Thursday, June 19, 2025

Manickavasagar story part1

மாணிக்க வாசகர்   -  நங்கநல்லூர்  J K SIVAN 

1   குதிரைகள் வாங்கி வாருங்கள் 
நான்  தமிழன்  என்று மார் தட்டிக்கொள்பவர்களுக்கு  நிச்சயம்  தமிழைப்  பக்தி மணத்தோடு  பரிமளிக்கச் செய்த 
மாணிக்க வாசகரைப் பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும்.  இல்லையென்றால்  தமிழ்  முழுமையாக தெரியாதவர் என்று  சுலபமாக  அறிந்து கொள்ளலாம்.

நமது இந்து சனாதன தர்ம வளர்ச்சிக்கு ம்  முக்கியமாக  நமது  பக்தி பெருகச்செய்வதிலும்  பாடு பட்டு உதவியவர்களில்  பன்னிரு ஆழ்வார்களோடு  அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும்  பெரும் பங்கு உண்டு.

சைவ சமயக்குரவர்கள்  என  நாள்வரை குறிப்பாக சொல்கிறோம். அப்பர் சுந்தரர்  சம்பந்தர்  மணி வாசகர் என்று அதில் ஒருவரான  திருவாசகம் திருவெம்பாவை  அருளிச் செய்த  மாணிக்க வாசகரைப் பற்றி தெரியாதவர்களுக்கு  இதை முதல்முறையாகவும்,  தெரிந்தவர்களுக்கு எத்தனையோ முறை அறிந்தாலும் மேலும் ஆர்வத்தோடு அறியவும் இந்த பதிவு அமையட்டும். 
மாணிக்க வாசகர்  பிறந்தது  திருவாதவூர் என்கிற  கிராமத்தில். . வாதவூரான் என்று பெயர். பாண்டிய நாட்டில் வாழ்ந்த ஒரு பிராமண தம்பதியருக்கு  மகனாக பிறந்தவர்.  இளமையிலேயே  பக்தி, ஞானம் பெற்றவர்.  சிவபக்தி, நல்ல  தோற்றம், கல்வி,  கேள்வி, சாஸ்திர ஞானம் கொண்ட இவரைப்  பற்றி  அறிந்த  பாண்டிய ராஜா  அரிமர்த்தன பாண்டியன் தனது அரண்மனையில்  அவரைத்  தலைமை மந்திரியாக ஏற்றுக்கொண்டான். கௌரவம் ஆடம்பரம், அந்தஸ்து, பதவி  இதெல்லாம் வாதவூரர் சித்தத்தில்  இடம் பெறவில்லை.  எல்லாமே ஒரு வேஷம், கஷ்டமாகவே இருந்ததே தவிர மன நிம்மதி தரவில்லை.  சிவ ஸ்மரணம்  ஒன்றே  மனதை ஈர்த்தது.

 நிறைய  கல்விமான்கள் பக்திமான்களை வரவழைத்தார். வேதங்கள் தர்க்க சாஸ்திரங்கள் அலசப்பட்டன.  ஒரு தக்க குரு அமையாவிடில் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படாது என உணர்ந்தார்.  எங்கே என் குரு என்று உள்ளமும்  கண்களும் ஊர் முழுதும் தேடின. கால்களும் எங்கெங்கோ அலைந்தன.  

 ஒரு நாள் உத்யோக நிமித்தமாக முதன் மந்திரி வாதவூரர் மற்ற அரசவை  பரிவாரங்களோடு அரசவையில் பாண்டிய மன்னனோடு  வீற்றிருக்க, குதிரைப்படை தலைவன்  பாண்டிய ராஜாவை கண்டு விஷயம் ஏதோ சொல்ல  அரசவைக்குள் நுழைந்தான்.  பேச அனுமதி  கேட்டான்.

 'அஸ்வப்படை நாயகா,  என்ன சொல்ல விரும்புகிறாய் சொல்''  என்றான் பாண்டியன்.

 'அரசே,  நமது சேனையில் குதிரைப்படை பிரிவில், இப்போதுள்ள  குதிரைகள் வயது முதிர்ச்சி அடைந்துவிட்டன, சில இறந்தும்  சில  நோய் வாய்ப்பட்டும் அவதிப்படுகின்றன. நமது படை பலமிக்கதாக   எதிரிகள் அனுஞ்சும்படியாக  இருக்க வேண்டுமா னால்  வலிவு மிக்க  இளம் குதிரைகள் உடனே  அவசியம்  நிறைய தேவை.''
''சேனாபதி,  நீர் உரைத்தது  நல்லது.   நாம்  உடனே  அவசரமாக  குதிரைகள் வாங்க ஏற்பாடு செய்வோம்.''

''வாதவூரரே, நீரே இதற்கு தக்கவர். உமக்கு எங்கே நல்ல குதிரைகள் எப்படிப்பட்டவை எவ்வளவு  பெற வேண்டும் என்று தீர்க்கமாக முடிவு செய்யும் தன்மை உண்டு.  எனவே  இந்த பொறுப்பைத  தங்களிடம் விடுகிறேன்''  என்றான் பாண்டியன்.

வாதவூராருக்கு உள்ளூர புரிபடாமல் ஒரு சந்தோஷம்.  ஏதோ சிவனருளால்  இந்த சந்தர்ப்பத்தில்  தான் வெகுகாலமாக  தேடிக்கொண்டிருந்த குருவை, குதிரை தேடும்போதே,  கண்டு பிடித்து சரணடையப்  போகிறோம் என்ற எண்ணம் தானாகவே  உள் மனதில் தோன்றியது. 
 ''அப்படியே  செய்கிறேன் மன்னா'' என்றார் மணிவாசகர்.  
''வாதவூரர் எந்த காரியத்தையும் புத்தி சாலித்தனமாக சிந்தித்து ஆராய்ந்து செய்பவர் . எனவே நமக்கு நல்ல குதிரைகள் சீக்கிரமே கிடைக்கும்'' என்றான் ராஜா.

கையில் பொற்காசு மூட்டைகளுடன், ஆள் படையுடன் புறப்பட்டார் வாதவூரர். குதிரையும் கிடைக்கவேண்டும், நல்ல குருவும் கண்ணில் படவேண்டுமே.

''சோம சுந்தரா, எல்லாம் உன் சித்தம். நாட்டைக்காக்க குதிரை. என் மனதை அடக்கிக்  காக்க ஒரு  குரு. ரெண்டையும் தேட இது நல்ல சந்தர்ப்பம் என மகிழ்ந்தார். மதுரை சொக்கனின் விபூதியை அள்ளி நெற்றியில் பூசிக்கொண்டு கிளம்பினார் .
வாதவூரர் தனது வாழ்வில் நரை திரை மூப்பு எதையும் காணவில்லை. ஆதி சங்கரரைப் போல் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில் சாயுஜ்ய முக்கியடைந்தார் (சிவனடி சேர்ந்தார்).

ஆத்மநாதருக்கு தெரியாதா. ''இதோ வந்து விட்டான் வாதவூரன். வெகுநாளாக அவனை வரவழைக்க அவன் மனதில் வளர்த்த ஆத்ம தாகம் இங்கே இனி தீரப்போகிறது. எனக்கும் என் மனம்  கவர்ந்த பக்தன் கிடைத்துவிட்டான்

''அதோ அந்த இடத்திலேயே தங்குவோம்'' என்று பெருந்துறையில் தங்கிவிட்டார் வாதவூரர். அவரை ஏதோ காந்தமாக இங்கே கவர்ந்தது.

''இங்கே சிவன் கோவில் ஏதாவது உள்ளதா? ஞானிகள் யாரேனும் உள்ளனரா?'' என்று யாரையோ கேட்க, சற்று தூரத்தில் ஒரு குருந்த மரத்தடியில் ஒரு முதியவர் இருக்கிறார் என்று பதில் வந்தது.

ஒரு வயோதிக பிராமணர் கையில் சிவ ஞான போதம் என்ற ஓலைச்சுவடியை வைத்துக்கொண்டு ஒரு குருந்த மரத்தடியில் உற்கார்ந்திருந்தார். அருகே பழைய ஒரு சிறிய சிவன் கோவில். அந்த சாதுவைச் சுற்றிலும் பல சிஷ்யர்கள்.

அந்த சிறு கோவிலில் நுழைந்தார் வாதவூரர். சிலையானார். ஆத்மநாதர் வாதவூரர் ஆத்மாவில் கலந்தார்.கண்களில் பிரவாகம். அந்த கோவிலை கால்கள் சுற்றின. ஹர ஹரா என்ற சப்தம் காதில் ரீங்காரமிட்டது. மனம் பாகாய் உருகியது. சற்று தள்ளி இருந்த ஒரு குருந்த மரத்தடியில் சிவந்த மெலிந்த வெண் தாடி சடை முடியோடு ஒளி வீசும் கண்கள் அழைத்தன. கன்றுக்குட்டி தாயிடம் சென்றது. நீண்ட நாள் தேடிய தாய் சேய்க்கு கிடைத்துவிட்டாளே. தடாலென்று அந்த பிராமணர் காலடியில் வீழ்ந்தார் வாதவூரர். இவரே என் குரு என அறிந்து மகிழ்ந்தார். வார்த்தைகள் வெளி வரவில்லை.

'சிக்கென'' அவர் கால்களை பிடித்துக்கொண்டு ''ப்ரபோ, என்னை அடிமையாக ஏற்றுக்கொண்டு அருள்வீராக'' என்று கெஞ்சினார்.

''நான் இதற்காகதானே வந்து காத்திருக்கிறேன்'' என்று ஆத்மநாதர் பிராமண வடிவில் மனதில் மகிழ்ந்தார் .வாதவூரர் பாதாதி கேசம் வரை ஏதோ தன்னுள் புகுந்தது உணர்ந்தார். சிவஞானம் அவரை ஆட்கொண்டது. எங்கோ மேகக்கூட்டத்தில் பார்க்கும் இடத்தில் எல்லாம் லிங்க கூட்டங்கள். அத்தனைக்கு அபிஷேகங்கள். பேரிகை, உடுக்கு, மத்தள முழக்கம். சிவகணங்கள் கண்ணுக்கெட்டியவரை பேரானந்தத்தில் ஆழ்த்துகிறார்கள். பக்தர்கள் வெண்ணிற பூச்சோடு...நினைவு அழிந்தது. மீண்டும் நினைவு பெற்றபோது தான் குருநாதர் திருவடிகளில் மயங்கி இருந்ததை உணர்கிறார்.

No comments:

Post a Comment