மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-222
உத்யோக பர்வம்
..
"கர்ணா, நீ என் மகனே!" என்ற குந்தி!
..
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "கர்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான கேசவன் {கிருஷ்ணன்}, புன்னகைத்தவாறே அவனிடம் {கர்ணனிடம்}, "ஒரு பேரரசை வெல்லும் வாய்ப்பு உன்னிடம் தன்னைப் பரிந்துரைத்துக் கொள்ளவில்லையா? {ஒரு பேரரசை வெல்லும் வாய்ப்பை மறுக்கிறாயா?} ஓ! கர்ணா, என்னால் கொடுக்கப்படும் முழுப் பூமியையும் நீ ஆள விரும்பவில்லையா? எனவே, {நீயே சொல்வதால்} பாண்டவர்களின் வெற்றி உறுதியே. இதில் எந்த ஐயமும் தோன்றவில்லை. கடும் குரங்கைக் கொடியாகக் கொண்டிருக்கும் பாண்டு மகனின் {அர்ஜுனனின்} வெற்றிக் கொடி ஏற்கனவே நாட்டப்பட்டுவிட்டதாகவே தோன்றுகிறது.
இந்திரனின் கொடியைப் போல உயர்ந்து நின்று காட்சியளிக்கும்படி, தெய்வீகக் கைவினைஞனான {தச்சனான} பௌமானன் {விஸ்வகர்மா} அதில் {அக்கொடியில்} தெய்வீக மாயையைப் பயன்படுத்தியிருக்கிறான். வெற்றியைக் குறிக்கும் வகையில் பயங்கர வடிவம் கொண்ட பல்வேறு தெய்வீக உயிரினங்கள் அந்தக் கொடிக்கம்பத்தில் காணப்படுகின்றன. மேல்நோக்கியும், சுற்றிலும் ஒரு யோஜனை அளவு பரந்திருக்கும் அர்ஜுனனின் அழகிய கொடிக்கம்பம், தீ போன்ற பிரகாசத்துடன் {தேரில்} நாட்டப்படுகையில், ஓ! கர்ணா, எப்போதும் அது மலைகளாலோ, மரங்களாலோ தடுக்கப்படுவதில்லை.
வெண்குதிரைகளால் இழுக்கப்பட்டு, கிருஷ்ணனால் செலுத்தப்படும் தேரில் இருந்து கொண்டு ஐந்திரம், ஆக்னேயம், மருதம் ஆகிய ஆயுதங்களைப் போரில் அர்ஜுனன் பயன்படுத்துவதை எப்போது காண்பாயோ, இடியைப் போன்று விண்ணைத் துளைக்கும் காண்டீவத்தின் நாணொலியை எப்போது நீ கேட்பாயோ, அப்போதே, கிருதம், திரேதம், துவாபரம் ஆகிய காலங்கள் {யுகங்கள்} மறைந்துவிடும் (ஆனால், அதற்குப் பதிலாக உடல் கொண்டு வரும் கலி அங்கிருக்கும்).
யபம் {ஜபம்}, ஹோமம் ஆகியவற்றுக்குத் தன்னை அர்ப்பணித்தவரும், சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்டவரும், வலிமைமிக்கத் தனது படையைத் தானே காப்பவரும், தனது எதிரியின் படையை எரிப்பவரும், ஒப்பற்றவரும், குந்தியின் மகனுமான யுதிஷ்டிரரை எப்போது நீ போரில் காண்பாயோ, அப்போதே, கிருதம், திரேதம், துவாபரம் ஆகிய காலங்கள் {யுகங்கள்} மறைந்துவிடும்.
மதம் கொண்ட கடும் யானையைப் போல, வலிமைமிக்கப் பெரும் எதிரியைக் கொன்றுவிட்டு, துச்சாசனனின் குருதியைக் குடித்து, ஆடிக் கொண்டிருக்கும் பீமசேனனை எப்போது நீ போரில் காண்பாயோ, அப்போதே, கிருதம், திரேதம், துவாபரம் ஆகிய காலங்கள் {யுகங்கள்} மறைந்துவிடும்.
மோதலுக்காக மூர்க்கமாக விரைந்து எதிர்த்துவரும் துரோணர், சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, கிருபர், மன்னன் சுயோதனன் {துரியோதனன்}, சிந்து குலத்தின் ஜயத்ரதன் ஆகியோரைத் தடுக்கும் அர்ஜுனனை எப்போது நீ போரில் காண்பாயோ, அப்போதே, கிருதம், திரேதம், துவாபரம் ஆகிய காலங்கள் {யுகங்கள்} மறைந்துவிடும்.
பகையணித் தேர்களைத் துண்டுதுண்டாக உடைக்கவல்லவர்களும், வீரமிக்கத் தேர்வீரர்களுமான மாத்ரியின் இரு வலிமைமிக்க மகன்கள் {நகுலனும், சகாதேவனும்} மதம் கொண்ட இரு யானைகளைப் போல, திருதராஷ்டிரர் மகன்களின் படையைத் தங்கள் ஆயுதங்களைக் கொண்டு மோதிக் கலங்கடிப்பதை எப்போது நீ போரில் காண்பாயோ, அந்தக் கணமே, கிருதம், திரேதம், துவாபரம் ஆகிய காலங்கள் {யுகங்கள்} மறைந்துவிடும்.
துரோணர், சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, கிருபர் ஆகியோரிடம் நீ திரும்பிச் சென்றதும், ஓ! கர்ணா, "இந்த மாதம் இனிமையானது. உணவு, நீர் மற்றும் எரிபொருள் {விறகு} ஆகியன இப்போது அபரிமிதமாக இருக்கின்றன. செடிகள் மற்றும் மூலிகைகள் அனைத்தும் இப்போது செழிப்பாக இருக்கின்றன; அனைத்து மரங்களிலும் கனிகள் நிறைந்திருக்கின்றன; பூச்சிகளோ {ஈக்களோ} ஒன்றுமில்லை; சாலைகள் புழுதியற்று இருக்கின்றன; நீரும் இனிமையான சுவை கொண்டதாக இருக்கிறது; பருவநிலை அதிக வெப்பத்துடனோ, அதிகக் குளுமையுடனோ இல்லை. எனவே அதுவும் {பருவ நிலையும்} இனிமையாகவே இருக்கிறது.
{இன்றிலிருந்து} ஏழு நாள் கழித்து வருவது அமாவாசை நாளாகும். அப்போதே போர் ஆரம்பிக்கட்டும். அந்த நாளே இந்திரனின் தலைமை கொண்டதாகச் சொல்லப்படுகிறது" என்று சொல்வாயாக. போரிடுவதற்காகக் கூடியிருக்கும் மன்னர்கள் அனைவரிடமும், அவர்களால் பேணிக் காக்கப்படும் ஆசையை நான் முழுமையாகத் தீர்த்துவைப்பேன் என்றும் சொல்வாயாக. உண்மையில் துரியோதனனின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியும் மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரும், ஆயுதங்களின் மூலம் மரணத்தை அடைந்து, அற்புத நிலையை நிச்சயம் அடைவார்கள்" என்றான் {கிருஷ்ணன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "கேசவனின் {கிருஷ்ணனின்} இந்த மங்கலகரமான, நன்மையான வார்த்தைகளைக் கேட்ட கர்ணன், மதுசூதனனான கிருஷ்ணனை வழிபட்டு, "(அனைத்தையும்) அறிந்தும், ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நீ ஏன் என்னை இன்னும் ஏமாற்ற முயல்கிறாய்? தற்போது பூமி முழுமைக்கும் அழிவேற்படப்போகிறது. சகுனி, {கர்ணனாகிய} நான், துச்சாசனன், திருதராஷ்டிரர் மகனான மன்னன் துரியோதனன் ஆகியோர் அதற்கான காரணங்களாக இருப்போம்.
ஓ! கிருஷ்ணா, இரத்தப்புழுதியால் உலகை நனைக்கப் போவதாக, பாண்டவர்களுக்கும், குருக்களுக்கும் இடையில் தற்போது நடக்க இருக்கும் போர் பெரியதாகவும், கடுமையானதாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. துரியோதனனின் வழிநடத்தலைப் பின்தொடரும் மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரும், ஆயுதங்கள் எனும் நெருப்பால் எரிக்கப்பட்டு, யமனின் வசிப்பிடத்தை அடைவார்கள். ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, பல்வேறுவிதமான பயங்கரக் காட்சிகள் தெரிகின்றன. பல கொடூரமான அத்தாட்சிகளும், கடுமையான தொந்தரவுகளும் கூடக் காணப்படுகின்றன.
(பார்வையாளர்களின்) மயிரைச் சிலிர்க்கச் செய்யும் இந்தச் சகுனங்கள் அனைத்தும், ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} தோல்வியையும், யுதிஷ்டிரனின் வெற்றியையுமே குறிக்கின்றன.
பெரும் பிரகாசமிக்கக் கடுமையான கோளான சனைஸ்சரன் (சனிக் கிரகம்), பூமியில் உள்ள உயிரினங்களைப் பெரிதும் பாதிக்கச் செய்யும் வகையில், ரோகிணி நட்சத்திரக் கூட்டத்தைப் பீடிக்கிறது. {கோள்கணியத்தின் படி இந்த அமைப்பு, மன்னர்களுக்குள் பெரும் போர் மூளும் என்பதை முன்னறிவிக்கும் அமைப்பாகும்
ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, அங்காரகன் (செவ்வாய்) என்ற கோள், கேட்டை நட்சத்திரக்கூட்டத்தை நோக்கிச் சுழன்று, நண்பர்களின் பெரும் படுகொலைகளைக் குறிக்கும் வகையில், அனுஷத்தை {அனுஷ நட்சத்திரத்தை} {வக்ர கதியில்} அணுகுகிறது. {ஆயுதம் தாங்குபவர்களுக்கு அழிவை உண்டாக்கும் அமைப்பு இது.}
ஓ! கிருஷ்ணா, ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, மஹாபத் {செவ்வாய்} என்ற கோள் சித்திரை நட்சத்திரத்தைப் பீடிப்பதால், குறிப்பாகக் குருக்களைப் பயங்கரப் பேரிடர் அணுகுகிறது என்பதில் ஐயமில்லை. {மன்னர்களுக்கு பயத்தை உண்டாக்கும் அமைப்பு இது}.
சந்திர வட்டில் உள்ள கறை {களங்கம்}, தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளது.
ராகுவும் சூரியனை அணுகுகிறான். {இந்த அமைப்பைக் கர்த்தரி யோகம் என்று குறிப்பிடுவார்கள். சூரிய குல, சந்திரகுல மன்னர்களின் அழிவை இது முன்னறிவிக்கிறது}.
வானில் இருந்து உரத்த ஒலியுடனும், நடுங்கும் அசைவுடனும் எரிகற்கள் விழுகின்றன.
யானைகள் பயங்கரமாக அலறுகின்றன, அதேவேளையில், ஓ! மாதவா {கிருஷ்ணா}, குதிரைகள், உணவிலோ, பானத்திலோ எந்த மகிழ்ச்சியும் கொள்ளாமல் கண்ணீரைச் சிந்துகின்றன. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, இந்த அத்தாட்சிகள் தோன்றும்போது, பெரும் படுகொலைகளை அது ஏற்படுத்தும் என்றும், பயங்கரப் பேரிடர் {நம்மை} அணுகும் என்றும் சொல்கிறார்கள்.
ஓ! கேசவா {கிருஷ்ணா}, குதிரைகளிலும், யானைகளிலும், துரியோதனனின் படையில் உள்ள பிரிவுகள் அனைத்திலும் உள்ள படைவீரர்களிலும், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, அவர்கள் உண்ணும் உணவு மிகச் சிறு அளவே இருப்பினும், அவர்கள் கழிக்கும் மலம் அதிகமாக இருக்கிறது. இது குறைபாட்டின் அறிகுறி என்று ஞானிகள் கூறியுள்ளனர்.
பாண்டவர்களின் யானைகள் மற்றும் குதிரைகள் அனைத்தும், ஓ! கிருஷ்ணா, உற்சாகமாக இருக்கின்றன. பிற விலங்குகள் அனைத்தும் அவர்களை {பாண்டவர்களை} வலமாகச் சுற்றுகின்றன. இஃது அவர்களது வெற்றிக்கான அறிகுறியாகும். அதே விலங்கு, ஓ! கேசவா {கிருஷ்ணா}, துரியோதனனின் படையை இடது பக்கமாகக் கடக்கிறது. அதே வேளையில் (அவர்களின் தலைகளுக்கு மேலே} உருவமற்ற குரல்களும் கேட்கின்றன. இவை அனைத்தும் தோல்வியின் அறிகுறியே.
மயில்கள், அன்னங்கள், நாரைகள், சாதகங்கள், ஜீவஜிவங்கள், வகங்களின் பெரிய கூட்டமும், மங்கலமான பறவைகள் அனைத்தும் பாண்டவர்களைத் தொடர்ந்து செல்கின்றன. அதே வேளையில், கழுகுகள், கங்கங்கள், பருந்துகள், ராட்சசர்கள், ஓநாய்கள், வண்டுகள் ஆகியன கூட்டம் கூட்டமாகக் கௌரவர்களைத் தொடர்ந்து செல்கின்றன. திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} படையில் உள்ள பேரிகைகள் ஒலிகளை வெளியிடவில்லை. அதே வேளையில் பாண்டவர்களுக்கு உடையன {பேரிகைகள்} அடிக்கப்படாமலேயே ஒலியை வெளியிடுகின்றன. துரியோதனனின் முகாம்களுக்கு மத்தியில் இருக்கும் கிணறுகள் பெரும் காளைகளைப் போலப் பெரிய கர்ஜனைகளை வெளியிடுகின்றன. இவை அனைத்தும் தோல்வியின் அறிகுறியே ஆகும்.
ஓ! மாதவா, துரியோதனனின் படை வீரர்கள் மீது தேவர்கள் இறைச்சியையும், குருதியையும் மழையாகப் பொழிகின்றனர். {துரியோதனனின் படை வீரர்கள் மீது தேவர்கள் தசைமாரியும், உதிரமாரியும் பொழிகின்றனர்}. உயரமான சுவர்கள் {மதில்கள்}, ஆழமான அகழிகள், அழகான கட்டட முகப்புகள் ஆகியன (குருக்களின் முகாமுக்கு மேலே) திடீரென வானத்தில் தோன்றுகின்றன. சூரிய வட்டைச் சுற்றி ஒரு கருவளையம் தோன்றுகிறது. சூரிய எழுகை {சூரியோதயம்} மற்றும் சூரிய மறைவு {சூரியாஸ்தமனம்} ஆகிய சந்திப் பொழுதுகள் இரண்டும் பெரும் பயங்கரங்களைக் குறிக்கின்றன. கொடூரமான முறையில் குள்ளநரிகள் ஊளையிடுகின்றன. இவை அனைத்தும் தோல்வியின் அறிகுறியே ஆகும்.
ஒரு சிறகு, ஒரு கண், ஒரு கால் மட்டுமே கொண்ட பல்வேறு பறவைகள் பயங்கரமாகக் கதறுகின்றன. ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, இவை அனைத்தும் தோல்வியின் அறிகுறியாகும். கருப்பு சிறகுகளும், சிவந்த கால்களும் கொண்ட கடுமை நிறைந்த பறவைகள் குருக்களின் முகாமுக்கு மேல் இரவு விழும் நேரங்களில் {மாலை நேரத்தில் இருட்டும் வேளையில்} பறக்கின்றன. இவை அனைத்தும் தோல்வியின் அறிகுறியாகும். துரியோதனனின் படை வீரர்கள் முதலில் அந்தணர்களிடம் வெறுப்பைக் காட்டுகிறார்கள், பிறகு தங்கள் ஆசான்களிடமும், பிறகும் தங்களிடம் பாசம் கொண்ட அனைத்து சேவகர்களிடமும் வெறுப்பைக் காட்டுகிறார்கள். (துரியோதனனின் முகாமில் இருந்து பார்க்கையில்), ஓ! மதுசூதனா {கிருஷ்ணா} அடிவானத்தின் கிழக்குத் திசை சிவப்பாகவும், தெற்கு ஆயுதங்களின் {கத்தியின்} நிறத்திலும், மேற்கு பூமியின் நிறத்திலும், {வடக்கு சங்கு போன்ற நிறத்திலும்} தோன்றுகின்றன. ஓ! மாதவா {கிருஷ்ணா} துரியோதனனின் முகாமைச் சுற்றிலும் உள்ள திசைகள் பற்றி எரிவதைப் போலத் தோன்றுகின்றன. இப்படித் தோன்றும் இந்த அனைத்து அத்தாட்சிகளும், பெரும் ஆபத்துக்கே அறிகுறியாகும்.
ஓ! அச்யுதா {கிருஷ்ணா}, ஆயிரம் தூண்கால் தாங்கப்படும் அரண்மனையில், யுதிஷ்டிரன் தனது தம்பிகளுடன் ஏறுவதைக் கனவினில் கண்டேன். அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும் வெண்கிரீடங்கள் {வெள்ளைத் தலைப்பாகைகள்} மற்றும் வெள்ளாடைகளுடன் தோன்றினர். அவர்கள் அனைவரும் வெள்ளை இருக்கையில் அமர்ந்திருப்பது போல எனக்குத் தோன்றியது. அதே கனவின் மத்தியில் ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இரத்தம் நிறம் பூசிய பூமியை ஆயுதங்களால் சூழ்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உன்னையும் நான் கண்டேன்.
அதே வேளையில், அளக்கமுடியா சக்தி கொண்ட யுதிஷ்டிரன், எலும்புகளின் குவியல் ஒன்றின் மீது ஏறி, தங்கக் கோப்பையில் நெய் பாயசத்தை உண்டு கொண்டிருந்தான். மேலும், நீ கொடுக்கும் பூமியை விழுங்குவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த யுதிஷ்டிரனையும் நான் கண்டேன். அவன் {யுதிஷ்டிரன்} பூமியை ஆள்வது நிச்சயம் என்பதன் அறிகுறியே இஃது.
மனிதர்களில் புலியும், கடும் செயல்கள் புரிபவனுமான விருகோதரன் {பீமன்}, கையில் கதாயுதத்துடன் பூமியை விழுங்கிவிடுபவன் போல மலை உச்சியில் நின்று கொண்டிருப்பதை நான் கண்டேன். கடும்போரில் அவன் {பீமன்} எங்கள் அனைவரையும் கொன்றுவிடுவான் என்பதன் வெளிப்படையான அறிகுறியே இஃது. ஓ! புலன்களின் தலைவா {கிருஷ்ணா}, நீதி எங்கிருக்கிறதோ அங்கேயே வெற்றி இருக்கும் என்பதை நான் அறிவேன்.
ஓ! புலன்களின் தலைவா {கிருஷ்ணா}, காண்டீவந்தாங்கியான தனஞ்சயன் {அர்ஜுனன்}, வெள்ளையானையின் முதுகில் உன்னுடன் அமர்ந்து கொண்டு பெரும் அழகுடன் பிரகாசிப்பதை நான் கண்டேன். ஓ! கிருஷ்ணா, துரியோதனனின் தலைமையிலான மன்னர்கள் அனைவரையும் போரில் அவன் {அர்ஜுனன்} கொல்வான் என்பதில் எனக்கு ஐயமில்லை.
வெள்ளை தோள்வளையங்கள், வெள்ளை மார்புக் கவசங்கள் [1], வெண்மாலைகள், வெள்ளாடைகள் ஆகியவற்றில் அலங்கரிக்கப்பட்டிருக்கும், நகுலன், சகாதேவன் மற்றும் பெரும் பலமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோரை நான் கண்டேன். மனிதர்களில் புலிகளான அவர்கள் மனிதர்களின் தோள்களில் சுமக்கப்படும் அற்புத வாகனங்களில் {பல்லக்குகளில்} அமர்ந்திருந்தனர். அந்த மூவரின் தலை மேலும் குடைகள் பிடிக்கப்பட்டிருப்பபதையும் நான் கண்டேன்.
[1] மூலத்தில் இது "கண்டதரா" என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. அது "கண்டபூரகம்" என்ற பெயருடையது என்றும், தலை முதல் தோள்வரையில் தொங்கும்படி போர்வீரர்கள் அதை அணிந்து கொள்வார்கள் என்றும், அது கழுத்தை மறைக்கும் என்றும் சொல்கிறார்கள். கழுத்தைப் பாதுகாக்கும் வகையில் மார்பில் அணியப்படும் ஒரு கவசமாகவும் இஃது இருக்கலாம்.
திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} படைவீரர்களுக்கு மத்தியில் மூவர், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, வெண்கிரீடங்களுடன் {வெள்ளை தலைக்கவசம் அல்லது தலைப்பாகையாக} இருந்ததை நான் கண்டேன். ஓ! கேசவா {கிருஷ்ணா}, அந்த மூவர் அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் சத்வத குலத்தில் கிருதவர்மன் என்பதை அறிந்து கொள்வாயாக. ஓ! மாதவா {கிருஷ்ணா}, பிற மன்னர்கள் அனைவரும் இரத்தச் சிவப்பான கிரீடங்களை {தலைப்பாகைகளை} அணிந்திருந்தனர்.
ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, பலமிக்கத் தேர்வீரர்களான பீஷ்மர், துரோணர் ஆகியோர், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா} ஒட்டகங்களாலும், என்னாலும், திருதராஷ்டிரர் மகனாலும் {துரியோதனனாலும்} இழுக்கப்பட்டு, வாகனத்தில் ஏறி அகஸ்தியரால் ஆளப்படும் திசைக்குப் போவதைக் கண்டேன். நாங்கள் அனைவரும் யமனின் வசிப்பிடத்திற்கு விரைவில் செல்வோம் என்பதன் அறிகுறியே இஃது. நானும் மற்ற பிற மன்னர்களும், உண்மையில் கூடியிருக்கும் க்ஷத்திரியர்கள் அனைவரும் காண்டீவ நெருப்புக்குள் நுழைய வேண்டியிருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை" என்றான் {கர்ணன்}.
கிருஷ்ணன் {கர்ணனிடம்}, "எனது வார்த்தைகள் உனது இதயத்துக்கு ஏற்பில்லாமல் போகும் போது, உலகத்தின் அழிவு சமீபத்தில் இருக்கிறது என்பது உண்மையே. ஓ! ஐயா, அனைத்து உயிரினங்களின் அழிவும் வரும்போது, சரியானதைப் போன்று தெரியும் தவறு உனது இதயத்தை விட்டு அகலாது" என்றான் {கிருஷ்ணன்}.
கர்ணன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கிருஷ்ணா, வீர க்ஷத்திரியர்களுக்குப் பெரும் அழிவைத் தரும் இந்தப் பெரும் போரில் இருந்து நாம் உயிருடன் வெளிவந்தால், ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, நாம் மீண்டும் இங்கே சந்திப்போம். இல்லையெனில், ஓ! கிருஷ்ணா, நாம் நிச்சயம் சொர்க்கத்தில் சந்திக்கலாம். ஓ! பாவமற்றவனே {கிருஷ்ணா}, அங்கேதான் {சொர்க்ககத்தில் தான்} நாம் சந்திப்பதற்குச் சாத்தியம் இருக்கிறது என்றே எனக்கு இப்போது தோன்றுகிறது" என்றான் {கர்ணன்}."
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "இவ்வார்த்தைகளைப் பேசிய கர்ணன், மாதவனைத் {கிருஷ்ணனை} தனது மார்போடு தழுவி கொண்டான். பிறகு கேசவனால் {கிருஷ்ணனால்} விடைகொடுக்கப்பட்ட அவன் தேரில் இருந்து இறங்கினான். பெரிதும் மனம் தளர்ந்த கர்ணன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தனது தேரில் நம்மை மீண்டும் வந்தடைந்தான்" என்றான்."
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கிருஷ்ணனின் (அமைதிக்கான) வேண்டுதல்கள் தோல்வியில் முடிந்த பிறகு, அவன் {கிருஷ்ணன்} குருக்களிடம் இருந்து பாண்டவர்களிடம் புறப்பட்டுச் சென்ற போது, பிருதையை {குந்தியை} அணுகிய க்ஷத்ரி {விதுரன்} துயரத்துடன், "ஓ! வாழும் பிள்ளைகளின் தாயே {குந்தியே}, எனது விருப்பம் எப்போதும் சமாதானமே என்பதையும், என்னதான் நான் அடித்தொண்டையில் இருந்து கதறினாலும், சுயோதனன் {துரியோதனன்} எனது வார்த்தைகளைக் கேட்கவில்லை என்பதையும் நீ அறிவாய்.
சேதிகள், பாஞ்சாலர்கள், கேகயர்கள், பீமன், அர்ஜுனன், கிருஷ்ணன், யுயுதானன் மற்றும் இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரைத் தனது கூட்டாளிகளாகக் கொண்டிருந்தும், மன்னன் யுதிஷ்டிரன் இன்னும் உபப்லாவ்யத்திலேயே தங்கியிருக்கிறான். தனது சொந்தங்களிடம் தான் கொண்ட பாசத்தால், பெரும்பலத்தைக் கொண்டிருந்தும் பலவீனமான மனிதனைப் போல நீதியை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறான். வயதில் முதிர்ந்திருந்தாலும், இங்கே இருக்கும் திருதராஷ்டிரர் சமாதானத்தை எட்டாமல், தனது பிள்ளைகள் மேல் கொண்ட கர்வத்தால், பாவம் நிறைந்த பாதையில் நடக்கிறார்.
ஜெயத்ரதன், கர்ணன், துச்சாசனன், சுபலனின் மகன் {சகுனி} ஆகியோருடைய தீமையின் விளைவால் சொந்தங்களுக்குள்ளே வேற்றுமை {உட்பூசல்} உண்டாகப்போகிறது. நீதிமிக்க ஒருவனிடம் நீதியற்று நடந்து கொள்பவர்கள், அந்தப் பாவத்தின் விளைவுகளை விரைவில் காண்பார்கள். இவ்வழியில் நீதியைத் துன்புறுத்தும் குருக்களைக் காணும் எவன்தான் வருந்தமாட்டான்? சமாதானத்தை எட்ட முடியாமல் திரும்பும் கேசவனைக் {கிருஷ்ணனைக்} கண்டதும், பாண்டவர்கள் நிச்சயம் போருக்குத் தயாராவார்கள். அதன்பேரில், குருக்களின் பாவம், வீரர்களின் அழிவுக்கு வழிவகுக்கும். இவை அனைத்தையும் நினைத்துக் கொண்டிருப்பதால், பகலும் இரவும் எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை" என்றான் {விதுரன்}.
குந்தி பிள்ளைகளின் {பாண்டவர்களின்} நோக்கங்கள் ஈடேறுவதை எப்போதும் விரும்பும் விதுரனின் வார்த்தைகளைக் கேட்ட அவள் {குந்தி}, துன்பத்தால் பெருமூச்சுவிடத் தொடங்கித் தனக்குள், "எதன் பொருட்டுச் சொந்தங்களுக்குள் இந்தப் பெரும்படுகொலை நேரப்போகிறதோ அந்தச் செல்வத்துக்கு ஐயோ. {அந்த செல்வத்தை நிந்திக்க வேண்டும்}. உண்மையில், இந்தப் போரில் நண்பர்களாக இருப்பவர்கள் தோல்வியை அடையப்போகிறார்கள். பாண்டவர்கள், சேதிகள், பாஞ்சாலர்கள் மற்றும் யாதவர்கள் அனைவரும் கூடி, பாரதர்களுடன் {கௌரவர்களுடன்} போரிடுவதைவிடப் பெரிய துயர் ஏது? போரில் நான் குற்றத்தையே காண்கிறேன்.
(மறுபுறம்) நாம் போரிடவில்லையெனில் வறுமையும், அவமானமும் நமதாகும். ஏழையைப் பொறுத்தவரை, (அவனுக்கு) மரணமே நன்மை. (மறுபுறம்) ஒருவன் தனது சொந்தங்களையே அழிப்பது வெற்றியாகாது. இதை நினைக்கையிலேயே எனது இதயத்தில் துயர் பெருகுகிறது. சந்தனுவின் மகனான பாட்டன் {பீஷ்மர்}, வீரர்களில் முதன்மையானவரான ஆசான் (துரோணர்), கர்ணன் ஆகியோர் துரியோதனனின் பக்கத்தில் இருந்து எனது அச்சத்தை அதிகரிக்கின்றனர். ஆசானான துரோணர், தனது மாணாக்கர்களுக்கு எதிராக எப்போதும் விருப்பத்துடன் போர் புரியமாட்டார். பாட்டனைப் {பீஷ்மரைப்} பொறுத்தவரை, அவர் {பீஷ்மர்} பாண்டவர்களிடம் சிறு பாசத்தையாவது கொண்டிருக்க மாட்டாரா?
பாவம் நிறைந்த கர்ணன் மட்டுமே, தனது அறிவின் மயக்கத்தாலும், தீய துரியோதனனால் வஞ்சக வழியை எப்போதும் பின்பற்றுவதாலும், பாண்டவர்களை வெறுக்கிறான். பாண்டவர்களுக்குத் தீங்கிழைப்பதில் பிடிவாதமாக இருக்கும் இந்தக் கர்ணன் மிகவும் சக்தி வாய்ந்தவனாகவும் இருக்கிறான். இதுவே என்னை இப்போது எரித்துக் கொண்டிருக்கிறது. அவன் {கர்ணன்} மனநிறைவு கொள்ளும் வகையில், இன்று நான் அவனிடம் சென்று உண்மையை வெளிப்படுத்தி, பாண்டவர்களின்பால் அவனது {கர்ணனின்} இதயத்தை ஈர்க்க முயற்சிக்கப் போகிறேன்.
{குந்தியாகிய} நான் எனது தந்தையான குந்திபோஜனின் அரண்மனையில் உள்ள அந்தப்புரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தபோது, என்னிடம் மனநிறைவு கொண்ட புனிதரான துர்வாசர், {தேவர்களை} அழைக்கும் {வழிபாட்டு} வடிவங்கள் அடங்கிய மந்திரங்களை வரமாக எனக்கு அளித்தார்.
நம்பிக்கையான செவிலியால் பாதுகாக்கப்பட்டு, பணிப்பெண்களால் சூழப்பட்டிருந்த நான், {இயற்கையாகப்} பெண்கள் கொண்டிருக்கும் மனநிலையின் விளைவாகவும், வயதில் முதிராத பெண்ணான எனது இயல்பாலும் மீண்டும் மீண்டும் ஆலோசித்து, எந்த நிந்தனையும் அடையாமல் இருப்பது எப்படி? என் தந்தையின் {வளர்ப்பு தந்தை குந்திபோஜனின்} மரியாதையைப் பராமரிப்பது எப்படி? விதியை மீறும் குற்றம் எதையும் செய்யாமல் நற்பேறை அடைவது எப்படி? என்று சிந்தித்தேன். அந்த மந்திரங்களின் பலம் அல்லது பலவீனத்தையும், அந்த அந்தணரின் {துர்வாசரின்} வார்த்தைகளில் உள்ள சக்தியையும், நடுங்கும் இதயத்துடன் நீண்ட நேரம் சிந்தித்தேன்., இறுதியாக, அந்த அந்தணரை {துர்வாசரை} நினைவு கூர்ந்து அவரை {துர்வாசரை} வணங்கினேன். அவரிடம் {துர்வாசரிடம்} பெற்ற மந்திரத்தால் உண்டான பெரும் ஆவலாலும் அறியாமையாலும், எனது கன்னிப்பருவத்தில் நான் சூரிய தேவனை அழைத்தேன்.
எனவே, கன்னிப்பருவத்தில் எனது கருவறையில் தாங்கப்பட்ட அவன், தனது தம்பிகளுக்கு நிச்சயம் ஏற்புடையதும், நன்மையானதுமான எனது வார்த்தைகளுக்கு ஏன் கீழ்ப்படிய மாட்டான்?" என்று நினைத்தாள். இதே போலச் சிந்தித்த குந்தி, ஓர் அற்புத தீர்மானத்தை அடைந்தாள். தீர்மானத்தை அடைந்த அவள் {குந்தி}, பகீரதன் பெயரால் அழைக்கப்படும் புனித ஓடைக்குச் சென்றாள். கங்கைக்கரையை அடைந்த பிருதை {குந்தி}, பெரும் கருணை கொண்டவனும், உண்மைக்கு உறுதியான அர்ப்பணிப்புடன் இருப்பவனுமான தனது மகன் {கர்ணன்}, வேத மந்திரங்களை உரைப்பதைக் கேட்டாள்.
கிழக்கு முகமாக, கரங்களை உயர்த்திக் கர்ணன் நின்று கொண்டிருந்தபோது, ஆதரவற்ற குந்தி, தான் கொண்ட காரியத்தின் நிமித்தம், {கர்ணனது} துதிகள் நிறைவடையக் காத்திருந்தாள். விருஷ்ணி குலத்து மங்கையும், குருக்கள் வீட்டு மனைவியுமான அந்த மங்கை {குந்தி}, சூரியனின் வெப்பத்தால் தாக்கப்பட்டு, வாடிய தாமரைமலர் மாலையைப் போலக் காணப்பட்டாள். இறுதியாக, கர்ணனின் மேலாடை கொடுத்த நிழலில் அவள் {குந்தி} நின்றாள்.
மாறாத நோன்புகளைக் கொண்ட கர்ணன், தனது முதுகு சூரியக் கதிர்களால் வெப்பமடையும்வரை தனது துதிகளைச் சொல்லிக் கொண்டிருந்தான் [1]. {துதிகள் முடிந்ததும்} திரும்பிய அவன் {கர்ணன்}, குந்தியைக் கண்டு ஆச்சரியத்தில் நிறைந்தான். அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனும், பெரும் சக்தியும், செருக்கும் கொண்டவனுமான அந்த விகர்த்தனன் மகன் விருஷன் {கர்ணன்} அவளைக் {குந்தியை} முறையான வடிவில் குவிந்த கரங்களால் வணங்கிய பிறகு பேசத் தொடங்கினான்."
[1] காலையில் கிழக்கு முகமாகப் பார்த்துத் துதித்துக் கொண்டிருப்பவனின் முதுகில் சூரியன் சுடவேண்டும் என்றால், அவன் நடுப்பகல் வரை துதிகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். மாறாத நோன்புகள் என்ற சொற்களும் இருப்பதால், அவன் தினமும் இப்படித் துதித்துக் கொண்டிருக்கிறான் என்றாகிறது.
கர்ணன் {குந்தியிடம்} சொன்னான், "ராதைக்கும், அதிரதருக்கும் மகனான நான் கர்ணன் ஆவேன். ஓ! மங்கையே, நீ எதற்காக இங்கு வந்தாய்? நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? சொல்வாயாக" என்றான் {கர்ணன்}.
அதற்குக் குந்தி {கர்ணனிடம்}, "நீ ராதையின் மகனில்லை; குந்தியின் மகனாவாய். அதிரதனும் உனது தந்தையில்லை. ஓ! கர்ணா, நீ சூத வகையில் பிறந்தவனில்லை. நான் சொல்வதை நம்புவாயாக. நான் கன்னிகையாக இருந்தபோது, நீ என்னால் ஈன்றெடுக்கப்பட்டாய். முதலில், உன்னைக் கருவறையில் சுமந்தவள் நானே. ஓ! மகனே {கர்ணா}, நீ குந்திராஜனின் அரணன்மனையில் பிறந்தாய். ஓ! ஆயுதம் தாங்குபவர் அனைவரிலும் முதன்மையானவனே {கர்ணா}, ஓ! கர்ணா, அனைத்தையும் காணச் செய்பவரும், ஒளியால் சுடர்விடுபவரும், தெய்வீகமானவருமான சூரியனே, என்னிடம் உன்னைப் பெற்றார்.
ஓ! வெல்லப்பட இயலாதவனே, ஓ! மகனே {கர்ணா}, (இயற்கையான) காது குண்டலங்களுடனும், (இயற்கையான} கவசத்துடனும், சுடர்மிகும் அழகுடனும், எனது தந்தையின் வசிப்பிடத்தில் என்னால் நீ ஈன்றெடுக்கப்பட்டாய். உனது தம்பிகளை அறியாத நீ, அறியாமையின் காரணமாகத் திருதராஷ்டிரர் மகனுக்குச் {துரியோதனனுக்குச்} சேவகம் செய்வது முறையாகாது. ஓ! மகனே, அதிலும் குறிப்பாக உனக்கு {உன்னைப் போன்ற ஒருவனுக்கு} அது முறையாகாது.
ஓ! மகனே, மனிதர்களின் கடமைகளை உறுதி செய்கையில், ஒருவனின் தந்தையும், (தான் பெற்ற பிள்ளையிடம்) முழுப் பாசத்தையும் காட்டும் தாயும் எக்காரியத்தில் மனநிறைவு கொள்கின்றனரோ, அதுவே கடமைகள் அனைத்திலும் உயர்ந்ததாகும் {அறப்பயனாகும்}. அர்ஜுனனால் முன்பு அடையப்பட்டதான யுதிஷ்டிரனின் செழிப்பை, பேராசையின் காரணமாகத் தீயவர்கள் பறித்துக் கொண்டார்கள். திருதராஷ்டிரர் மகன்களிடம் இருந்து மீண்டும் பறித்து, அந்தச் செழிப்பை நீ அனுபவிப்பாயாக.
கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையிலான ஒற்றுமையைக் குருக்கள் இன்று காணட்டும். சகோதரப் பாசத்தால் கட்டுண்டு கிடக்கும் {கர்ணனான} உன்னையும், உனது தம்பியையும் {அர்ஜுனனையும்} காணும் அந்தத் தீயவர்கள் உனக்குத் தலைவணங்கட்டும். ராமனும் {பலராமனும்}, ஜனார்த்தனனும் {கிருஷ்ணனும்} அழைக்கப்படுவது போல, கர்ணனும், அர்ஜுனனும் {இவ்வுலகத்தால்} அழைக்கப்படட்டும். நீங்கள் இருவரும் ஒன்றுசேர்ந்தால், இவ்வுலகில் அடையமுடியாததுதான் எது?
ஓ! கர்ணா, தம்பிகளால் சூழப்பட்டிருக்கும் நீ, பெரும் வேள்வி மேடையில் தேவர்களால் சூழப்பட்ட பிரம்மனைப் போலப் பிரகாசிப்பாய் என்பதில் ஐயமில்லை. அனைத்து அறங்களையும் கொண்ட நீ, எனது உறவினர்கள் அனைவரிலும் முதல்வன் {மூத்தவன்} ஆவாய். சூதனின் மகன் என்ற அடைமொழி உன்னைப் பற்றாதிருக்கட்டும். பெரும் சக்தி கொண்ட நீ பார்த்தனாவாய்" என்றாள் {குந்தி}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "(குந்தி இப்படிச் சொன்னதும்) சூரிய வட்டிலில் இருந்து வெளிவந்ததும், பாசம் மிகுந்ததுமான ஒரு குரலைக் கர்ணன் கேட்டான். வெகு தூரத்தில் இருந்து வந்த அந்தக் குரல், தந்தையின் பாசத்துடன் சூரியனால் பேசப்பட்டதாகும். (அது {அந்தக் குரல்}), "பிருதை {குந்தி} சொன்ன வார்த்தைகள் உண்மையே. ஓ! கர்ணா, உனது தாயின் {குந்தியின்} வார்த்தைகளின்படி நீ செயல்படுவாயாக. ஓ! மனிதர்களில் புலியே {கர்ணா}, அந்த வார்த்தைகளை நீ முழுமையாகப் பின்பற்றினால், பெரும் நன்மை உனக்கு விளையும்" என்றது {சூரியனின் குரல்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "தனது தாயாலும், தனது தந்தையான சூரியனாலேயும் கூட இப்படிச் சொல்லப்பட்டும், கர்ணனின் இதயம் தடுமாற்றமடையவில்லை. அவன் {கர்ணன்} உண்மைக்கு {சத்தியத்துக்கு} உறுதியான அர்ப்பணிப்புடன் இருந்தான்.
அவன் {கர்ணன் குந்தியிடம்}, "ஓ! க்ஷத்திரியப் பெண்மணியே, உனது உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிவதே கடமைகளில் உயர்ந்தது என்று, (என் காரியத்தில்) நீ சொன்னதை என்னால் ஏற்க முடியாது.
ஓ! தாயே, நான் பிறந்த உடனேயே, உன்னால் நான் கைவிடப்பட்டேன். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி, எனக்கு நீ செய்த இந்தப் பெருந்தீங்குதான், எனது சாதனைகளுக்கும், புகழுக்கும் அழிவைச் செய்து வந்திருக்கிறது. உண்மையில், நான் க்ஷத்திரியனே என்றாலும், க்ஷத்திரியனுக்குரிய சடங்குகள் அனைத்தையும் நான் உன்னால் இழந்தேன். இதைவிடப் பெரிய தீங்கை, வேறு எந்த எதிரியால் எனக்கு இழைத்துவிட முடியும்? இரக்கம் காட்ட வேண்டிய நேரத்தில் எனக்கு இரக்கம் காட்டாத நீ, (நான் பிறந்த {க்ஷத்திரிய} வகைக்குண்டான கட்டாயச்) சடங்குகள் மற்றும் எனக்குச் செய்யப்பட வேண்டிய அனைத்திலும் இருந்து என்னை விலக்கி வைத்த நீ, இன்று எனக்கு உன் கட்டளைகளை இடுகின்றாய். {க்ஷத்திரியன் ஒருவனுக்குச் செய்ய வேண்டிய சடங்குகளை உரிய காலத்தில் செய்ய எனக்குக் கருணை காட்டாமல், நன்மைகள் அற்றுப் போன என்னிடம் இன்று நீ கட்டளை இடுகின்றாயா?}
ஒரு தாயைப் போல, எனது நன்மைக்காக இதற்கு முன் நீ எப்போதும் முற்பட்டதில்லை. எனினும், உனக்கு நன்மை செய்து கொள்ள விரும்பியே நீ இன்று என்னிடம் பேசுகிறாய். கிருஷ்ணனைத் (தனது தேரோட்டியாகத்) தன்னுடன் கொண்டிருக்கும் தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} எவன்தான் அஞ்சமாட்டான்? இன்று நான் பார்த்தர்களிடம் {பாண்டவர்களிடம்} சென்றால், நான் அச்சத்தாலேயே அப்படிச் செய்கிறேன் என்று எவன்தான் கருதமாட்டான்? இதுவரை, அவர்களது {பாண்டவர்களின்} அண்ணனாக என்னை யாரும் அறியமாட்டார்கள். போர் நெருங்கும் சமயத்தில், நான் பாண்டவர்களின் அண்ணன் என்று சொல்லி, அவர்களிடம் {பாண்டவர்களிடம்} சென்றுவிட்டால், க்ஷத்திரியர்கள் அனைவரும் என்ன சொல்வார்கள்? விரும்பிய பொருட்கள் அனைத்தும் அளித்து, என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் நோக்கம் கொண்ட திருதராஷ்டிரர் மகன்களால், எப்போதும் வணங்கப்பட்டு வரும் நான், அவர்களிடம் {கௌரவர்களிடம்} கொண்ட நட்பை எப்படி முழுமையாகப் பயனற்றதாக்க முடியும்? மற்றவர்களுடன் பகைமையால் தூண்டப்பட்ட அவர்கள் {கௌரவர்கள்}, வாசவனிடம் {இந்திரனிடம்} தலைவணங்கும் வசுக்களைப் போல எப்போதும் என்னை வணங்கி, எனக்காக எப்போதும் காத்திருக்கிறார்கள் {பணிவிடை செய்கிறார்கள்}. எனது பலத்தின் துணையால், எதிரிகளுடன் மோதும் திறனைப் பெற்றுவிட்டதாக அவர்கள் கருதுகிறார்கள். அப்படிப் பேணப்பட்ட அவர்களது நம்பிக்கையை எப்படி நான் கெடுப்பேன்? என்னைத் தங்கள் படகாகக் கொண்டு, போர் எனும் கடக்க முடியாத கடலைக் கடக்க அவர்கள் விரும்புகிறார்கள். வேறு எந்தப் படகுகளும் அற்ற கடலைக் கடக்க விரும்பும் அவர்களை நான் எப்படிக் கைவிட முடியும்?
இதுவரை திருதராஷ்டிரர் மகன்களால் தாங்கப்பட்டு வந்த யாவரும், தங்கள் தலைவர்களுக்கு {எஜமானர்களுக்கு} உதவ வேண்டிய நேரம் இதுவே. எனது உயிரையும் துச்சமாக நினைத்து, நிச்சயம் நான் அவர்களுக்காகவே {கௌரவர்களுக்காகவே} செயல்படுவேன். தங்கள் தலைவர்களால் நன்கு ஊட்டப்பட்டு, (தேவையான அனைத்தும்) நன்கு அளிக்கப்பட்டும், உரிய நேரத்தில் தக்க உதவியைச் செய்யாத உறுதியற்ற இதயம் படைத்த, பாவம் நிறைந்த மனிதர்கள், தங்கள் தலைவனின் {சோறிடுபவனின்} சோற்றைத் திருடுவதால், அவர்களுக்கு இம்மையும் இல்லை; மறுமையும் கிடையாது. நான் உன்னிடம் வஞ்சகமாக {ஏமாற்றுகரமாகப்} பேச மாட்டேன். {நான் உன்னை ஏமாற்ற மாட்டேன்}. திருதராஷ்டிரர் மகனுக்காக {துரியோதனனுக்காக}, என் சக்தியிலும், பலத்திலும் சிறந்ததைக் கொண்டு உனது மகன்களுடன் நான் போரிடுவேன். எனினும், நான் அன்பையும், நன்னடத்தையையும் கைவிட மாட்டேன். எனவே, உனது வார்த்தைகள் என்னதான் எனக்கு நன்மையை அளித்தாலும், இப்போது என்னால் அதற்குக் கீழ்ப்படிய முடியாது. எனினும் இந்த உனது வேண்டுதல்கள் பலனற்றதாகாது.
அர்ஜுனனைத் தவிர, உனது மற்ற மகன்களான யுதிஷ்டிரன், பீமன், இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரைப் போரில் தாக்குப்பிடித்து, என்னால் அவர்களைக் கொல்ல முடியும் என்றாலும், அவர்கள் என்னால் கொல்லப்பட மாட்டார்கள். யுதிஷ்டிரனின் போராளிகள் அனைவரிலும் நான் அர்ஜுனனிடம் மட்டுமே போரிடுவேன். *போரில் அர்ஜுனனைக் கொன்று, நான் பெரும் தகுதியை அடைவேன், அல்லது சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டு, புகழால் நான் போர்த்தப்படுவேன். ஓ! புகழ்பெற்ற பெண்மணியே {குந்தியே}, உனது மகன்களின் எண்ணிக்கை எப்போதும் ஐந்துக்குக் குறையாது. {அர்ஜுனன் கொல்லப்பட்டால்} என்னுடனாவது, அல்லது நான் கொல்லப்பட்டால் அர்ஜுனனுடனாவது சேர்த்து, அது {உனது மகன்களின் எண்ணிக்கை} எப்போதும் ஐந்தாகவே இருக்கும்" என்றான் {கர்ணன்}.
கர்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, துயரில் நடுங்கிய குந்தி, மனோபலத்தின் விளைவால் அதிராமல் இருந்த தனது மகனை {கர்ணனை} அணைத்துக் கொண்டாள். அவள் {குந்தி கர்ணனிடம்}, "உண்மையில், ஓ! கர்ணா, நீ சொல்வது சாத்தியமாகத் தோன்றினாலும், கௌரவர்கள் நிச்சயம் அழிக்கப்படுவார்கள். அனைத்தும் விதியே. எனினும், ஓ! எதிரிகளை வாட்டுபவனே {கர்ணா}, உனது தம்பிகள் நால்வருக்கு, பாதுகாப்புக்கான உறுதியை நீ வழங்கியிருக்கிறாய். போரில் நீ ஆயுதங்களை அடிக்கும் நேரத்தில், இந்த உறுதிமொழியை நினைவில் தாங்குவாயாக" என்றாள். இவை அனைத்தையும் சொன்ன பிருதை {குந்தி}, மேலும் கர்ணனிடம், "நீ அருளப்பட்டிருப்பாயாக. உடல்நலம் {ஆரோக்கியம்} உனதாகட்டும்" என்றாள். கர்ணன் அவளிடம் {குந்தியிடம்}, "அப்படியே ஆகட்டும்" என்று மறுமொழி கூறினான். பிறகு அவர்கள் அந்த இடத்தைவிட்டு வெவ்வேறு திசைகளில் சென்றனர்."
….
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்
No comments:
Post a Comment