*Source: ஸ்ரீ குருகிருபா விலாஸம்-இரண்டாம் பாகம்*
Section 2
*ஞானப் பிரஸூனங்கள்*
*7.உண்மையான அஹிம்ஸை*
அந்த சிஷ்யரும் அப்படியே மறுநாள் காலையில் ஸ்ரீமத் ஆசார்யாரிடம் சென்று உபதேசம் பெற்றுக்கொண்டு ஊர் போய்ச் சேர்ந்தார். பயபக்தியோடு மந்திரத்தை ஜபித்து வந்தார். தன் சாப்பாட்டு விடுதியிலிருந்து எதையும், தீர்த்தம்கூட, அவர் தன் சொந்த உபயோகத்திற்காக எடுத்துக் கொள்வதில்லை. சில வாரங்களுக்குப் பின் தனக்குள் அடியிற் கண்டவாறு நினைக்கலானார்: "என் சொந்த விடுதியில், நானே நேரிலேயே என் மேல்பார்வையிலேயே ஆஹாரவகைகளை தயார் செய்து வருகிறேன். ஆஹாரங்கள் பரிசுத்தமாகவும், அசுத்தம் ஒன்றுமே கலவாமலும் இருக்கின்றன என்பது உறுதியாய்த் தெரிகிறது. அப்படியிருந்தும் அது எதையும் சாப்பிட வேண்டாம் என்று ஸ்ரீமத் ஆசார்யார் ஆக்ஞாபித்திருக்கிறார்கள். ஆதலால், விற்பனைக் கென்று செய்யப்படும் சாமான்களுக்கே ஏதோ அசுத்தியோ தோஷமோ உண்டு என்பது நன்கு தெரிகிறது. விற்பனைக்கென்று தயாரான பதார்த்தங்களுக்கே தோஷமுண்டானால், அவைகளை பணத்திற்கு விற்று விட்டால் இன்னும் அதிகமாகவே அவைகளில் தோஷம் ஏற்படுமல்லவா? அந்த தோஷம் என்ன என்று எனக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் ஸ்ரீமத் ஆசார்யாரின் ஆக்ஞையிலிருந்தே, தோஷம் உண்டு என்பது தெளிவாய்த் தெரிகிறது. இவ்விதம் விற்கிறவனுக்கும் வாங்கித் தின்பவனுக்கும் அசுத்தியை ஏற்படுத்தக் கூடிய இத்தொழில்தான் எனக்கு எதற்காக ?' என்று. இவ்விதம் ஏற்பட்ட எண்ணம் நாளுக்கு நாள் பலப்பட்டு வரவே, இந்த விடுதியையே மூடிவிடுகிறது என்று தீர்மானித்து விட்டார். நல்ல வேளையாக, அவருடைய அதிர்ஷ்டவசத்தினால், வேறொருவர் வந்து இவ்விடுதியையும் அதிலுள்ள எல்லா சாமான்களையும் தானே எடுத்துக் கொள்வதாகச் சொல்லி, இவருக்குப் பெருந்தொகை கொடுத்து பிரியமாய் வாங்கிக் கொண்டார். அந்த சிஷ்யரும் உடனே தன் கிராமத்துக்குச் சென்று ஸன்மார்க்கத்தில் நின்று ஆன்மீக அபிவிருத்தித் துறைகளில் காலம் கழித்து வந்தார்.
*தொடரும்…*
No comments:
Post a Comment