை சாத்துவதும் திருக்கோவிலில் நாளும் காணக்கூடிய அற்புதமான காட்சிகளாகும். அம்பிகை சன்னிதியிலேயே ஒரு துலாக் கோல் இருக்கிறது.

சுயம்புவான முல்லைவன நாதருக்கு, புனுகு சட்டம் சாத்தி வழிபட்டால், தோஷம் நிவர்த்தியாகும். குறிப்பாக தோல் நோய் நீங்கும் என்பதும் அனுபவப்பட்டவர்களின் வாக்கு.

பஞ்ச ஆரண்யத் தலங்களில் முதன் முதலில் தரிசிக்க வேண்டிய தலமாகவும், சனத்குமார முனிவரால், நாரதருக்கு எடுத்துச் சொல்லப்பட்ட பெருமைக் குரியத் தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது. 

*திருவிழாக்கள்:*
சுவாமிக்கு வைகாசி விசாகத்தில் பிரம்மோற்சவமும், அம்பிகைக்கு ஆடிப்பூரம், நவராத்திரி உற்சவங்களும் நடக்கின்றன.

நடராஜருக்கு வருஷத்தில் ஆறுமுறை அபிஷேகம், கந்தசஷ்டி, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம், மாதப் பிரதோஷங்கள், கார்த்திகை ஞாயிறுகளில் தீர்த்தவாரி, அம்மனுக்கு லட்சார்ச்சனை ஆண்டு தோறும் நடக்கும் முக்கிய விழாக்கள்.

*பிறசெய்தி:*
இத்தலத்தின் சிறப்பு கந்தபுராணத்தில் ஷோத்திர வைபவ காண்டத்தில் சனத்குமார சங்கிதையில் நாரத முனிவருக்கு சனத்குமாரர்கூறுவதாக விவரிக்கப் பெற்றுள்ளது.

*பூஜை*
காரண, காமீக முறையில் ஐந்து கால பூஜை.

காலை 6.00 மணி முதல் பகல் 12.30 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 8.15 மணி வரை.

*அஞ்சல் முகவரி:*
நிர்வாக அதிகாரி,
அருள்மிகு, முல்லைவனநாதர் திருக்கோயில்,
திருக்கருகாவூர்,
பாபநாசம் வட்டம், 
தஞ்சை மாவட்டம்-614 302

*தொடர்புக்கு:*
தொலைபேசி: 04374-- 273423
கணக்காளர்:94439 08300
ராஜுகுருக்கள்:96555 73806
ராமதாஸ்: 93658 31580

         திருச்சிற்றம்பலம்.

*நாளைய தலம்.....பழையாறை வடதளி.*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment