மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-225
உத்யோக பர்வம்
..
துரியோதனன் சொன்ன பூனைக்கதை!
..
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} சொன்னான், "கங்கையின் உயர் ஆன்ம மகனும், ஆயுதங்கள் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையானவரும், பாரதர்களின் பாட்டனும், மன்னர்கள் அனைவருக்கும் தலைவரும், புத்திக்கூர்மையில் பிருஹஸ்பதிக்குப் போட்டியாளரும், ஈர்ப்பு விசையில் கடலைப் போன்றவரும், அமைதியில் இமயத்தைப் போன்றவரும், உன்னதத் தன்மையில் படைப்பாளனைப் {பிரம்மனைப்} போன்றவரும், சக்தியில் சூரியனைப் போன்றவரும், தன் கணைகளை மழையாகப் பொழிந்து எதிரிப் படைகளைக் கொல்வதில், பெரும் இந்திரனைப் போன்றவருமான பீஷ்மர், பார்ப்பதற்குப் பயங்கரமானதும், நினைக்கும்போதே ஒருவரை மயிர்ச்சிலிர்க்கச் செய்வதுமான போர் எனும் பெரும் வேள்வியின் நெருக்கத்தில், குரு {கௌரவப்} படையின் அதிகாரியாக {படைத்தலைவராக} நிறுவப்பட்ட செய்தியை, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், பாண்டுவின் மகனும், ஆயுதம் தாங்குவோரில் முதன்மையானவனுமான யுதிஷ்டிரன் கேட்ட போது, அது குறித்து என்ன சொன்னான்? பீமனும், அர்ஜுனனும் என்ன சொன்னார்கள்? மேலும் கிருஷ்ணன் என்ன சொன்னான்?" என்று கேட்டான் {ஜனமேஜயன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "செய்தியை அடைந்த போது, பெரும் புத்திசாலித்தனம் கொண்டவனும், ஆபத்து மற்றும் பேரிடர் காலங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்தவனுமான யுதிஷ்டிரன், தனது தம்பிகள் அனைவரையும் மற்றும் நித்தியமான வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்) தனது முன்னிலைக்கு அழைத்தான். பேசுபவர்களில் முதன்மையான அவன் {யுதிஷ்டிரன்}, பிறகு, மென்மையான குரலில், "படைவீரர்களுக்கு மத்தியில் சுற்றி, கவசம் பூண்டு பாதுகாப்பாக இருப்பீர்களாக. நமது முதல் மோதல் நமது பாட்டனுடன் {பீஷ்மருடன்} இருக்கப் போகிறது. எனது துருப்புகளின் ஏழு {7} அக்ஷௌஹிணிகளின் (ஏழு) தலைவர்களைப் பார்ப்பீராக" என்றான் {யுதிஷ்டிரன்}.
கிருஷ்ணன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே} இது போன்ற பயனுள்ள வார்த்தைகளையே இத்தகு சந்தர்ப்பத்தில் சொல்ல வேண்டும். உண்மையில் நீர் அதையே சொல்லியிருக்கிறீர். ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, நானும் இதையே விரும்புகிறேன். எனவே, அடுத்ததாகச் செய்யப்பட வேண்டியது செய்யப்படட்டும். உண்மையில், உமது படையின் ஏழு தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படட்டும்" என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "போர் செய்ய ஆவலோடு இருந்த வீரர்களான துருபதன், விராடன், சினி குலத்துக் காளை {சாத்யகி}, பாஞ்சால இளவரசன் திருஷ்டத்யும்னன், மன்னன் திருஷ்டகேது, பாஞ்சாலத்தைச் சேர்ந்த இளவரசன் சிகண்டி, மகத ஆட்சியாளன் சகாதேவன் ஆகியோரை அழைத்த யுதிஷ்டிரன், அவர்களை முறையே தனது ஏழு பிரிவுகளுக்குத் தலைவர்களாக நியமித்தான் [1]. அவர்களுக்கெல்லாம் மேலாகத் துருப்புகள் அனைத்துக்கும் தலைவனாக, சுடர்விட்டெரியும் (வேள்வி) நெருப்பில், துரோணரின் அழிவுக்காக உதித்த திருஷ்டத்யுமனன் நியமிக்கப்பட்டான். சுருள் முடி கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, அந்த உயர் ஆன்ம தலைவர்கள் அனைவருக்கும் தலைவனாக நியமிக்கப்பட்டான். பெரும் புத்திக்கூர்மையுடையவனும், சங்கர்ஷணனுக்குத் {பலராமனுக்குத்} தம்பியுமான அழகிய ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனுக்கு வழிகாட்டியாகவும், அவனது {அர்ஜுனனின்} குதிரைகளைச் செலுத்துபவனாகவும் {குதிரையோட்டி [அ] தேரோட்டியாக} நியமிக்கப்பட்டான்.
[1] குருக்ஷேத்திரத்திற்குப் புறப்படும்போது //துருபதர், விராடர், திருஷ்டத்யும்னன், சிகண்டி, சாத்யகி, சேகிதானன், பீமசேனன் ஆகியோரே துருப்புகள் தலைவர்கள் See more at: http://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section151.html// என்று ஏழு தலைவர்களை அறிவிக்கிறான் யுதிஷ்டிரன். இங்கே மீண்டும் துருபதன், விராடன், சாத்யகி, திருஷ்டத்யும்னன், திருஷ்டகேது, சிகண்டி, சகாதேவன் எனப் புதிய பட்டியலைத் தருகிறான். ஒருவேளை முன்னவர்கள் அக்ஷௌஹிணிகளுக்குத் தலைவர்களும், பின்னவர்கள், ஏழு படைப்பிரிவுகளுக்கு தலைவர்களாகவும் இருப்பார்களோ என நினைக்கிறேன்.
பெரும் அழிவை உண்டாக்கப்போகும் போர் நெருங்கி வருவதைக் கண்டு, ஓ! மன்னா {ஜனமேஜா}, பாண்டவ முகாமுக்கு, அக்ரூரர், கதன், சாம்பன், உத்தவர், ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்|, ஆகுகனுடைய மகன்கள், சாருதேஷ்ணன் ஆகியோருடனும், பிறருடனும் ஹாலாயுதன் {பலராமன்} அங்கே வந்தான். வலிமைமிக்கப் புலிகளின் கூட்டம் போன்ற அந்த விருஷ்ணி குலத்தின் முதன்மையான போர்வீரர்களால் பாதுகாக்கப்பட்டும், சூழப்பட்டும், மருத்தர்களின் மத்தியில் உள்ள வாசவனைப் {இந்திரனைப்} போலவும், கைலாய மலையின் சிகரத்தைப் போலவும் இருந்த அழகிய ராமன் {பலராமன்}, நீலப்பட்டாடை உடுத்தி, சிங்கத்தின் விளையாட்டு நடையுடனும், குடியால் சிவந்த கடைவிழிகளுடனும் அங்கே (அத்தகு நேரத்தில்) வந்தான்.
நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பெரும் பிரகாசம் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, பயங்கரச் செயல்களைப் புரியும் பிருதையின் மகனான விருகோதரன் {பீமன்}, காண்டீவதாரி {அர்ஜுனன்} மற்றும் அங்கிருந்த பிற மன்னர்கள் அனைவரும் அவனைக் {பலராமனைக்} கண்டு, தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்தனர். ஹாலாயுதன் {பலராமன்} அந்த இடத்திற்கு வந்த போது அவர்கள் அனைவரும் தங்கள் வழிபாட்டைக் காணிக்கையாக்கினர். பாண்டவ மன்னன் {யுதிஷ்டிரன்}, ராமனின் {பலராமனின்} கரங்களைத் தனது கரங்களால் தொட்டான். எதிரிகளைத் தண்டிப்பவனான ஹாலாயுதனும் {பலராமனும்}, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தலைமையில் இருந்த அவர்கள் அனைவரையும் அணுகி, பதிலுக்கு அவர்களை வழிபட்டு, வயதால் மூத்த விராடன் மற்றும் துருபதன் ஆகிய இருவரையும் (மரியாதையாக) வணங்கி, யுதிஷ்டிரனுடன் ஒரே இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
மன்னர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, அந்த ரோகிணியின் மகன் {பலராமன்}, வாசுதேவன் {கிருஷ்ணன்} மேல் தன் பார்வையைச் செலுத்தியபடி பேச ஆரம்பித்தான். அவன் {பலராமன்}, இந்தக் கடுமையான, கொடூரமான படுகொலை தவிர்க்க முடியாததாகும். விதியின் கட்டளை இஃது என்பதில் ஐயமில்லை. மேலும் இது தவிர்க்கப்பட முடியாததே எனவும் நான் நினைக்கிறேன். எனினும், உங்கள் நண்பர்களுடன் கூடிய நீங்கள் அனைவரும், நல்ல உடல்களுடனும், முற்றான நலத்துடனும், இந்தக் கலவரத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியே வருவீர்கள் என நம்புகிறேன். ஒன்றாகக் கூடியிருக்கும் உலகத்தின் க்ஷத்திரியர்கள் அனைவருக்கும், அவர்களது நேரம் வந்துவிட்டது என்பதில் ஐயமில்லை. இரத்தம் மற்றும் சதையினாலான சேற்றில் மூழ்கிய ஒரு கடுமையான கைக்கலப்பு நேரப்போவது உறுதியாகிவிட்டது.
தனிமையில் நான் வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, நம்மிடம் சமமான உறவுமுறை கொண்டோரிடம் {நமது சம்பந்திகளுடன்}, சமமான நடத்தையை நோற்பாயாக. பாண்டவர்கள் நமக்கு எப்படியோ, அப்படியே மன்னன் துரியோதனனுமாவான். எனவே, அவனுக்கும் {துரியோதனனுக்கும்} அதே உதவியைக் கொடுப்பாயாக. உண்மையில் அவன் {துரியோதனன்} திரும்பத் திரும்ப வேண்டினான்" எனச் சொன்னேன். எனினும், உங்களுக்காக மதுசூதனன் {கிருஷ்ணன்} எனது வார்த்தைகளை அலட்சியம் செய்தான். தனஞ்சயனைப் {அர்ஜுனனைப்} பார்த்த அவன் {கிருஷ்ணன்}, தனது முழு இதயத்துடன், உங்கள் காரியத்துக்காகத் தன்னை அர்ப்பணித்திருக்கிறான்.
பாண்டவர்களின் வெற்றி என்பது உறுதியானது என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில், ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} விருப்பமும் அதுவே ஆகும். என்னைப் பொறுத்தவரை, கிருஷ்ணன் (என் அருகில்) இல்லாத உலகத்தில் எனது கண்களைச் செலுத்த நான் துணிய மாட்டேன். இதற்காகவே, கிருஷ்ணன் அடைய முயற்சிப்பது எதுவாக இருப்பினும், அதையே நானும் பின்பற்றுகிறேன். கதாயுதப் போரில் நல்ல திறம் வாய்ந்த இந்த வீரர்கள் இருவரும் {பீமனும், துரியோதனனும்} எனது சீடர்களாவர். எனவே, எனது அன்பு, பீமனுக்கு இணையாக மன்னன் துரியோதனனிடமும் உண்டு. இந்தக் காரணங்களுக்காக, *நான் இப்போது, நீர்க்காணிக்கைகள் செய்து சுத்திகரித்துக் கொள்வதற்காகச் சரஸ்வதி தீர்த்தத்திற்குச் செல்லப் போகிறேன். ஏனெனில், கௌரவர்களின் அழிவை என்னால் அலட்சியமாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது" என்றான் {பலராமன்}.
இப்படிச் சொன்ன வலிய கரங்களைக் கொண்ட ராமன் {பலராமன்}, பாண்டவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, (மேலும் மேலும் தன்னைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த) மதுசூதனனைத் {கிருஷ்ணனை} தடுத்து, புனித நீர்நிலைகளுக்கான தனது பயணத்திற்குப் புறப்பட்டான்."
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இந்த நேரத்தில் அங்கே பாண்டவப் பாசறைக்குள், பீஷ்மகனின் மகனும், உண்மைநிறைந்த தீர்மானத்தைக் கொண்டவர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான ருக்மி என்ற பெயரில் பரவலாக அறியப்பட்டவன் வந்தான். வேறு பெயரில் ஹிரண்யரோமன் என்றும் அழைக்கப்பட்டவனான உயர் ஆன்ம பீஷ்மகன் {ருக்மியின் தந்தை} இந்திரனுக்கு நண்பனாக இருந்தான். போஜர்களின் வழித்தோன்றல்களில் பெரும் சிறப்புமிக்கவனாகவும், தென்னாடு முழுமைக்கும் ஆட்சியாளனாகவும் {தக்ஷிணதேசத்தாருக்குப் பதியுமாக} அவன் {பீஷ்மகன்} இருந்தான்.
கந்தமாதன மலைகளைத் தனது வசிப்பிடமாகக் கொண்டவனும், துரோணன் {துருமன்} என்ற பெயரில் அறியப்பட்டவனுமான கிம்புருஷர்களில் சிங்கம் போன்றவனுக்குச் {துருமனுக்கு} ருக்மி சீடனாக இருந்தான். அவன் {ருக்மி}, தனது ஆசானிடம் {துருமனிடம்} நான்கு பிரிவுகளுடன் கூடிய ஆயுத அறிவியலை முழுமையாகக் கற்றான். வலிய கரங்களைக் கொண்ட அந்தப் போர்வீரன் {ருக்மி}, காண்டீவம் மற்றும் (கிருஷ்ணனால் தரிக்கப்படும்) சாரங்கத்திற்கு இணையான சக்தி கொண்டதும், பெரும் இந்திரனுக்குச் {மகேந்திரனுக்குச்} சொந்தமானதும், தெய்வீகத் தொழில்நுட்பம் வாய்ந்ததுமான விஜயம் என்ற பெயரைக் கொண்டதுமான வில்லை {துருமனிடமிருந்து} அடைந்தான்.
வருணனுடைய காண்டீவம், இந்திரனுடைய விஜயம் என்று அழைக்கபட்ட வில், பெரும் சக்தி கொண்டதான விஷ்ணுவின் தெய்வீகமான வில் {சாரங்கம்} ஆகிய மூன்றும் சொர்க்கவாசிகளுக்குச் சொந்தமான தெய்வீக விற்களாக இருந்தன. பகை வீரர்களின் இதங்களில் பயத்தை உண்டாக்கும் இந்தக் கடைசி வில் (சாரங்கம்) கிருஷ்ணனால் தரிக்கப்பட்டது. காண்டவத்தை எரித்த நிகழ்வின் போது அக்னியிடம் இருந்து காண்டீவம் என்று அழைக்கப்பட்ட வில்லை இந்திரனின் மகன் (அர்ஜுனன்) பெற்றான். அதே வேளையில், விஜயம் என்ற வில்லைப் பெரும் சக்தி கொண்ட ருக்மி, {கிம்புருஷனான} துரோணனிடம் {துருமனிடம்} இருந்து பெற்றான்.
முரனின் சுருக்குகளை {பாசங்களை} கலங்கடித்து, அந்த அசுரனைத் {முரனைத்} தனது ஆற்றலால் கொன்றவனும், பூமியின் {பூமாதேவியின்} மகனான நரகனை வீழ்த்தியவனுமான ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, பதினாறாயிரம் {16,000} பெண்களையும், பல்வேறு வகையான ரத்தினங்கள் மற்றும் கற்களையும், (அதிதியின்) மணிக்குண்டலங்களை மீட்ட போது, சாரங்கம் என்று அழைக்கப்பட்ட அந்த அற்புதமான வில்லையும் அடைந்தான்.
மேகங்களின் கர்ஜனைக்கு நிகரான நாணொலி கொண்ட விஜயம் என்ற வில்லை அடைந்த ருக்மி, அச்சத்தால் முழு அண்டத்தையும் கலங்கடித்தபடி பாண்டவர்களிடம் வந்தான். தனது கரங்களின் வலிமையில் செருக்கு கொண்டவனான அந்த ருக்மி, முன்னதாக {முன்பு ஒரு காலத்தில்}, தனது தங்கை ருக்மிணி புத்திமானான வாசுதேவனால் {கிருஷ்ணனால்} கடத்தப்பட்டதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், "ஜனார்த்தனனைக் {கிருஷ்ணனைக்} கொல்லாமல் திரும்புவதில்லை" என்ற உறுதிமொழியை நோற்று அவனை {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து சென்றான்.
அழகான கவசங்களைத் தரித்து, பல்வேறு வகையான ஆயுதங்களையும் தரித்து, பெருகியோடும் கங்கையின் நீரோட்டத்தைப் போலப் பாய்வதும், (அணிவகுத்துச் செல்லும்போது) பூமியின் ஒரு மிகப்பெரிய பகுதியை ஆக்கிரமிப்பதுமான நால்வகைப் படைகளின் துணையுடன் வந்தவனும், ஆயுதங்கள் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவனுமான அவன் {ருக்மி}, விருஷ்ணி குலத்தோனான வாசுதேவனைப் {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்தான்.
குருசேத்திரம், இந்திரபிரஸ்தம், உபப்லாவ்யம்,
விராடபுரி, குண்டினம், போஜகடம்
ஓ! மன்னா {ஜனமேஜயா}, தவத்துறவுகளால் அடையத்தக்க அனைத்துக்கும் தலைவனான அந்த விருஷ்ணி குலத்தோனிடம் {கிருஷ்ணனிடம்} வந்த ருக்மி, அவனால் {கிருஷ்ணனால்} வீழ்த்தப்பட்டு அவமானம் அடைந்தான். அதன் காரணமாக அவன் {ருக்மி}, (தனது நகரான) குண்டினத்திற்குத் [1] {Kundina} திரும்பவில்லை. பகை வீரர்களைக் கொல்பவனான அவன் {ருக்மி} கிருஷ்ணனால் எந்த இடத்தில் வீழ்த்தப்பட்டானோ, அதே இடத்தில் போஜகடம் {Bojakata} என்ற பெயரில் ஓர் அற்புத நகரத்தைக் கட்டினான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, பெரும் படைகளுடனும், யானைகள் மற்றும் குதிரைகளுடனும் நிரம்பியிருக்ககும் அந்த நகரம், உலகத்தில் அந்தப் பெயராலேயே {போஜகடம் என்ற பெயராலேயே} பரந்து அறியப்பட்டது.
[1] நளனின் தலைநகரம் இதே குண்டினபுரம்தான். நளனின் நாடு நிடத {நைஷாத} நாடு என்று அழைக்கப்பட்டதாக வன பர்வத்தின் நளோபாக்யான பர்வத்தில் நாம் ஏற்கனவே கண்டோம். இங்கே அதே குண்டினத்தைத் தலைநகரமாகக் கொண்ட ருக்மியின் நாடு போஜர்களின் நாடாகச் சொல்லப்படுகிறது.
கவசம் பூண்டு, விற்கள், கையுறைகள், வாட்கள், அம்பறாத்தூணிகள் ஆகியவற்றைத் தரித்திருந்த அந்தப் பெரும் சக்தி கொண்ட வீரன் {ருக்மி}, ஓர் அக்ஷௌஹிணி படையுடன் {உபப்லாவ்யத்தில் இருந்த} பாண்டவ முகாமுக்குள் விரைவாக நுழைந்தான். சூரியனைப் போன்று நிலையான சுடரொளியுடன் இருந்த அந்தப் {பாண்டவப்} பெரும்படைக்குள் நுழைந்த ருக்மி, வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} ஏற்கத்தக்கதைச் செய்ய விரும்பிய பாண்டவர்களிடம் தன்னை அறியச் செய்து கொண்டான். சில எட்டுகள் முன் வந்த மன்னன் யுதிஷ்டிரன், அவனுக்கு {ருக்மிக்குத்} தனது வழிபாட்டைக் காணிக்கையாக்கினான். முறையாக வழிபடப்பட்டு, பாண்டவர்களால் புகழப்பட்ட ருக்மி, பிறகு, தனது பதில் வணக்கத்தைத் தெரிவித்து, தனது துருப்புகளுடன் சிறிது நேரம் ஓய்ந்திருந்தான்.
*பிறகு, அவன் {ருக்மி}, கூடியிருந்த வீரர்களுக்கு மத்தியில் இருந்த குந்தியின் மகனான அர்ஜுனனிடம், "ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அச்சப்படுகிறாயெனில், போரில் உனக்கு உதவிகளை அளிக்க நான் இங்கு இருக்கிறேன். நான் உனக்குத் தரும் உதவியை, உனது எதிரிகளால் தாங்கிக் கொள்ள இயலாது. ஆற்றலில் எனக்கு நிகரான எந்த மனிதனும் இவ்வுலகில் கிடையாது. ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, உனது எதிரிகளில் யாரை நீ எனக்கு ஒதுக்குகிறாயோ அவர்களை நான் கொல்வேன். துரோணர், கிருபர், பீஷ்மர் மற்றும் கர்ணன் ஆகிய வீரர்களில் ஒருவரை நான் கொல்வேன். அல்லது, பூமியின் மன்னர்களான இவர்கள் அனைவரும் ஒரு புறம் நிற்கட்டும். உனது எதிரிகளை நானே கொன்று, இந்தப் பூமியை நான் உனக்கு அளிக்கிறேன்" என்றான் {ருக்மி}.
நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், கேசவன் {கிருஷ்ணன்} ஆகியோர் முன்னிலையிலும், (கூடியிருந்த) ஏகாதிபதிகளும், (முகாமில்) இருந்த அனைவரும் கேட்கும்படியும் இதைச் சொன்னான். பிறகு, பாண்டுவின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் மற்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகியோர் மீது தனது கண்களைச் செலுத்திய குந்தியின் புத்திசாலி மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, புன்னகைத்தவாறே, நட்பு கலந்த குரலில், "குரு {கௌரவக்} குலத்தில் பிறந்து, அதிலும் குறிப்பாகப் பாண்டுவின் மகனாகப் பிறந்து, எனது ஆசான் என்று துரோணரின் பெயரைச் சொல்லிக் கொண்டு, வாசுதேவனை {கிருஷ்ணனை} எனது கூட்டாளியாக வைத்துக் கொண்டு, அதையெல்லாம் விடக் காண்டீவம் என்று அழைக்கப்படும் வில்லையும் கொண்டிருக்கும் நான், அஞ்சுகிறேன் என்று எப்படிச் சொல்வேன்?
ஓ! வீரா {ருக்மியே}, கால்நடைகளைக் கணக்கெடுத்த நிகழ்வில் {கோஷ யாத்ரையின் போது} பலமிக்கக் கந்தர்வர்களுடன் நான் போரிட்டபோது, எனக்கு உதவி செய்ய எவன் இருந்தான்?
காண்டவத்தில் {காண்டவ வனத்தில்} ஒன்று சேர்ந்து பெரும் எண்ணிக்கையில் வந்த தேவர்களுடனும், தானவர்களுடனும் பயங்கர மோதல் ஏற்பட்டு, நான் அவர்களுடன் போரிடுகையில், எனது கூட்டாளியாக எவன் இருந்தான்?
மேலும், நிவாதகவசர்களுடனும், காலகேயர்கள் என்று அழைக்கப்பட்ட பிற தானவர்களுடனும் நான் போரிட்டபோது, எனது கூட்டாளியாக எவன் இருந்தான்?
மேலும், விராட நகரத்தில், எண்ணற்ற குருக்களுடன் நான் போரிட்ட போது, அந்தப் போரில் எனது கூட்டாளியாக எவன் இருந்தான்?
போரின் நிமித்தமாக ருத்ரன், சக்ரன் {இந்திரன்}, வைஸ்ரவணன் {குபேரன்}, யமன், வருணன், பாவகன் {அக்னி}, கிருபர், துரோணர், மாதவன் {கிருஷ்ணன்} ஆகியோருக்கு எனது மரியாதைகளைச் செலுத்துபவன் நான்.
ஓ! மனிதர்களில் புலியே {ருக்மியே}, ஏந்துவதற்குக் கடினமானதும், பெரும் சக்தி கொண்டதும், காண்டீவம் என்றழைக்கப்படுவதுமான தெய்வீக வில்லைத் தரித்துக் கொண்டு, வற்றாத அம்புகள் மற்றும் தெய்வீக ஆயுதங்களைக் கொண்டிருக்கும் என்னைப்போன்றவன், புகழனைத்தையும் திருடிவிடக்கூடிய {இழந்துவிடக்கூடிய} "நான் அஞ்சுகிறேன்" என்ற வார்த்தைகளை வஜ்ரத்தைத் தாங்கியிருக்கும் இந்திரனிடம் கூட எப்படிச் சொல்வான்?
ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நான் அஞ்சவில்லை, உனது உதவிக்கான எந்தத் தேவையும் எனக்கில்லை. எனவே, செல். அல்லது தங்கு. உனக்கு விருப்பமானதையோ, தகுந்ததையோ செய்துகொள்வாயாக {எதை வேண்டுமானாலும் செய்து கொள்}" என்றான் {அர்ஜுனன்}.
அர்ஜுனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட ருக்மி, கடல் போன்று பரந்திருந்த தனது படையுடன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, துரியோதனனிடம் சென்றான் {ருக்மி}. அங்கே சென்ற மன்னன் ருக்மி, துரியோதனனிடமும் இந்த வார்த்தைகளேயே திரும்பச் சொன்னான். தனது வீரத்தில் செருக்குக் கொண்ட அம்மன்னனும் {துரியோதனனும்}, அதே வழியில் {அர்ஜுனனைப் போலவே} அவனை {ருக்மியை} நிராகரித்தான்.
இப்படியே, ஓ! மன்னா {ஜனமேஜயா}, விருஷ்ணி குலத்து ரோகிணியின் மகன் (ராமன் {பலராமன்}), மன்னன் ருக்மி ஆகிய இருவரும் போரில் இருந்து விலகினர். ராமன் {பலராமன்} தீர்த்த யாத்திரைக்குப் புறப்படவும், பீஷ்மகனின் மகன் ருக்மி இப்படி விலகவும் செய்த பிறகு, மீண்டும் ஒருமுறை பாண்டுவின் மகன்கள் ஒருவருக்குள் ஒருவர் ஆலோசிக்க அமர்ந்தனர். எண்ணிலடங்கா ஏகாதிபதிகள் நிறைந்ததும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் தலைமை தாங்கப்பட்டதுமான அந்தச் சபை, சிறிய ஒளி பொருட்ளாலும் {கோள்களாலும்}, அவற்றுக்கு மத்தியில் இருக்கும் சந்திரனாலும் அலங்கரிக்கப்பட்ட வானம் போலச் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருந்தது."
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} சொன்னான், "படைவீரர்கள் இப்படிப் போருக்காக (குருக்ஷேத்திரக் களத்தில்) அணிவகுத்த பிறகு, ஓ! அந்தணர்களில் காளையே {வைசம்பாயனரே}, விதியால் உந்தப்பட்ட {காலனால் ஏவப்பட்ட} கௌரவர்கள் என்ன செய்தார்கள்?"
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, படைவீரர்கள் இப்படிப் போருக்காக அணிவகுத்த பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, சஞ்சயனிடம் திருதராஷ்டிரன் இவ்வார்த்தைகளைச் சொன்னான்."
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "வா, ஓ! சஞ்சயா, குரு {கௌரவ} மற்றும் பாண்டவத் துருப்புகளின் முகாம்களில் நடந்த நிகழ்வுகள் அனைத்தின் முழு விபரங்களையும் எனக்குச் சொல்வாயாக. போரின் தீய விளைவுகள் அழிவுக்கு மட்டுமே வழிவகுக்கும் என்பதை நான் அறிந்திருந்தேன். எனினும், *சூதாட்டத்தில் மகிழ்ந்து, வஞ்சகத்தை அறிவாகக் கருதும் எனது மகனை {துரியோதனனை} என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, விதியே உயர்ந்தது என்றும், முயற்சி {உழைப்பு} பயனில்லாதது என்றும் கருதுகிறேன். அனைத்தையும் அறிகிறேன். எனினும், எனது சொந்த நலனைக் கூட இன்னும் என்னால் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. ஓ! சூதா {சஞ்சயா}, (நடவடிக்கைகளின்) குறைபாடுகளைக் காணும் திறன் எனது புரிதலுக்கு {அறிவுக்கு} இருக்கிறது. எனினும், நான் துரியோதனனை அணுகும்போது, அந்தப் புரிதல் (சரியான அந்தப் பாதையில்) இருந்து நழுவி விடுகிறது. நிலைமை இப்படி இருக்கையில், ஓ! சஞ்சயா, எது நடக்க வேண்டுமோ, அதுவே நடக்கும். உண்மையில், போரில் தனது உடலைத் தியாகம் செய்வது, க்ஷத்திரியர் ஒவ்வொருவருக்கும் பாராட்டத்தக்க கடமையே ஆகும்" என்றான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் கேட்கும் இந்தக் கேள்வி உண்மையில் உமக்குத் தகுந்ததே. எனினும், துரியோதனன் மேல் மட்டுமே முழுத் தவறும் இருப்பதாக நீர் குற்றம் சாட்டுவது உமக்குத் தகாது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இது குறித்து நான் விரிவாகப் பேசுகையில் என்னைக் {நான் சொல்வதைக்} கேட்பீராக. தனது தன்னடத்தையில் {சுய நடத்தையில்} உள்ள தவறின் விளைவாகத் தீமையை அடையும் ஒரு மனிதன், அந்தத் தவறுக்காக, காலத்தையோ, தேவர்களையோ எப்போதும் குற்றம் சாட்டக்கூடாது.
ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, தீய செயல்கள் அனைத்தையும் நிகழ்த்தும் மனிதர்களில் ஒருவன், அச்செயல்களை நிகழ்த்தியதன் விளைவால் கொல்லப்படத் தகுந்தவனாகிறான். எனினும், பகடை ஆட்டத்தின் விளைவால் தீங்கை அனுபவித்த பாண்டுவின் மகன்கள், அமைதியாக அத்தீங்குகள் அத்தனையையும் தங்கள் ஆலோசகர்கள் அனைவருடனும் தாங்கிக் கொண்டு, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, உமது முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தனர்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நடைபெறயிருக்கும் போரில் குதிரைகள், யானைகள், அளவிலா சக்தி கொண்ட மன்னர்கள் ஆகியோரின் படுகொலைகளைக் குறித்து என்னிடம் முழுமையாகக் கேளும். ஓ! பெரும் அறிவைக் கொண்டவரே, இப்படிக் {வலிந்து} கொண்டுவரப்பட்டிருக்கும் இந்தக் கடும் போரால் ஏற்படப்போகும் உலக அழிவைப் பொறுமையாகக் கேட்ட பிறகு, சரியான அல்லது தவறான தனது செயல்பாடுகளுக்கு மனிதன் ஒருபோதும் பொறுப்பாக முடியாது என்பதைத் தவிர வேறு எதையும் தீர்மானிக்காதிருப்பீராக.
உண்மையில், மரப்பாவை {மரப் பொம்மை} போன்ற மனிதன், (தான் செய்யும் அனைத்துக்கும்) பொறுப்பாளியல்ல. இந்த வகையில், மூன்று கருத்துகள் சொல்லப்படுகிறது; அனைத்தும் கடவுளால் விதிக்கப்படுகிறது என்று சிலர் சொல்கின்றனர்; நமது தன்னிச்சையின் {சுய விருப்பத்தின்} விளைவே நமது செயல்கள் என்று சிலர் சொல்கின்றனர்; பிறரோ, நமது கடந்த கால வாழ்வுகளின் {முற்பிறவியில் நாம் செய்த செயல்களின்} விளைவே நமது செயல்கள் என்றும் சொல்கின்றனர். எனவே, நமக்கு நேர்ந்திருக்கும் தீமையைப் பொறுமையாகக் கேட்பீராக" என்றான் {சஞ்சயன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஹிரண்யவதியின் {ஆற்றின்} அருகில் உயர் ஆன்ம பாண்டவர்கள் முகாமிட்டதும், கௌரவர்களும் தங்கள் முகாம்களை நிறுவிக் கொண்டனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மன்னன் துரியோதனன், தனது துருப்புகளைப் பலமாக நிறுத்தினான். (தன் தரப்பில் இருந்த) மன்னர்கள் அனைவருக்கும் உரிய மரியாதைகளைச் செலுத்தினான். போர் வீரர்களின் பாதுகாப்புக்காகக் காவல் படைகளையும், சோதனைச் சாவடிகளையும் அமைத்தான். பிறகு, மனிதர்களின் ஆட்சியாளர்களான கர்ணன், துச்சாசனன் மற்றும் சுபலனின் மகன் சகுனி ஆகியோரை அங்கே வரவழைத்து, அவர்களுடன் ஆலோசிக்க ஆரம்பித்தான்.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (முதலில்) கர்ணனிடம் ஆலோசித்த மன்னன் துரியோதனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (அடுத்ததாக) கர்ணனுடன் சேர்த்து, தனது தம்பி துச்சாசனன் மற்றும் சுபலனின் மகன் {சகுனி} ஆகியோருடனும் கூட்டாக ஆலோசித்தான். பிறகு, ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, உலூகனைத் தனது முன்னிலையில் தனிமையில் அழைத்து அவனிடம் {உலூகனிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னான். அவன் {துரியோதனன் உலூகனிடம்}, "ஓ! உலூகா, சூதாடியின் மகனே {கைதவ்யா} {உலூகா}, பாண்டவர்களிடமும், சோமகர்களிடமும் நீ செல்வாயாக. அங்கே சென்று, வாசுதேவன் {கிருஷ்ணன்} கேட்டுக் கொண்டிருக்கையில், (யுதிஷ்டிரனிடம்) இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக.
{யுதிஷ்டிரனிடம் சொல்லுமாறு உலூகனிடம் துரியோதனன்} "குருக்களுக்கும் {கௌரவர்களுக்கும்} பாண்டவர்களுக்கும் இடையில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அந்தப் பயங்கரப் போர், இறுதியில் வந்தேவிட்டது. வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் உனது தம்பிகளுடன் கூடிய நீ ஆழ்ந்த கர்ஜனையுடன் உச்சரித்தவையும் {சொன்னவையும்}, குருக்களுக்கு மத்தியில் சஞ்சயன் என்னிடம் கொண்டு வந்தவையுமான அந்தச் செருக்கு நிறைந்த வார்த்தைகளுக்கு, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நல்லது செய்யும் நேரம் இறுதியாக வந்தேவிட்டது. எனவே, நீங்கள் அனைவரும் சாதிக்கப்போவதாக உறுதியேற்ற அனைத்தையும் சாதிப்பீராக", என்று சொல்.
குந்தியின் மூத்த மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, எனது வார்த்தைகளாகப் பின்வருவனவற்றைச் சொல்வாயாக. "அறம்சார்ந்தவனான நீ, உனது தம்பிகளுடனும், சோமகர்களுடனும், கேகயர்களுடனும் சேர்ந்து எப்படி உனது இதயத்தை அநீதியில் நிலைநிறுத்தலாம்? அனைத்து உயிர்களின் அச்சங்களையும் விலக்கவல்லவனாக நீ இருக்க வேண்டும் என நான் நினைக்கையில், அண்டத்தையே அழிக்க நீ எப்படி விரும்பலாம்? ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, பழங்காலத்தில், தேவர்கள் பிரகலாதனின் அரசை அவனிடம் {பிரகலாதனிடம்} இருந்து பறித்த போது, அவன் {பிரகலாதன் தேவர்களிடம்}, "தேவர்களே, எவனுடைய நீதியின் கொடிக்கம்பம் {தர்மத்துவஜம்} எப்போதும் {வெளிப்படையாக} உயர்ந்து, அவனது பாவங்கள் எப்போதும் மறைந்திருக்கிறதோ, அவன், (கதைகளில் சொல்லப்படும்) பூனையின் நடத்தையைக் கொண்டவனாவான்", என்ற {பொருள்படும்} செய்யுளைப் {சுலோகத்தைப்} பாடியதாக நாம் கேள்விப்படுகிறோம். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, எனது தந்தைக்கு {திருதராஷ்டிரருக்கு} நாரதர் உரைத்த இந்த அற்புதக் கதையை நான் உனக்கு மீண்டும் சொல்கிறேன்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு காலத்தில், ஒரு பொல்லாத பூனை, தன் வேலைகளை அனைத்தையும் கைவிட்டு, (பக்தன் ஒருவனின் முறைமையின்படி), தனது கரங்களை உயர்த்திக் கொண்டு, கங்கைக்கரையில் தனது வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டது. தன் இதயத்தைத் தூய்மைப்படுத்திக்கொண்டதைப் போல நடித்து, அனைத்து உயிரினங்களின் நம்பிக்கையையும் பெறும்படி அவற்றிடம் "நான் இப்போது அறம் பயில்கிறேன்" என்று சொன்னது {சொல்லி வந்தது அந்தப் பூனை}.ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, நீண்ட காலத்திற்குப் பிறகு, பறவைகள் அனைத்தும் அதனிடம் {பூனையிடம்} நம்பிக்கை வைத்தன. ஒன்றாகச் சென்ற அவை {பறவைகள்}, அந்தப் பூனையைப் பாராட்டின. பறவைகளை உண்ணும் அது {அந்தப் பூனை}, அவை {பறவைகள்} அனைத்தாலும் வழிபடப்பட்டு, தன் காரியம் நிறைவேறியதாகவும், தனது தவத்தின் பயன் தனக்குக் கிடைத்துவிட்டதாகவும் கருதியது. மேலும் சில காலத்திற்குப் பிறகு, எலிகள் அந்த இடத்திற்குச் சென்றன. பெருஞ்செயலில் பெருமையுடன் உழைத்து, நோன்புகள் நோற்பதில் ஈடுபடும் ஓர் அறம் சார்ந்த உயிரினமாகவே அவை அனைத்தும் {எலிகளனைத்தும்} அதைக் {பூனையைக்} கண்டன.
அந்தத் தீர்மானமான நம்பிக்கை அடைந்த அவை {எலிகள்}, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, "நமக்கு நிறைய எதிரிகள் இருக்கின்றனர். எனவே, இவர் {இந்தப் பூனை} நமது தாய்மாமனாகட்டும். மேலும் இவர் நமது குலத்தின் முதியவர்களையும் சிறுவர்களையும் எப்போதும் பாதுகாக்கட்டும்" என்று விரும்பின. இறுதியாக அந்தப் பூனையிடம் சென்ற அவை {எலிகள்} அனைத்தும், "உமது அருளால், நாங்கள் இன்பமாகத் திரிய விரும்புகிறோம். எங்களது அருள்நிறைந்த புகலிடம் நீரே, எங்களது பெரும் நண்பர் நீரே. இதன் காரணமாக, நாங்கள் எங்கள் அனைவரையும் உமது பாதுகாப்பின் கீழ் வைக்கிறோம். அறத்திற்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவர் நீர், அறத்தை ஈட்டுவதிலேயே எப்போதும் ஈடுபடுபவர் நீர். எனவே, ஓ! பெரும் அறிவாளியே {பூனையாரே}, தேவர்களைக் காக்கும் இடிதாங்கியைப் {இந்திரனைப்} போல எங்களைப் பாதுகாப்பீராக" என்றன {எலிகள்}.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அனைத்து எலிகளாலும் இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் பூனை, அவற்றிடம் {அந்த எலிகளிடம்}, "துறவை தொடர்வது, (நான் அருள வேண்டும் என்று அழைக்கப்பட்டு) பாதுகாப்பு தருவது ஆகிய இவை இரண்டும் ஒன்றாக நிலைத்திருப்பதை நான் காணவில்லை. எனினும், உங்கள் வேண்டுகோளுக்கு ஏற்புடைய வகையில் உங்களுக்கு நன்மை செய்வதை என்னால் தவிர்க்க முடியாது. அதே வேளையில், நீங்கள் அனைவரும் எப்போதும் எனது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். கடும் நோன்மை நோற்பதில் நிலைத்திருக்கும் நான், எனது தவப்பயிற்சிகளால் பலவீனமாக இருக்கிறேன். எனவே, ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்லும் வழியை என்னால் காண முடியவில்லை. எனவே, நீங்கள் அனைவரும் தினமும் என்னை ஆற்றங்கரைக்குச் சுமந்து செல்ல வேண்டும்" என்றது {பூனை}. "அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன எலிகள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, தங்களில் முதியவை மற்றும் இளையவை ஆகியவற்றை அந்தப் பூனையிடம் ஒப்புவித்தன.
தீய ஆன்மா கொண்டதும், பாவியுமான அது {அந்தப் பூனை}, எலிகளை உண்டு, படிப்படியாகப் பருக்கவும், நல்ல நிறம் அடையவும், வலுவான உடல் உறுப்புகளைப் பெறவும் செய்தது. இப்படியே, எலிகள் எண்ணிக்கையில் குறைய ஆரம்பித்த வேளையில், அந்தப்பூனை, ஆற்றலிலும் பலத்திலும் வளர்ச்சியடைய ஆரம்பித்தது. பிறகு, எலிகளனைத்தும் கூடி, தங்கள் ஒவ்வொருவருக்குள்ளும், "நமது மாமன் {பூனையார்}, தினமும் தடித்து வளர்கிறார். நாமோ தினமும் (எண்ணிக்கையில்) குறைந்து வருகிறோம்" என்று பேசிக்கொண்டன.
பிறகு, டிண்டிகன் என்ற பெயருடைய ஒரு குறிப்பிட்ட புத்திசாலி எலி, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கூடியிருந்த எலிகளின் பெரும் கூட்டத்திற்கிடையே இந்த வார்த்தைகளைச் சொன்னது. அது {டிண்டிகன் என்ற எலி} "நீங்கள் அனைவரும் ஆற்றங்கரைக்கு ஒன்றாகச் செல்லுங்கள். நான் நமது மாமனுடன் {பூனையாருடன்} உங்களைப் பின்தொடர்ந்து வருகிறேன்" என்றது. அதற்கு அவை {அந்த எலிக்கூட்டம்}, "அற்புதம், அற்புதம்" என்று சொல்லி, தங்கள் எண்ணிக்கையில் ஒன்றை {டிண்டிகனைப்} பாராட்டின. டிண்டிகன் குறிப்பிட்டுப் பேசிய பயனுள்ள வார்த்தைகள் அனைத்தையும் அவை {அந்த எலிகள்} அப்படியே செய்தன. எனினும், இதை அறியாத அந்தப் பூனை டிண்டிகனை அன்று உண்டது. அதிக நேரத்தைக் கடத்தாத அந்த எலிகள் அனைத்தும், தங்களுக்குள் ஒன்றுக்குள் ஒன்று ஆலோசிக்கத் தொடங்கின.
பிறகு, கிலிகன் {கோலிகன்} என்ற பெயர் கொண்ட ஒரு மிக முதிர்ந்த எலி, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தனது இரத்த உறவுகளின் முன்னிலையில், நீதிமிக்க இவ்வார்த்தைகளைச் சொன்னது. அது {கிலிகன் எலிக் கூட்டத்திடம்}, "நமது அம்மான் {தாய்மாமன்}, அறம் ஈட்டுவதை உண்மையில் விரும்பவில்லை. உண்மையில் அவன் {அந்தப் பூனை} நமது எதிரியாக இருந்தாலும், கபடக்காரனைப் போல நமது நண்பனாக மாறியிருக்கிறான். உண்மையில், பழங்களையும், கிழங்குகளையும் உண்டு வாழும் ஓர் உயிரினத்தின் மலம், மயிருடன் {எலிகளின் முடிகளுடன்} இருக்காது. மேலும், அவனது {பூனையாரின்} உறுப்புகள் வளர்கின்றன. நாமோ எண்ணிக்கையில் நசிந்து வருகிறோம். அது தவிர, இந்த எட்டு நாட்களாக டிண்டிகன் காணப்படவில்லை" என்றது {கிலிகன் என்ற அந்த முதிர்ந்த எலி}. இவ்வார்த்தைகளைக் கேட்ட எலிகள் அனைத்தும் திசைகள் அனைத்திலும் சிதறி ஓடின. தீய ஆன்மா கொண்ட அந்தப் பூனையும், தான் எங்கிருந்து வந்ததோ அங்கேயே திரும்பிச் சென்றது" {என்றான் துரியோதனன்}.
{யுதிஷ்டிரனிடம் சொல்ல வேண்டியவற்றை உலூகனிடம் துரியோதனன் தொடர்ந்து சொன்னான்.} {யுதிஷ்டிரனிடம் துரியோதனன்}, "ஓ! தீய ஆன்மா கொண்டவனே {யுதிஷ்டிரா}, நீ கூட அத்தகைய பூனை நடத்தை கொண்டவனே. (கதையில் வந்த அந்தப்) பூனை எலிகளிடம் நடந்து கொண்டதைப் போலத்தான், நீயும் உனது சொந்தங்களிடம் நடந்து கொள்கிறாய். உனது பேச்சு ஒரு வகையில் இருக்கிறது, உனது நடத்தையோ வேறு வகையில் இருக்கிறது. உனது சாத்திரமும் ({சாத்திர} பக்தியும்), அமைதி நிறைந்த உனது நடத்தையும் மனிதர்களுக்கு முன்னிலையில் காட்சிப்படுத்த மட்டுமே உன்னால் செய்யப்படுகின்றன. இந்தப் பாசாங்கையெல்லாம் கைவிட்டு, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, க்ஷத்திரிய நடைமுறைகளைப் பின்பற்றி, ஒருவன் என்னென்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் செய்வாயாக. ஓ! மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரா}, நீ அறம்சார்ந்தவன் இல்லையா?
ஓ! பாரதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, உனது கரங்களின் ஆற்றல் மூலம் இந்தப் பூமியை அடைந்து, அந்தணர்களுக்குக் கொடையையும், இறந்து போன தனது மூதாதையருக்கு ஒருவன் செய்ய வேண்டியவற்றையும் அளிப்பாயாக. ஆண்டாண்டுகளாகத் தொடர்ச்சியாகத் துயரத்தில் பீடிக்கப்பட்டுள்ள உனது தாயாருக்கு {குந்திக்கு} நல்லதைச் செய்ய முனைவாயாக. அவளது கண்ணீரை வற்ற செய்வாயாக. போரில் (உனது எதிரிகளை) வீழ்த்தி அவளுக்கான மரியாதைகளைச் செய்வாயாக. மிகவும் பரிதாபகரமாக வெறும் ஐந்து கிராமங்களை மட்டுமே நீ கேட்டாய். அதுவும் கூட எங்களால் நிராகரிக்கப்பட்டது. ஏனெனில், "பாண்டவர்களைக் கோபமூட்டுவதில் நாம் வெற்றி காண்பது எப்படி? போரை நாம் நிலைநாட்டுவது எப்படி?" என்பனவற்றை மட்டுமே நாங்கள் முயன்று கொண்டிருந்தோம்.
உன் நிமித்தமாகவே தீய விதுரன் (எங்களால்) விரட்டப்பட்டான், அரக்கு வீட்டில் வைத்து உங்கள் அனைவரையும் எரிக்க முயன்றவர்கள் நாங்களே என்பதை நினைவுகூர்ந்து இப்போது ஆண்மையை அடைவாயாக; (உபப்லாவ்யத்தில் இருந்து) கிருஷ்ணன் குருக்களின் {கௌரவர்களின்} சபைக்குப் புறப்பட்ட போது, அவன் {கிருஷ்ணன்} மூலமாக, "ஓ! மன்னா {துரியோதனா}, கேள். போருக்கோ, அமைதிக்கோ நான் தயாராக இருக்கிறேன்" என்ற செய்தியை நீ (எங்களுக்குச்) சொன்னாய். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, போருக்கான அந்த நேரம் வந்து விட்டது என்பதை அறிவாயாக.
ஓ! யுதிஷ்டிரா, அந்த நோக்கில் நான் இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் செய்துவிட்டேன். போரை விட மதிக்கத்தக்க உயர்வாக (நற்பேறாக) ஒரு க்ஷத்திரியன் வேறு எதைக் கருதுவான்? நீ க்ஷத்திரிய வகையில் பிறந்தவனாவாய். அப்படியே இந்த உலகத்தில் நீ அறியப்படுகிறாய். துரோணர், கிருபர் ஆகியோரிடம் ஆயுதங்களை அடைந்த நீ, ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, உன்னைப் போன்ற அதே வகைக்குச் சொந்தமானவனும், பலத்தில் உன்னைவிட உயர்வில்லாதவனுமான வாசுதேவனை {கிருஷ்ணனை} ஏன் நம்புகிறாய்?" என்று {யுதிஷ்டிரனிடம்} கேட்பாயாக.
பாண்டவர்களின் முன்னிலையில் வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} நீ இந்த {பின்வரும்} வார்த்தைகளைச் சொல்ல வேண்டும், "உன் நிமித்தமாகவும், பாண்டவர்கள் நிமித்தமாகவும் உனது சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்திப் போரில் நீ என்னைத் தாக்குப்பிடி {பார்ப்போம்}. குருக்களின் சபை மத்தியில் நீ எற்ற வடிவத்தை {விஸ்வரூபத்தை}, மீண்டும் ஒருமுறை ஏற்று, அர்ஜுனனுடன் சேர்ந்து (போர்க்களத்தில்) என்னை நோக்கி விரைவாயாக.
ஒரு மாயக்காரனின் தந்திரங்கள் அல்லது மாயைகள் (சில சமயங்களில்) அச்சத்தைத் தோற்றுவிக்கக்கூடும். ஆனால், போருக்காக ஆயுதம் தாங்கி நிற்பவனைப் பொறுத்தவரை, இத்தகு மோசடிகள் (போருக்கு எழுச்சியூட்டுவதைவிட) கோபத்தை மட்டுமே {அவனிடம்} தூண்டுகின்றன. *எங்களது மாய சக்திகளால், சொர்க்கம், அல்லது, வானத்திற்கு உயர்வதற்கோ, பாதாள உலகம், அல்லது இந்திரனின் நகரத்திற்குள் ஊடுறுவுவதற்கோ நாங்களும் திறன் பெற்றவர்களாகவே இருக்கிறோம். எங்கள் உடலில் பல்வேறு உருவங்களை எங்களாலும் காட்சிப்படுத்த இயலும்! பெரும் ஆணையாளன் {பிரம்மன்}, (அத்தகைய மாயக்காரனின் தந்திரங்களால்) ஒருபோதும் உயிரினங்கள் அனைத்தையும் அடக்க வில்லை. அவனது {பிரம்மனின்} சுய விருப்பத்தின் பேரிலேயே அஃது அடக்கப்படுகிறது.
ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, "திருதராஷ்டிரர் மகன்களைப் போரில் கொல்லச் செய்து, எதிர்ப்பில்லாத அரசுரிமையைப் பிருதையின் {குந்தியின்} மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு} நான் வழங்குவேன்" என்று எப்போதும் நீ சொல்லும் வார்த்தைகளைச் சஞ்சயன் என்னிடம் கொண்டு வந்தான். "கௌரவர்களே, என்னை இரண்டாவதாக {தனக்கு அடுத்தவனாகக்} கொண்டிருக்கும் அர்ஜுனனிடம் நீங்கள் பகைமையைத் தூண்டுகிறீர்கள் என்பதை அறிவீர்களாக", என்றும் நீ சொல்லி இருக்கிறாய். அந்த {உனது} உறுதிமொழியைக் கடைப்பிடித்து, பாண்டவர்களுக்காக உனது சக்தியைச் செலுத்தி, உனது பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்திப் போர்க்களத்தில் இப்போது போரிடுவாயாக!
{கிருஷ்ணா!} நீ ஆண்மையுள்ளவன் என்பதை எங்களுக்குக் காட்டுவாயாக! `உண்மையான ஆண்மையை நாடுவதால், பகைவர்களுக்குத் துயரத்தை ஏற்படுத்த உறுதி செய்பவனே உண்மையில் உயிரோடு இருப்பவனாகச் சொல்லப்படுகிறான்`. ஓ! கிருஷ்ணா, எக்காரணமும் இன்றி உனது புகழ் இவ்வுலகில் பெரிதாகப் பரவி இருக்கிறது! எனினும், {மீசை முதலிய} ஆண்மையின் குறிகளைத் தன்னிடம் கொண்டும், உண்மையில் அலிகளாக இருப்போர் இவ்வுலகில் பலர் இருக்கின்றனர் என்பது இப்போது அறியப்படும். குறிப்பாக நீ கம்சனின் அடிமையாவாய். உனக்கு எதிராக ஏகாதிபதியான நான் கவசம் தரித்து என்னை மறைத்துக்கொள்ளக்கூடாது!" என்று {கிருஷ்ணனிடம்} சொல்வாயாக.
(அடுத்ததாக), ஓ! உலூகா, மதிகெட்டவனும், அறியாமை நிறைந்தவனும், பெருந்தீனிக்காரனும், கொம்புகள் அகற்றப்பட்ட காளையைப் போன்றவனுமான பீமசேனனிடம் இவ்வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொல்வாயாக. அவனிடம் {பீமனிடம்} "ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே பீமா}, விராடனின் நகரத்தில், வல்லவன் {வல்லன்} என்ற பெயரில் அறியப்பட்ட சமையற்காரனாக இருந்தவன் நீ! இவை அனைத்தும் உனது ஆண்மையின் சாட்சிகளாகும்! குருக்களின் சபைக்கு மத்தியில் நீ செய்த சூளுரை {சபதம்} பொய்க்காதிருக்கட்டும்! உன்னால் முடிந்தால் துச்சாசனனின் இரத்தம் குடிக்கப்படட்டும்! {உன்னால் முடிந்தால் துச்சாசனனின் இரத்தத்தைக் குடி பார்ப்போம்}.
ஓ! குந்தியின் மகனே {பீமா}, "போரில் நான் திருதராஷ்டிரரின் மகன்களை விரைந்து கொல்வேன்!" என்று நீ அடிக்கடி சொல்லியிருக்கிறாய். அதைச் சாதிப்பதற்கான நேரம் இப்போது வந்திருக்கிறது. ஓ! பாரதா {பீமா}, சமையற்கலையில் வெகுமதி பெற நீ தகுந்தவனே! எனினும், உடை, உணவு மற்றும் போர் ஆகியவற்றுக்குள் பெரும் வித்தியாசங்கள் இருக்கின்றன. இப்போது போரிடுவாயாக. ஆண்மையுடனிருப்பாயாக! உண்மையில், ஓ! பாரதா {பீமா}, உனது கதாயுதத்தை வாரி அணைத்துக் கொள்ளும் நீ பூமியில் உயிரற்று விழுந்து கிடக்க வேண்டியிருக்கும். ஓ! விருகோதரா {பீமா}, உனது சபைக்கு மத்தியில் தற்பெருமை பேசுவதில் நீ ஈடுபட்டதெல்லாம் வீணாகப் போகிறது!" என்று {பீமனிடம்} சொல்வாயாக.
ஓ! உலூகா, நகுலனிடம், நான் சொல்லும் இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக. {அந்த நகுலனிடம்}, "ஓ! பாரதா {நகுலா}, அமைதியாகப் போரிடுவாயாக! ஓ! பாரதா {நகுலா}, உனது ஆண்மையையும், யுதிஷ்டிரன் மேல் நீ வைத்திருக்கும் மரியாதையையும், என்னிடம் நீ கொண்டுள்ள வெறுப்பையும் நாங்கள் காண விரும்புகிறோம். கிருஷ்ணை {திரௌபதி} பட்ட துயரங்கள் அனைத்தையும் உனது மனதில் நினைவு கூர்வாயாக", என்று {நகுலனிடம்} சொல்வாயாக.
அடுத்ததாக, (கூடியிருக்கும்) ஏகாதிபதிகளுக்கு முன்னிலையில் இந்த எனது வார்த்தைகளைச் சகாதேவனிடம் சொல்வாயாக. அவனிடம் {சகாதேவனிடம்}, "உனது பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்தி, போர்க்களத்தில் இப்போது போரிடுவாயாக! உங்கள் துன்பங்கள் அனைத்தையும் நினைவுகூர்வாயாக" என்று சொல்வாயாக.
அடுத்து, விராடன் மற்றும் துருபதனிடம் இந்த எனது வார்த்தைகளைச் சொல்வாயாக. அவர்களிடம், "படைப்பின் ஆரம்பத்தில் இருந்தே, பெரும் காரியங்களைச் செய்யக்கூடிய அடிமைகள் கூடத் தங்கள் முதலாளிகளை {எஜமானர்களை} முழுமையாகப் புரிந்து கொண்டதில்லை. அதே போல, செழிப்பான அரசர்களாலும் தங்கள் அடிமைகளைப் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. இந்த மன்னன் {யுதிஷ்டிரன்} புகழத்தக்கவனல்ல. இத்தகு நம்பிக்கையிலேயே நீங்கள் எனக்கு எதிராக வந்திருக்கிறீர்கள். எனவே, ஒன்றுகூடி எனக்கெதிராகப் போரிட்டு, என்னைக் கொன்று, பாண்டவர்களும் நீங்களும், உங்கள் கருத்தில் கொண்டுள்ள நோக்கங்களைச் சாதிப்பீராக" என்று சொல்வாயாக.
பாஞ்சாலர்களின் இளவரசனான திருஷ்டத்யும்னனிடம் இந்த எனது வார்த்தைகளைச் சொல்வாயாக. அவனிடம், "{இதோ} உனக்கான நேரம் வந்துவிட்டது, நீயும் உனது நேரத்தின் காரணமாகவே {இங்கு} வந்திருக்கிறாய்! போரில் துரோணரை அணுகி, உனக்குச் சிறந்தது எது என்பதை அறிந்து கொள்வாய்! உனது நண்பனின் காரியத்தைச் சாதிப்பாயாக" என்று சொல்வாயாக.
ஓ! உலூகா, அடுத்ததாக, சிகண்டியிடம் மீண்டும் மீண்டும் இந்த எனது வார்த்தைகளைச் சொல்வாயாக. அவனிடம், "வலிய கரங்களைக் கொண்ட கௌரவரும், வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவருமான கங்கையின் மகன் (பீஷ்மர்), பெண் என்று மட்டுமே உன்னை அறிவதால், உன்னை அவர் கொல்லமாட்டார்! {எனவே}, இப்போது அச்சமில்லாமல் போரிடுவாயாக! உனது பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்திப் போரில் சாதிப்பாயாக! நாங்கள் உனது ஆற்றலைக் காண விரும்புகிறோம்" என்று சொல்வாயாக." {என்று உலூகனிடம் சொன்னான் துரியோதனன்}.
….
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்
No comments:
Post a Comment