பட்டணம் சுப்ரமணிய ஐயர் J K SIVAN
கதன குதூகலம் உண்மையிலேயே குதூகலத்தை மனதில் உண்டாக்கும் ராகம். அதில் பாலமுரளி கிருஷ்ணா பாடிய தில்லானா என்னை அடிக்கடி ஸ்வர்கத்துக்கு தூக்கிக்கொண்டு செல்கிறது.
இந்த அற்புத ராகத்தை முதலில் அறிமுகப்படுத்தியவர் சென்னையில் அதிககாலம் வசித்த திருவையாறு வித்துவான் பட்டணம் சுப்ரமணிய ஐயர். சென்னப்பட்டினத்தில் சிலகாலம் வசித்ததால் ''பட்டணம்'' பேரோடு ஒட்டிக்கொண்டது. அவரது 'ரகுவம்ஸ ஸுதா' என்ற கிருதி யை கேட்டால் ஏதோ ஒரு வெள்ளைக்காரன் பாடும் மெட்டை ஞாபகப்படுத்தும். துரித காலத்தில் வாத்யம் இணையும் போது நமது உடம்பு அதற்கேற்ப அசையும். அது தான் டான்ஸா ? dance ஆ? ஒரு திருட்டு வெள்ளைக்காரன் இங்கிருந்து அதை அபேஸ் பண்ணி இருப்பானோ.
திருவாங்கூர், விஜயநகரம், தஞ்சாவூர் மஹாராஜா, ராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி போன்றவர்கள் வித்வான்களை, பண்டிதர்களை ஆதரித்த கலை ஆர்வம்கொண்ட தாராள மனசும் கையும் கொண்ட ராஜாக்கள்.
ஒரு முறை இராமநாதபுரம் சேதுபதி அரண்மனைக்கு, மகா வித்வான்கள் மகா வைத்யநாத ஐயரும், பட்டணம் சுப்பிரமணிய ஐயரும், குன்றக்குடி கிருஷ்ண ஐயரும் சென்றார்கள். இந்த மூன்று பேரின் இசை ஞானத்தை, திறமையை ராஜா தனித்தனியே பலமுறை கேட்டு, ரசித்து மகிழ்ந்தார். அப்போது டேப் ரிகார்டர் இல்லையே. நேரிலே பாடினால் தான் உண்டு. இந்த மூன்று போரையும் ஒன்றாக இணைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தினால் என்ன? இப்படி ஒரு ஐடியா.
அன்று மாலையில் இராமலிங்க விலாசம் அரண்மனையில் (கட்டபொம்மன் வெள்ளைக்காரன் பானர்மே னை சந்தித்த இடம் ஞாபகம் இருக்கிறதா) அற்புதமான ஒரு நிகழ்ச்சி நடந்தது.
ராஜா, அரண்மனையில் எல்லோரும், மற்றும் பொது மக்கள் கும்பல் அரண்மனையில் இடமே போதவில்லை. மைக் இல்லாத காலம். திரும்ப திரும்ப மக்கள் ரசிக்க அடிக்கடி பாடினார்கள். மகாவைத்யநாதர் ராகம் பாட, பட்டணம் சுப்ரமணிய ஐயர் தாளம்போட குன்னக்குடி கிருஷ்ண ஐயர் பல்லவி பாடினார்.
பட்டணம் சுப்பிரமணியர் காலம் 1845 – July 31, 1902. வாக்கேய காரர். சங்கீத வித்வான். நூற்றுக்கும் மேற்பட்ட சாஹித்ய கர்த்தா. திருவையாறில் பிறந்தவர். கேட்கவேண்டுமா? அப்பா பாரதம் வைத்யநாத ஐயர் . தாத்தா பஞ்சநத சாஸ்திரி சரபோஜி ராஜா அரண்மனையில் ஆஸ்தான வித்வான். பட்டணம் சுப்ரமணியரின் குரு ஆரம்பத்தில் மெலட்டூர் கணபதி சாஸ்திரி, கொத்தவாசல் வெங்கட்ராமய்யர், அப்புறம் மானம்பூசாவடி வேங்கடசுப்பையர். மானம்பூ சாவடி வேங்கடசுப்பையர் தியாகராஜ ஸ்வாமிகளின் சிஷ்யர்.
பட்டணம் சுப்ரமணிய அய்யரின் சீடர்கள் மைசூர் வாஸேதவாச்சார், பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்கார்.(அரியக்குடியின் குரு) பைரவி கெம்பே கௌடா, டைகர் வரதாச்சாரியார் ( M D ராமநாதன் குரு) எல்லோருமே ஜாம்பவான்கள். சுப்ரமணிய அய்யர் க்ரிதிகளில் முத்திரை ''வேங்கடேச '' . தனது குரு மானம்பூச்சாவடி வேங்கடசுப்பையர் பெயரை அப்படி முத்திரையாக வைத்த குருபக்தி. இப்போது குருபக்தி கிலோ என்ன விலை ?
மைசூர் மஹாராஜா ஐந்தாம் சாமராஜ வாடையார் தங்க தோடா , காப்புகள் கொடுத்து கௌரவித்தி ருக்கிறார். அய்யர் மத்தியம கால தானம் பாடுவதில் வல்லவர். பேகடா அற்புதமாக பாடி மைசூர் மஹாராஜாவிடம் பேகடா சுப்ரமணிய ஐயர் என்ற பேரும் பெற்றவர். ஸஹானா, ஹம்ஸத்வனி யிலும் சூரர்.
சிம்ஹநந்தனாவில் ஒரு பல்லவி, 128 அக்ஷர காலத்தோடு, ஒரு சுற்று. அடேயப்பா... இன்னொருவர் பிறக்கணும்.
எப்போதாவது பட்டணம் சுப்ரமணிய ஐயர் கீர்த்தனை என்று இதர வித்வான்கள் கச்சேரியில் பாடும்போது இந்தக்கட்டுரை ஞாபகம் வருமா?
No comments:
Post a Comment