Tuesday, June 13, 2017

Lalita

லலிதை ஒரு பார்வை :-

தேவர்களின் வேண்டுதலுக்கு இரங்கி அக்னிகுண்டத்தில் அவதரித்தவள் லலிதா தேவி. நான்கு கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மலர்க்கணைகள் ஆகியவற்றை ஏந்தியவள். இந்தப் புராண விளக்கம் தியானத்திற்குரிய தத்துவக் குறியீடாக லலிதா சகஸ்ரநாமத்தின் தொடக்கத்திலேயே வந்து விடுகிறது. சிதக்³னிகுண்ட³ ஸம்பூ⁴தா – அறிவாகிய அக்னி குண்டத்தில் தோன்றியவள், ராக³ஸ்வரூப பாசா'ட்⁴யா – ஆசை வடிவான பாசக்கயிற்றை ஏந்தியவள், க்ரோதா⁴கார அங்குசோ'ஜ்வலா – தீமையைப் பொசுக்கும் கோப வடிவான அங்குசத்தை கையில் ஏந்தி ஒளிர்பவள், மனோரூப இக்ஷு கோத³ண்டா³ – மனமாகிய கரும்புவில்லை உடையவள், பஞ்சதன்மாத்ர ஸாயகா – ஐந்து புலன்களாலும் உணரப்படும் ஒலி, தொடுகை, உருவம், ரசம், மணம் என்ற ஐந்து தன்மாத்திரைகளையும், ஐந்து மலர்க்கணைகளகாக் கொண்டவள். பாசக்கயிற்றால் உயிர்களை ஆசையில் பிணிப்பவளும், பின் தனது அங்குசத்தால் அதனை வெட்டி எறிபவளும் அவளே. மனமாகிய வில்லில் ஐம்புலன்களாகிய மலர்க்கணைகளைப் பொருத்தி தேவி பிரபஞ்ச விளையாட்டு விளையாடுகிறாள்!

த³ராந்தோ³லித-தீ³ர்கா⁴க்ஷீ – சிறிதே சலிப்புடன் கூடிய நீண்ட கண்களையுடையவள்

நிஜாருண ப்ரபா⁴பூர மஜ்ஜத் ப்³ரஹ்மாண்ட³ மண்ட³லா – தன் சிவப்பொளி வெள்ளத்தில் அண்டங்கள் அனைத்தையும் மூழ்கச் செய்பவள்

நக²தீ³தி⁴தி ஸஞ்ச²ன்ன நமஜ்ஜன தமோகு³ணா – தன் கால் நகங்களின் ஒளியால் வணங்குவோர் அகத்திலுள்ள இருட்குணங்களை அகற்றுபவள்

ச்'ருதி-ஸீமந்த-ஸிந்தூ³ரீக்ருத-பாதாப்³ஜ-தூ⁴லிகா – அவள் பாதகமலத்தின் தூசியே வேத மங்கையின் வகிட்டில் விளங்கும் குங்குமம்

ஸகலாக³ம-ஸந்தோ³ஹ-சு'க்தி-ஸம்புட-மௌக்திகா – அனைத்து ஆகமங்களாகிய சிப்பிகளுக்கும் உள்ளிருக்கும் நன்முத்து அவள்

உன்மேஷ-நிமிஷோத்பன்ன-விபன்ன-பு⁴வனாவலி – தன் கண்களை இமைத்து மூடுவதால் புவனங்களை ஆக்கி அழிப்பவள்

கலி-கல்மஷ-நாசி'னீ – கலியின் களங்கங்களை நாசம் செய்பவள்

நீராகா³, ராக³மத²னீ – ஆசையற்றவள். ஆசையைப் போக்குபவள்.

நிர்மோஹா, மோஹநாசி'னீ – மோகமற்றவள். மோகத்தை நாசம் செய்பவள்.

நிஷ்பாபா, பாபநாசி'னீ – பாவமற்றவள்; பாவத்தை நாசம் செய்பவள்.

நிர்பே⁴தா³, பே⁴த³நாசி'னீ – வேற்றுமையில்லாதவள்; வேற்றுமையைப் போக்குபவள்.

ஹர-நேத்ராக்³னி-ஸந்த³க்த⁴-காம-ஸஞ்ஜீவனௌஷதி⁴: – அரனது நெற்றிக்கண்ணின் தீயால் எரிந்துபோன காமனுக்கு உயிரூட்டிய மருந்து.

ச்'ருங்கா³ர-ரஸ-ஸம்பூர்ணா – சிருங்கார ரசத்தால் நிறைந்தவள்.

காமரூபிணீ – காமமே உருவானவள்; நினைத்த உருக்கொள்பவள்.

காமகேலி தரங்கி³தா – காமனுடைய லீலைகளாகிய அலைகள் தோன்றும் கடல்.

சித்கலா – உயிர்களிடத்தில் உணர்வாக இருப்பவள். ஆனந்த³கலிகா – உயிர்களில் ஆனந்தத்தின் அம்சமாக, மொட்டாக இருப்பவள். ப்ரேமரூபா – அன்பே வடிவானவள்
ப்ரியங்கரீ – அன்பு செய்பவள்.

மஹா காளீ, மஹாக்³ராஸா – பெருங்கவளமாக விழுங்குபவள், மஹாச'னா – அனைத்தையும் உண்பவள், சண்டி³கா – கோபக்காரி, சண்ட³முண்டா³ஸுர-நிஷூதினி – சண்டன் முண்டன் ஆகிய அசுரர்களை வதைத்தவள், பசு'லோகப⁴யங்கரி – விலங்கியல்பில் வாழ்வோருக்கு பயங்கரமானவள்.

த³த்⁴யன்னாஸக்த ஹ்ருதயா – தயிர்சாதத்தில் ஆசை கொண்டவள், கு³டா³ன்ன ப்ரீத மானஸா – சர்க்கரைப் பொங்கலை விரும்புபவள், வாருணீ மத³ விஹ்வலா – வாருணீ என்ற மதுவால் மெய்மறந்தவள், மத³ கூ⁴ர்ணித ரக்தாக்ஷீ – மதுவின் களிப்பால் சுழலும் சிவந்த கண்களையுடையவள், தாம்பூ³ல-பூரித-முகீ² – தாம்பூலத்தால் நிறைந்த உதடுகளுடையவள்.

கலாநிதி⁴: – கலைகளின் இருப்பிடமானவள்; காவ்யகலா – காவியங்களின் கலையாயிருப்பவள்; ரஸக்ஞா – ரஸத்தை அறிந்தவள்; கலாலாபா – கலைகளில் மகிழ்பவள்; கலாமாலா – கலைகளை மாலையாகத் தரித்தவள்.

வீரகோ³ஷ்டிப்ரியா – வீரர்களின் குழுக்களை விரும்புகள்; வீரா – வீராங்கனை; வீரமாதா – வீரர்களின் தாய்; ஜயத்ஸேனா – வெல்லும் சேனைகளை உடையவள்.

தத்துவ அளவில் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் தூய அத்வைத நிலையில் இருந்தே பாடப் பட்டது என்பது இந்த நாமங்களின் பெருங்கடலின் ஒரு துளியை அள்ளிப் பருகினாலே தெரிய வரும் விஷயம். நிர்த்³வைதா – த்வைதம் எனப்படும்.

இருமை நோக்கை நீக்குபவள், த்³வைத-வர்ஜிதா – இயல்பாகவே இருமை நிலை இல்லாதவள், ஸாமரஸ்ய பராயணா – சமரசத்தில் நிலைபெற்றவள் என்பனவும் அன்னையின் திருநாமங்களே. இந்த அடிப்படையான சமரச பாவத்துடனேயே ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தை நாம் பாராயணம் செய்யவும், தியானம் செய்யவும் வேண்டும். அப்படி தியானம் செய்பவர்களுக்கு நிர்க்குணமும் சகுணமும், ஞானமும் பக்தியும் கர்மமும், வாமாசாரமும் தட்சிணாசாரமும், யோகமும் போகமும், கோரமும் சாந்தமும், இல்லறமும் துறவறமும் – எல்லாம் அன்னையின் உள்ளத்துக்கு உகந்ததாகவும், எல்லாமாகி இலங்கும் அவளை அடைவதற்கான மார்க்கங்களாகவே திகழும்.


No comments:

Post a Comment