*ஶ்ரீமத் பாகவதம்* --34
ஓம்.🙏
இனி கலியுகத்தில் வரும் மாந்தர்களுக்கு ஒரு கவலையும் இல்லை. என்றெல்லாம் மகிழ்ந்தவருக்கு தான் கொடுத்த கிரந்தங்களை மக்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்று பார்க்க ஆவல் ஏற்பட்டது.
கண்களை மூடி சற்று பவிஷ்யத்தைப் பார்த்தவர் இடிந்துபோனார். வேதங்களையும், புராணங்களையும் சீந்துவாரில்லை. எங்கோ ஒரு சிலரைத் தவிர வேறெவரும் அவற்றைச் சட்டை செய்யவில்லை. மிகவும் சுவையான, எக் காலத்திற்கும், அனைத்து மக்களுக்கும் ஏற்றவாறு தர்மங்களை எடுத்துச் சொல்லும் மஹாபாரதமும் வீண் விவாதங்களுக்கும் பட்டிமன்றம் நடத்துவதற்குமே பயன்பட்டது. மக்கள் எப்போதும் எதையோ தேடி அலைந்துகொண்டேயிருந்தனர்.
தலை சுற்றியது வியாசருக்கு. பகவத் ஸ்மரணையின்றி ஒரு பெரும் மக்கள் கூட்டம். எப்படி கரையேறுவார்கள்? தன் உழைப்பு அவ்வளவும் வீணாகிவிட்டதாய் உணர்ந்தார்.
தளர்ந்த மனநிலையோடு தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டார்.
மஹான்களின் கவலை எப்போதும் உலகிலுள்ளோரின் நன்மையைப் பற்றியதே. அவர்களுக்கு அவ்வாறு ஏற்படும் கவலை ஒரு பெருத்த நன்மையில் முடியும்.ஸாதுக்களுக்கு கவலை ஏற்படுமாயின் அவ்விடத்தில் பகவான் உடனே ஆவிர்பவிப்பான். அல்லது தகுந்த குருவை உடனே அனுப்பிவைப்பான். நாரதரின் கவலையைப் போக்க ஸனத் குமாரர் வந்ததை மாஹாத்மியத்தில் பார்த்தோம்.
எந்த ரத்னாகர் என்ற வழிப்பறிகாரனுக்கு உபதேசம் செய்து அவனை வால்மீகி முனிவர் என ஆக்கி ஶ்ரீ இராமாயணம் என்ற மஹா காவியம் உலகிற்கு கிடைக்க வழிவகுத்துக் கொடுத்தாரோ, அதே ஶ்ரீ நாரத மஹரிஷி இப்போது இங்கே ஶ்ரீமத் பாகவதம் உருவாக்கி தர வருகை தந்தார்.
ஆனால் இன்றைய உலகில் இது போன்ற மகரிஷிகளை சிறிது கூட அறிந்து கொள்ளாது கதைகளிலும், புராணம் சொல்பவர்களும், திரைப்படங்களிலும் இவரை ஒரு ஹாஸ்ய பாத்திரமாகவே சித்தரித்து காட்டுகிறார்கள். இவரையே கலகம்பிரியர் என விமரிசிக்கின்றனர்.இது கலியுகத்தில் நடக்கவே செய்யும். என்ன செய்வது?
வியாஸரின் கவலையைப் போக்க நாரதரே அவ்விடம் வந்தார். வியாஸர் நாரதர் வருவதைக் கண்டதும் வரவேற்று, அவரை உரிய மரியாதைகளுடன் பூஜை செய்தார்.
நாரதர், உபதேசம் செய்யலுற்றார்.வியாஸரைப் பார்த்து நாரதர் கேட்டார்
நீங்கள் நலமோடு இருக்கிறீரா?
உடல்நலக்குறைவா? அல்லது
மனத்தில் ஏதாவது கவலையிருக்கிறதா? உம்மைப் போன்ற மஹாத்மாக்களின் கவலை லோகோத்தாரணத்திற்கு வழியாயிற்றே..
வியாஸர் சொன்னார்
நாரதரே நீங்கள் சூரியனைப்போல் அனைத்தையும் அறிவீர். காற்றைப் போல் எல்லா இடங்களிலும் நுழைந்து ஸஞ்சாரம் செய்யக்கூடியவர். தங்களது உபாசனா தெய்வமோ பரமபுருஷனேயாவார்.
தங்களைப் போன்ற ஸாதுக்களிடம் எதையாவது மறைக்க முடியுமா? நீங்கள் ஹ்ருதயம் நுழைந்து அனுக்ரஹம் செய்பவராயிற்றே. என் கவலை தங்களுக்குத் தெரியாதா? அது நீங்குவதற்கு உபாயமும் தாங்களே சொல்லுங்கள்.
நீங்கள் ஒருவரும் சாதிக்கமுடியாத பெரிய காரியத்தை சாதித்திருக்கிறீர்கள். வேதத்தைப் பகுப்பதென்ன எளிதா?
எவ்வளவு புராணங்கள் செய்திருக்கிறீர்! மஹாபாரதம் போல் உண்டா? ஆனாலும்..
என்ன ஆனாலும்?
"வியாஸரே! நீர் அறம், பொருள், இன்பம், வீடு என்கிற நான்கைப் பற்றியும் பேசினீர். அதை நீர் செய்திருக்கக் கூடாது. முக்கியமான வீடு பேறாகிற மோட்சத்தை பற்றித்தான் விரிவாக உபதேசித்திருக்க வேண்டும். மக்களிடம் தேவையான அளவு மட்டுமே தர்மத்தை பற்றியும், அர்த்தத்தைப் பற்றியும் கூற வேண்டும். நிரம்ப மோட்சத்தைப் பற்றித்தான் கூற வேண்டும். ஒரு சிறு குழியில் சாதப் பருக்கைகள் கிடந்தால், காக்கைகள் அதை உண்டு விட்டுப் போகும். ஆனால், மானஸரோவரத்தில் பறக்கும் ஹம்ஸப் பறவைகள் அதைத் தீண்டாது. அதேபோல், நீர் செய்திருக்கும் உபதேசம் பெரியோர்களால் தீண்டப்படாது. வியாஸரே! தர்மத்தையும், அர்த்தத்தையும் பேசப் பேசச் செருக்கு வளரும். ஆனால், மோட்சத்தைப் பற்றியும், பகவானைப் பற்றியும் பேசினால் பண்பும், பணிவும் வளரும்" என்றார் நாரதர்.
இதில் இரு வகைப்பட்டவர்களைப் பற்றி வியாஸர் நிரம்பப் பேசினார். அதாவது, நல்லது செய்ய வேண்டும், நல்லவனாக வாழ வேண்டும், அதற்கு மேல் கவலை இல்லை என்பவர்களைப் பற்றியும்; நல்லது செய்து புண்ணியத்தைச் சேமித்து, அதனால் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்பவர்களைப் பற்றியும் பேசினார். ஆனால், புண்ணிய - பாபங்கள் இரண்டையும் தொலைத்து முக்தி அடைய வேண்டும் என்பதைப் பற்றிக் குறைவாகக் கூறி விட்டார்.
அதுதான் இப்போது நாரதருக்குக் கவலை. "வியாஸரே! நீர் ஏன் திருப்தி இல்லாமல் இருக்கிறீர் தெரியுமா? உபதேசிக்கும்போது, மக்களால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்ததைத்தான் உபதேசிக்க வேண்டும். நீர் 'கர்மங்களைச் செய்வாயாக! அதனால் சொர்க்கம் கிடைக்கும்' என்று உபேசித்தீர். மக்களும் கர்மங்களைச் செய்து, அதனால் மேலும் மேலும் பிறவி அடைவார்கள். நீர் என்ன சொல்லியிருக்க வேண்டும்? இந்தக் கர்மங்களோ, பாபமோ, புண்ணியமோ ஏதும் பயன் இல்லை. பலனைக் கருதாமல் செய்த கர்மத்தால் - அதுவும் இறைவனிடத்தில் ஸமர்ப்பிக்கப்பட்டு விட்ட கர்மத்தால்தான் முக்தி கிட்டும். இதைத் தெளிவாகச் சொல்லியிருந்தால், மக்களும் இன்பப்பட்டிருப்பார்கள்; மகேசனும் இன்பப்பட்டிருப்பான்! உம்முடைய உள்ளமும் ஆனந்தப்பட்டிருக்கும். நல்ல வாய்ப்பை இழந்து விட்டீர்!
🙏ஓம்.
-----------காத்திருப்போம்
No comments:
Post a Comment