Saturday, December 31, 2022

Mahabharata part 174 in tamil

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-174
வனபர்வம்
..
நகுலன் பிழைக்கட்டும்" என்ற யுதிஷ்டிரன்
..
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "மனிதனுடைய ஆன்மா எது? தேவர்களால் மனிதனுக்கு அளிக்கப்பட்ட நண்பன் {துணை} யார்? மனிதனுக்குத் தலையாய ஆதரவு {பிழைப்புக்கான கருவி} எது? அவனுக்குத் தலையாயப் புகலிடம் {கதி} எது?" என்று கேட்டான்.
அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "மகனே ஒரு மனிதனுக்கு ஆன்மா; மனைவியே தேவர்களால் அவனுக்கு அளிப்பட்ட நண்பர் {துணை}; மேகங்களே அவனது தலையாய ஆதரவு {பிழைப்புக்கான கருவி}; தானமே அவனது தலையாயப் புகலிடம் {கதி}" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "பாராட்டத்தக்க காரியங்கள் அனைத்திலும் எது சிறந்தது? ஒருவனது உடைமைகள் அனைத்திலும் மிகவும் மதிப்புமிக்கது எது? லாபங்கள் அனைத்திலும் எது சிறந்தது? அனைத்து வகை மகிழ்ச்சிகளிலும் எது சிறந்தது?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "பாரட்டத்தக்க காரியங்கள் அனைத்திலும் செயல்திறனே {skill} சிறந்தது; உடைமைகள் அனைத்திலும் சிறந்தது ஞானம்; லாபங்கள் அனைத்திலும் சிறந்தது உடல்நலமே {ஆரோக்கியம்}; அனைத்துவகை மகிழ்ச்சிகளிலும் சிறந்தது மனநிறைவே" என்று பதிலளித்தான்.

 

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "உலகத்தில் உயர்ந்த கடமை {அறம்} எது? எப்போதும் கனியைக் {பலனைக்} கொடுக்கும் அறம் எது? அடக்கப்பட்டால் வருத்தத்திற்கு வழிவகுக்காதது எது? கூட்டணியை {நட்பை} உடைக்காதவர்கள் யார்?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "ஊறு இழைக்காமையே {அஹிம்சையே} {தீங்கு செய்யாமையே} கடமைகளில் உயர்ந்தது {அறம்}; மூன்று வேதங்களால் விதிக்கப்பட்ட சடங்குகள் எப்போதும் கனி {பலன்} கொடுக்கின்றன; மனமானது அடக்கப்பட்டால் வருத்தத்திற்கு வழிவகுக்காது; நல்லோருடன் கூட்டணி {நட்பு} எப்போதும் உடையாததாகும்" என்று பதிலளித்தான்.

 

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "எது துறக்கப்படுவதால், ஒருவன் மற்றவர்களால் ஏற்கப்படுகிறான்?  எது துறக்கப்பட்டால், வருத்தத்துக்கு வழிவகுக்காது?  எது துறக்கப்பட்டால், ஒருவன் வளமானவன் ஆகிறான்? எது துறக்கப்பட்டால் ஒருவன் மகிழ்ச்சியடையலாம்?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யஷனிடம்}, "கர்வத்தைத் துறப்பதால், அது ஒருவனை {மற்றவருக்கு} ஏற்புடையவனாக மாற்றுகிறது; கோபத்தைத் துறந்தால், அது வருத்தத்துக்கு வழிவகுக்காது; ஆசையைத் துறந்தால், அது ஒருவனை வளமானவனாக்குகிறது; பேராசையைத் துறந்தால், அது ஒருவனை மகிழ்ச்சியடையச் செய்கிறது" என்று பதிலளித்தான்.

 

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "ஒருவன் அந்தணர்களுக்கு எதற்காகக் கொடுக்க {தானமளிக்க} வேண்டும்? நாடகக் கலைஞர்களுக்கும், ஆடற்கலைஞர்களுக்கும் எதற்காக {கொடுக்க வேண்டும்}? பணியாட்களுக்கு {வேலைக்காரர்களுக்கு} எதற்காக {கொடுக்க வேண்டும்}? மன்னனுக்கு எதற்காக {கொடுக்க வேண்டும்}? என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "அறத்தகுதிக்காக ஒருவன் அந்தணர்களுக்குத் கொடுக்க {தானமளிக்க} வேண்டும்; நாடகக் கலைஞர்களுக்கும், ஆடற்கலைஞர்களுக்கும் புகழுக்காகக் கொடுக்க வேண்டும்; பணியாட்களுக்கு அவர்கள் தங்களைத் தாங்கிக் கொள்வதற்காகக் கொடுக்க வேண்டும்; அச்சத்தில் இருந்து நிவாரணம் பெற ஒருவன் மன்னர்களுக்குத் தானமளிக்க வேண்டும்" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "உலகத்தை மூடியிருப்பது எது? தன்னைத்தானே ஒரு பொருள் கண்டறியமுடியாததற்குக் காரணமாக இருப்பது எது? நண்பர்கள் கைவிடப்படுவதற்குக் காரணம் எது? சொர்க்கம் செல்வதில் ஒருவனைத் தோல்வியுறச் செய்வது எது?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "உலகம் இருளால் மூடியிருக்கிறது; ஒரு பொருள் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள இருள் அனுமதிக்காது; பேராசையின் காரணமாகவே நண்பர்கள் கைவிடப்படுகிறார்கள்; உலகத்துடனான இத்தொடர்பினாலேயே {அதாவது பற்று [அ] ஆசையால்} ஒருவன் சொர்க்கம் செல்வதில் தோல்வியுறுகிறான்" என்று பதிலளித்தான்.

 

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "ஒருவன் எதனால் இறந்தவனாகக் கருதப்படலாம்? ஒரு நாடு எதனால் இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்? சிராத்தம் எதனால் இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்? ஒரு வேள்வி எதனால் இறந்ததாகக் {அழிந்ததாக} கருதப்படலாம்?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "செல்வமற்ற மனிதன் இறந்தவனாகக் கருதப்படலாம்; மன்னனற்ற நாடு இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்; கல்லாத புரோகிதன் துணை கொண்டு செய்யப்படும் சிராத்தம் இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்; அந்தணர்களுக்குத் தானம் இல்லாத வேள்வி இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "வழி என்பது எது? நீராகப் பேசப்படுவது எது? உணவு எது? நஞ்சு எது? சிராத்தத்துக்கான உகந்த நேரம் எது? என்பதையும் சொல்லி, {நீரைக்} குடித்து, நீ விரும்பிய அளவு எடுத்துச்செல்!" என்றான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "எது நன்மையோ அதுவே வழி [[1] //இதற்கான கேள்வியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல் {சம்ஸ்க்ருத மூலத்தில்} "திக்" என்பதாகும், அதன் பொருள் திசை என்பதாகும். நிச்சயமாக, இதன் தொடர்ச்சியாக வழி என்ற பொருளே வெளிப்படையாகத் தெரிகிறது. யுதிஷ்டிரனின் பதிலில் நன்மையான வழியில் நடப்பதே வழி என்ற பொருளே வருகிறது./]; வெளியே {ஆகாயமே} நீராகப் பேசப்பட்டு வருகிறது [//உண்மையில் நீரை, சுருதிகள் வெளி {ஆகாயம்} என்றே பேசுகின்றன. வேதத்தில் உள்ள அண்டவுற்பத்தியியல் {Vedic cosmogony} குறித்து யுதிஷ்டிரனின் ஞானத்தைச் சோதிப்பதற்கான கேள்விகள் இவை]; பசுவே உணவு [/பின்வரும் பொருளிலேயே பசுக்களே ஒரே உணவு என்று சுருதிகளில் பேசப்படுகிறது. பசுப் பால் கொடுக்கிறது. பால் நெய்யைக் கொடுக்கிறது. நெய் ஹோமத்தில் பயன்படுகிறது. ஹோமம் மேகங்களுக்குக் காரணமாகிறது. மேகங்கள் மழையைத் தருகின்றன. மழை, விதையை முளைக்கச் செய்து, உணவை உற்பத்தி செய்கிறது.]; வேண்டுகோளே {யாசிப்பது; பிச்சை கேட்பது} விஷம் {அந்தணர்களின் பொருள் விஷம் என்று வேறு பதிப்பில் இருக்கிறது}; ஒரு அந்தணனே சிராத்தத்துக்கான உகந்த நேரம் [//இங்கே யுதிஷ்டிரன் சொல்ல நினைப்பது என்னவென்றால், சிராத்தத்திற்குக் குறித்த நேரம் என்பது இல்லை. எப்போது ஒரு நல்ல, திறன்மிக்கப் புரோகிதரை அடைய முடியுமோ அப்போது {சிராத்தம்} செய்யலாம்./]. ஓ! யக்ஷா, இவை அனைத்தையும் குறித்து நீ என்ன நினைப்பாய் என்பதை நான் அறிய மாட்டேன்" என்றான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "தவத்தின் குறி {குறியீடு} எனச் சொல்லப்படுவது எது? உண்மையான அடக்கம் {தமம்} எது? பொறுமை எனப்படுவது எது? வெட்கம் என்பது எது?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன், "தன்னறத்தில் {தனது தர்மத்தில்} நிலைத்து நிற்பது தவம் {தவத்தின் குறியீடு}; மனதின் அடக்கமே, அடக்கங்கள் அனைத்திலும் உண்மையானது; பகையைச் சகிப்பதே பொறுமை; தகாத செயல்கள் அனைத்திலும் இருந்து விலகுவதே வெட்கம்" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரா} ஞானம் என்று சொல்லப்படுவது எது? அமைதி எது? கருணை எது? எளிமை என்று அழைக்கப்படுவது எது?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "தெய்வீகமே {உண்மைப் பொருளை அறிவதே} உண்மையான ஞானமாகும்; இதய {மன} அமைதியே உண்மையான அமைதி; அனைவருக்கும் மகிழ்ச்சியை விரும்புவதே கருணை; இதய அமைதி {மன அமைதியே} எளிமை" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "வெல்லப்படமுடியாத எதிரி எது? மனிதனின் தீராத நோய் எது? எவ்வகை மனிதன் நேர்மையானவன்; எவ்வகை மனிதன் நேர்மையற்றவன்?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "கோபமே வெல்லப்பட முடியாத எதிரி; பேராசையே தீர்க்கப்படமுடியாத நோய்; அனைத்துயிர்களின் மகிழ்ச்சியை விரும்புபவனே நேர்மையானவன்; கருணயற்றவன் நேர்மையற்றவனாவான்" என்று பதிலளித்தான்.

 

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அறியாமை என்பது எது? கர்வம் என்பது எது? சோம்பலெனப் புரிந்து கொள்ளப்படுவது எது? துன்பமெனப் பேசப்படுவது எது?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "தன் கடமைகளை அறியாததே உண்மையான அறியாமை. ஒருவன் தன்னைச் செயல்படுபவனாகவோ {actor = நடிகனாகவோ} வாழ்வில் பாதிக்கப்பட்டவனாகவோ உணர்வதே கர்வம் ஆகும். ஒருவன் தனது கடமைகளைச் செய்யாதிருப்பதே சோம்பலாகும். ஒருவனது அறியாமையே துக்கமாகும்" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "முனிவர்களால் நிலைமாறாஉறுதி எனச் சொல்லப்பட்டுள்ளது எது? பொறுமை எது? உண்மையான சுத்தம் என்பது எது? தானம் என்பது எது?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, ஒருவன் தன்னறத்தில் {தனது தர்மத்தில்} நிலைத்து நிற்பதே நிலைமைமாறா உறுதியாகும். புலன்களை அடக்குவதே உண்மையான பொறுமையாகும்; மனம் மாசடையாமல் கழுவுவதே உண்மையான நீராடலாகும் {சுத்தமாகும்}. அனைத்து உயிர்களையும் பாதுகாப்பதே தானமாகும்" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "எந்த மனிதன் கற்றவனாகக் {பண்டிதனாகக்} கருதப்பட வேண்டும்? எவன் நாத்திகன் என்று அழைக்கப்பட வேண்டும்? எவன் ஞானமற்றவன் {அறியாமையில் இருப்பவன்} என்று அழைக்கப்பட வேண்டும்? எது ஆசை என்று அழைக்கப்படுகிறது? ஆசையின் ஊற்றுக்கண்கள் எவை? பொறாமை எது?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "தன் கடமைகளை அறிந்தவன் கற்றவன் {பண்டிதன்} என்று அழைக்கப்பட வேண்டும். ஞானமற்றவனே நாத்திகன், அது போலவே நாத்திகனே ஞானமற்றவன். உடைமைகளுக்குக் காரணமே ஆசை; இதய {மன} துக்கமே பொறாமை, வேறு எதுவுமில்லை" என்று பதிலளித்தான் {யுதிஷ்டிரன்}.


யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்) , " கர்வம் {அகங்காரம்} எது? பேடிசம் {டம்பம்}{#} எது? தேவர்களின் அருள் எது? பொல்லாங்கு {தீய குணம்} எது?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்), "எழுச்சியற்ற அறியாமையே கர்வம் {அகங்காரம்} ஆகும். {அஞ்ஞானமே அகங்காரம்}. அறநிலை நிறுவுதலே பேடிசம் {டம்பம்} ஆகும். {தான் அறம் கடைப்பிடிப்பதாகப் பிறருக்குத் தெரிவிப்பது டம்பமாகும் [போலித்தனமாகும்]}. தானங்களின் கனியே {பலனே} தேவர்களின் அருளாகும். பிறரைக் குறித்துத் தவறாகப் பேசுவதே பொல்லாங்கு {தீய குணம்} ஆகும்" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியன ஒன்றுக்கொன்று எதிரானவை. இப்படி ஒன்றுக்கொன்று பகையானவை எப்படி இணைந்து இருக்க முடியும்?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "மனைவியும் அறமும் ஒருவருக்கொருவர் ஏற்புடன் செயல்படும்போது, நீ சொன்ன மூன்றும் {அனைத்தும்} இணைந்து இருக்க முடியும்!" என்று பதிலளித்தான்.

 

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, "அழிவில்லாத {நித்தியமான} நரகத்தை அடையும் மனிதன் எவன்? நான் கேட்ட கேள்விக்கு விரைந்து பதிலளிப்பதே உனக்குத் தகும்!" என்று சொன்னான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "ஏழை அந்தணனுக்குத் தானமளிப்பதாக உறுதியளித்து அவனை அழைத்து, பிறகு, கொடுப்பதற்கு ஒன்றுமில்லை என்று சொல்பவன் அழிவில்லாத {நித்தியமான} நரகத்தை அடைகிறான். வேதங்களிலும், சாத்திரங்களிலும், அந்தணர்களிடமும், தேவர்களிடமும், பித்ருக்களுக்கு மரியாதை அளித்துச் செய்யப்படும் விழாக்களிலும் பொய் கூறுபவனும் அழிவில்லா நரகத்தை அடைய வேண்டும். செல்வத்தின் உடைமையாளன், தானமளிக்காமலோ, பேராசையின் காரணமாகத் தானே அனைத்தையும் அனுபவித்து மற்றவர்களுக்கு இல்லை என்று சொன்னாலோ அவனும் அழிவில்லா நரகத்தை அடைகிறான்" என்று பதிலளித்தான்.

 

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரா} எந்தப் பிறவி, நடத்தை, {வேத} படிப்பு அல்லது {சாத்திர} கல்வி ஆகியவற்றால் ஒரு மனிதன் பிராமணனாகிறான் {அந்தணனாகிறான்}? மெய்யுறுதியுடன் எமக்குச் சொல்" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "ஓ! யக்ஷா, கேள்! பிறவியோ, {வேத} படிப்போ, {சாத்திர} கல்வியோ பிராமணத்தன்மைக்குக் காரணமில்லை என்பதில் ஐயமில்லை. நடத்தையே அது {பிராமணத்தன்மையாகும்}. ஒருவனது நடத்தை எப்போதும் நன்கு பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பாக ஓர் அந்தணரால் {பாதுகாக்கப்பட வேண்டும்}. ஒருவன் தனது நடத்தையைக் கெடாநிலையுடையதாகப் பராமரித்தால், அவன் எப்போதும் கெடு நிலையை அடைவதில்லை. பெரும் ஆசிரியர்கள், மாணவர்கள், உண்மையில் சாத்திரங்களைப் படிக்கும் அனைவரும், தீய பழக்கங்களுக்கு அடிமையானால், அவர்கள் கல்லாத மூடர்களாகக் கருதப்பட வேண்டும். அறக்கடமைகளைச் செய்பவனே கற்றவன். நான்கு வேதங்களைப் படித்தும், இழிந்த தீயவனாக இருந்தால் அவன் சூத்திரனில் இருந்து வேறுபட்டவனல்ல என்று (அவனது நடத்தை சரியில்லாததாக) கருதப்பட வேண்டும். அக்னிஹோத்ரம் செய்து, புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் {அந்தணன்} என்று அழைக்கப்படுகிறான்" என்று பதிலளித்தான்.

 

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "ஏற்புடைய {இனிமையான} வார்த்தைகளைப் பேசும் ஒருவன் அடையும் லாபம் என்ன? எப்போதும் தீர்மானத்துடன் செயல்படும் ஒருவன் அடையும் லாபம் என்ன? நிறைய நண்பர்களை உடையவன் அடையும் லாபம் என்ன? அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவனுக்கு {அவன் அடையும் லாபம்} என்ன?" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "ஏற்புடைய வார்த்தைகளைப் {இனிமையாகப்} பேசும் ஒருவன் அனைவருக்கும் ஏற்புடையவனாகிறான் {அன்பனாகிறான்}. தீர்மானத்துடன் செயல்படும் ஒருவன் தான் முயற்சிப்பதை {தேடுவதை} {வெற்றியை} அடைகிறான். பல நண்பர்களை உடைய ஒருவன் மகிழ்ச்சியாக வாழ்கிறான். அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவன் (அடுத்த உலகில்) இன்பநிலையை அடைகிறான்" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "உண்மையில் மகிழ்ச்சியானவன் எவன்? அதிசயமானது எது? பாதை எது? {தினமும் நடைபெறும்} செய்தி எது? இந்த எனது நான்கு கேள்விகளுக்கும் பதிலளித்து, இறந்து போன உனது தம்பியரை மீட்டெடு!" என்றான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "ஓ! நிலத்திலும் நீரிலும் வாழ்பவனே {யக்ஷா}, கடனுக்கு ஆட்படாமல், வீட்டில் இருந்து வெளியே போக வேண்டிய தேவை இல்லாமல், {வாழ்வுக்காக வெளியூருக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தமில்லாதவன்} ஒரு நாளின் {ஒரு பகலை எட்டுப் பகுதிகளைப் பிரித்து அதில் வரும்} ஐந்தாவது அல்லது ஆறாவது பகுதியில், சொற்ப காய்கறிகளைத் தன் இல்லத்தில் {தன் சொந்த வீட்டில்} சமைப்பவன் {சமைத்து உண்பவன்} உண்மையில் மகிழ்ச்சியுடைவனாவான். நாளுக்கு நாள் எண்ணிலடங்கா உயிரினங்கள் யமனின் வசிப்பிடம் செல்கின்றன. இருப்பினும், மீந்திருப்பவை {உயிரோடு இருக்கும் உயிரினங்கள்} தங்களை இறவாத்தன்மை கொண்டவை என்று நினைத்துக் கொள்கின்றன. இதை விட வேறு எது அதிசயமானதாக இருக்க முடியும்? வாதம் செய்வது எந்த ஒரு குறிப்பிட்ட முடிவுக்கும் வழிவகுக்காது. சுருதிகள் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டிருக்கின்றன; {இவரது} கருத்து அனைவராலும் ஏற்கப்பட்டது என்று சொல்லுமளவுக்கு ஒரு முனிவர் கூட இல்லை; தர்மம் {அறம்} மற்றும் கடமை சம்பந்தமான உண்மை {சத்தியம்} குகைகளில் மறைக்கப்பட்டிருக்கிறது; எனவே, பெருமை மிக்கவர்கள் {பெரியோர்} நடந்து சென்ற பாதையே நமக்கான பாதை. அறியாமை நிறைந்த இந்தப் பூமி {சமையற்செய்யத்தக்க} ஒரு பெரிய கடாய் ஆகும். பகல்களையும், இரவுகளையும் எரிபொருளாய்க் கொண்டிருக்கும் சூரியனே, நெருப்பு ஆகும். மாதங்களும், பருவங்களும் மரக்கரண்டிகளாகும். {உலகம் என்ற அந்தக் கடாயில்} காலம் அனைத்தையும் சமைத்துக் கொண்டிருக்கிறது. இதுவே {தினமும் நடைபெறும்} செய்தி ஆகும்." என்று பதிலளித்தான்.

 

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! எதிரிகளை அடக்குபவனே, எனது அனைத்துக் கேள்விகளுக்கும் உண்மையில் பதிலளித்துவிட்டாய்! உண்மையில் யார் மனிதன் என்றும், அனைத்து வகைச் செல்வங்களையும் உண்மையில் கொண்டிருக்கும் மனிதன் யார் என்றும் இப்போது எமக்குச் சொல்" என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "ஒருவனது நற்செயலின் அறிக்கை சொர்க்கத்தை அடைந்து, பூமி எங்கும் பரவுகிறது. அந்த அறிக்கை நீடிக்கும்வரை, {அவன் மனிதன் எனப்படுகிறான்.} ஏற்புடையதும் ஏற்பில்லாததும், இன்பமும் துன்பமும், கடந்த காலமும் எதிர்காலமும் {என உள்ள அனைத்து இரட்டைகளும்} எந்த மனிதனால் சமமாகக் கருதப்படுகிறதோ, அவன் அனைத்து வகைச் செல்வங்களையும் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான்" என்று பதிலளித்தான்.

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, யார் மனிதன் என்பதற்கும், அனைத்து வகைச் செல்வங்களையும் கொண்ட மனிதன் யார் என்பதற்கும் உண்மையாகப் பதிலளித்து விட்டாய். எனவே, உனது தம்பிகளில், நீ விரும்பும் ஒருவன் மட்டும் உயிருடன் எழுந்திருக்கட்டும்!" என்றான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷன்}, "ஓ! யக்ஷா, கறுத்த நிறமும், சிவந்த கண்களும், பெரும் ஆச்சா {சால} மரம் போன்ற உயரமும், அகன்ற மார்பும், நீண்ட கைகளும் கொண்ட நகுலன் உயிருடன் எழுந்திருக்கட்டும்!" என்று பதிலளித்தான்.

 

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "இந்தப் பீமசேனன் உனக்கு அன்பானவன், இந்த அர்ஜுனனைத்தான் நீங்கள் அனைவரும் நம்பியிருக்கிறீர்கள்! ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உனது மாற்றாந்தாய் மகன் ஏன் உயிருடன் எழும்ப வேண்டும் என்று விரும்புகிறாய்! பத்தாயிரம் யானைகள் பலத்திற்கு ஈடான பலம் கொண்ட பீமனைக் கைவிட்டு, நகுலன் உயிர்வாழ நீ எவ்வாறு விரும்புகிறாய்? இந்தப் பீமனே உனக்கு அன்பானவன் என்று மனிதர்கள் சொல்கிறார்களே. என்ன நோக்கத்திற்காக நீ மாற்றாந்தாய் மகனான உனது தம்பியை மீட்க விரும்புகிறாய்? பாண்டுவின் மகன்கள் அனைவராலும் வழிபடப்படும் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அர்ஜுனனைக் கைவிட்டு, நகுலனை மீட்க நீ ஏன் விரும்புகிறாய்?" என்று மீண்டும் கேட்டான்.

யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, "அறம் தியாகம் செய்யப்பட்டால் {அறத்தைக் கைவிட்டால்}, அதைத் தியாகம் செய்பவன், தானே தொலைந்து போகிறான். அறம், தன்னைக் {அறத்தைக்} காப்பவனைக் காக்கிறது. எனவே, அறத்தைத் தியாகம் செய்து நம்மையே தொலைக்காமல் {அழிந்துவிடாமல்} இருக்கக் கவனம் கொண்டு, நான் எப்போதும் அறத்தைக் கைவிடுவதில்லை. ஊறிழைக்காமையே {அகிம்சையே} உயர்ந்த அறம் என்றும், அடையவிரும்பும் மிக உயர்ந்த சாதனையைவிட அதுவே {ஊறிழைக்காமையே} உயர்ந்தது என்றும் நான் கருதுகிறேன். நான் முனைப்புடன் அறம் பயிலவே முயல்கிறேன். எனவே, ஓ! யக்ஷா, நகுலன் புத்துயிர் பெறட்டும்! மன்னன் {நான்} எப்போதும் அறம் சார்ந்தவன் என்பதை மனிதர்கள் அறியட்டும்! நான் எப்போதும் கடமை தவறமாட்டேன். எனவே நகுலன் புத்துயிர் பெறட்டும்! என் தந்தை {பாண்டு} குந்தி, மாத்ரி என இரு மனைவியரைக் கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் {தத்தமக்கு ஒரு} பிள்ளையைப் பெற்றிருக்கட்டும். இதையே நான் விரும்புகிறேன். எனக்கு எப்படிக் குந்தியோ, அப்படியே மாத்ரியும். என் கண்களில் அவர்களுக்கு மத்தியில் எந்த வேறுபாடும் கிடையாது. நான் எனது தாய்மாருக்குச் சமமானவனாக நடக்க விரும்புகிறேன். எனவ, நகுலன் பிழைக்கட்டும்!" என்றான் {யுதிஷ்டிரன்}.

 

யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "பொருளையும், இன்பத்தையும் விட ஊறிழைக்காமையை {அகிம்சையை} நீ உயர்வாகக் கருதுகிறாய். எனவே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா} உனது தம்பிகள் அனைவரும் பிழைக்கட்டும்!" என்றான் {யக்ஷன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பிறகு யக்ஷனின் வார்த்தைகளுக்கு ஏற்ப பாண்டவர்கள் எழுந்தனர்; அவர்களது பசியும், தாகமும் ஒரு கணத்தில் அவர்களை விட்டு அகன்றன. பிறகு யுதிஷ்டிரன், "வீழ்த்தப்பட முடியாதவராக, குளத்தில் ஒற்றைக் காலில் நிற்கும் உம்மை யக்ஷராக என்னால் எடுத்துக் {ஏற்றுக்} கொள்ள முடியவில்லை; ஆதலால் நீர் எந்தத் தேவன்? வசுக்களில் முதன்மையானவரா? ருத்திரர்களில் முதன்மையானவரா? மருதர்களின் தலைவரா? அல்லது வஜ்ரத்தைத் தாங்கும் தேவர்களின் தலைவரா {இந்திரனா}? எனது இந்தத் தம்பிகள் ஒவ்வொருவரும் போரில் நூறாயிரம் வீரர்களுக்குச் சமமானவர்களாவர். இவர்கள் அனைவரையும் கொல்லும் ஒரு வீரனையும் நான் காணவில்லை {கண்டதில்லை}! ஏதோ இனிமையான தூக்கத்தில் இருந்து எழுந்ததைப் போல அவர்களின் புலன்கள் புத்தணர்வு பெற்றிருப்பதை நான் காண்கிறேன். நீர் எங்களது நண்பரா? அல்லது எங்களது தந்தையா?" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.

அதற்கு யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, நான் பெரும் பராக்கிரமம் படைத்த நீதியின் தலைவன் {யமன்=தர்மதேவன்}. நான் உனது தந்தையுமாவேன்! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, உன்னைக் காண விரும்பியே நான் இங்கு வந்தேன் என்பதை அறிந்து கொள்! புகழ், உண்மை {சத்தியம்}, தன்னடக்கம் {சுயக்கட்டுப்பாடு}, தூய்மை {பரிசுத்தம்}, வெளிப்படைத்தன்மை {candour = நடுநிலைமை}, பணிவு, உறுதியான நிலை, தானம், தவம், பிரம்மச்சரியம் ஆகியன எனது உடலாகும்! ஊறிழைக்காமை {அகிம்சை}, நடுநிலை {சமத்துவம்}, அமைதி, தவங்கள், தூய்மை {புனிதம்}, துர்க்குணம் விலக்கல் ஆகியவையே (என்னை அணுகுவதற்கான) கதவுகள். நீ எப்போதும் எனது அன்புக்குரியவனே! நல்லூழின் {#} காரணமாகவே நீ ஐந்துக்கும் [ 1. மன அமைதி, 2. சுயக்கட்டுப்பாடு, 3. சிற்றின்பம் தவிர்த்தல், 4. ஒழிவு {ஓய்வு} 5.யோகத்தியானம் ] உன்னை அர்ப்பணித்திருக்கிறாய். மேலும் நல்லூழின் காரணமாகவே நீ ஆறை {1. பசி, 2. தாகம், 3. துக்கம், 4. மோகம் {மழுங்கிய [மயக்கம் தரும்] மனித உணர்வு}, 5. மூப்பு, 6. மரணம் ] வென்றிருக்கிறாய். மனிதர்களை அடுத்த உலகிற்கு அனுப்பும் நிமித்தமாக, அந்த ஆறில், முதல் இரண்டு {பசி, தாகம் ஆகியன} வாழ்வின் முதல் பகுதியிலும்; இன்னும் இரண்டு {துக்கம், மோகம் ஆகியன} நடுப்பகுதியிலும், மீதம் உள்ள இரண்டு {மூப்பும், மரணமும்} கடைசியிலும் தோன்றும்.

உனக்கு நன்மையே விளையட்டும், நான் நீதியின் தலைவன் {தர்ம தேவன்}, நான் உனது தகுதியைச் சோதிக்கவே இங்கு வந்தேன்! தீங்கில்லாத உன்னைச் சாட்சியாகக் கண்டு நான் மனம் நிறைந்தேன்; ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா} நான் உனக்கு வரங்களை அளிப்பேன். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா} நீ என்னிடம் வரங்களைக் கேள். ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, நான் அவற்றை உனக்கு நிச்சயம் அளிப்பேன். என்னை வணங்குவோர், துயரங்கொள்ளார்!" என்றான் {யமன்}. யுதிஷ்டிரன் {யமனிடம்}, "அந்தணர் ஒருவரின் அரணிகளை ஒரு மான் தூக்கிச் சென்றது. எனவே, முதல் வரமாக, அந்த அந்தணரின் அக்னி வழிபாடு தடைபடாதிருக்கட்டும் என்று கேட்பேன்!" என்றான். யக்ஷன் {தர்மதேவன்} {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பிரகாசமிக்கக் குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, உன்னைச் சோதிப்பதற்காக, மானின் வேடம் கொண்டு நானே, அந்த அந்தணரின் அரணிகளைத் தூக்கிச் சென்றேன்!" என்றான்.

 

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அதன்பிறகு, அந்த வழிபடத்தகுந்தவன் {தர்மதேவன்}, "நான் உனக்கு இந்த வரத்தைத் தருகிறேன்! உனக்கு நன்மையே விளையட்டும்! ஓ! தேவனைப் போல இருப்பவனே, புதிதாக வேறு வரத்தைக் கேள்!" என்றான். யுதிஷ்டிரன், "காட்டில் பனிரெண்டு வருடங்களைக் கழித்தோம்; பதிமூன்றாவது வருடம் வந்துவிட்டது; இந்த வருடத்தை நாங்கள் எங்காவது கழிக்கும்போது யாரும் எங்களை அடையாளம் காணாது இருக்கட்டும்!" என்று கேட்டான்.

 

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அதற்கு அந்த வழிபடத்தகுந்தவன் {தர்மதேவன்}, "நான் உனக்கு இந்த வரத்தைத் தருகிறேன்" என்றான். பிறகு, உண்மையைப் பராக்கிரமமாகக் கொண்ட குந்தியின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} மீண்டும் உறுதியளிக்கும் விதமாக, அவன் {தர்மதேவன்}, "ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, உங்கள் சரியான உருவங்களில் {இயற்கையான உங்கள் தோற்றத்திலேயே} நீங்கள் {இந்த முழு} பூமியில் உலவினாலும், மூவுலகில் உள்ள எவரும் உங்களை அடையாளம் காண மாட்டார்கள். குரு குலத்தைத் தழைக்க வைப்பவர்களே, எனது அருளால், ரகசியமாகவும், அடையாளம் காணப்படாமலும், இந்தப் பதிமூன்றாவது {13} வருடத்தை விராட நாட்டில் நீங்கள் கழிப்பீர்கள். உங்களில் ஒவ்வொருவராலும், அவரவர் விரும்பும் வடிவத்தை ஏற்க இயலும்! இப்போது நீ அந்த அந்தணருக்கு அவரது அரணிகளைக் கொடுக்கலாம். உன்னைச் சோதிப்பதற்காகவே நான் மானின் வடிவம் கொண்டு அவற்றைத் தூக்கிச் சென்றேன்! {என்று சொல்லி அரணிகளை யுதிஷ்டிரன் கையில் தர்மதேவன் கொடுத்திருக்க வேண்டும்}. ஓ! மனதிற்கினிய யுதிஷ்டிரா, நீ விரும்பும் மற்றுமொரு வரத்தைக் கேள்! நான் அதை உனக்கு அளிப்பேன். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, உனக்கு {அந்த} வரங்களை வழங்கியதன் மூலம் நான் இன்னும் மனநிறைவு கொள்ளவில்லை. என் மகனே {யுதிஷ்டிரா}, பெரியதும் ஒப்பற்றதுமான மூன்றாவது வரத்தை ஏற்றுக் கொள்! ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நீ என்னால் பிறந்தவன், விதுரன் எனது பகுதிகளில் ஒருவன்!" என்றான் {தர்மதேவன்}.

 

அதன்பிறகு யுதிஷ்டிரன் {தர்மதேவனிடம்}, "தேவர்களுக்கு தேவனான நித்தியமான {தர்மதேவனான} உம்மை, எனது புலன்களைக் கொண்டு கண்டதே எனக்குப் போதுமானது! ஓ! தந்தையே {தர்மதேவரே}, நீர் எனக்கு என்ன வரமளித்தாலும், நான் அதை நிச்சயம் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வேன்! ஓ! தலைவா {தர்மதேவரே}, பேராசை, மூடத்தனம், கோபம், ஆகியவற்றை நான் எப்போதும் வெல்ல வேண்டும். மேலும், ஈகை {#}, உண்மை {சத்தியம்}, தவச்சடங்கு ஆகியவற்றில் எனது மனம் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கட்டும்!" என்று சொன்னான். அதற்கு நீதியின் தலைவன் {தர்மதேவன் - யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, நீ நீதியின் தலைவனேயாகையால் {நானே ஆகையால்} இந்தக் குணங்கள் அனைத்தும் உன்னிடம் இயற்கையாகவே இருக்கின்றன! நீ கேட்டதை மீண்டும் அடைவாயாக!" என்றான் {தர்மதேவன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அனைத்து உலகங்களிலும் ஆழ்ந்து பார்க்கும் பொருளான வணங்கத்தக்க நீதியின் தலைவன் {தர்மதேவன்}, இவ்வார்த்தைகளைச் சொன்னதும் அங்கேயே மறைந்து போனான்; இனிமையாக உறங்கிய அந்த உயர் ஆன்ம பாண்டவர்கள் மீண்டும் ஒருவரோடு ஒருவர் ஐக்கியப்பட்டனர். களைப்பு நீங்கிய அவ்வீரர்கள், ஆசிரமத்திற்குத் திரும்பி, அந்த அந்தணருக்கு, அவரது அரணிகளைத் திரும்பக் கொடுத்தனர்.

 

(பாண்டவர்கள்) புத்துயிர் பெறுவதும், தந்தையும் {தர்மன்} மகனும் {யுதிஷ்டிரனும்} சந்திப்பதும், ஒப்பற்றதும், புகழை அதிகரிப்பதுமான இந்தக் கதையை நாடிய {கேட்ட [அ] படித்த} மனிதன், பரிபூரண மன அமைதியையும், மகன்கள் மற்றும் பேரர்களையும், நூறு வருடங்களைத் தாண்டி நீளும் வாழ்வையும் அடைவார்கள்! இந்தக் கதையை மனதில் நிறுத்தும் மனிதன், அநீதி {அதர்மம்}, நண்பர்களுக்குள் பூசல் {மித்ரபேதம்}, பிறன் உடைமையை மோசடி செய்வது; பிறர் மனைவியைக் களங்கப்படுத்தல் {தொடுதல்}, தவறான {தீய} எண்ணங்கள் {அற்பத்தனங்கள்} ஆகியவற்றில் மகிழ்வடைய மாட்டார்கள்! {பற்றுதல் கொள்ள மாட்டார்கள்!}" {என்றார் வைசம்பாயனர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இப்படி கண்டறியப்படாமல் கழிக்கப்பட வேண்டிய {அஞ்ஞாதவாசம் செய்ய வேண்டிய} பதிமூன்றாவது {13} வருடத்தை மாறுவேடத்தில்  கழிக்க, நீதியின் தலைவனால் {தர்மதேவனால்} கட்டளையிடப்பட்டவர்களும், உண்மையைப் பராக்கிரமமாகக் கொண்டு நோன்புகள் நோற்கும் உயர் ஆன்மா கொண்டவர்களுமான பாண்டவர்கள், தங்களுடன் கானக வாழ்வில் ஒன்றாக வசித்த கற்றோர் மற்றும் நோன்பு நோற்கும் துறவிகள் முன்பு அமர்ந்தனர். குறித்த வகையில் பதிமூன்றாவது வருடத்தைக் கழிக்க அனுமதி கோரும் நோக்கில், கூப்பிய கரங்களுடன் அவர்களிடம் {கற்றோர் மற்றும் துறவிகளிடம்} இந்த வார்த்தைகளை அவர்கள் {பாண்டவர்கள்} பேசினர்.

அவர்கள் {பாண்டவர்கள்}, "திருதராஷ்டிரரின் மகன்கள் எங்கள் நாட்டை வஞ்சகமாக அபகரித்தனர் என்பதும், எங்களுக்கு இன்னும் பல தீங்குகளைச் செய்தனர் என்பதும் நீங்கள் நன்கு அறிந்ததே! நாங்கள் பெரும் துக்கத்துடன் பனிரெண்டு {12} வருடங்களைக் காட்டில் கழித்துவிட்டோம். கண்டறியப்படாமல் {ஆஞ்ஞாதவாசத்தில்} கழிக்க வேண்டிய பதிமூன்றாவது வருடம் மட்டுமே மீதம் இருக்கிறது. இப்போது நாங்கள் தலைமறைவாக வாழவேண்டிய அந்த ஒரு வருடத்தைக் கழிக்க நீங்கள் அனுமதிப்பதே உங்களுக்குத் தகும். செற்றம் {#} நிறைந்த எங்கள் எதிரிகளான சுயோதனன் {துரியோதனன்}, தீய மனம் கொண்ட கர்ணன், சுபலனின் மகன் {சகுனி} ஆகியோர் எங்களைக் கண்டுபிடித்தால், குடிமக்களுக்கும், நமது நண்பர்களுக்கும் பெரும் தீங்கிழைப்பார்கள்! {அப்படி நடந்தால்} அந்தணர்களுடன் கூடிய நாங்கள் எங்கள் நாட்டில் மீண்டும் நிறுவப்படுவோமா?" என்றனர் {என்று கேட்டனர்}.

 

இதைச் சொன்னபிறகு, பரிசுத்த மனம் கொண்ட அறமன்னனான {தர்மராஜாவான} யுதிஷ்டிரன், கண்ணீரால் தடைபட்ட குரலுடன், துயரம் மேலிட மயங்கினான். அதன்பிறகு, அவனது {யுதிஷ்டிரனின்} தம்பிகளுடன் சேர்ந்த அந்தணர்கள் அவனைத் {யுதிஷ்டிரனைத்} தேற்றத் தொடங்கினர். பிறகு தௌமியர், வலிமைமிக்க {சிறந்த} பொருள் நிறைந்த இந்த வார்த்தைகளை அந்த மன்னனுக்குச் {யுதிஷ்டிரனுக்குச்} சொன்னார். அவர் {தௌமியர் - யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நீ கற்றவன், இழப்பைத் தாங்கிக் கொள்ள இயன்றவன், உண்மையில் {சத்தியத்தில்} உறுதியானவன், புலன்களை அடக்கியவன்! இப்படிப்பட்ட முத்திரை கொண்ட மனிதர்கள் பேரிடர்களில் மதிமயங்கமாட்டார்கள். உயர் ஆன்மா கொண்ட தேவர்கள் கூட எதிரிகளை வெல்வதற்காகப் பலதரப்பட்ட இடங்களில் மாறுவேடங்களில் திரிந்திருக்கிறார்கள். இந்திரன், தனது எதிரிகளை வெல்லும் பொருட்டு நிஷாத நாட்டின் கிரிபிரஸ்தத்தில் {நகரம்} உள்ள ஆசிரமத்தில் மாறுவேடத்தில் வசித்துத் தனது முடிவை அடைந்தான்.

 

அதிதியின் கருவறையில் பிறவியெடுக்கும் முன்னர், தைத்தியர்களை அழிக்கும்பொருட்டு, ஹயக்கிரீவன் {குதிரை கழுத்து கொண்ட} வடிவமேற்ற விஷ்ணு நீண்ட காலம் கண்டறியப்படாமல் இருந்தான். அதன்பிறகு குள்ளன் {வாமனன்} வேடத்தைத் தரித்த அவன் {விஷ்ணு}, தனது பராக்கிரமத்தால் பலியின் நாட்டை இழக்கச் செய்ததை நீ கேட்டிருக்கிறாய்! நீருக்குள் நுழைந்த ஹுதாசனன் {அக்னி}, அங்கேயே மறைந்திருந்து, தேவர்களின் காரியத்தைச் சாதித்தான் என்பதையும் நீ கேட்டிருக்கிறாய். ஓ! கடமையை அறிந்தவனே {யுதிஷ்டிரா}, பகைவரை வெல்லும் நோக்கில், சக்ரனின் {இந்திரனின்} வஜ்ராயுதத்தில் நுழைந்த ஹரி அங்கேயே மறைந்திருந்தான் என்பதையும் நீ கேட்டிருக்கிறாய்.

 

ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, மறுபிறப்பாளரான {பிராமணரான} அவுர்வ {ஔர்வ} முனிவர் ஒரு காலத்தில் தேவர்களின் காரியத்திற்காகத் தனது தாயின் கர்ப்பத்திலேயே மறைந்திருந்தார் என்பதை நீ கேட்டிருக்கிறாய். ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, பூமியின் அனைத்து பகுதியிலும் மறைந்திருந்த, சிறந்த சக்தி கொண்ட விவஸ்வத் {சூரியன்}, முடிவில் தனது எதிரிகளை அனைவரையும் எரித்தான். தசரதனின் வசிப்பிடத்தில் மாறுவேடத்தில் வாழ்ந்த, கடுஞ்செயல்கள் புரியும் விஷ்ணு {ராமன்}, போர்க்களத்தில் பத்துக்கழுத்தனை {ராவணனைக்} கொன்றான். முன்னர், பல இடங்களில் மாறுவேடத்தில் இருந்த உயர் ஆன்மா கொண்ட மனிதர்கள் தங்கள் எதிரிகளைப் போர்க்களத்தில் இப்படியே வென்றிருக்கிறார்கள்" என்றார் {தௌமியர்}.

இப்படித் தௌமியரின் வார்த்தைகளால் தேற்றப்பட்டவனும், சாத்திரங்களால் அடையப்பட்ட தன் ஞானத்தை நம்புபவனுமான அறம்சார்ந்த யுதிஷ்டிரன், தனது சுயநினைவை மீண்டும் அடைந்தான். பிறகு, வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனான வலிமை மிக்கக் கரங்கள் கொண்டவனும், பெரும் பலம் கொண்டவனுமான பீமசேனன், மன்னனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} மிகவும் உற்சாகமூட்டும் வகையில், "கடமையுணர்ச்சியுடன் செயல்படுபவனான காண்டீவத்தைத் தாங்குபவன் {அர்ஜுனன்}, (அனுமதிக்காக) உமது முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பதைப் பாரும். அவன் {அர்ஜுனன்} இன்னும் எத்தகு முரட்டுத்தனத்தையும் காட்டவில்லை. கடும் பராக்கிரமம் கொண்ட நகுலனும், சகாதேவனும் எதிரியை அழிப்பதற்கு முழுவதும் இயன்றவர்களாக இருப்பினும், என்னால் எப்போதும் தடுக்கப்பட்டே வந்திருக்கின்றனர்! எங்களை நீர் எதில் ஈடுபடுத்துவீரோ அதிலிருந்து நாங்கள் எப்போதும் விலக மாட்டோம்! செய்ய வேண்டியதை எங்களுக்கு நீர் சொல்லும்! விரைவில் நாங்கள் நம் எதிரிகளை வெல்வோம்!" என்றான் {பீமன்}.

 

பீமசேனன் இதைச் சொன்னதும், அந்தணர்கள் பாரதர்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லினர். பிறகு அவர்களது {பாண்டவர்களின்} அனுமதியைப் பெற்று, அவரவர் பகுதிகளுக்குச் சென்றனர். வேதங்களை அறிந்த முனிவர்களிலும், யதிகளிலும் முதன்மையானவர்களும், பாண்டவர்களை மீண்டும் காண மிகுந்த ஆவல் கொண்டவர்களுமான அவர்கள், தங்கள் இல்லங்களுக்குத் திரும்பினர். பிறகு, கற்ற வீரர்களும், நோன்புகள் கொண்டவர்களுமான அந்த ஐந்து பாண்டவர்களும் தௌமியருடனும் கிருஷ்ணையுடனும் {திரௌபதியுடனும்} {அங்கிருந்து} கிளம்பினர். தனித்தனி அறிவியல்களையும் {சாத்திரங்களையும்}, மந்திரங்களையும், எப்போது அமைதி தீர்மானிக்கப்பட வேண்டும், எப்போது போர் தொடுக்கப்பட வேண்டும் என்பதையும் நன்கறிந்த மனிதர்களில் புலியான அவர்கள் {பாண்டவர்கள்} ஒவ்வொருவரும், கண்டறியப்படக்கூடாத வாழ்வுக்குள் நுழைவதற்காக, அடுத்த நாளில் ஒரு குரோச தூரம்* சென்று, ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்யும் நோக்கில் கீழே அமர்ந்தனர்.
வன பர்வம் முற்றிற்று
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்  

No comments:

Post a Comment