Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
கீதாசாரம்- முகவுரை
கீதா சாரம்
பாஞ்சஜன்யம் ஹ்ருஷீகேச:
மகாபாரத யுத்தஆரம்பத்தில் பீஷ்மர் துரியோதனனை உத்ஸாஹப்படுத்தும் பொருட்டு சங்கை ஊதவே கண்ணன் அதற்கு பதிலென தன சங்கை ஊதினான். கண்ணின் சங்கான பாஞ்சஜன்யம் அவன் அன்பருக்கு இனிய கீதம் .ஆனால் பகைவருக்கு மரண சங்கு. பாஞ்ச ஜன்யம் ப்ரணவஸ்வரூபம் .ஓமித்யேகாக்ஷரம் பிரம்ம என்கிறது உபநிஷத்.
மகாபாரத யுத்தம் என்பது நல்ல சக்திகளுக்கும் தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டம்., அதாவது நமக்குள்ளே எப்போதும் நடந்துகொண்டிருப்பது.
நல்ல எண்ணங்கள் பாண்டவர்களைப் போல சிறுபான்மை ஆனவை. கேட்ட எண்ணங்கள் கௌரவர்களைப் போல பெரும்பான்மை ஆனவை. ஆயினும் தெய்வசக்தியால் நல்லவை வெற்றி பெறுகின்றன.
ஆயினும் அந்த தெய்வசக்தியைப் பெறுவதற்கு அந்தர்யாமியான பகவானை அர்ஜுனன் போல நமக்கு சாரதியாக இருக்கும்படி வேண்ட வேண்டும்.அவனே சாரதி ஆனால் ஜீவனாகிய நாம் உடலென்னும் ரதத்தில் செல்லும்போது மனம் என்னும் கடிவாளத்தினால் இந்திரியங்களாகிய குதிரைகள் அடங்குகின்றன. அப்போது வெற்றி நிச்சயம். இவ்வாறு பார்த்தசாரதியாகிய பகவான் நாம் பார்த்த சாரதியாகிறான்.
ஸர்வோபநிஷதோ காவோ தோக்தா நந்தன:
பார்த்தோ வத்ஸ: ஸுதீர்போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத் (கீதா த்யான ஸ்லோகம்)
உபநிஷத்துக்களே பசுக்கள், கறப்பவன் கோபாலநந்தனன் (இடைச்சிறுவன்- ஆதலால் கறப்பதில் தேர்ந்தவன்) அர்ஜுனனே கன்றாகிறான் . கன்றை வைத்துத்தான் பால் கறக்க முடியும். ஆனால் பாலை அருந்துபவர் நல்லோர் . அர்ஜுனனை வியாஜமாக வைத்து கண்ணன் கீதை என்னும் அரிய அம்ருதத்தை உலகத்துக்கு அளித்தான். உபநிஷத்தில் உள்ள உண்மைகளை சாமான்ய மக்களும் அறிவதற்காக கண்ணன் கருணை கூர்ந்து அளித்ததே பகவத் கீதை என்னும் அமுதம். ஏனென்றால் அவன் ஜகத்குரு அல்லவா?
இது ஆன்மீக அறிவை நாடுபவர்க்கு மட்டுமல்லாமல் உலக வாழ்க்கையில் ஈடுபட்டவருக்கும் நன்மை தரும் உபதேசம். இதைத் தெரிந்தவர் வாழ்க்கையிலும் வெற்றி பெறுவர். இப்போது உள்ள உலகம் பரவிய PRINCIPLES, PSYCHOLOGY CONCEPTS எல்லாமே கீதையில் கூறியுள்ள வழிமுறையே. இதை தெரிந்துகொண்டால் எல்லோரும் அவரவர் துறையில் முன்னேற்றம் அடைவர்.
No comments:
Post a Comment