Friday, October 29, 2021

I wont forget him - Nammazhwar

நாலாயிர திவ்ய பிரபந்தம் - மறப்பனோ இனி யான்?
ஞானம் எப்படி வரும் ? 
நாம் நிறைய தெரிந்து வைத்து இருக்கிறோம். 
யாரிடம் இருந்து? 
தெரியாதவர்களிடம் இருந்து நாம் தெரிந்து வைத்து இருக்கிறோம். 
நாம் சிறு பிள்ளையாக இருக்கும் போது நம்மைச் சுற்றி இருக்கும் வயதானவர்கள் சொல்வதை எல்லாம் உண்மை என்று கேட்டு, அப்படியே நம்பி நம் தலையில் ஏற்றிக் கொண்டு இருக்கிறோம். அந்தச் சின்ன வயதில் பெரியவர்கள் பொய் சொல்வார்கள் என்று நமக்குத் தோன்ற வாய்ப்பில்லை. அவர்களும் பொய் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. அவர்களுக்குத் தெரிந்ததை, அவர்கள் நம்பியதை நமக்கு உண்மை என்று சொல்லி தந்தார்கள். நாமும் அவற்றை உண்மை என்றே ஏற்றுக் கொண்டு விட்டோம். 
பின்னாளில், புது புது ஞானங்கள் வரும். ஆனால், நாம் நம்பியதை நம்மால் விட முடியாது. இத்தனை நாள் இது உண்மை என்று என்னவெல்லாமோ செய்து விட்டோம். இப்போது அது உண்மை இல்லை என்றால் கொஞ்சம் கோமாளி மாதிரி இருக்கும். எனவே, அதை விடாமல் பற்றிக் கொண்டு இருக்கிறோம். 
புது ஞானங்கள் வர விடுவதே இல்லை. ஐந்து வயதில் கற்றதுதான் ஞானம். அதற்குப் பிறகு எது புதிதாக வந்தாலும், அவற்றை தவறு என்று ஒதுக்கி விட்டு, நாம் ஐந்து வயதில் கற்றதை மட்டும் உண்மையான ஞானம் என்று பிடித்துக் கொள்கிறோம். 
பழசை மறந்தால் அல்லவா, புதிய சிந்தனைகள், ஞானங்கள் உள்ளே வரும்?
சொல்வது நம்மாழ்வார். 
"எனக்கு மறதியும் இல்லை. ஞானமும் இல்லை. ஒரு வேளை நான் மறந்து போவேனோ என்று அஞ்சி அந்த செந்தாமரைக் கண்ணன் எனக்குள்ளேயே வந்து இருந்து கொண்டான். இனிமேல் அவனை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன்" என்கிறார். 
பாடல் 
மறப்பும் ஞானமும் நானொன்றும் உணர்ந்திலன்,
மறக்குமென்று செந்தாமரைக் கண்ணொடு,
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை,
மறப்பனோ இனி யான் என் மணியையே?
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி நளினி கோபாலன் அவர்கள்

No comments:

Post a Comment