Tuesday, June 13, 2017

Bag of sins

Courtesy:http://sivansaalayadharshan.blogspot.in/2012/12/moral-story-60.html

பாப மூட்டை !!

நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் பெருகிக்கொண்டே வந்தது. துக்காராமின் அபங்க பஜனையில் தனை மறந்து ஆனந்த கண்ணீர் பெருக பக்தியில் மூழ்காதவர்களே கிடையாது. இப்படித்தான் ஊரில் எல்லோரும் பேசிக்கொண்டார்கள்.

சாதுக்களும் பாகவதர்களும் கூட அவரிட மிருந்து அபங்கம் பாட கற்றுக் கொள்ள பெருகி விட்டனர் இது தேஹு என்கிற அந்த ஊரில் வாழ்ந்த ராமேஸ்வர பட் என்கிற பிராமண பண்டிதருக்கு பிடிக்க வில்லை. தன்னுடைய பிரசங்கங்களுக்கு ஆளே வருவதில்லை, துக்காராமின் பஜனைக்கு மட்டும் எத்தனையோ பேர் வருவது அவருக்கு பொறுக்க வில்லை. படிக்காதவர், வைஸ்யர், ஸம்ஸ்க்ரிதமே தெரியாதவர், மராத்தியில் தானாகவே இட்டு கட்டி பாடுபவர், தன்னுடைய அபங்கத்தால் ஊரையே கெடுக்கிறாரே! என்று பட் புலம்பினார். இது பரவலாக துக்காராமின் காதிலும் விழ, அவர் ஓடி சென்று ராமேஸ்வர் பட் காலில் விழுந்து வணங்கினார்

"நான் ஏதாவது தப்பு செய்து விட்டேனா சுவாமி?"

"தப்பை தவிர வேறொன்றுமே செய்ய வில்லையே நீங்கள். சாஸ்திரம் தெரியுமா? புராணம் தெரியுமா?, சொந்தமாக ஏதாவது கற்பனையாக மற்றவர்க்கு பிரசங்கம் செய்வது பெரும் பாபம். இதை கேட்பவர்க்கும் அந்த பாபம் போய்ச் சேருகிறதே?"

"அப்படியா. இது எனக்கு தெரியவில்லையே. நான் அறிவிலி, நீங்கள் நன்றாக படித்த மகான். தயவு செய்து என் தவறுகளை மன்னித்து நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்" என்று கண்ணீர் மல்க கேட்டார் துக்காராம்.

" நீ இனிமேல் ஒரு அபங்கமும் எழுதவோ பாடவோ வேண்டாம். இதுவரை எழுதியதை எல்லாம் தூக்கி எறி"

"விட்டலா, பாண்டுரங்கா, நான் அறியாமல்செய்த பிழையை பொறுத்துக் கொண்டு என்னை க்ஷமிப்பாயா? .இனி ராமேஸ்வர் சொன்னது போலவே நடக்கிறேன். எனக்கு உன் நாமத்தை தவிர வேறு எதுவும் தெரியாதே அதைத் தானே எனக்கு தெரிந்த அரை குறை மராத்தியில் மனம் போன போக்கில் பாடிக்கொண்டு எனை மறந்திருந்தேன். அந்த பெரியவர் எப்போது நான் செய்வது பாபம் என்று உணர்த்தி விட்டாரோ இனி அதை பண்ண மாட்டேன்" என்று அழுது கொண்டே தன்னுடைய ஒரே செல்வமான, கண்ணின் மணியான, அபங்கங்களை எல்லாம் எடுத்து மூட்டை கட்டி இந்த்ராயணி ஆற்றில் எறிந்துவிட்டார். ஆற்றங்கரையில் சோகமாக அமர்ந்தார்.

"வெகு நேரமாக உங்களை காணோமே, இங்கே ஏன் அழுதுகொண்டு உட்கார்ந்திருக்கிறீர்கள். வாருங்கள், வீட்டுக்கு" என்று அவரைத் தேடிக்கொண்டு வந்த மனைவி அழைத்து போனாள். சிறகொடிந்த பறவையாக வாய் மட்டும் "பாண்டுரங்கா, விட்டலா" என்று ஸ்மரணை செய்து கொண்டே தூங்கி போனார் துக்காராம். இரவு கழிந்தது. பொழுது விடிந்தது. யாரோ கதவை தட்டினார்கள்.

"யார்?

"துக்காராம், துக்காராம், இங்கே வாருங்கள்" என்று உணர்ச்சி வசத்தோடு பாண்டுரங்கன் ஆலய பிரதம அர்ச்சகர் வாசலில் நின்றார். ஒரு கையில் துக்காராம் ஆற்றில் எறிந்த அபங்க மூட்டை!

"இது என்ன? ஏன், நான் செய்த பாபங்களை ஆற்றிலிருந்து எடுத்து கொண்டுவந்தீர்கள்? என்று அதிர்ச்சியோடு கேட்டார் துக்காராம்.

"சுவாமி, நாம் யாருமே ஆற்றிலிருந்து இதை எடுத்து வரவில்லை. பாண்டுரங்கன் தானே போய் ஆற்றில் இறங்கி இந்த மூட்டையை எடுத்து வந்து தன் தலையில் சுமந்து ஈரம் சொட்ட சொட்ட நின்று கொண்டிருந்தார். இன்று காலை வழக்கம்போல் கதவை திறந்து சுப்ரபாதம் சேவை செய்ய நுழைந்த போது இதை பார்த்து திகைத்தேன். என்ன மூட்டை என்று பாண்டுரங்கன் தலையிலிருந்து அதை எடுத்து பார்த்த போது தான் தெரிந்தது நீங்கள் எழுதிய அபங்கங்கள் என்று. ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று எடுத்துக்கொண்டு ஓடோடி வந்தேன்.

"விட்டலா, எனை மன்னித்து விட்டாயா. உன் கருணையே கருணை!!".

ஊர் முழுதும் இந்த அதிசயம் காட்டுத் தீ போல் பரவி ராமேஸ்வர் பட் காதிலும் விழ அடித்து பிடித்து கொண்டு அவர் துக்காராமிடம் வந்து கண்ணீர் பெருக "நீங்கள் எவ்வளவு பெரிய மகாத்மா, பாண்டு ரங்கனின் அபிமானம் நிறைந்த பக்தர் அவரே உங்கள் அபங்கங்களை ஆற்றி லிருந்து மீட்டு தன் தலையில் சுமந்து நின்றார் என்ற போது என் அறியாமையை உணர்ந்தேன். நானே மகா பாபி. என்னை மன்னிக்க வேண்டும்" என்று கதறினார்

"நீங்கள் சாஸ்த்ரங்கள் உணர்ந்த ச்ரேஷ்டர், பிராமணர் என் காலில் விழுவது அபசாரம்". பாண்டுரங்கா, விட்டலா" என்று கண்களில் நீர் பெருக விட்டலனை நன்றியோடு வணங்கினார் துக்காராம்.




No comments:

Post a Comment