Thursday, December 29, 2022

Mahabharata part 172 in tamil

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-172
வனபர்வம்
..
கர்ணனின் இருப்பிடம் அறிந்த குந்தி
கவசத்தை உரித்தெடுத்த கர்ணன்
..
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இந்த நேரத்தில் திருதராஷ்டிரனின் நண்பனான அதிரதன் என்ற பெயர் கொண்ட ஒரு சூதன், தனது மனைவியுடன் கங்கையாற்றுக்கு வர நேர்ந்தது. ஓ! மன்னா {ஜனமேஜயா}, பூமியில் ஒப்பற்ற அழகு படைத்த அவனது {அதிரதனின்} மனைவியின் பெயர் ராதை ஆகும். அந்த உயர்ந்த அருள் பெற்ற காரிகை {ராதை}, ஒரு மகனை அடைய பெரும் முயற்சி செய்திருந்தாலும், ஓ! எதிரிகளை அடக்குபவனே {ஜனமேஜயா}, அப்படி ஒருவனைப் {ஒரு மகனைப்} பெறுவதில் தோல்வியுற்றிருந்தாள். கங்கையாற்றுக்கு வந்த அவள் {ராதை}, நீரோட்டத்தில் மிதந்து வரும் பெட்டியைக் கண்டாள். ஆபத்துகளில் இருந்து பாதுகாக்கும் சாதனங்களுடனும், களிம்புகளுடனும் {மருந்துகளுடனும்} இருந்த அப்பெட்டியை ஜானவியின் {கங்கையின்} அலைகள் அவளிடம் {ராதையிடம்} கொண்டு வந்து சேர்த்தன. ஆர்வத்தால் ஈர்க்கப்பட்ட அந்தப் பெண் {ராதை}, அதைப் பிடிக்கச் செய்தாள். பிறகு அவள் தேரோட்டி சாதியைச் சேர்ந்த {தனது கணவன்} அதிரதனுக்கு அனைத்தையும் உரைத்தாள். இதைக்கேட்ட அதிரதன் நீர்நிலையில் இருந்து அப்பெட்டியை எடுத்து, {சில} கருவிகளைக் கொண்டு அதைத் திறந்தான். அவன் அதில் {அப்பெட்டியில்} காலைச் சூரியனைப் போன்ற பிள்ளையைக் கண்டான். அந்தக் குழந்தை தங்கக் கவசத்துடனும், காது குண்டலங்களுடன் கூடிய அழகிய முகத்துடன் இருந்தது. அதன்பிறகு அந்தத் தேரோட்டியும், அவனது மனைவியும் {ராதையும்} இத்தகு ஆச்சரியத்தால் தாக்கப்பட்டு, அதிசயத்தால் தங்கள் கண்களை அகல விரித்தனர். அந்தக் குழந்தையைத் தனது மடியில் கிடத்திக் கொண்ட அதிரதன் தனது மனைவியிடம் {ராதையிடம்}, "ஓ! அச்சமுள்ள பெண்ணே {ராதை}, நான் பிறந்ததிலிருந்து இதுபோன்ற அதிசயத்தைக் கண்டதேயில்லை. நம்மிடம் வந்திருக்கும் இந்தக் குழந்தை தெய்வீகப் பிறப்பு கொண்டவனாக இருக்க வேண்டும். உண்மையில், மகனற்ற எனக்குத் தேவர்களே இவனை அனுப்பி வைத்துள்ளனர்!" என்று சொல்லி, ஓ! பூமியின் தலைவா {ஜனமேஜயா} அந்தக் குழந்தையை ராதையிடம் கொடுத்தான்.


அதன்பிறகு ராதை, தேவவடிவமும், தெய்வீக பிறப்பும், தாமரை இதழ்களைப் போன்ற பிரகாசமும், சிறந்த அருளும் நிரம்பிய அக்குழந்தையை {கர்ணனை}, விதிப்படி {தன் மகனாக} தத்தெடுத்துக் கொண்டாள். அவளால் {ராதையால்} முறைப்படி வளர்க்கப்பட்ட அந்தப் பெரும் பராக்கிரமம் கொண்ட குழந்தை {கர்ணன்} வளரத் தொடங்கினான். கர்ணனைத் தத்தெடுத்த பிறகு அதிரதன், தனது மற்ற மகன்களைப் பெற்றான். பிரகாசமான கவசமும், பொன்மயமான காது குண்டலங்களும் பெற்ற அக்குழந்தைக்கு {கர்ணனுக்கு}, இருபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} வசுசேணன் என்று பெயரிட்டார்கள். இப்படியே பெரும் பிரகாசமும், அளவிடமுடியாத பராக்கிரமும் பெற்றவன் {கர்ணன்} தேரோட்டியின் {அதிரதனின்} மகனாகி, வசுசேணன் என்றும் விருஷன் என்றும் அறியப்பட்டான்.

 

தெய்வீக கவசத்துடன் கூடிய தனது மகன் தேரோட்டியின் (அதிரதனின்) மூத்த மகனாக அங்கர்கள் {அங்க நாட்டினர்} மத்தியில் வளர்ந்து வருகிறான் என்பதைப் பிருதை {குந்தி} தனது ஒற்றர்கள் மூலம் {சாரன் வாயிலாக} அறிந்தாள். காலத்தின் செயல்பாட்டில் {ஓட்டத்தில்} தனது மகன் வளர்ந்ததைக் கண்ட அதிரதன், அவனை {கர்ணனை} யானையின் பெயரால் பெயரிடப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} அனுப்பினான். கர்ணன் ஆயுதங்களைக் கற்கும்பொருட்டுத் துரோணரிடம் சென்றான். அந்த வலிமைமிக்க இளைஞனுக்கு {கர்ணன்} துரியோதனனிடம் நட்பு ஏற்பட்டது. துரோணர், கிருபர் மற்றும் ராமன் {பரசுராமர்} ஆகியோரிடம் நான்கு வகை ஆயுதங்களையும் அடைந்த அவன் {கர்ணன்}, வலிமைமிக்க வில்லாளி என்று இவ்வுலகில் புகழைப் பெற்றான்.

 

திருதராஷ்டிரன் மகனிடம் {துரியோதனனிடம்} நட்பேற்பட்ட பிறகு, அவன் {கர்ணன்}, பிருதையின் {குந்தியின்} மகன்களுக்குக் காயமேற்படுத்தும் நோக்கம் கொண்டவனானான். உயர் ஆன்மா கொண்ட பல்குனனுடன் {அர்ஜுனனுடன்} சண்டை போடுவதையே {போரிடுவதையே} அவன் எப்போதும் விரும்பினான். ஓ மன்னா {ஜனமேஜயா}, அவர்கள் {கர்ணனும் அர்ஜுனனும்} முதன்முதலாக ஒருவருக்கொருவர் பார்த்தபோதிலிருந்தே, கர்ணன் எப்போதும் அர்ஜுனனுக்குச் சவால் விடுவான். அர்ஜுனனும் அவனது பங்குக்கு  {கர்ணனிடம்} சவால் விடுவான். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, இதுவே குந்தியிடம் தான் பெற்று, சூதர்கள் குலத்தால் வளர்க்கப்பட்ட கர்ணனைக் குறித்துச் சூரியன் அறிந்த ரகசியம் என்பதில் சந்தேகமில்லை.

 

காது குண்டலங்களுடனும், கவசத்துடனும் இருக்கும் அவனைக் {கர்ணனைக்} கண்ட யுதிஷ்டிரன், அவனைப் {கர்ணனைப்} போரில் கொல்ல முடியாது என்று எண்ணி, அதனால் எப்போதும் {உள்ளத்தில்} பெரும் வலி கொண்டான். ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, நாளின் மத்திய வேளையில், கர்ணன் நீரில் இருந்து எழுந்ததும், கரங்கள் கூப்பி பிரகாசமிக்கச் சூரியனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அப்போது அவனிடம் {கர்ணனிடம்} செல்வம் கேட்பதை அந்தணர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், இருபிறப்பாளர்களுக்கு {பிராமணர்களுக்கு} ஒன்றைக் கொடுக்க முடியாது என்று சொல்ல அவனுக்கு ஏதுமில்லை. பிறகு, (இது போன்ற ஒரு சமயத்தில்) இந்திரன், அந்தண வேடம் பூண்டு அவன் {கர்ணன்} முன் தோன்றி, "எனக்குக் {பிட்சை} கொடு!" என்று கேட்டான். அதன் பிறகு ராதையின் மகன், "நீர் வரவேற்கப்படுகிறீர் {நல்வரவு}!" என்று மறுமொழி கூறினான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தேவர்களின் தலைவன் {இந்திரன்}, அந்தண வேடம் தரித்து வந்த போது, அவனைக் கண்ட கர்ணன் {இந்திரனிடம்}, "நல்வரவு!" என்றான். அவனது {அந்த அந்தணரின்} நோக்கத்தை அறியாத அதிரதனின் மகன் {கர்ணன்}, அந்த அந்தணனிடம் {இந்திரனிடம்}, "தங்கத்தாலான அட்டிகை {#}, அழகிய காரிகைகள் {#}, அபரிமிதமான பசுக்களுடன் நிறைந்த கிராமங்கள் ஆகியவற்றில் நான் எதை உமக்குக் கொடுக்க வேண்டும்?" என்று கேட்டான். அதற்கு அந்த அந்தணன் {இந்திரன்}, "நான் தங்கத்தாலான அட்டிகையையோ, அழகிய காரிகைகளையோ வேறு ஏதும் ஏற்புடைய பொருளையோ உன்னிடம் கேட்கவில்லை. அவைகளைக் கேட்பவர்களுக்குக் கொடுப்பாயாக. ஓ!பாவமற்றவனே {கர்ணா}, நீ உனது நோன்பில் உண்மையுள்ளவனாய் இருக்கிறாய் என்றால், (உனது மேனியில் இருக்கும்) உன் உடலுடன் ஒட்டிப்பிறந்த இந்தக் கவசத்தையும், இந்தக் காது குண்டலங்களையும் அறுத்து எனக்கு அளிப்பாயாக!" என்றான். இந்த வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் {இந்திரனிடம்}, "ஓ! அந்தணரே, நான் உமக்கு வீடு தோட்டத்துடன் கூடிய நிலத்தையும், அழகிய காரிகைகளையும், பசுக்களையும், கழனிகளையும் {fields} கொடுப்பேன்; ஆனால் எனது கவசத்தையும், காது குண்டலங்களையும் உமக்குத் தர இயலாதவனாக இருக்கிறேன்!" என்றான்.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இப்படிக் கர்ணனால் பலவிதமான வார்த்தைகளில் மறுக்கப்பட்டாலும், ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, அந்த அந்தணன் {அதாவது இந்திரன்} வேறு எந்த வரத்தையும் கேட்கவில்லை. கர்ணன் தன் சக்தியால் இயன்றவரை அவனைச் சமாதானப்படுத்தி, முறையாக வழிபட்டாலும், அந்த அந்தணர்களில் சிறந்தவன் வேறு எந்த வரத்தையும் கேட்கவில்லை. அந்த அந்தணர்களில் முதன்மையானவன் {இந்திரன்}, வேறு எந்த வரத்தையும் கேட்காத போது, ராதையின் மகன் {கர்ணன்}, அவனிடம் {இந்திரனிடம்} புன்னகையோடு, "ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, எனது கவசம் எனது உடலோடு பிறந்தது, இந்தக் காது குண்டலங்கள் அமிர்தத்தில் இருந்து எழுந்தவை. இவற்றாலேயே உலகங்களில் நான் கொல்லப்பட முடியாதவனாக இருக்கிறேன். எனவே, அவற்றை என்னால் பிரிய முடியாது. ஓ! அந்தணர்கள் மத்தியில் உள்ள காளையே, செழிப்பு நிறைந்ததும், எதிரிகளற்றதுமான இந்த முழு உலகத்தின் அரசாட்சியை என்னிடம் இருந்து பெற்றுக் கொள்வீராக! ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரே, எனது காது குண்டலங்களையும், என்னுடலுடன் பிறந்த கவசத்தையும் நான் இழந்தால், எதிரிகளால் வெல்லத்தக்கவன் ஆகிவிடுவேன்!" என்றான் {கர்ணன்}.

 

வைசம்பாயனர்  {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பகனைக் கொன்ற அந்தச் சிறப்புவாய்ந்தவன் {இந்திரன்} வேறு வரத்தைக் கேட்காத போது, கர்ணன் அவனிடம் {இந்திரனிடம்} மீண்டும் புன்னகையுடன், "ஓ! தேவர்களுக்குத் தேவா, ஓ! தலைவா {இந்திரா}, இதற்கு முன்பே நான் உன்னை அடையாங்கண்டு கொண்டேன். ஓ! சக்ரா {இந்திரா}, நீயே தேவர்களுக்குத் தலைவனாதலால், உனக்கு நான் பயனில்லாத வரத்தை அளிப்பது முறையாகாது! மறுபுறம், நீயே படைப்பாளனும், அனைத்து உயிரினங்களுக்கும் தலைவனாக இருப்பதால், நீயே எனக்கு வரங்களை அளிக்க வேண்டும்! ஓ! தேவா {இந்திரா}, நான் இந்தக் கவசத்தையும், காது குண்டலங்களையும் உனக்கு அளித்தால், நான் அழிவைச் சந்திப்பேன் என்பது நிச்சயம். நீயும் கேலிக்குள்ளாக்கப்படுவாய். எனவே, ஓ! சக்ரா {இந்திரா}, எனது குண்டலங்களையும், சிறந்த கவசத்தையும் எடுத்துக் கொண்டு அதற்கீடாக ஏதாவது ஒன்றை எனக்கு அளிப்பாயாக! இல்லையெனில், நான் அவற்றை உனக்குத் தர மாட்டேன்!" என்றான் {கர்ணன்}. உடனே சக்ரன் {இந்திரன் கர்ணனிடம்}, "நான் உன்னிடம் வருவதற்கு முன்பே, சூரியன் எனது நோக்கத்தை அறிந்து, அனைத்தையும் உனக்கு விளக்கிருக்கிறான் என்பதில் ஐயமில்லை! ஓ கர்ணா, நீ விரும்பியது போலவே ஆகட்டும்! ஓ மகனே, வஜ்ராயுதத்தைத் தவிர, நீ பெற விரும்புவது யாது என்பதை எனக்குச் சொல்!" என்று கேட்டான்.

 

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இந்திரனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் மகிழ்ச்சியில் நிறைந்து, தனது காரியம் நிறைவேறப்போவதைக் கண்டு வாசவனை {இந்திரனை} அணுகி, தடுக்கப்பட முடியாத கணையைப் பெற எண்ணி, இந்திரனிடம், "ஓ! வாசவா, எனது கவசத்துக்கும் காது குண்டலங்களுக்கும் ஈடாகத் தடுக்கப்பட இயலாததும், போரின் பொருட்டு அணிவகுக்கும் எதிரிக் கூட்டத்தை அழிக்கத் தகுதி வாய்ந்ததுமான கணையொன்றை எனக்குத் தருவாயாக!" என்றான் {கர்ணன்}.

 

உடனே, ஓ! பூமியின் ஆட்சியாளனே {ஜனமேஜயா}, ஒருக்கணம் அந்தக் கணையை மனதில் நிறுத்தி (அதை அங்குக் கொண்டுவரும் பொருட்டு), வாசவன் {இந்திரன்} கர்ணனிடம், உனது காது குண்டலங்களையும், உனது உடலுடன் ஒட்டிப் பிறந்த கவசத்தையும் எனக்கு அளித்து, அதற்கு ஈடாகச் சில நிபந்தனைகளின் பேரில் இந்தக் கணையைப் பெற்றுக் கொள்! நான் போர்க்களத்தில் தைத்தியருடன் மோதும்போது, கலங்கடிக்கப்படாத இந்தக் கணை, எனது கைகளால் வீசப்பட்டு, எதிரிகளை நூற்றுக்கணக்கில் அழித்து, நோக்கம் நிறைவேறியதும் எனது கைக்கே திரும்பி வந்துவிடும். எனினும், உனது கையில் இந்தக் கணை, ஓ! சூதனின் மகனே {கர்ணா}, உனது எதிரியில் பலமிக்க ஒரே ஒருவனைக் கொல்லும். அந்தச் சாதனையை அடைந்த பின்னர், அது உறுமிக்கொண்டும், சுடர்விட்டுக்கொண்டும் என்னிடம் திரும்பிவிடும்!" என்றான் {இந்திரன்}.

அதற்குக் கர்ணன் {இந்திரனிடம்}, "நான் யாருக்கு அஞ்சி இருக்கிறேனோ, அந்தப் பெரும் கர்ஜனை செய்யும் தீ போன்று சூடான என்னுடைய ஓர் எதிரியைக் கடும்போரில் கொல்ல நான் விரும்புகிறேன்" என்றான். அதற்கு இந்திரன், "அப்படிக் கர்ஜிக்கும் பலம் நிறைந்த எதிரியை நீ போர்க்களத்தில் கொல்வாய். ஆனால், நீ கொல்ல நினைக்கும் அவன், சிறப்பு மிக்க ஒரு நபரால் பாதுகாக்கப்படுகிறான். "வெல்லப்படமுடியாத பன்றி {வராகம்}" என்றும், "புரிந்துகொள்ளப்பட முடியாத நாராயணன்" என்றும் {பஜ்ஞவராகன் என்றும் வெல்லப்படாத நாராயணன் என்றும்} வேதம் அறிந்தவர்களால் அழைக்கப்படும் அந்தக் கிருஷ்ணன் அவனைப் பாதுகாத்து வருகிறான்!" என்றான். அதற்குக் கர்ணன் {இந்திரனிடம்}, "அது அப்படியே இருந்தாலும், ஓ! சிறப்புமிக்கவனே {இந்திரா}, ஒரே ஒரு சக்திவாய்ந்த எதிரியை {நிச்சயம்} அழிக்கும் அந்த ஆயுதத்தை எனக்குக் கொடுப்பாயாக! எனது பங்குக்கு நான் எனது கவசத்தையும், காது குண்டலங்களையும் எனது மேனியில் இருந்து அறுத்து உனக்குக் கொடுப்பேன். எனினும், இதனால் காயப்படும் எனது உடல் காணச்சகியாதது ஆகாமல் நீ அருள வேண்டும்!" என்றான்.

 

இதைக் கேட்ட இந்திரன் {கர்ணனிடம்}, "ஓ! கர்ணா, நீ உண்மையை நோற்க {சத்தியத்தைப் பேண} உள்ளதால், உனது மேனி காணச்சகியாததாகவோ, வடு உடையதாகவோ ஆகாது. ஓ! பேச்சால் அருளப்பட்டவர்களில் சிறந்தவனே, ஓ! கர்ணா, நீ உனது தந்தையைப் போலவே சக்தியும் நிறமும் கொண்டிருப்பாய். கோபத்தில் பித்தேறி, உன்னிடம் வேறு ஆயுதங்கள் இருக்கும்போதோ, உனது உயிருக்கு உடனடி ஆபத்து இல்லாதபோதோ இந்தக் கணையை நீ ஏவினால், இது உன்மேலேயே விழும்" என்றான். கர்ணன் {இந்திரனிடம்}, "ஓ! சக்ரா {இந்திரா}, நீ சொல்வது போலவே, எனது உயிருக்கு உடனடி ஆபத்து இருக்கும்போது மட்டுமே நான் இந்த வாசவி {இந்திரசக்தி} கணையை வீசுவேன்! இதை உண்மையாக உனக்குச் சொல்கிறேன்!" என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, சுடர்விடும் கணையைப் பெற்றுக் கொண்ட கர்ணன், தனது இயற்கை கவசத்தை உரிக்கத் தொடங்கினான். தனது உடலை வெட்டிக் கொள்ளும் கர்ணனைக் கண்ட தேவர்கள், தானவர்கள் மற்றும் மனிதக் கூட்டம் சிம்ம கர்ஜனை புரிந்தது. அப்படிக் கர்ணன் தனது கவசத்தை உரித்துக் கொண்டிருந்த போது முகத்தில் எந்தவித கடும் மாற்றத்தையும் {விகாரத்தையும்} காட்டிக் கொள்ளவில்லை. மனிதர்களில் வீரனான அவன் {கர்ணன்}, மீண்டும் மீண்டும் புன்னகைத்துக் கொண்டே ஆயுதம் கொண்டு தனது உடலை அறுத்துக் கொண்டிருந்த போது, தேவலோக பேரிகைகள் {#} முழங்கின; தெய்வீக மலர் மாரி பொழிந்தது. தனது சிறந்த கவசத்தைத் தனது மேனியில் இருந்து அறுத்தெடுத்த கர்ணன், இன்னும் {குருதி} சொட்டிக் கொண்டிருந்த அதை {கவசத்தை} வாசவனிடம் {இந்திரனிடம்} கொடுத்தான். தனது காதுகளில் இருந்து காதுகுண்டலங்களையும் அறுத்த அவன், அவற்றையும் இந்திரனிடம் கொடுத்தான்.

 

இந்தக் காரணத்தின் அடிப்படையிலேயே அவன் கர்ணன் என்று அழைக்கப்பட்டான். கர்ணனை  இப்படி ஏமாற்றி அவனை உலகப் புகழடையச் செய்த சக்ரன், பாண்டு மகன்களின் காரியம் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதாக எண்ணி புன்னகைத்தான். இவை அனைத்தையும் செய்து முடித்த அவன் {கர்ணன்} சொர்க்கத்திற்கு உயர்ந்தான். கர்ணன் ஏமாற்றப்பட்டதை அறிந்த திருதராஷ்டிரன் மகன்கள் அனைவரும் துயருற்று செருக்கிழந்தார்கள். மறுபுறம், பிருதையின் {குந்தியின்} மகன்கள், தேரோட்டியின் மகனுக்கு {கர்ணனுக்கு} ஏற்பட்ட அவல நிலையை அறிந்து, மகிழ்ச்சியால் நிறைந்தனர்."

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "பாண்டுவின் மகன்களான அவ்வீரர்கள் அந்நேரத்தில் எங்கிருந்தனர்? இந்த வரவேற்கத்தக்க செய்தியை அவர்கள் யார் மூலம் அறிந்தார்கள்? வனவாசத்தின் பனிரெண்டாவது ஆண்டுக் கழிந்ததும் அவர்கள் என்ன செய்தார்கள்? ஓ! சிறப்புமிக்கவரே இவை அனைத்தையும் எனக்குச் சொல்வீராக!" என்று கேட்டான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "சைந்தவர்கள் தலைவனை {ஜெயத்ரதனை} வீழ்த்தி, கிருஷ்ணையை {திரௌபதியை} மீட்ட அவர்கள், காட்டில் தங்கள் வனவாசத்தின் வலி நிறைந்த காலத்தை முழுதும் கடத்தி, மார்க்கண்டேயர் உரைத்த தேவர்கள் மற்றும் முனிவர்கள் குறித்த பழங்கதைகளைக் கேட்ட பிறகு, மனிதர்களில் வீரர்களான அவர்கள் காம்யக வனத்தில் இருந்த தங்கள் ஆசிரமத்தில் இருந்து, தங்கள் அனைத்து தேர்களுடனும், தொண்டர்களுடனும், தேரோட்டிகள், பசுக்கள், தங்களைத் தொடர்ந்த குடிமக்கள் ஆகிய அனைவருடனும் புனிதமான துவைத வனத்திற்கு மீண்டும் சென்றனர்.

தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்  

No comments:

Post a Comment