Tuesday, August 24, 2021

Krishna Avatar part 31

ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ... 🙏🙏🙏
     
           தஸாவதாரம்

          ஸ்ரீகிருஷ்ணாவதாரம்

 பகுதி 31

 பலபல நாழம்சொல்லிப் பழித்த சிசுபாலன் தன்னை

 அலவலைமை தவிர்த்த அழகன் அலங்காரன்மலை

 குலமலை கோலமலை குளிர்மாமலை கொற்றமலை

 நிலமலை நீண்டமலை திருமாலிருஞ் சோலையதே.

 பெரியாழ்வார் திருமொழி 04.03.05

 விளக்கம்

பலபல நாழம்
-
பலபல குற்றங்களை

சொல்லி
-
சொல்லி

பழித்த
-
தூஷித்த

சிசுபாலன் தன்னை
-
சிசுபாலனுடைய

அலவலைமை
-
அற்பத்தனத்தை

தவிர்த்த
-
போக்கியருளின

அழகன்
-
அழகையுடையவனும்

அலங்காரன்
-
அலங்காரத்தையுடையவனுமான கண்ணபிரான் (எழுந்தருளியிருக்கிற)

மலை
-
மலையானது:

குலம் மலை
-
தொண்டர்குலத்துக்குத் தலையான மலையும்

கோலம் மலை
-
அழகையுடைய மலையும்

குளிர்மாமலை
-
குளிர்ந்த பெரியமலைகள்

கொற்றம் மலை
-
வெற்றியுடைய மலையும்

நிலம் மலை
-
(நல்ல மரங்கள் முளைக்கக் கூடிய) நிலத்தையுடைய மலையும்

நீண்ட மலை
-
நீளமான மலையுமான
திருமாலிருஞ்சோலை அதே.      

 சிசுபாலன் வதம்

பாரத யுத்தத்திற்கு முன் தருமரால் ராஜசூய யாகம் நடத்த ஏற்பாடாகியது. தருமரே இந்த ராஜசூய யாகத்தின் "யஜமான்" ஆகவும் யாகத்தின் முக்கிய ஆஹூதிகளை அளிப்பவனாகவும் நியமிக்கப்பட்டான். ஏற்கெனவே ஒரு பெரிய மண்டபத்தில் நூற்றுக்கணக்கான அந்தணர்கள் அமர்ந்து கொண்டு யாகம் வளர்த்துக் கொண்டு வேதங்களை ஓதிக் கொண்டு இருந்தார்கள். அங்கே தருமன் யாகத்துக்கு வருகை தந்திருந்த அனைத்து அரசர்களோடும் சென்றான். முதல்நாளைய நிகழ்வுகள் முடிந்ததும் அன்றைய தினம் தருமன் சக்கரவர்த்தியாக நியமிக்கப்பட்டான். அனைவரும் அதை அங்கீகரித்தனர். இரண்டாம் நாள் அனைவரும் அந்த யாக மண்டபத்துக்குள் கூடினார்கள். அன்றைய தினம் அக்னி பகவானுக்கு வழிபாடுகள் ஆஹூதிகள் கொடுக்கப்பட்டன. அடுத்த முக்கியமான சடங்கு அக்ரபூஜை என அழைக்கப்படும் முதல் மரியாதை கொடுக்கும் நிகழ்வு. இதற்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் யாகம் முடியும்வரை அந்த யாகத்தையும் வந்திருக்கும் அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்பார்கள். யாகத்தின்போது எவருக்கும் இடையில் மனஸ்தாபமோ, சண்டைகளோ, மன வருத்தமோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். யாகத்தின் யஜமான் ஆன சக்கரவர்த்தி யாக நிகழ்வுகளில் மனம் பதிந்து இருக்கும் வேளையில் மற்றவரால் யாகத்துக்கு இடையூறு நேராமல் பார்த்துக் கொள்வது அக்ரபூஜையின் வழிபாடு செய்யப்படுபவரின் கடமை ஆகும். இதற்காக பிரபலமாகவும் மிகவும் புனிதமாகவும் வாழ்க்கை நடத்தி வரும் முனிவர்கள் யாரேனும் ஒருவரோ அல்லது மிகவும் புத்திசாலித்தனமும் வீரமும் நிறைந்த பெரிய பேரரசரோ மாமன்னரோ தேர்ந்தெடுக்கப் படுவார்கள். அவர்களின் முக்கியத்துவம் இதை வைத்தே அனைவரும் தெரிந்து கொள்வார்கள். ஆகவே இதற்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர் யார் என்று அறியும் எண்ணம் அனைவர் மனதிலும் இருந்தது. அனைவரும் ஒருவிதமான ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்பில் காத்திருந்தார்கள்.

சேதி நாட்டு மன்னன் சிசுபாலனும் அவன் நண்பர்களும் இப்போதிருக்கும் சூழ்நிலையில் சிசுபாலனை விட்டால் பெரிய மன்னர் எவரும் இல்லை என்பதால் அவனைத் தான் அழைப்பார்கள் என்று எண்ணிக் கொண்டு காத்திருந்தார்கள். யுதிஷ்டிரனுக்குத் தன் தாய்வழிச் சகோதரன் ஆன சிசுபாலனைக் குறித்து நன்கு தெரியும். தங்கள் மாமன் மகன் ஆன வாசுதேவக் கிருஷ்ணனுக்கும் அவனுக்கும் இடையில் உள்ள பிரச்னைகள் குறித்தும் அறிவான். ஆகவே அவன் மனதினுள் வேறொரு முடிவு எடுத்திருந்தான். அக்ரபூஜைக்கான நபரைத் தேர்ந்தெடுக்கும் நேரம் வந்ததாக அறிவிக்கப்பட்டது. பீஷ்மர் யுதிஷ்டிரனைப் பார்த்து, "குழந்தாய், அக்ர பூஜைக்கான வேளை வந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார்கள். நம் பண்டைய வழக்கப்படி நீ யாரேனும் ஓர்முனிவரையோ அல்லது அரசனையோ இதற்கான பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்து அக்ரபூஜையைச் செய்ய ஆரம்பித்து விடு! அதன் பின்னர் யாகத்தின் முக்கிய நிகழ்வுகளைத் தொடர சௌகரியமாய் இருக்கும்!" என்றார்.

யுதிஷ்டிரனுக்கு இருதயம் துடிக்கவே மறந்து விட்டாற்போல் இருந்தது. ஒரு கணம் திகைத்தான். தானே தேர்ந்தெடுப்பதா? கடவுளே! இது பெரியதொரு அழிவில் அல்லவோ கொண்டு விடும்? என்ன செய்யலாம்? இந்த ராஜசூய யாகத்தின் போது சிசுபாலனும் அவன் நண்பர்களும் ஏதோ ஓர் திட்டத்துடன்  குழப்பம் விளைவிக்க வேண்டும் என்று காத்திருக்கிறார்கள். இதை யுதிஷ்டிரன் நன்கு அறிந்திருந்தான். ஆனால் என்ன திட்டம் என்று தான் புரியவில்லை. ஆனால் என்ன ஆனாலும் சிசுபாலனை அக்ரபூஜைக்கு அழைக்கக் கூடாது. அவன் அதற்குத் தகுதியானவன் அல்ல. அவனை விட்டால் வேறு பெரியவர்கள் என்று பார்த்தால்! பீஷ்மர் இருக்கிறாரே! இங்கு வந்திருக்கும் அனைத்து அரசர்களாலும் போற்றி வணங்கப்படுபவர் பிதாமஹர் பீஷ்மர். கங்கையின் புத்திரர். அரியணையில் அமர்ந்து அரசாளாவிட்டாலும் அவர் கண்ணசைவிலும், கையசைவிலும் தானே ஹஸ்தினாபுரம் செயல்படுகிறது! இதன் மூலம் அவருடைய புகழும் வீரமும் மேலும் மேலும் பேசப்படுகிறது. எவ்விதத்திலும் குறைவாகப் பேசுவதில்லை.
யுதிஷ்டிரன் தன் பீஷ்மர் பக்கம் திரும்பினான். "தாத்தா அவர்களே! நீங்கள் யாரைக் கையைக் காட்டினாலும் அவர்களை முதல் மரியாதைக்கு அழைத்து வழிபட நான் தயார் தான்! ஆனால் இங்குள்ள அனைவரிலும் நீங்கள் வயதிலும் அனுபவத்திலும் பெரியவர். உங்களால் செய்ய முடிந்தவற்றை இங்கே எவராலும் செய்ய முடியாது! நீங்கள் அனைவராலும் மதிக்கப்படுகிறீர்கள்!

இதற்குள்ளாகக்குறுக்கிட்டார் பீஷ்மர். சிரித்தார். "குழந்தாய், நான் உன் தாத்தா! இந்தக் குடும்பத்துக்கு பரத குலத்துக்கு  குரு வம்சத்துக்கு மூத்தவன். ஆகவே நீ என்னிடம் இந்த விஷயத்தை விட்டு விட்டாய் அல்லவா? அதற்கு  நான் சந்தோஷப்படுகிறேன்." என்றார். அடுத்து பீஷ்மர் யோசிக்கவோ யாரையும் கலந்து கொள்ளவோ இல்லை. சிறிதும் யோசிக்கவில்லை. அவர் மனதில்  கிருஷ்ணனே நிறைந்திருந்தான். அவன் ஒருவனே இதற்குத் தகுதியானவன். அவனைத் தான் நாம் வணங்க வேண்டும். அவனுடைய வழிகாட்டுதல் இல்லை எனில் இந்தக் குரு வம்சமே அழிந்திருக்கும். பாண்டவர்கள் ஐவரும் இருந்த இடம் தெரியாமல் போயிருப்பார்கள் கிருஷ்ணனின் துணை இல்லை எனில் பாண்டவர்கள் திரௌபதியைத் திருமணம் செய்திருக்க மாட்டார்கள். துருபதனுடன் கூட்டணி வைத்திருக்கவும் முடியாது. இன்று வலுவான கூட்டணியோடு பாண்டவர்கள் நிம்மதியாக இருப்பதற்குக் காரணமே கிருஷ்ணன் தான். அவன் ஒருவன் மட்டுமே! அதிலும் இப்போது சில நாட்கள் முன்னர் ஜராசந்தனை அடியோடு கொன்று ஒழித்ததன் மூலம் ஆரியவர்த்தமே கிருஷ்ணனுக்குக் கடமைப்பட்டிருக்கிறது. அவர்களால் இப்படி நிம்மதியாக இந்த ராஜசூய யாகத்தில் கலந்து கொள்ள வந்திருக்க முடியாது!

அந்த சபாமண்டபமே அமைதியில் ஆழ்ந்திருந்தது. "நம்மில் சிறந்த வீரனும், சக்தி வாய்ந்தவனும், மிகப் படித்தவனும், ஞானம் பொருந்தியவனும், சமீபத்தில் மிகச் சமீபத்தில் தர்மத்திற்காகத் தீமையை அழித்து ஒழித்தவனும் தர்மத்தைக் காத்தவனும் ஆன."
கூட்டம் இன்னும் அமைதியில் ஆழ்ந்தது.
"….கிருஷ்ணன்! ஆம், அவன் ஒருவனே இந்த அக்ரபூஜைக்குத் தகுதி வாய்ந்தவன்!"
கூட்டம் பெருவாரியாக ஆரவாரித்தது.  கிருஷ்ணனைச் சார்ந்தவர்கள் அனைவரும், " கிருஷ்ணனுக்கு ஜெய மங்களம்!" என்று ஆர்ப்பரித்தார்கள். அனைவரும், "வெற்றி கிட்டட்டும்! வாசுதேவனுக்கே வெற்றி!" என்று கோஷித்தார்கள். சஹாதேவன் கிருஷ்ணனை நெருங்கினான். அவன் கைகளில் கிருஷ்ணனுக்கு மரியாதை செய்வதற்கான பொருட்கள் நிறைந்த தாம்பாளம் காணப்பட்டது. அவன் கீழே குனிந்து கிருஷ்ணனின் பாதங்களை அலம்பினான். சந்தனம் குங்குமம் வைத்தான். கிருஷ்ணனின் நெற்றியிலும் சந்தனம், குங்குமத்தால் பொட்டு வைத்தான். கிருஷ்ணனுக்கு மாலை அணிவித்தான்.
அனைவரும் அதை ஆமோதித்து மந்திர முழக்கங்களைச் செய்தார்கள். பாரத வர்ஷம் முழுவதும் அமைதி வேண்டிப் பிரார்த்தனைகள் செய்து மந்திர முழக்கங்கள் செய்யப்பட்டன. அது முடிந்ததும் எங்கும் மீண்டும் அமைதி நிலவியது. அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு சிசுபாலன் உரத்த குரலில் கத்தினான்.

"இந்தப் பாவப்பட்ட அனைவரையும் அவமரியாதை செய்யும் நிகழ்ச்சியில் நான் பங்கெடுக்கப்போவதில்லை!" பீஷ்மரைப் பார்த்து கூறினான், "ஷாந்தனுவின் புத்திரனே! கங்கை மைந்தனே! இது என்ன வேலை? ராஜசூய யாகத்தின் அக்ரபூஜைக்கு வழிபடுவதற்கு உங்களுக்கு ஓர் மாட்டிடையனா கிடைத்தான்? இந்த இடையனை அக்ரபூஜைக்கு நியமித்ததன் மூலம் நீங்கள் பாண்டவர்களை மட்டும் அவமதிக்கவில்லை. அவர்களை மிகத் தாழ்வான நிலைக்குக் கொண்டும் போய்விட்டீர்கள். அது மட்டுமல்ல இங்கே வந்திருக்கும் அனைத்து அரச குலத்தவரையும் அவமதித்திருக்கிறீர்கள். ரிஷி, முனிவர்களை அவமானம் செய்து விட்டீர்கள். ஓர் சுயநலமான முடிவிற்காக நேர்மையான வழியில் செல்வதைக் கைவிட்டு விட்டீர்கள்!" என்றான்.
 " யார் இந்தக் கிருஷ்ணன்? இவன் என்ன ஒரு மாபெரும் அரசனா? எந்த நாட்டுக்கு இவன் அரசன்?அப்படி உங்களுக்கு யதுகுலத்தவருக்குத் தான் அக்ரபூஜை போய்ச் சேர வேண்டும் என்னும் எண்ணம் இருந்திருந்தால் இந்த இடையனைப் பெற்றதாகச் சொல்லிக் கொள்ளும் வசுதேவனை அழைத்திருக்கலாமே! இவனை விட அவர் தகுதி வாய்ந்தவர் அல்லவா? அல்லது வயதிலும் அனுபவத்திலும் மூத்த ஓர் சக்கரவர்த்தியோ, பேரரசரோ தேவை எனில், இதோ பாஞ்சால நாட்டு அரசன் துருபதன் இருக்கின்றானே! அவரை அழைத்திருக்கலாமே! அல்லது இப்படி யாரும் தேவை இல்லை. சாஸ்திர சம்பிரதாயங்களை அறிந்தவராகவும் இருக்க வேண்டும். முனிவர்களைப் போலவும் இருக்க வேண்டும். அதே சமயம் ஆயுதப் பயிற்சிகளிலும் தேர்ந்தவராக இருக்க வேண்டும்! என்று நினைத்திருந்தீர்களானால்! இதோ அஸ்வத்தாமா! குரு துரோணரின் மகன்! சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்தவன்! முனிபுத்திரன்! ஆயுதப் பயிற்சிகளிலும் சிறந்தவன்! பிரம்மாஸ்திரத்தை ஏவத் தெரிந்தவன்! இதுவும் வேண்டாம். முனிவர்களே போதும் எனில் அதற்கு வேத வியாசர், க்ருஷ்ண த்வைபாயனரை விடச் சிறந்தவர் யார் இருக்கிறார்கள்? அவரை அழைத்திருக்கலாமே!"

இதைச் சொன்ன சிசுபாலன் கிருஷ்ணன் பக்கம் திரும்பினான். "வாசுதேவக் கிருஷ்ணா! நீ பேராசைக்காரன்! மோசமானவன், சூழ்ச்சிக்காரன், நயவஞ்சகன்! கபடம் நிரம்பியவன், உன்னை உயர்வாக எண்ணிக் கொள்பவன்! இதோ என் தாய்வழிச் சகோதரர்கள் ஆன இந்தப் பாண்டவர்கள் ஐவரும் கோழைகள்! கோழைத்தனத்தால் உனக்கு ஓர் உயரிய இடம் கொடுத்துவிட்டார்கள். என்றான்.
ஆனால் இந்தப் பேச்சைக் கேட்ட அங்கிருந்த அரசகுலத்தினர் அனைவருக்கும் ஏதோ விபரீதமாக நடக்கப் போகிறது என்பது புலப்பட்டு விட்டது. அனைவரும் பதற்றம் அடைந்தனர். அனைவரும் அவரவர் ஆசனங்களிலிருந்து எழுந்து பாண்டவர்களுக்கு ஆதரவானவர்கள் பீஷ்மர் மற்றும் யுதிஷ்டிரன் அவன் சகோதரர்களைச் சூழ்ந்து கொண்டும், சிசுபாலனின் ஆதரவாளர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டும் தங்கள் வாள்களை உருவிக் கொண்டு ஆயத்த நிலையில் நின்றனர். யாதவர்களும் மற்றும் பாண்டவ, யாதவ ஆதரவு அரசர்களும் கிருஷ்ணனையும் மற்ற யாதவர்களையும் சூழ்ந்து கொண்டனர். அப்போது அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் எந்த நிலையிலும் வாயே திறவாத பாண்டவ சகோதரர்களில் மிகவும் இளையவன் ஆன சஹாதேவன் பேசத் தொடங்கினான்.

"சேதி நாட்டு மன்னா! என்னால் மேற்கொள்ளப் பட்ட அக்ரபூஜையை ஏற்காதவர்கள் எவராக இருந்தாலும் ஒரு பக்கமாக ஓரமாக ஒதுங்கி இருங்கள் அல்லது வெளியேறுங்கள். எங்களுக்கு ராஜசூய யாகத்தை மேற்கொண்டு செய்து முடிக்கவேண்டிய கடமை உள்ளது. அதை நாங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். அது பிடிக்காதவர்கள் வெளியேறலாம்.
    அப்படியா, இந்தக் கோழை இடையனை பிறகு பார்த்து கொள்கிறேன்.  இப்போது முன் செய்ய வேண்டியது, ஏ, கிழவா, உன்னைக் கொல்ல வேண்டியது தான்! அதன் பின்னர் உன் அருமைப் பேரன்மார் ஐவரையும் கொல்ல வேண்டும். அவர்கள் தானே சூழ்ச்சிகள் பல செய்து இந்த மாயவலையில் என்னைச் சிக்க வைத்திருக்கிறார்கள். ஆகையால் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே! அதிலும் இந்த இடையனை நம் அனைவரிலும் சிறந்தவன் என்று சொல்லி அவனுக்கு முதல் மரியாதை செய்ததை ஏற்க வைத்தார்களே, அதை என்னால் ஒருநாளும் மன்னிக்க முடியாது!" அவ்வளவில் தன் இடையிலிருந்து வாளை உருவினான் சிசுபாலன். அவனுடைய நண்பர்களும் அப்படியே செய்தனர். அனைவரும் உருவிய வாளோடு பீஷ்மர் மேல் பாயத் தயார் ஆனார்கள். பீஷ்மரிடமோ, சகோதரர்கள் ஐவரிடமுமோ அல்லது கிருஷ்ணனிடமோ ஆயுதங்கள் ஏதும் கைவசம் இல்லை. அவர்கள் அனைவரும் சம்பிரதாயமான சடங்குகளில் பங்கேற்க வேண்டி இருந்ததால் ஆயுதங்களைக் கைவசமும் வைத்துக் கொள்ளவில்லை. ஆயுதங்களைத் தரிக்கவும் இல்லை. மெல்ல சிசுபாலனுக்கு நேர் எதிரே கிருஷ்ணன் போய் நின்றான். மெல்லப் பேச ஆரம்பித்தான். அவன் குரல் மென்மையாகவும் மிருதுவாகவும் அதே சமயம் கண்டிப்பு நிறைந்தும் காணப்பட்டது. "சிசுபாலா! சேதி நாட்டு மன்னா! உனக்கு  பிதாமகர் பீஷ்மரிடமோ அல்லது பாண்டவ சகோதரர்களிடமோ எத்தகைய முன் விரோதமும் இல்லை என்பதை நான் நன்கறிவேன். உனக்கு விரோதம் என்னுடன் தான். என்னுடன் மட்டுமே! நீ என் சகோதரன். அத்தை வழி சகோதரன். ஆனாலும்!!...நீ எங்களைத் துரத்தினாய்! என்னை மட்டுமல்ல! எங்கள் யாதவ குலத்தையே துரத்தினாய்! எங்களை விஷம் போல் வெறுத்தாய்! நாங்கள் ப்ரக்ஜ்யோதிஷம் சென்றிருந்தபோது துவாரகையை எரித்தாய். என் தந்தை அஸ்வமேத யாகம் செய்ய யத்தனிக்கையில் யாகக் குதிரையைக் கவர்ந்து சென்றாய்!"

கடகடவெனச் சிரித்தான் சிசுபாலன். "ஆம் யாகக் குதிரையைக் கவர்ந்து சென்றேன்.  துவாரகையையும் நான் தான் எரித்தேன்! அதற்கென்ன இப்போது?" என்று சிரித்தான் மீண்டும். "ஹூம், இந்தத் தீமைகளை நீ தான் செய்தாய் என்று நன்கறிந்தும் நான் உன்னை இத்தனை நாட்கள் சும்மா விட்டு விட்டேன். எப்போதோ தண்டித்திருக்க வேண்டும். அதை நான் செய்தும் இருப்பேன். ஆனால் உன் அன்னைக்கு, என் அத்தை மஹாராணி சுஸ்ரவதாவுக்கு நான் வாக்குக் கொடுத்திருந்தேன். உன்னுடைய நூறு குற்றங்களைப் பொறுத்துக் கொள்வதாக வாக்குக் கொடுத்திருந்தேன். ஆனால் இனியும் இல்லை! நீ உன்னுடைய எல்லையைத் தாண்டி விட்டாய். எல்லை மீறிச் சென்று விட்டாய்!"
கிருஷ்ணன் தன் கையில் சக்கரத்தை பிடித்தான். அதை சிசுபாலன் மீது ஏவி விட்டான்.  அந்தச் சக்கரம் வேகமாக வந்து சிசுபாலனின் தலையை மட்டும் அறுத்துக் கீழே தள்ளிவிட்டுப் பின்னர் மீண்டும் கிருஷ்ணனின் கைகளுக்குச் சென்று விட்டது. சிசுபாலன் தலை ஒரு பக்கம் உடல் ஒரு பக்கமாகக் கீழே விழுந்தான். சக்ரதாரியாக காட்சியளித்தார்.

 ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

 வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

நாளையும்  ஸ்ரீகிருஷ்ணாவதாரம்   தொடரும் ....

🙏 சர்வம் கிருஷ்ணார்ப்பனம் 🙏*

No comments:

Post a Comment