Friday, June 18, 2021

Manisha pancakam in Tamil

மனீஷா பஞ்சகம்!

'மனீஷா பஞ்சகம்' என்பது
ஆதி சங்கரரால் இயற்றப்பட்டது.

'மனீஷா' என்கிற வார்த்தை 'ஞானம்' அல்லது 'உறுதி' என்று பொருள்படும்.

'மனீஷா பஞ்சகம்' என்றால் ஞானத்தைப் பற்றிய ஐந்து ஸ்லோகங்கள் என்று பொருள்.

ஆதிசங்கரரின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தின் விளைவுதான் 'மனீஷா பஞ்சகம்' !

ஆதிசங்கரர், கங்கையில் நீராடிய பிறகு, தன் சீடர்களுடன் விஸ்வநாதர் கோவிலுக்குப் புறப்பட்டார்.

சாலை ஓரத்தில், ஒரு சண்டாளன் என்று கூறப்படும் தீண்டத் தகாதவனை, அவர் சந்திக்க நேர்ந்தது.

அதைக் கண்ட ஆதிசங்கரின் சீடர்கள், அவனைப் 'போய் விடு' , 'போய் விடு' என்று வலியுறுத்தினார்கள். ஆதிசங்கரரும் மௌன சாட்சியாக இருந்தார்.

உடனே அந்த சண்டாளன் ஆதிசங்கரரைப் பார்த்து சில கேள்விகளைக் கேட்கிறான்.

அன்னமயாதன்னமயம் அதவா சைதன்யமேவ சைதன்யாத் |
த்விஜவர தூரீகர்தும் வாஞ்சஸி கிம் ப்ரூஹி கச்ச கச்சேதி ||

பிராமணர்களில் சிறந்தவரே ! நீங்கள் 'போய்விடு, போய்விடு' என்கிறீர்களே, நீங்கள் குறிப்பிடுவது இந்த உடலையா அல்லது ஆன்மாவையா?

உணவினால் உருவான அன்னமய கோஷமான உடலை என்றால், நம் இருவருக்குமே அதே உடல்தானே?

அல்லது பவித்ரமான ஆன்மா என்றால், எப்போது ஆன்மா என்பது பிரம்ம மயமானதோ அப்போதே அதற்கு ஏது பாகுபாடு?

நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்கு விளக்குங்கள்….. என்றான்.

மேலும் கூறுகிறான், நீங்கள் குளித்த கங்கை நீரில் சூரியனின் பிரதிபிம்பம் தெரிகிறது.

என் வீட்டின் அருகில் ஓடும் சாக்கடையிலும் சூரியனின் பிரதிபிம்பம் தெரிகிறது.

இதனால் சூரியனிடம் ஏதாவது மாற்றம் தெரிகிறதா?

ஒன்றும் இல்லையே…!
அதே போல பொன்னால் செய்யப்பட்ட குடத்தில் இருக்கும் வெளிக்கும் (SPACE) மண்ணால் செய்யப்பட்ட குடத்தில் இருக்கும் வெளிக்கும் ஏதாவது வேறுபாடு உள்ளதா…. ஒன்றும் இல்லையே…..!

ஆன்மா என்னும் எல்லையற்ற கடலில் இந்த வேற்றுமை எங்கிருந்து வந்தது?

ஆன்மா என்பது சலனமில்லாத, அமைதியான, எல்லையற்ற ஆனந்தக் கடலாகும்.

இப்படிப்பட்ட ஆன்மாவிற்கு வேதம் பயிலும் பிராமணன், நாயை உண்ணும் சண்டாளன் என்கிற பாகுபாடு எப்படித் தோன்றும்?

இதை எனக்கு விளக்கினால் நான் அதற்குத் தகுந்தாற் போல் நடந்து கொள்வேன் என்றான் சண்டாளன்.

ஆதிசங்கரர் ஒரு வினாடி சிந்தித்து, தன்னுடைய வேதாந்தத்தை தனக்கே கற்பிக்கிறான் இவன் என்பதையும் உணர்ந்து,
அந்த சண்டாளனை பிரம்மமாக பாவித்துக் கால்களில் விழுந்து வணங்கி அதன் பிறகு எழுதியதே 'மனீஷா பஞ்சகம்' !

மனீஷா பஞ்சகத்தில் மூன்றாவது ஸ்லோகம் மிகவும் சிரேஷ்டமானது !

கர்மாக்களில் மூன்று வகை உண்டு. அவை சஞ்சித கர்மா, பிராரப்தக் கர்மா, ஆகாமிய கர்மா !

இதில் கர்மா என்பது நாம் செய்யும் நல்ல மற்றும் கெட்ட செயல்களின் பலன்கள்.

நல்ல கர்மாவின் மூலமாக ஆனந்தத்தையும் கெட்ட கர்மாவின் மூலம் துக்கத்தையும் அனுபவிப்போம்.

எத்தனையோ பிறவிகள் எடுத்து, அதனால் நாம் சேர்த்துக் கொண்ட கர்மங்களின் கூட்டே 'சஞ்சித கர்மா' !

இந்தப் பிறவியில் நாம் அனுபவிப்பதற்காகக் கொடுத்து அனுப்பப்பட்டதே 'பிராரப்தக் கர்மா' !

வாழும் இந்தக் காலத்தில்
நாம் ஏற்படுத்துவது 'ஆகாமிய கர்மா' !

இந்த உலகமானது நிலையில்லாதது. அழியக்கூடியது.

பிரம்மம் மட்டுமே என்றும் நிலையானது, என்றும் நிலைத்திருப்பது, பாகுபாடு காணமுடியாதது, வேறுபாடே இல்லாத ஒப்பற்றது.

எவர் ஒருவர் இந்த பிரம்மத்தை உணர்ந்து அதன் சாத்வீகத்தையும், உண்மையையும், எந்தவித பாதிப்புமில்லாமல் ஆராய்ந்து தெளிகின்றாரோ அவருக்கு இந்த வாழும் வாழ்க்கையில் பிரம்மத்திற்கும் மற்ற உயிர்களுக்கும் வித்தியாசம் பார்க்காத தன்மை ஏற்பட்டுவிடும்.

அந்த பற்றற்ற நிலையை, ஞானத்தை எவர் ஒருவர் பரிபூரணமாக அடைந்து விட்டாரோ அவரின் சஞ்சித கர்மா, ஆகாம்ய கர்மா ஆகியவைகளின் தாக்கம் முழுமையாக ஞானமெனும் தீயில் எரிக்கப்படும்.

அப்படிப் பட்டவராலேயே இந்தப் பிறவியில் அனுபவிப்பதற்காக இருக்கும் பிராரப்தக் கர்மா முடிந்ததும் ஜீவன் முக்தியை அடையமுடியும்.

மனிஷா என்றால் ஒப்புதல் என்று அர்த்தம். பஞ்சகம் என்றால் ஐந்து. சண்டாள வடிவத்தில் வந்த சிவபெருமான் எழுப்பியக் கேள்விகளையும்,அவற்றில் பொதிந்துள்ள கருத்துகளையும் ஏற்றுக்கொண்டு சங்கரர் பாடியது மனிஷா பஞ்சகம் .

எல்லாவற்றிலும் இறைவனைக் காணும் அனுபூதியை அடைந்த ஒருவர், எந்தச் சாதியை
சேர்ந்தவராக இருந்தாலும், எத்தகையவராக இருந்தாலும், தன்னால் குரு என ஏற்றுக் கொள்ளத்தக்கவர் என்பதை ஒப்புக் கொண்டு ஓர் ஒப்புதல் வாக்கு மூலம் போன்று
ஐந்து ஸ்லோகங்களை ஸ்ரீ ஆதிசங்கரர் கூறுகிறார்.
அந்த மனிஷா பஞ்சகம் தமிழ் விளக்கத்துடன் கீழே.
 
ஜாக்ரத்ஸ்வப்ன ஸுஷுப்திஷு
ஸ்புடதரா யா
ஸம்விதுஜ்ஜ்ரும்பதே
யா ப்ரஹ்மாதி
பிபிளிகாந்ததனுஷு ப்ரோதா
ஜகத்ஸாக்ஷிணி|
ஸைவாஹம் ந ச த்ருச்யவஸ்திவதி
த்ருடப்ரக்ஞாபி யஸ்யாதி சேச்
சண்டாளோs ஸ்து ஸ து
த்விஜோஸ்துகுருரித்யேஷா:
மணீஷா மம ||

விழிப்பு கனவு தூக்கம் 
மூநிலையில் பத்மனாதி சிற்றெறும்பாய் 
விரிந்து தோற்றம்கொள்
பேரியக்கம் காணாமல் கண்டிருக்கும் 
பேருண்மை நானென்ற நம்பிக்கை கொண்டோன் பஞ்சமனோ பார்ப்பானோ ஒப்புகிறேன் எந்தன் குரு (1)

விழிப்பு (ஜாக்ரதா), கனவு (ஸ்வப்பனம்), மற்றும் உறக்கம் (ஸுஷுப்தி)
ஆகிய மூன்று
நிலைகளிலும் அந்த ஒரே ஆன்மாதான் (சிவ பரமாத்மன்) படைப்புக் கடவுள்ஆன பிரம்மா
முதல் (பத்மம் எனப்படும் தாமரையில் வீற்றிருப்பதால் பிரும்மாவுக்கு பதுமன், பத்மன் என்ற பெயர்கள் உண்டு.)
சின்னஞ்சிறிய எறும்பு வரையான பல்வேறு உயிரினங்களாகத் தோற்றம் காண்கின்றன.

அந்த ஏக ஆன்மாதான் 
பிரபஞ்சத்தின் இயக்கமாக விளங்குகிறது. (நம்மால்) அதனை நேரடியாகக் காணமுடியாது 

ஆனால், உலகின்
செயல்பாடுகள்
அனைத்தையும் கண்காணித்துக்
கொண்டிருக்கின்ற 
சாட்சியாக அந்த ஏக
ஆன்மா திகழ்கிறது. அப்படிப்பட்ட பேருண்மையான சிவமே (ஏக ஆன்மாவே)
நான் என்பதில் (அதாவது அந்தப் பரமாத்வே தன்னுள் உறைவதாக எவன் ஒருவன் நம்பிக்கை கொள்கிறானோ, 
அப்படிப்பட்டவன் சாதியில் பஞ்சமனாக இருந்தாலும்) சரி, 
அல்லது கற்பிதமான இந்தச் சாதிமுறையில் உயர்ந்தவனாகக் கருதப்படும் பிராமணனாக
இருந்தாலும் சரி,
அவரை எனது குருவாக நான் ஏற்றுக்கொள்கிறேன் என்கிறார்
ஸ்ரீஆதிசங்கரர்.

பிரஹ்மோவாஹமிதம்
ஜக்ச்ச ஸகலம்
சின்மாத்ரவிஸ்தாரிதம்
ஸர்வம் சைததவித்யயா
திரிகுண்யாs சேஷம் மயா
கல்பிதம்|
இத்தம் யஸ்ய த்ருடா மதி: ஸுகரே
நித்யேபரே நிர்மலே
சண்டாளோs ஸ்து ஸ து த்விஜோஸ்து
குருரித்யேஷா மனிஷா மம||

அறியாமை முக்குணத்தால்
வேற்றுமை தென்படினும்
ஆனதெல்லாம் அஃதொன்றின்
தோற்றங்களே
அத்தகு நித்ய நிர்மல
பேருண்மை நானென்ற நம்பிக்கை கொண்டோன்
பஞ்சமனோ பார்ப்பானோ ஒப்புகிறேன் எந்தன்குரு…… (2)

உலகில் தோன்றிய அனைத்துமே அந்த பரப்பிரம்மத்தின் 
பரிமாணங்களே.

அதாவது உலகில் காணப்படும் அனைத்து வஸ்துகளும் உயிரினங்களும் அந்தப் பரம்பொருளின்
வெளிப்பாடுகளே.

பரமாத்மாவும், ஜீவாத்மாக்களும் ஒன்றேதான் வேறு வேறு அல்ல.

இதைத்தான் சின்முத்திரையாக (கட்டை விரலும் ஆட்காட்டிவிரலும் இணைந்த வட்டமாக) 
இறைவன் உணர்த்துகிறார்.

ஆனால், சத்வம், ரஜோ, தமோ ஆகிய முக்குணங்களால் தோன்றிய பிருகிருதியயின் கூட்டால், அந்த பரமபுருஷ தத்துவத்தை உணர்ந்துகொள்ள முடியாத வேற்றுமைகள் தென்படுகின்றன. 

அதாவது வெளிப் பார்வைக்கு நம்மால் பாகுபடுத்திப் பார்க்கப்படும் பல்வேறு உயிர் இனங்கள் மற்றும் பொருள்களின்
அடிப்படையாகத் திகழும் ஜீவரசம் , ஆற்றல் ஒன்றுதான்.

ஆகவே பரபிரும்மம், 
சிவபரமாத்மா, எப்போதும் நிலைத்து நிற்கக் கூடிய நித்தியமாய், எவ்வித களங்கமோ குறைகளோ இல்லாத நிர்மலமாய் 
திகழ்கின்ற அந்தப் பேருண்மை
நான் என்பதை உணர்ந்து, அதில் திளைப்பவர் பஞ்சமரோ, பிராமணரோ அவரே எந்தன் குரு என்பதை ஒப்புக் கொள்கிறேன் என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்

ச்சச்வன்ன ச்வரமேவ
விச்வமகிலம் நிச்சித்ய
வாசா குரோர்
நித்யம் ப்ரஹ்ம நிரந்தரம்
விம்ருசதா
நிர்வ்யாஜசாந்தாத்மனா|
பூதம் பாதி ச துஷ்க்ருதம்
ப்ரதஹதா ஸம்வின்மயே பாவகே
ப்ராரப்தாய ஸமர்பிதம்
ஸ்வவபுரித்யேஷா மனீஷா மம||

நிலையில்லா மாயை பிரபஞ்சம் வந்துற்ற பிறப்பும்
நிரந்தர நிச்சயத்தை எண்ணவாம்
ஐயமற-அத்தவமாம்
தீயில் பிறவித் துயர் பொசுக்க
என்றாசான் செப்பியதை
அப்படியே திண்னமுற
ஒப்புகிறேன் நான். (3)

விரிந்து பரந்துள்ள
இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே நிலையில்லாத மாயை ஆகும்.

இங்கு ஒரு விஷயத்தை விளக்க வேண்டியிருக்கிறது.

மாயை என்பது பொய்யன்று. உண்மையும் அன்று.

குறிப்பிட்ட காலத்துக்கு உண்மை போலத் தோற்றம் அளிப்பதே மாயை.

உண்மை என்பது 'உள்' என்ற வேர்ச் சொல்லிலிருந்து உருவானது.

அதாவது உள்ளதென்று பொருள். 

ஆக, உண்மை என்பது எக்காலத்திலும் உள்ளதாக இருத்தல் வேண்டும்.

எல்லாம் வல்ல இறையாற்றல் ஒன்றுதான் எப்போதும் இருக்கக் கூடிய உண்மை. (சாஸ்வதமான சத்தியம்). 

ஆனால், இந்தப் பிரபஞ்சமானது குறிப்பிட்ட காலத்தில்மட்டுமே இருக்கக் கூடியது. 

ஆகையால், ஒருவகையில் உண்மை. ஆனால், அந்தக் காலக்கெடு முடிந்ததும் பிரபஞ்சம் அழிந்து, இல்லாமல் போய்விடுகிறது.

ஆகையால் பொய்யாகவும் முடிகிறது.

அதே போல்தான் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள
எல்லா வஸ்துகளும், 
குறிப்பிட்ட காலம் வரை இருந்து மறைகின்றன.

இதற்குப் பெயர்தான் மாயை. இதனை 'கயற்றரவு' என்ற வார்த்தையால் மகாகவி பாரதி விளக்குவார். அதாவது காற்றில் அசையும் கயறு, தூரத்தில் நின்று பார்க்கையில் அரவம்
போல்(பாம்பு) அசையும். அந்தக் காற்று நின்றுவிட்டால் அது வெறும் கயறு என்பது தெரியும். அதுபோல், பிராணன் என்று காற்று இருக்கும் வரை உயிரினங்கள் அசைகின்றன. பின்னர் மடிந்து விடுகின்றன. ஆகையால் இவையெல்லாம் மாயை.

நிரந்தனமான நிச்சயம் அந்த ஏக ஆத்மாவான சிவம் மட்டுமே. அந்த உண்மையை ஐயமின்றி உணர்ந்து கொள்வதற்காகத்தான் 
மிக உயர்ந்த பிறப்பான மானுடப் பிறப்பு 
வாய்த்திருக்கிறது. ஆகையால், இப்பிறவியில் அந்த ஏக ஆன்ம ரூபத்தை
அறிந்து,தியானித்து ஞான நிலைபெற்று, இனிமேலும் பிறவி எடுக்காமல் இருக்கும் தவத்தை மேற்கொள்ள
வேண்டும்.

தவம் என்பதற்கு ஒரு விஷயத்தில்
உறுதியாக நிற்றல், தொடர்ந்து மேற்கொள்ளுதல் என்று பொருள். 

ஆக, அழிவில்லாத, ஆதியும் அந்தமும் இல்லாத, என்றுமே மாறாத, எல்லாவற்றிலும் வியாபித்து நிற்கும் அந்த பரமாத்மாவே அனைத்து உயிரினங்களிலும் உறைகிறார் என்ற இடைவிடாத எண்ணமே தவம் ஆகும்.

குருவாக வந்து அந்த இறைவனே உபதேசித்த இந்த அரிய தத்துவத்தை அப்படியே ஒப்புக் கொள்கிறேன் என்கிறார்
ஸ்ரீ ஆதிசங்கரர்.

யா திர்யங்நர
தேவதாபிரஹமித்யந்த: ஸ்புடா
க்ருஹ்யதே யத்பாஸா
ஹ்ருதயாக்ஷதேகவிஷயா
பாந்தி ஸ்வதோs சேதனா:|
தாம் பாஸ்யை:
பிஹிதார்கமண்டலநிபாம்
ஸ்பூர்தி ஸதா பாவயன்
யோகீ நிவ்ருதமானஸோ ஹி
குருரித்யேஷா மணீஷா மம||

சூரியன் ஜோதியை மேகம்
மறைத்தாற்போல் உண்மையைச்
சூழ்ந்திடும் ஈனமதி நீங்கி
அனைத்தும் இயக்குகிற
ஆண்டவன் தன்னிருப்பும்
தன்மையும் தன்னுள் அறிபவர்
யோகியென்றே திண்ணமுற
ஒப்புகிறேன் நான்……(4).

ஆண்டவன் அனைத்திலும் 
வியாபித்துள்ளார். அவர் இல்லாத வஸ்து என்று எதுவுமில்லை. 

அவரே அனைத்தின் இயங்கு சக்தியகவும் விளங்குகிறார்.

நம் மூலமாக அனைத்து செயல்களையும் செய்பவர் அவரே. 

ஆனால், சூரியனின் பிரகாசத்தை
மேகம் மறைப்பது போல, 
அந்த ஆண்டவன் குறித்த உண்மையை அறிய
இயலாமல் நமது அறியாமை மறைத்துள்ளது.

அந்த அவித்தை நீங்கி, ஆண்டவனின் இருப்பையும் தன்மையையும் 
தனக்குள்ளேயே உணர்ந்து அறிந்து
கொள்பவர் மாபெரும் 
யோகி ஆவார்.

இதனை ஐயமின்றி, 
உறுதியுடன் நான் ஒப்புக்கொள்கிறேன் என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.

யதி ஸௌக்கியாம் புதிலே
சலேதத
இமே சக்ரதயோ நிர்வ்ருதா
யச்சித்தே நிதராம்
ப்ரசாந்தகலனே லப்தவா
முனிர்நிர்வ்ருத: |
யஸ்மின்னித்யஸுகாம்புதௌ
கலிததீர்ப்ரஹ்மைவ ந
ப்ரம்ஹவித்
ய: கச்சித்ஸ
ஸுரேந்த்ரவந்திதபதோ நூனம்
மணீஷா மம ||

தேவர்கோ தெய்வங்கள் எல்லோரும்
பூசிக்கும் போதிலும்
தன்னுள் அமைதியாய்
தானிருக்கும் பேரொளியைத்
தன்னுள்
லயித்திடுவோன் தானறிவான்
அப்பிரும்மம் அம்மட்டோ
அப்பிரும்மம்
ஆயிடுவான் திண்ணமுற
ஒப்புகிறேன் நான்…..(5)

எவனொருவன், தேவர்களின் தலைவனான இந்திரனும், மற்ற 
தேவதைகளும் தனது தவ வலிமையால் தன்னைப் போற்றித் துதிக்கின்ற உயர்ந்த நிலையை அடைந்துவிட்ட
போதிலும், அதனால் மனம் பிசகாமல், ஆணவம் அடையாமல், ஆர்ப்பரிக்காமல், அமைதியாக இருந்து, தனக்குள் அமைதியாய்,
அன்பே வடிவாய் வீற்றிருக்கும் அந்தச் சிவப்பேரொளியில் லயித்து, அதனை தியானிக்கிறானோ அந்த மனிதன், பிரும்ம சொரூபமாக விளங்கும் சிவ பரமாத்மாவை முழுமையாக உணர்ந்து கொள்கிறான்.

அது மட்டுமின்றி, அந்த பிரும்மம் ஆகவும் அவன் ஆகிவிடுகிறான்.

அதாவது அந்த பிரம்மத்துடன் ஐக்கியமாகி, மீண்டும் பிறந்திறவாத அமரத் தன்மையை அடைகிறான்
என்பதை உறுதியாக
 ஒப்புக்கொள்கிறேன் என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.

எவ்வாறெனில்,
பிரும்மம் என்பது அனைத்திலும் ஆதாரசக்தி. அனைத்து வஸ்துக்களிலும் அந்த ஆதார சக்தியே
உறைகிறது.

ஆக, ஒட்டு மொத்த பிரபஞ்சத்தின் 
உயிர்சக்திதான் பிரும்மம்.
அது முழுமையானது.

ஆகையால், அஹம்பிரும்மாஸ்மி, த்வம்பிரம்மாஸ்மி, சர்வம்
ப்ரும்மாம: அதாவது நானும் பிரும்மம், நீயும் பிரும்மம், யாவையும் பிரும்மம்.

இந்த உண்மையை
உணர்ந்து கொள்வதால்,
அறிவு மயக்கம்
 அடைந்துவிடாமல் அமைதியாக
இருப்பவனே அந்த பிரும்மத்தில் ஐக்கியம் ஆகிறான்.

இவ்வாறு ஐந்து ஸ்லோகங்களைக்கூறி, அனைத்திலும் ஆண்டவன் இருப்பதால்,
மனிதருக்குள் உயர்வு தாழ்வு இல்லை.

பிரும்மத்தை உணர்ந்தவன் எந்தச் சாதியைச்
சேர்ந்தவனாக இருந்தாலும் அவன் வணக்கத்திற்குரிய ஆசாரியான்,அவன்
மதிப்பிற்குரிய யோகி, எல்லாவற்றையும்விட போற்றுதலுக்குரிய
பிரும்மமாகவும் அவன்
ஆகிறான் என்பதை ஸ்ரீஆதிசங்கரர் அருமையாக 
எடுத்துரைத்துள்ளார்.

நிறைவுச் செய்யுள்.
தாஸமஸ்தேs ஹம் தேஹத்ருஷ்யாs
ஸ்மி சம்போ ஜாதஸ்தேம்s
ஸோஜீவத்ருஷ்யா
த்ரித்ருஷ்டே|
ஸர்வஸ்யாs s
த்மன்னாத்மத்ருஷ்யா
த்வமேவேத்யேவம் மே
தீர்நிச்சிதா
ஸர்வசாஸ்த்ரை:||

No comments:

Post a Comment