Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
ஜெய் பாண்டுரங்கா -1
பாரே பாண்டுரங்கா கேவ்ஹாம் பேட தேசி
ஜாளோம் மே பரதேசி தூஸவீணா ( துகாராம்)
துகாராம் பாண்டுரங்கனைக் கேட்கிறார் – பாண்டுரங்கா எப்போது நீ வருவாய் ? நான் உன்னைக்காண்பது எப்போது?
இதுவே பாண்டுரங்க பக்தர்களின் கூக்குரல். பாண்டுரங்கன் பக்த வத்சலன் அல்லவா? அவரகளுக்கு பாண்டுரங்கக்ஷேத்ரமாகிய பண்டரிபுரத்தில் வெவ்வேறு விதமாக காட்சி அளித்து அவர்களைக் காக்கிறான். பக்தர்களின் பக்தியே சந்திரபாகா நதியாக ஓடுவது போல் தோன்றுகிறது. பக்தர்களின் நாம் சங்கீர்த்தனத்தை எப்போதும் கொண்டது பண்டரிபுரம். பாண்டுரங்க பக்தர்களில் அவனுடைய அருளைப் பூரணமாகப் பெற்றவர் துகாராம்..
துகாராம் ஆடி மாதத்தில் தவறாமல் சுக்லபக்ஷ ஏகாதசி அன்று பண்டரிபுரம் சென்று பாண்டுரங்கனை சேவிப்பாராம். ஒரு சமயம் அவருக்கு உடல் நலம் இல்லாமையால் போக முடியவில்லை. அப்போது அவர் 24 அபங்கங்களை எழுதி பண்டரிபுரம் போகும் பக்தர்களிடம் கொடுத்து அஹ்டை பாண்டுரங்கனிடம் சேர்ப்பிக்கும்படி கூறி ஏன் அவன் தன் பக்தனைக் கைவிட்டுவிட்டான் என்று கேட்கும்படி கூறினாராம்
.அதற்கு பாண்டுரங்கன் அங்கு பக்தர்கள் சூழ்ந்திருப்பதால் தன்னால் வர இயலவில்லை என்றும் துகாராமை கருடன் மேல் ஏறி பண்டரிபுரம் வருமாறும் கூறி கருடனை அனுப்பினானாம். ஆனால் துகாராம் அது அபசாரம் என்று மறுக்கவே வேறு வழியின்றி தானே கருடன் மேல் ஏறி துகாராமிடம் வந்தானாம். இதை அவர் ஒரு அபங்கத்தில் கூறி இருக்கிறார்.
துகாராம் பூனாவுக்கருகில் தேஹு என்னும் கிராமத்தில் வர்த்தகக் குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய பெற்றோர் வசதி படைத்தவர்கள் . அவருடைய இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த அவர் குடும்ப வியாபாரத்தை கவனித்து வந்தார். அவருடைய முதல் மனைவி பஞ்சம் ஏற்பட்டபோது இறந்து விடவே இரண்டாவது மனைவியை மணந்தார்
. அவள் எப்போதும் அவரிடம் குறை கண்டுபிடித்து சண்டை போட்டுக்கொண்டு இருப்பதால் அவர் மனவருத்தம் அடைந்தார் . தன் சிறந்த பக்தரை உலக வாழ்க்கையில் ஈடுபடுத்துவானா பாண்டுரங்கன்? ஒருநாள் பாண்டுரங்கன் அவர் கனவில் தோன்றி அவர் முந்தைய ஜன்மத்தில் நாம தேவராக இருந்தார் என்று கூறி அவர் மனதில் பக்தியைத் தோற்றுவித்தான் .
அது முதற்கொண்டு அவர் பரம பக்தராக மாறிவிட்டார். அவருடைய அபங்கங்கள் 5௦௦ க்கும் மேற்பட்டவை. துகாராம் தன் வாழ்க்கை முழுவதும் நாம சங்கீர்த்தனத்திலேயே கழித்துத் தன் ஐம்பதாவது வயதில் பாண்டுரங்கனுடன் சேர்ந்தார்.
துகாராம் ஒரு அபங்கத்தில் தானே நாமதேவராக இருந்தது பற்றிக் கூறுகிறார்.
" பகவான் நானே கிருதயுகத்தில் பிரஹ்லாதனாகவும், திரேதாயுகத்தில் அங்கதனாகவும், த்வாபர யுகத்தில் உத்தவராகவும் , கலியுகத்தில் நாமதேவராகவும் இருந்து இப்போது இந்த ஜன்மம் எடுத்துள்ளேன் என்று கூறினார். "
அது எப்படி என்பதைப் பிறகு காண்போம்.
No comments:
Post a Comment