Friday, September 25, 2020

Moons temple near Chennai

சென்னைக்கருகே சந்திரன் கோவில் J K SIVAN 

இன்று தொண்டைமண்டலத்து (சென்னையை சுற்றியுள்ள) நவகிரஹ க்ஷேத்திரங்களுள் சந்திரன் க்ஷேத்ரமான சோமங்கலம் சோமநாதர் ஆலயம் பற்றி சொல்கிறேன். ஆயிரம் வருஷ கோவில் இது. 

சோமங்கலம் சென்னையிலிருந்து 35 கி.மீ. தாம்பரம் கிஷ்கிந்தா வழியாக செல்லலாம். குன்றத்தூர் வழி செல்வது சிரமமில்லா தது.குன்றத்தூரிலிருந்து கிட்டத்தட்ட ஒரு 10 கி.மீ . சோமநாதேஸ்வரர் அமைதியாக யார் தொந்தரவும் இல்லாமல் அங்கே நிசப்தமாக குடி கொண்டிருக்கிறார். சில ஸ்லோகங்கள், பாட்டுகள் பாடினேன் என்பதை விட சொன்னேன் என்பது சரியான வார்த்தை. இது தொண்டை மண்டல (சென்னையை ஒட்டிய ) நவகிரஹ ஸ்தலங்களில் சோமங்கலம் சந்திரன் ஸ்தலம். அதனால் தான் சோமன் பெயர் லிங்கத்திற்கு. அம்பாள் எயர் காமாக்ஷி. மூலவர் எதிரே நந்தி பின்பக்கமாக ஏன் திரும்பி இருக்கிறார்?

எதிரி ராஜா படையெடுத்து வந்தபோது அந்த பிரதேசத்தை ஆண்ட சோழ ராஜா சோம காந்தன். ஒரு சிவபக்த ராஜா, சோம நாதேஸ் வரர் ஆலயத்தை கட்டிக் கொண்டிருந்தான். திடீர் என்று எதிரி படை வந்த விஷயம் கேள்விப்பட்ட ராஜா பதட்டமடைந்து ''சோமநாதா இது என்ன சோதனை, படை திரட்டக் கூட நேரமில்லை யே,எப்படி இந்த ஊரை காப்பாற்றுவேன் ? என வருந்தினான். சிவன் சும்மா இருப்பாரா? 

''நந்திகேஸ்வரா எதிரி படையில் எவனும் இங்கே நெருங்காமல் நீ பார்த்துக் கொள்'' என்று ஆணையிட, நந்தி வாசலைப் பார்த்த வாறு திரும்பி நின்றார். அவரைப் பார்த்ததுமே, அவருடைய மூச்சுக்கு காற்றின் சப்தத்திலேயே எதிரிப்படை காணாமல் போய் விட்டதாம். எனவே தான் இங்கே நந்தி சிவனைப் பார்க்காமல் வாசலைப் பார்த்து நிற்கிறார்.

இந்த கோவிலில் ஒரு அருமையான சதுர தாண்டவ நடராஜா இருக்கிறார். எங்கேயுமே பார்க்க முடியாதவர். ''சதுர' என்றால் '' சதிர்'' என்று ஒரு பெயரும் சதுரமான என்று ஒரு அர்த்தமும் உண்டு. சிவனின் தாண்டவங்கள், அஜபா நடனம், ஊர்த்வ தாண்டவம், ஆனந்த தாண்டவம் என்று எல்லாம் இருப்பது போல் ''சதுர' தாண்டவ மூர்த்தியாக சோமங்கலத்தில் காட்சி தருகிறார். இரு கால்களும் பின்னிக் கொண்டு கால்கள் தரையில் பாவியவாறு, சதிர் ஆடும் நிலையில் நிற்கும் தாண்டவ மூர்த்தி. அரிதானவர். சோமங்கலத்தில் மற்ற சில கோவில்களில் காண்பதைப் போல நம்மால் படிக்கமுடியாத, எவரும் பராமரிக்காத (?) கல்வெட்டுகள் பரிதாபகரமாக இருந்தது. 

புராண கதை ஒன்று இருக்கிறது. தக்ஷனுக்கு 27 பெண்கள். எல்லோரும் சந்திரன் மனைவிகள். ஆனால் சந்திரன் மனதை கவர்ந்தவள் ரேவதி. இதனால் மற்ற 26 பெரும் தக்ஷனிடம் குறை யைச்சொல்ல, தக்ஷன் சந்திரனுக்கு அறிவுரை சொல்ல, சந்திரன் மாமனாரை உதாசீனம் செய்ய தக்ஷன் ''சந்திரா, உன் அழகால் தானே உனக்கு மமதை. ஒவ்வொரு நாளும் உன் அழகை இழப்பாய்'' என சபிக்க தனது 16 கலைகளை, சோபையை இழந்து இங்கே வந்து தவமிருந்து பழைய நிலை அடைகிறான். தேய்பிறை வளர்பிறையாக மீண்டும் அவன் அழகும் சோபையும் வளர்கிறது. சந்திரன் தவத்தை மெச்சி சிவன் அவனை பிறைச்சந்திரனாக தலையில் சூடிக்கொள்கிறார். சந்திரன் சாபம் தீர்த்தத்தால் சோமநாதர் என்று சிவனுக்கு பெயர். நவகிரஹ சந்திரதோஷ பரிஹார ஸ்தலம். சந்திரனுக்கு தனி மேற்குபார்த்த சந்நிதி. 

குலோத்துங்க சோழன் 1073ல் கட்டிய ஆலயம். கல்வெட்டில் சோமங்கலத்தை ''ஜெயங் கொண்ட சோழமண்டலத்து செங்காட்டுக் கோட்டத்து மாகனூர் நாட்டு சோமங்கலமான ராஜசிகாமணிச் சதுர்வேதிமங்கலம்'' என்று மூச்சுவிடாமல் சொல்லமுடியாத நீண்ட பெயராக சொல்லி இருக்கிறது. 

நான்கு வேதங்களை ஓதும் அந்தணர்களுக்கு ராஜாவால் தானமாக வழங்கப்பட்ட மானிய நிலங்கள் சதுர்வேதி மங்கலம் எனப்படும். இங்குள்ள ஏரி ஒன்று உடைந்து சேதமானதை ரிப்பேர் செய்ததை , ஆலய தீப கைங்கர்ய வருமானத்துக்காக பசுக்களை தானம் வழங்கியது பற்றி கல்வெட்டு சொல்கிறது. கோவில் விமானம் கஜப்பிரஷ்ட ரகம். தூங்கானை மாடம் என்பார்கள். ஸ்தல விருக்ஷம் சரக்கொன்றை மரம். அதனடியில் சிறிய லிங்கம். விருக்ஷலிங்கம். பிரஹாரத்
தில் சுவரில் சிற்பங்கள். சப்தமாதாக்களோடு மஹாலக்ஷ்மியின் மூத்த சகோதரி.... ஜ்யேஷ்டா
தேவி காணப்படுகிறாள். பாற்கடலில் இவளும் தோன்றியவள்..


No comments:

Post a Comment