Thursday, May 15, 2025

Guru bhakti - HH Chandrashekhara Bharati Mahaswamigal

*Source:ஸ்ரீ குருகிருபா விலாஸம்*
 
*தொகுத்தவர்*
 
*ஸ்ரீ ஞானானந்த பாரதீ ஸ்வாமிகள் (முன்னாள் ஸ்ரீ ஆர். கிருஷ்ணஸ்வாமி அய்யர், திருநெல்வேலி)*
 
*Section 2*
 
*ஞானப் பிரஸூனங்கள்*
 
*2.குருபக்தி*
 
ஸ்ரீமத் ஆசார்யார் ஸாதாரண மனிதர்களுடைய மனோநிலைக்கு வெகுதூரம் உயர்ந்த நிலையில் ஆனந்தமாக ரமித்துக் கொண்டிருந்தபடியால், தம்மைக் காணவந்தவர்களோடு ஸாமான்யமான லௌகிக விஷயத்தைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தாலும், அதன் தரத்தை உயர்த்தி அதிலிருந்தும் ஒரு தத்துவம் அறிவதற்கான வழியைக் காட்டுவார்கள். மிகவும் ஸாதாரணமான ஸம்பவத்திலிருந்துகூட அதிக அருமையானதும் உபயோகமுள்ளதுமான விஷயங்களை தெரிந்து கொள்ளுமாறு செய்வார்கள். அதை விளக்கும் உதாஹரணங்களைக் கூறும் முன்னர், அவர்களுக்கு ஸ்ரீ சங்கர பகவத்பாதாசார்யாரிடமும் தமக்கு குருநாதரான மஹாஸந்நிதானத்தினிடமும் (ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபிநவ நரஸிம்ஹ பாரதீமஹாஸ்வாமிகளிடமும்) இருந்த பக்தியைப் பற்றி சிறிது கூறுவது உசிதமென்று தோன்றுகிறது. அப்பெரியோர்களை ஞானிகள் என்று மாத்திரம் ஸ்ரீமத் ஆசார்யார் பாவிக்கவில்லை. ஈசுவரனே அவ்வுருவங்களில் தோன்றியதாகக் கருதினார். ஸாதாரணமாக யாவரும் அடிக்கடி சொல்லும்
 
*गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुर्गुरुर्देवो महेश्वरः ।*
*गुरुः साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः ॥*
 
என்ற பிரஸித்தமான சுலோகத்திற்கு குருவை பிரஹ்மா, விஷ்ணு, மஹேசுவரர், பரப்ரஹ்மம் இவர்களுக்கு ஸமானமென்று ஸ்தோத்திரம் செய்யவில்லை, இவர்களுக்கும் குருவிற்கும் பேதம் கிடையாது, குருவே அவர்கள், என்றுதான் தாத்பர்யம் என்பது ஸ்ரீமத் ஆசார்யாரின் அபிப்பிராயம். இந்த தத்துவத்தை யாரும் ஒருக்காலும் மறந்துவிட இடம் கொடுக்க மாட்டார்கள்.
  
சிஷ்யர்: எல்லா தேவதைகளையும் தம்மிடம் அடக்கியுள்ள பகவானுடைய விசுவரூபத்தை தியானமூர்த்தியாக வைத்துக் கொள்ளலாமென்று அபிப்பிராயமாயிருந்தால், அவ்வுருவத்தை கல்பிப்பது இன்னும் அதிக கடினமாகவல்லவா இருக்கும்? மேலும் அத்தகைய உருவம், அர்ஜுனன் கண்ட மாதிரி, பிரமிக்கத் தக்கதாகவும் பயங்கரமாகவும் இருக்குமாதலால், பக்தனின் மனதில் கொஞ்ச நேரமாவது நிலைத்துநிற்கக் கூடியதாக ரம்யமாக இருக்காது.
 
*மஹா:* வாஸ்தவம். விசுவரூப மூர்த்தியை கல்பித்துக் கொள்வதும் கஷ்டம்; கல்பித்தாலும் மனோஹரமாக இராது. அவ்விதமான மானஸிக மூர்த்தியை நான் சொல்லவில்லை. 
 
சிஷ்யர்: அப்படியானால் எவ்வித தியான ரூபத்தை சொன்னதாக நான் அறிந்து கொள்ள வேண்டும்? 
 
*மஹா:* சிறிது நேரமாவது மனதில் நிற்கக்கூடியதாக மூர்த்தி இருக்க வேண்டுமானால், அம்மூர்த்தி கல்பிப்பதற்கு ஸுலபமாயிருக்க வேண்டும், மனதிற்கு ரம்யமாகவும் இருக்க வேண்டுமென்று சொன்னீர்களல்லவா? 
 
*சிஷ்யர்:* ஆம். 
 
*மஹா:* புதிதாக கல்பிக்கப்பட வேண்டிய சிரமமேயில்லாமல், ஏற்கெனவே இருப்பதாயிருந்தால், இன்னும்
அனுகூலமல்லவா?
 
*சிஷ்யர்:* அதற்கென்ன ஸந்தேஹம்?
 
*மஹா:* மேலும் அவ்வுருவத்தை நாமாக ரம்யமாகச் செய்வதற்கு அவசியமில்லாமல், அதுவே இயற்கையிலேயே ரம்யமாக அமைந்து விட்டால், இன்னும் நல்லதுதானே?
 
*சிஷ்யர்:* ஆமாம்.
 
*மஹா:* நீங்கள் சொன்ன சிரமங்கள் எல்லாம் வெகு காலத்திற்கு முன் ஜீவித்திருந்தவர்களுக்கு இருந்திருக்கலாம். நமக்கு அவ்வித சிரமங்கள் வேண்டியதில்லை. 
 
சிஷ்யர்: எப்படி?
 
*மஹா:* நமக்கு முன் இருந்த மஹாஸந்நிதானத்தை தரிசித்திருப்பீர்கள் இல்லையா?
 
சிஷ்யர்: ஆம், தரிசித்திருக்கிறேன்.
 
மஹா: அவர்களை ஒரே ஒரு தடவை தரிசித்திருந்த போதிலும் அவர்கள் ரூபம் உங்கள் மனதில் நன்கு பதிந்திருக்கும். நினைத்துப் பார்த்தால் ஸுலபமாக உங்கள் மனக்கண் முன் நிற்கக்கூடிய முறையில் பதிந்திருக்கும். 
 
சிஷ்யர்: வாஸ்தவம். 
 
மஹா: அவர்களுடைய ரூபம் மிகவும் கவர்ச்சிகரமான தென்பதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள். இப்பொழுதும் அம்மூர்த்தியை நம் மனக்கண் முன் நிறுத்துவதில் உண்மையான தனி ஆனந்தம் ஏற்படுகிறதென்பதையும் ஒப்புக் கொள்வீர்கள்.
 
*சிஷ்யர்:* அப்படியேதான். 
 
*மஹா:* மனதில் வருத்திக் கொள்வதில் சிரமமில்லாமை, மனோஹரத்தன்மை என்ற இரண்டு அம்சங்களும் நீங்கள் வேண்டுமென்று சொன்னீர்கள். அவ்விரண்டும் இம்மூர்த்தியில் இருக்கின்றன. மனதை சிரமப்படுத்தி புதிதாக ஓர் உருவத்தை கல்பித்துக்கொண்டு, அதை ரம்யமாகச் செய்துகொள்ளவேண்டிய கார்யமேயில்லை. நீங்களே நேரில் தரிசித்திருக்கிற மூர்த்தி, ஒருவர் மற்றொருவருக்கு எவ்விதங்களிலெல்லாம் ரம்யமாக இருக்கலாமோ அத்தனை விதங்களிலும் கவரக்கூடிய மூர்த்தி; இவ்விதமாக அம்மஹானுடைய மூர்த்தியானது உங்களுக்கு ஸித்தமாகவே இருக்கிறது.
 
*சிஷ்யர்:* சிவனைக் குறித்தோ விஷ்ணுவைக் குறித்தோ ஜபம் செய்யும்போது, முன் மஹாஸந்நிதானத்தின் உருவத்தை மனதில் நிறுத்திக் கொண்டால், முரண்படாதா? 
 
*மஹா:* ஏன் முரண்பட வேண்டும்?
 
*गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुर्गुरुर्देवो महेश्वरः* 
*गुरुः साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः ॥*
 
என்ற சுலோகத்தில் குருதான் பிரஹ்மா, குருதான் விஷ்ணு, குருதான் மஹேசுவரர். குருதான் ஸாக்ஷாத் பரப்ரஹ்மம் என்று சொல்லப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியும். பரப்ரஹ்மமே குருதான் என்று இருக்கும்போது அந்த பரப்பிரஹ்மத்தில் தோன்றிய எல்லாவித பரிச்சின்னமான வியக்திகளும் குருவினிடத்தில் அடக்கமென்பது அவசியம்தானே? ஆகையால் ஒரு குறிப்பிட்ட தேவதையின் தியான சுலோகத்தையோ மந்திரத்தையோ சொல்லும்போது குருமூர்த்தியை உங்கள் முன் நிறுத்திக் கொள்வதில் எவ்வித முரண்பாடும் கிடையாது. அந்த தேவதையும் குருவின் ஸ்வரூபத்தில் சேர்ந்து அடங்கியுள்ளது தானே?

*To be continued..*

No comments:

Post a Comment