Wednesday, October 27, 2021

Seethamma Paatti - Periyavaa

*பெரியவா ஒருநாள் கூட 'இப்படியெல்லாம் செய்யாதே!' என்று ஸீதம்மா பாட்டியை தடுத்ததில்லை!*

பெரியவாளுடைய பரம பக்தை ஸீதம்மா பாட்டி! இவள் ஆந்த்ராவின் தெனாலியைச் சேர்ந்தவள்.

ஸீதம்மாவும் அவளுடைய கணவரும் ஆரம்ப காலங்களில் ஸ்ரீ ரமண பகவானிடம் மிகுந்த பக்தி பூண்டிருந்தார்கள். அடிக்கடி திருவண்ணாமலை சென்று பகவானை தர்ஶனம் செய்வதையே வாழ்வாதாரமாக கொண்டிருந்தார்கள்.

பகவான் தன்னுடைய ஶரீரத்தை மறைத்துக் கொண்டதும், நம் பெரியவாளையே கொழுகொம்பாக கொண்டு, பின்னிக் கொண்டார்கள். அவர்களுடைய பேச்சு, மூச்சு ஸர்வமும் பெரியவாதான்!

நல்ல பணவசதி கொண்டவர்கள். அதே போல், அதற்கு வசதியாக, பரந்த மனமும் கொண்டவர்கள். தன்னுடைய அத்தனை நகைகளையும் உருக்கி, தங்கக்காஸுகளாக பண்ணி, பெரியவாளுக்கு கனகாபிஷேகமே பண்ணிவிட்டாள் ஸீதம்மா !

அவளுடைய கணவர் மோக்ஷ ஸாம்ராஜ்யத்தை அடைந்ததும், தன்னுடைய மீதி ஸொத்துக்களையும், வீட்டையும், ஸ்ரீமடத்துக்கே தந்துவிட்டாள்.

இப்பேர்ப்பட்ட சுயநலமில்லா நல்ல ஹ்ருதயத்துக்கு, பெரியவாளுடைய அனுக்ரஹமும் அபரிமிதமாகவே இருந்தது.

புஷ்பங்களில், முட்களோடு உள்ளது, காய்ந்தது, அழுகினது இவற்றை ஶ்ரத்தையாக நீக்கி, நிறைய கூடை கூடையாக துளஸீ தளங்களையும், வாஸனை புஷ்பங்களையும் கொண்டு வந்து பெரியவாளுடைய சிரஸில் அப்படியே கொட்டுவாள் ஸீதம்மா பாட்டி!

அது மட்டுமா?

கூடை கூடையாக குங்குமம், விபூதி, மஞ்சள் பொடி, வாஸனைப்பொடி எல்லாவற்றையும் கொண்டு பெரியவாளுக்கு அபிஷேகமே செய்வாள்!

பெரியவா ஒருநாள் கூட 'இப்படியெல்லாம் செய்யாதே!' என்று ஸீதம்மா பாட்டியை தடுத்ததில்லை! வேறு யாருக்குமே அந்த பாக்யத்தை பெரியவா அனுக்ரஹித்ததும் இல்லை!

கிடைத்ததை ப்ரஸாதமாக உண்டு; அத்தனையும் பெரியவாதான்! என்று பவித்ரமான, நிர்மலமான மனஸோடு பெரியவாளுக்கெனவே வாழ்ந்த ஒரு உத்தமமான ஜீவன்….. ஸீதம்மா பாட்டி!

*kn*

No comments:

Post a Comment