Friday, May 16, 2025

Ahimsa- HH Chandrashekara Bharati Mahaswamigal

*Source: ஸ்ரீ குருகிருபா விலாஸம்-இரண்டாம் பாகம்*
 
*ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மஹாஸ்வாமிகளின் திவ்ய மஹிமைகளை எடுத்துக்காட்டும் கட்டுரைகளின் தொகுப்பு*
 
தொகுத்தவர்
 
*ஸ்ரீ ஞானானந்த பாரதீ ஸ்வாமிகள்*
 
Section 2
 
*ஞானப் பிரஸூனங்கள்*
 
*7.உண்மையான அஹிம்ஸை*
 
ஸாமான்யமாக சில ஆஸ்திகர்களுக்கு நாஸ்திகர்களைக் கண்டால் அருவறுப்பும் கோபமும் ஏற்படுவதுண்டு. ஆனால் ஸ்ரீமத் ஆசார்யார் அவர்களிடம் கருணையையே கைக்கொண்டு, அவர்கள் மனம் நோகாமல், அவர்களை எப்படியேனும் தம்மால் இயன்ற மட்டும் நல்வழிக்குத் திருப்பிவிடவே முயன்று வந்தார்.
 
அன்னத்தை விலைக்கு விற்பதை சாஸ்திரங்கள் கூசாமல் வியக்தமாக கண்டித்திருப்பது யாவரும் அறிந்த விஷயம். தர்ம சாஸ்திரம், ஸுகாதார நீதிகள் ஆகிய இவ்விரண்டிற்கும் உரிய விதிகளை மீறித்தான் உணவை விற்கும் தொழிலை நடத்த முடியும். அத்தொழில் செய்துவந்த ஒரு சிஷ்யர் சிருங்கேரிக்கு வந்திருந்தார். அப்பொழுது தானும் ஸ்ரீமத் ஆசார்யாரிடமிருந்து சிவ பஞ்சாக்ஷரீ மந்திரத்தை உபதேசம் பெறவேண்டுமென்ற ஆசை அவருக்கு எழுந்தது. வெகுதூரம் தயங்கிய பிறகு மிக்க பணிவுடன் ஸ்ரீமத் ஆசார்யாரிடம் தெரிவித்துக் கொண்டார். 
 
சிஷ்யர்: தங்களிடம் உபதேசம் பெற வேண்டுமென்ற பேராவல் எனக்கு இருந்து வருகிறது. ஆனால் நான் சாப்பாட்டு விடுதி வைத்து நடத்திக் கொண்டு வருவதால், உபதேசம் பெறுவதற்குத் தகுதியான பரிசுத்தத்தன்மை என்னிடம் இல்லையென்றும் உணர்கிறேன். வேறு தொழிலுக்கு வேண்டிய படிப்பு எனக்கு இல்லாமையினால், பிழைப்பு நடக்க வேண்டியதற்காக இத்தொழிலில் இறங்கும்படி ஏற்பட்டு விட்டது.
 
மஹா: இந்தத் தொழிலில் இருந்துவந்தும்கூட, ஆன்மீக முன்னேற்றத்தில் உங்களுக்குள்ள ஆர்வம் அழிந்து போகாமல் இருப்பது மிகவும் நன்மையே. பகவான் நிச்சயமாய் உங்களுக்கு உதவி செய்வார். உபதேசம் பெற்றால் ஏதேனும் ஒரு சிறு நியமம் விதித்தால், அதை தவறாமல் உங்களால் அனுஷ்டித்து வர முடியுமா?
 
சிஷ்யர்: ஸந்தேகமில்லாமல் முடியும். தங்கள் ஆக்ஞையின்படி சிறிதும் தவறாமல் நடந்து வருவேன்.
 
மஹா: இவ்விதம் சொல்வதைக் கேட்க மிகவும் ஸந்தோஷம். அந்த நியமம் இவ்வளவுதான். உங்கள் தொழிலை நடத்தி வருவதில், உங்கள் விடுதியில் தயார் செய்யப்படும் அன்னமோ,பக்ஷணமோ, பானமோ, எதுவாயிருந்தாலும் அந்தப் பண்டத்தை நீங்கள் சாப்பிடுவதில்லை யென்ற கட்டுப்பாட்டை வைத்துக் கொள்ளுங்கள்; அதுவே போதும்.
 
சிஷ்யர்: தங்கள் ஆக்ஞையின்படி அப்படியே அவசியம் நடக்கிறேன்.
 
மஹா: அப்படியானால் நாளைக் காலையில் இங்கு வாருங்கள். உபதேசம் பெற்றுக் கொள்ளலாம்.
 
*தொடரும்…*

No comments:

Post a Comment