Tuesday, August 24, 2021

Blessing with darshan-Periyavaa

கடவுளின் குரல்: தொகுப்பு -நா. அக்ஷிதா      
03/03/2021 குமுதம் இதழிலிருந்து..

"வீடு தேடித் சென்று ஆசார்யா தந்த விசேஷ தரிசனம் !" 

காஞ்சி மகான் மீது அபார பக்தி உள்ள ஒரு தம்பதியர் இருந்தார்கள். இத்தனைக்கும் ஒருமுறைகூட மகானை அவர்கள் நேரில் தரிசித்தது கிடையாது. தொலைதூர கிராமம் ஒன்றில் எளிய வாழ்க்கை வாழ்ந்தார்கள் அவர்கள். 

ஒரு சமயம் அந்தத் தம்பதியரில் கணவர் மட்டும் ஏதோ ஒரு பணி காரணமாக பட்டணத்துக்குச் செல்லவேண்டிய சூழல் வந்தது. அந்தப் பணியைத் தந்தவரே அவருக்கான போக்குவரத்து வசதியையும் செய்து தந்திருந்தார். அதனால், பட்டணம் வந்தவர், அப்படியே காஞ்சிபுரத்துக்குச் சென்று மகானை தரிசித்துவிட்டு வந்தார். 

அதன் பிறகுதான் ஒரு பிரச்னை ஆரம்பமானது. கணவர் ஊருக்குத் திரும்பிய நாள் முதல் மனைவியின் மனதுக்குள் மாபெரும் ஏக்கம் ஒன்று புகுந்து கொண்டது. மகானை தரிசிக்கும் பாக்யம் தனக்குக் கிடைக்கவில்லையே என்பதுதான். அதனால், சாப்பாடு, தூக்கம் கூட மறந்து சதா சர்வகாலமும் மகானின் திருப்பெயரையே சொல்லிக் கொண்டு இருந்தாள். 

இது நடந்து ஒரு மாதம் இருக்கும். ஒருநாள் அதிகாலை நேரம். அந்தப் பெண்மணிக்கு ஒரு கனவு வந்தது. "என்னைப் பார்க்க வரமுடியலைன்னு ஏன் ஏங்கறே? கொஞ்ச நாள் பொறுத்துக்கோ..நானே உன்னைப் பார்க்க வரேன்!" மகாபெரியவர் இப்படிச் சொல்வது போன்ற அந்தக் கனவைக் கண்டதும் திடுக்கிட்டு எழுந்தார். கணவரை எழுப்பி தான் கண்ட கனவைச் சொன்னார். 

அன்று முதல் அவர் மனைவியின் செயல்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. ஒவ்வொரு நாளும் மகான் இன்றைக்கு வருவார். நாளைக்கு வருவார் என்று தினம் தினம் வீட்டைத் தூய்மையாக வைத்துக் கொண்டு மகான் திருப்பெயரையே சொல்லிக் கொண்டு காத்திருக்க ஆரம்பித்தாள் அவள். ஒவ்வொரு நாளும் பெரியவா வரவில்லை என்றதும் அவளுடைய ஏக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. மனைவியின் மன அழுத்தம் அதிகமாகிக் கொண்டே செல்வத்தைப் பார்த்து மனம் நொந்து வருந்தினார், கணவர். 

இந்த சமயத்தில்தான் அந்த அதிசயம் நடந்தது. ஒருநாள் அதிகாலை நேரம். நீராடிவிட்டு வழக்கம்போல் மகான் படத்தின் முன் சாம்பிராணி தூபத்தைப் போட்டுவிட்டு, பக்தியோடு அவர் பெயரைச் சொல்லிக் கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி. திடீரென்று யாரோ கதவைத் தட்டுவது கேட்டு அவசர அவசரமாகக் கதவைத் திறந்தார். 

வாசலில் மடத்துத் தொண்டர்கள் போல யாரோ இருவர் நிற்க, எதுவும் புரியாமல் திகைத்தவர், கணவரை அவசரமாக அழைத்தார். அவரும் எழுந்து வந்து பார்க்க, வந்தவர்கள் பேசத் தொடங்கினார்கள். 

"மகாபெரியவா, க்ஷேத்ர யாத்திரை செய்து கொண்டிருக்கிறார். உங்கள் ஊர் வழியாகத்தான் போவதாக தீர்மானித்திருக்கிறார். இந்த ஊரில் இரண்டு நாட்கள் தங்குவதாக ஏற்பாடு. எங்கே எந்த இடத்தில் ஜாகை என்று தீர்மானிக்க இடம் தேடி வந்தோம். 

"எந்த வீட்டின் வாசலுக்குச் செல்லும்போது பசுமாடு கத்துகிறதோ, அங்கே இருந்து சாம்பிராணி வாசனை வருகிறதா என்று பாருங்கள். அப்படி வந்தால் அந்த வீட்டில் தங்க ஏற்பாடு செய்யுங்கள்!" என்று மகான் சொல்லி அனுப்பினார். உங்கள் வீட்டு வாசலுக்கு வந்தபோதுதான் பசுவின் குரல் கேட்டது. இதோ இப்போது சாம்பிராணி வாசனையும் வருகிறது. அப்படியானால், இதுதான் மகான் சொன்ன வீடு என்று தெரிகிறது. இங்கே மகான் எழுந்தருள நினைக்கிறார். இரண்டு நாட்கள் உங்கள் வீட்டை ஒதுக்கிக் கொடுக்க முடியுமா?"

வந்தவர்கள் சொல்லச் சொல்ல மனதுக்குள் மலர்ந்த பரவசத்தில் வார்த்தை ஏதும் வராமல், உடல் சிலிர்க்க அப்படியே நின்றார்கள் தம்பதியர். சில நிமிடத்துக்குப் பிறகு பரிபூரண சம்மதத்தைச் சொன்னார்கள். மளமளவென்று ஊருக்குள் விஷயம் பரவியது. மகானை வரவேற்க ஊரே திரண்டு வந்தது. ஏழ்மையில் இருந்த அந்தத் தம்பதியரின் வீட்டை போட்டி போட்டுக்கொண்டு ஆளாளுக்கு சீரமைத்தார்கள். தோரணங்கள் பூக்கள் என்று ஊரே திருவிழாக் கோலம் பூண்டது. 

அடுத்த இரண்டாவது நாள் அவர்கள் வீட்டு வாசலுக்கு வந்து நின்றார், மகான். உடல் நடுங்க, மனம் சிலிர்க்க பூரண கும்பத்தோடு வரவேற்றார்கள், தம்பதியர். 

உள்ளே நுழையும்போது, மெதுவாகத் திருவாய் மலர்ந்தார் மகான். "என்ன, உன் அகத்துக்காரிகிட்ட கனவுல சொன்ன மாதிரியே வந்துட்டேனா? எல்லாத்துக்கும் அவ வைச்சிருந்த நம்பிக்கைதான் காரணம்"

மகான் சொல்லச் சொல்ல அப்படியே திகைத்து நின்றார் அந்த பக்தர். மனைவி கனவாகச் சொன்னது அவளது கற்பனை அல்ல. உண்மையிலேயே மகான்தான் அவள் கனவில் வந்திருக்கிறார். உண்மையான நம்பிக்கை இருந்தால், தெய்வம் தேடிவந்து அருளும் என்பது சத்தியமான உண்மை. அதற்கு மகான் நம் வீடு தேடி வந்திருப்பதே சாட்சி என்பதை பரிபூரணமாக உணர்ந்தவர், மகான் திருவடியில் சரணாகதியாக விழுந்து நமஸ்கரித்தார். 

"ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!"
"மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!"
"ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்!!"

No comments:

Post a Comment