Tuesday, July 23, 2024

Bimbha - pratibimbha nyaya- HH Bharati Teertha Mahaswamigal

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

தன்னுடைய பிரபுவுக்கு செளக்கியம் வர வேண்டுமென்றால் பிரபுவிற்குத் தானே சேவை செய்ய வேண்டும்.  அதை விட்டுவிட்டு வேறு யாருக்காவது வேலை செய்தால் அது எப்படி உதவும்?  அதற்கு ஒரு யுக்தி உண்டு.
ஜீவனும் ஈச்வரனும் முறையே பிரதிபிம்பமாகவும் பிம்பமாகவும் சாஸ்திரத்தில் ஸித்தாந்தமாக உள்ளது.  ஒரு கண்ணாடிக்கு முன் நாம் நின்று கொண்டு முகத்தைப் பார்த்தால் முகத்தின் பிரதிபிம்பம்  அக்கண்ணாடியில் தெரியும்.  இங்கு முகம் என்பது பிம்பம் ஆகும்.  கண்ணாடியில் தெரிவது பிரதிபிம்பம்.  இங்கு கண்ணாடி என்று உதாரணத்தில் நாம் சொல்வதை சாஸ்திரத்தில் "உபாதி"  என்பர்.  ஆக, பிம்பம், உபாதி மற்றும் உபாதியினுள் தெரியும் பிரதிபிம்பம் என்று மூன்று பொருட்கள் இங்கு உள்ளன.
கண்ணாடியில் முகத்தைப் பார்ப்பவன்,  "பிரதிபிம்பத்தின் நெற்றிப் பாகத்தில் விபூதி இல்லையே" என்று எண்ணினால், விபூதியை அவன் எங்கு இட வேண்டும்?  விபூதியைக் கண்ணாடியில் தோன்றும் பிரதிபிம்பத்தில் இட முடியாது.  ஏனென்றால், முகத்தைச் சிறிது அசைத்தாலும் பிரதிபிம்பத்தின் நெற்றிப் பாகத்தில் விபூதி இல்லாமல் போய்விடும்.  ஆகையால், பிரதிபிம்பத்தில் விபூதி தெரிய வேண்டுமென்றால் தன் நெற்றியில்தான் விபூதி இட்டுக்கொள்ள வேண்டும்.  அதாவது பிரதிபிம்பத்திற்கு அலங்காரம் ஏற்பட வேண்டுமென்றால்,  பிம்பத்திற்கு அலங்காரம் செய்ய வேண்டும்.
ஜீவன்,  "அவித்யை" என்னும் உபாதியில் ஈச்வரனுடைய பிரதிபிம்பமாகத் தெரிகிறான்.  மாயை என்பது அவித்யையின் மறு பெயர்.  அதனால்தான்,  "பிரதிபிம்பமான ஜீவனுக்கு செளக்கியம் உண்டாக வேண்டுமென்றால் பிம்ப வடிவான, சகுணமான ஈச்வரனை சேவித்து வா.  அதனால் பிரதிபிம்பமான ஜீவனுக்குத் தானாகவே செளக்கியம் கிடைக்கும்" என்று பகவத்பாதாள் மனதை நோக்கிக் கூறினார்.

No comments:

Post a Comment