பேசும் தெய்வம்: J K SIVAN ' இது பேத்தலா ?'
மஹா பெரியவா பற்றி படிக்கவோ எழுதவோ ஈடுபடுவது ஒரு பெரிய ஆழமான சமுத்ரத்தில் முத்து குளிக்க இறங்குவது மாதிரி. எடுக்க எடுக்க முத்து வந்துகொண்டே இருக்கும். ஒரே அடியாக எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு வர முடியாது. விட்டு விட்டு தான் திரும்ப திரும்பமூழ்கவேண்டும். இதைத் தான் நானும் பண்ணிக் கொண்டு வருகிறேன்.(உங்களோடு சேர்ந்து).
சில விஷயங்களை எத்தனை தடவை மீண்டும் மீண்டும் படித்தாலும் எழுதினாலும் அலுப்பதில்லை. ஏன் என்றால் அந்த விஷய த்தின் ரசானுபவம். மஹா பாரதம் ராமாயணம் கதை யாருக்கு தெரியாது. இருந்தாலும் மேலே மேலே யார் சொன்னாலும் மறுபடியும் கேட்கும் ஆர்வம் குறைவதில்லை அல்லவா? மஹா பெரியவா விஷயங்களும் அதே போல் தான். அந்த விஷயம் மஹா பெரியவா வாயிலிருந்து வந்தது என்றால் அதற்கு இன்னும் எத்தனை காந்த சக்தி! அடாடா இது மாதிரி இன்னொருவர் உண்டா? இருக்க முடியுமா?
அப்படி '' அவர் வாயால்' சொன்னதை கேட்கத் துடிப்பவர்களே. உங்களில் நானும் ஒருவன். அவர் சொன்ன சில விஷயங்களை , சாராம்சத்தைச் சுருக்கி பய பக்தியோடு தருகிறேன்: உஷ் .... உன்னிப்பாக கேளுங்கள், படியுங்கள்:
மறைந்த நம் தாய் தந்தையருக்கு, முன்னோர்க்கு, தர்ப்பணம் ஸ்ரார்தம்எல்லாம் பண்ணுவதால் என்ன பயன்? யாரோ ஒருவருக்கு வாழைக்காய், அரிசிகொடுத்தால் அது முன்னோர்களைப் போய்ச் சேருமா?, வெறுமே எள்ளும் நீரும்இறைத்தால் அவர்களுக்கு திருப்தி தருமா? இதெல்லாமே வெறும் பேத்தல், மூட நம்பிக்கை, வாட் நான்சென்ஸ் என்று சில அரைகுறைகள் இன்றும் கேட்கின்றனர். இவற்றுக்குபெரியவா தரும் விடை தான் இன்றைய செய்தி
'' மநுஷ்யராகப் பிறந்தவர்கள் தங்களுடைய முன்னோர்கள், தெய்வம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இதுவே பித்ரு கடன், தேவ காரியம் என்பவை. நம்முடைய சக ஜீவர்களுக்கு நம்மாலானதைச் செய்ய வேண்டும்.
''ஆதித்யம்'' (ஒர் அதிதிக்காவது உணவுபடைப்பது) விருந்தோம்பல் இதுதான். இதுமனுஷ யக்ஞம்.
''பிரம்ம யக்ஞம்'' என்று இன்னொன்று. பிரம்மம் என்றால் பல அர்த்தம். இந்த இடத்தில் வேதம் என்று அர்த்தம். வேதம் ஒதுவதும், ஒதுவிப்பதுமே பிரம்ம யக்ஞம். இது ரிஷிகளின் திருப்திக்காக ஏற்பட்டது.
எல்லோரும் செய்வதற்காக ஏற்பட்ட இன்னொரு கர்மம் ''பூத யக்ஞம்'' அதாவது மனுஷ்ய ஜீவனாக இல்லாத ஜீவராசிக ளுக்குக் கூட நம் அன்பைத் தெரிவித் து உணவூட்டுகின்ற காரியம். எனவே தான் நாம் பித்ரு யக்ஞம், தேவயக்ஞம், மநுஷ்ய யக்ஞம், பூத யக்ஞம்இவற்றை எல்லோரும் ஏதோ ஒரு ரூபத்தில்செய்யக் கடமைப் பட்டிருக்கின்றோம். வைதிக தர்மப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கான தொழிலைச் செய்து ஈசுவரார்ப்பணம் பண்ணுவதே அவரவருக்கும் பிரம்ம யக்ஞம் என்றும் சொல்லலாம்.
வேத நெறியில் சொல்லப்பட்டதை ஏறக்குறைய திருவள்ளுவரும் ஒருவாறு சொல்லியிருக்கார்.
''தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென் றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல்தலை.'' புரியலையா? விளக்கம் இதோ.
தென்புலத்தார் = பித்ருக்கள். பித்ருக்களான தாய் தந்தையர்களுக்கும் மூதாதையர்களுக்கும் நமது கடமை களை எல்லோரும் அவசியம் செய்தாக வேண்டும். '' மாத்ரு தேவோ பவ,பித்ரு தேவோ பவ'' (''அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்") என்று சொல்கிறோம் . தாய் தந்தையர் ஜீவிய வந்தர்களாக இருக்கையில், அவர்களிடம் பணிவுடன் நடந்துகொண்டு, அவர்களுக்கு நம்மால் இயன்ற சௌக்கியமெல்லாம் செய்து தர வேண்டும். (இதைப் படிக்கும் வரை அப்படிச் செய்யாதவர்கள் இந்தக் கணம் முதல் அப்படி தவறாமல் செய்ய ஒரு அவஸ்ய வேண்டுகோள் ) தாய் தந்தையர் நமக்காக ஆதியில் செய்துள்ள தியாகங்களுக்கு நாம் பிரதியுபகாரம் செய்யவே முடியாது. அவர்களது மனம் கோணாமல் வைத்துக் காக்க வேண்டும்.(சிலர் இதை ஒரு காகிதத்தில் எழுதி பர்சில் வைத்துக்கொள்ளவும்.)
அவர்கள் இந்த உலகத்தை விட்டுப் போன பிற்பாடும், அவர்களுக்காக சாஸ்திரப் பிரகாரம் தர்ப்பணம், சிரார்த்தம் இவற்றைஅனைவரும் தவறாமல் செய்ய வேண்டும்.பெற்றோர் உயிரோடு இருக்கும் வரையில் அவர்களை வைத்துப் பராமரிக்க வேண்டும் என்பதை மீண்டும் சொல்கிறேன்.
''எள், தர்ப்பண ஜலம், பிண்டம், அரிசி,வாழைக்காய், சாப்பாடு எல்லாம் இங்கேயே இருக்கின்றன. அல்லது கண் முன்னாலேயே ஒருத்தன் எடுத்துப் போனான். அல்லது சாப்பிட்டுவிட்டான். பித்ருக்கள் எங்கேயோ மறு ஜன்மா எடுத்து விட்டார்கள் என்று நீரே சொல்கிறீர். அப்படியிருக்க இங்கே உள்ள வஸ்து அங்கே போய் அவர்களை சேருகிறது என்பது நம்பமுடியாதது. சுத்த பைத்தியக்காரத்தனம் அல்லவா?'' -- ஒரு சீர்த்திருத்தக் காரர் வாய்விட்டுக் கேட்கிறார். அவரை விடுங்கள். இதை படிக்கும், படிக்கக் கேட்கும் உங்களில் பலருக்கும் மனசுக்குள் இப்படிச் சந்தேகம் இருக்கலாமே. இது விஷயமாக ஒரு கதை சொல்கிறேன்.
ஒருவரின் பிள்ளை பட்டணத்தில் படிக்கிறான். காலேஜில் பரிட்சைக்குப் பணம் மறுநாள் கட்டணும் .பையன் ''அப்பா, அவசரமாக உடனே தந்தி மணியாடரில் பணம் அனுப்பு'' என்று சொல்கிறான். அப்பாவுக்குத் தந்தியும் மணியார்டரும் தனித் தனியாகத் தான் தெரியும். எப்போதோ தந்தி அடித்திருக்கிறார். எப்போதோ யாருக்கோ மணி ஆர்டர் அனுப்பியிருக்கிறார். அது என்ன ''தந்தி மணியார்டர்''? அவருக்கு புரியவில்லை. நேராக தபாலாபீஸ் போனார். ரூபாயைக் கொடுத்து ''தந்தி மணியார்டர் '' பண்ணச் சொன்னார். தபாலாபீஸ் குமாஸ்தா ரூபாயில் ஒட்டை பண்ணித் தந்திக் கம்பியில் கட்டி அனுப்புவார் என்று எண்ணிஇருப்பார். ஆனால் பணம் வாங்கிய குமாஸ்தா ரசீது கொடுத்துவிட்டு, ''போங்கோ, உங்க பணம் நாளை போய் சேர்ந்து விடும். அனுப்பிட்டேன்'' என்றார். அவர் பணத்தை பெட்டியில் போட்டதையும்,ஒட்டை பண்ணிக் கம்பியில் கோர்க்காமலிருப்பதையும் பார்த்த அப்பா என்ன ஏமாந்தாங்குளியா? விடுவாரா?
''என் பணம் இங்கேதானே இருக்கிறது. அதில் ஒட்டை போட்டு நீங்கள் எங்கேயும் அனுப்பவில்லையே. அது எப்படிப் போய்ச் சேரும்?''
''ஓட்டை போடவேண்டாம், கம்பியில்கோர்க்க வேண்டாரம் என்று சிரித்தார் குமாஸ்தா. அதுவே தானா போய்ச் சேர்ந்து விடும்' என்று சொல்லி கட்டுக் கடகட என்று தந்தியும் அடித்தார்.
''என்ன அக்ரமமா இருக்கே. பணத்தை வாங்கி பொட்டியிலே போட்டுண்டு எதையோ லொட்டு லொட்டென்று அடிச்சு சப்தம் பண்ணுகிறான். கேட்டா என் பணம் நாளைக்கு பிள்ளைக்கு போய் சேர்ந்துவிடும் என்கிறான். ருபாய் இங்கே இருக்கும்போது, லொட் லொட்டுனு கட்டையை இங்கேஅடித்தால் அங்கே பணம் எப்படிப் போய்சேரும்'' என்று அப்பாவுக்குச் சந்தேகம். மறுநாள் பையன் பணம் வந்து சேர்ந்தது என்றான்.
தர்ப்பணம் ஸ்ரார்த்தம் பண்ணுவதும் அந்த மாதிரி தான். நாம் எதைக் கொடுத்தாலும் அதற்கென சட்டப்படி கொடுக்க வேண்டும். சாஸ்திரம் என்கிற சட்டம் விதித்த படி நாம் கொடுப்பதைத் தெரிந்து கொள்கிற பிதுர் தேவதைகள் அது யாருக்கு போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்குக் கொண்டு போய் சேர்த்து விடுவார் கள். பித்ருக்கள் மாடாகப் பிறந்திருந்தால் வைக்கோலாக்கிப் போட்டுவிடுவார்கள்.குதிரையாகப் பிறந்திருந்தால் புல்லாக்கி கொள்ளாக்கி போட்டு விடுவார்கள். பிதுர் தேவதைகளுக்குபரமேச்வரன் இப்படி உத்தரவு பண்ணி,இதற்கான சக்தியும் தந்திருக்கிறார்.ஆகையால் சிரார்த்தத்தன்று கொடுப்பதைப்பெற்றுக் கொள்ள அப்பாவோ அம்மாவோ தாத்தா பாட்டியோ நேரில் வரவேண்டியதில்லை.
தந்தி மணியார்டர் அனுப்பியவனின் பணம் வாங்கிக் கொள்ளுகிறவனிடம் நேராகப் போவதில்லை. மணியார்டர் பெறுகிறவன் வேறு தேசத்தில் இருந்தால் அங்கே நம் ரூபாய் நோட்டு செல்லாது. இங்கே உள்ள ரூபாயை வெளி தேசத்தில் டாலராகவோ பவுண்டாகவோ மாற்றித் தரவும் ஏற்பாடு உண்டு. ஆனால், நம் ஊரில் டாலரையோ பவுண்டையோ கடைகளில் நேரடியாக மாற்ற முடியாது.இங்கே செல்லுபடியாகிற ரூபாயைத்தான் ஏற்றுக் கொள்ளுவார்கள். அப்படியே சாஸ்திரப் பிரகாரம் விதிக்கப்பட்ட எள்,தண்ணீர், வாழைக்காய் இதுகளை ஏற்ற உணவாக மாற்றித் தரப்படும்.
பித்ருக்களிடம் நமக்குள்ள நன்றி மனோபாவம் , சாஸ்திரத்தில் நமக்குள்ள நம்பிக்கை, ஸ்ரத்தை தான்முக்கியம். இன்னொருத்தனின் ஆரோக்கியத்துக்காக நான் டோஸ்ட் சாப்பிடுகிறேன் என்று பார்ட்டியில் ஒரு வெள்ளைக்காரன் இன்னோருத்தன் பெயரைச் சொல்லிட்டு தானே சாப்பிடறான். ஒரு கப்பில் மதுவை ஊற்றி மற்றவன் பெயரைச் சொல்லி தூக்கிக் காட்டிவிட்டு தானே குடிப்பான். இதில் என்ன தெரிந்து கொள் ளவேண்டும்? ஒருவரின் மனோபாவத்தின் சக்தியால் இன்னொருவனுக்கு ஆரோக்கியம் உண்டாகும் என்ற நம்பிக்கை. சிராத்தம் என்றால் சிரத்தையோடு பண்ணுவது. சிரத்தை முக்கியம்.ஒரு காரியம் என்று பண்ண ஆரம்பித்தால் அதற்குரிய விதி முறை, சட்டப்படி தான் பண்ணவேண்டும். லெட்டர் எழுதினால், என் இஷ்டப்படி தான் அட்ரஸ் எழுதுவேன் எதற்கு அந்த சிகப்பு தபால் பெட்டியில் போடணும்?.எங்கள் வீட்டில் அதைவிட நல்ல பெரிய பச்சை பெட்டி இருக்கிறது. அதில் தான் போடுவேன் என்றால் லெட்டர் போகுமா?காரியமில்லாத மனோபாவமாக இருக்கிற வரையில் அன்பு,பக்தி, ஞானம் இலற்றைக் கட்டுப் பாடின்றிச்செலுத்தலாம். காரியம் என்று செய்யும்போது அதற்கான விதியை சட்டத்தை கடைபிடிக்கவேண்டும்.. இது தான் சாஸ்த்ரம். மந்திரம். விதி முறை ''
No comments:
Post a Comment