Saturday, April 12, 2025

Vishnu Sahasranamam intro

எவரை சரணடைந்தால் சம்சார பந்தம் அறுபடும்?

யுதிஷ்டிர உவாச:

கிமேகம் தைவதம் லோகே கிம் வாப்யேகம் பராயாணம்:
சத்துவந்த; கம் கமர்ச்சந்த: ப்ராப்நியூர் மணவாஸ் ஸுபம்''

யுதிஷ்டிரன் பய பக்தியுடன் பீஷ்மரை மெதுவாக கேட்கிறான்: 

''இந்த பூவுலகிற்கே ஒரே கடவுள் என்று எவரைச் சரணடையலாம்? '' என கேட்கிறான் யுதிஷ்டிரன்.

''கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத: |
கிம் ஜபந் முச்யதே ஜந்துர் ஜந்ம ஸம்ஸார பந்த நாத்

''இந்த மனித குலமே எவரை போற்றி துதித்து, வழிபட்டு அமைதியும், வளமும் பெற்று உய்யமுடியும் ?'' 

''எவரை உபாசித்தால் பிறவியினால் ஏற்படும் பந்தங்களை, கட்டுக்களை உதறிவிட்டு பரிசுத்தமாகலாம்? எது சிறந்த, உயர்ந்த தர்மம் என்று உங்களுக்கு தோன்றுகிறது?''

''கிம் ஜபந் முச்யதே ஜந்துர் ஜென்ம சம்சார பந்தனாத்:''
''எந்த மந்திரங்களை உச்சரித்து ஒருவன் பிறவி - மரண துன்பத்திலிருந்து விடுபட முடியும்?''

'' தாத்தா, நீங்கள் எல்லாம் தெரிந்தவர், நீங்களே சொல்லுங்கள்,நீங்கள் எதை உயர்ந்த தர்மம் என்று கருதுகிறீர்கள்? எந்த ஜெபத்தை, மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் உலக ஜீவ ராசிகள் சம்சார பந்தத்திலிருந்து விடுதலை பெறும்?'' - யுதிஷ்டிரன்.

ஸ்ரீ பீஷ்ம உவாச:

''ஜகத்ப்ரபும் தேவதேவம் அநந்தம் புருஷோத்தமம் |
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண புருஷ: ஸததோத்தித: ||

''இந்த பூவுலகில் எல்லோர் நலனுக்காகவும் நல்வாழ்வுக்காகவும் தன்னையே தியாகம் செயது கொள்பவர் ஸ்ரீ மஹா விஷ்ணு ஒருவரே. ஆதி அந்தம் இல்லாத பிரபு''

''தமேவ சார்ச்சயந் நித்யம் பக்த்யா புருஷ மவ்யயம் |
த்யாயந் ஸ்துவந்நாமஸ்யம்ச யஜமாநஸ் தமேவச ||

அப்படிப் பட்ட மகா புருஷனை ஸ்தோத்ரம் பண்ணியும், வழிபட்டும் ஒருவன் முக்தி பெறலாம்.

''அநாதி நிதநம் விஷ்ணும் ஸர்வலோக மஹேஸ்வரம் |
லோகாத்யக்ஷம் ஸ்துவந் நித்யம் ஸர்வதுக்காதிகோ பவேத் ||

தர்ம ஸ்வரூபனான மூவுலகும் காப்பவனான மஹாவிஷ்ணு ஆதியோ அந்தமோ இல்லாத மகேஸ்வரன். அவனது நாமத்தை நாமத்தை ஸ்மரிப்பவன் சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு துக்கங்களற்ற நிலை அடைகிறான்.

''ப்ரஹ்மண்யம் ஸர்வ தர்மஜ்ஞம் லோகாநாம் கீர்த்தி வர்த்தநம் |
லோகநாதம் மஹத்பூதம் ஸர்வபூத பவோத்பவம் ||

ஏஷ மே ஸர்வ தர்மாணாம் தர்மோ திகதமோமத: |
யத் பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்ச்சேந் நர:ஸதா||

பரமம் யோ மஹத்தேஜ: பரமம் யோ மஹத்தப: |
பரமம் யோ மஹத்ப்ரஹ்ம பரமம் ய: பராயணம் ||

மகா விஷ்ணுவை தான் ஒளி மயமான 'மஹத்' என்போம் . அவரல்லவோ சர்வ ஜன ரக்ஷகர். சத்ய ஸ்வரூப மானவர். பர ப்ரம்மம் ;

பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களாநாம் ச மங்களம் |
தைவதம் தேவதாநாம் ச பூதாநாம் யோவ்யய: பிதா ||

எதெல்லாம் பவித்ரம் என்று கருதுகிறோமோ அவற்றையே பவித்ரமாக்குபவர் மஹா விஷ்ணு. தேவாதி தேவன். சாஸ்வதன் . ஜீவராசிகளுக்கெல்லாம் தந்தை.

யத: ஸர்வாணி பூதாநி பவந்த்யாதி யுகாகமே |
யஸ்மிம்ஸ்ச ப்ரளயம் யாந்தி புநரேவ யுக்க்ஷயே ||

யுக சந்திகளில் பிரளயம் நேரிடும்.அப்போது சகல ஜீவராசிகளும் அழியும். பிரளய முடிவில் அனைத்தும் மீண்டும் தோன்றும்.எல்லாம் அவனிலிருந்து வந்தவை. முடிவில் அவனடியே சேரும்.

தஸ்ய: லோக ப்ரதாநஸ்ய ஜகந்நாதஸ்ய பூபதே|
விஷ்ணோர்நாம ஸஹஸ்ரம் மே ஸ்ருணு பாப பயாபஹம் ||

''யுதிஷ்டிரா, நான் உனக்கு அந்த கீர்த்தி வாய்ந்த மகா விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை சொல்கிறேன். வேதங்கள் அவனையே பாடுகின்றன ஏனென்றால் அவனல்லவோ அனைத்து பாபங்களையும் சம்சார பயத்தையும் போக்குபவன்.

''யாநி நாமாநி கௌணாநி விக்யாதாநி மஹாத்மநா : |
ரிஷி பி: பரிகீதாநி தாநி வக்ஷ்யாமி பூதயே ||

''நான் சொல்லப்போகும் விஷ்ணுவின் நாமங்கள் எல்லாமே அவனது கல்யாண குணங்களை அறிவுறுத்தும். ரிஷிகளின் வாக்கியங்களில் பொதிந்தவை அவை.

ரிஷிர் நாம்நாம் ஸஹஸ்ரஸ்ய வேதவ்யாஸோ மஹா முநி: |
சந்தோ அநுஷ்டுப் ததா தேவோ பகவாந் தேவகீஸுத: ||

''ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயனர் என்ற பெயர் கொண்ட வேத வியாசர் தான் இந்த ஆயிரம் நாமங்களை தொகுத்து அளித்தவர். அவை அனுஷ்டுப் எனும் சப்த அளவில் சொல்லவேண்டும். இந்த ஆயிர நாமங்களுக்கும் தலைவன், நாயகன், தேவகி மைந்தனான ஸ்ரீ கிருஷ்ணனே.

ஓம் நமோ நாராயணாய !

No comments:

Post a Comment