Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
வேதார்த்த சங்க்ரஹம்-13
தத்வமஸி விளக்கம் -3
6. காந்தார தேசத்தைச் சேர்ந்த ஒரு மனிதனை கொள்ளைக்காரர்கள் அவனுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு அவன் கண்களைக் கட்டி அவனை ஒரு மனித சஞ்சாரம் அற்ற ஒரு காட்டில் விட்டுவிடுகின்றனர்.
அவன் நான்குதிசைகளிலும் ஓடி என்னைக் கண்ணில் கட்டி இந்த இடத்தில் விட்டுவிட்டனர் என்று கூவுகிறான். அப்போது அதைக் கேட்ட ஏதோ ஒரு நல்ல வழிப்போக்கன் அவன் கண்கட்டை அவிழ்த்து விடுகிறான். திக்கு திசை தெரியாத அவனிடம் காந்தார தேசத்திற்கு இந்த வழியாகப் போகவேண்டும் என்று சொல்கிறான். அதன்படி அவன் அந்த வழியிலே சென்று தன் இருப்பிடத்தை அடைகிறான்.
அதேபோல நாம் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இந்த உலகத்தில் இருக்கிறோம்.நம்முடைய ஆசைகளே திருடர்கள். அவைகள் நம் அறிவைக் குருடாக்கி உலகம் என்ற காட்டில் அலைய விடுகின்றன.நம்முடைய அறியாமையே நம் கண்களுக்குபோட்ட கட்டு. வழிப்போக்கன் அந்த மனிதனுக்கு உதவினது போல் நம் குரு நமக்கு அறியாமை என்னும் கண்கட்டை அவிழ்த்து நல்ல வழியைக் காட்டுகிறார்.
இந்த உடலில் உள்ளவரைதான் சம்சாரம். பிரம்மஞானத்தை அடைந்து விட்டால் இந்த உடலை விட்டதும் இறைவனிடம் போய் சேர்ந்து விடுவோம் அதாவது வந்த இடத்திற்கே சென்று விடுவோம். இதன் சாராம்சம் பிரம்மத்தை குருமூலம் தான் அடைய முடியும் என்பது.
7. அடுத்த உதாரணம் இறக்கும் நிலையில் உள்ள மனிதனைப் பற்றியது. அந்த நிலையில் "என்னைத்தெரிகிறதா ," என்று சுற்றி இருக்கும் உறவினர் கேட்கின்றனர். எதுவரை அவனுக்கு தன்னைப் பற்றியும் தன்னை சுற்றி உள்ளவர்களைப் பற்றியும் உணர்வு இருக்கும்?
உத்தாலகர் சொல்கிறார்.
' எதுவரை வாக்கு மனதில் ஒடுங்கி மனம் பிராணனில் ஒடுங்கி, பிராணன் அக்னியில் ஒடுங்கி, அக்னியும் பரப்ரம்மத்தில் ஒடுங்கவில்லையோ அதுவரை அவனுக்கு பிரக்ஞை இருக்கும். அதற்குப்பிறகு அவன் ஆத்மா அந்தராத்மாவான பிரம்மத்தில் ஒடுங்குகிறது. அந்த பிரம்மமே எல்லா உயிர்கட்கும் ஆத்மா."
இதை நாம் நடைமுறையில் காணலாம். மரணத்தருவாயில் முதலில் பேச்சு ஒடுங்குகிறது. மனது நினைத்தாலும் பேச முடிவதில்லை. அடுத்ததாக மனம் பிராணனில் ஒடுங்குகிறது. அதாவது மூச்சு மட்டும் இருக்கிறது. பிறகு பிராணன் அக்னியில் ஒடுங்குகிறது என்றால் பிராணன் போய் விட்டபோதும் உடல் உடனே சில்லிடுவதில்லை. ஏனென்றால் பிராணன அக்னியில் ஒடுங்குகிறது. எப்போது அக்னியும் ஆத்மாவில் ஒடுங்குகிறதோ அப்போதுதான் இறப்பு உறுதியாகிறது. அதாவது உடல் குளிர்ந்து போகிறது.
இதில் ஒரு சந்தேகம் எழலாம் . இது எல்லோருக்கும் உள்ளதுதானே ? ஆனால் பிரம்மத்தில் ஒடுங்குவது என்பது எல்லோருக்கும் சாத்தியமா? பிறகு ஏன் சில ஜீவர்கள் மறுபடி பிறக்கிறார்கள் சிலர் பிரம்மத்தை அடைந்து முக்தியடைகிறார்கள் ? என்று. இதற்கு பதில் அடுத்ததாக கூறுகிறார்.
8. ஒருவனை அவன் திருடியதாக சந்தேகித்து அழைத்து வருகிறார்கள். அவனை பழுக்கக் காய்ச்சிய கோடரியையைக் கையில் பிடிக்கச் சொல்கிறார்கள். அவன் குற்றவாளி என்றால் அவன் கை வெந்து விடும். அப்போது அவனைக் கொன்றுவிடுவார்கள். அவன் நிரபராதி என்றால் அவன் கைக்கு ஒன்றும் ஆகாது. அப்போது அவனை விடுவித்துவிடுவார்கள்.
இது ஒரு வேத கால தண்டனையைக் குறிக்கிறது.
இது எப்படி ச்வேதகேதுவின் கேள்விக்கு பதிலாகிறது என்று பார்க்கலாம்.
குற்றம் செய்தவன் கோடரியால் தீய்க்கப் படுவது போல அறியாமையால் உலகப் பற்று கொண்ட ஜீவன் பழுக்கக் காய்ந்த கோடரி போன்ற உலகின் தொடர்பால் பிறப்பு இறப்பு என்று துன்புறுகிறது. ஆனால் எவ்வாறு ஒரு நிரபராதியை அந்தக் கோடரி சுடாதோ அதே போல ஒரு ஞானியை இந்த உலகம் பாதிப்பதில்லை. அதனால் மறுபிறப்பில்லை.
தத் தவம் அஸி என்பதற்கு ராமானுஜரின் விளக்கம் அடுத்து வருகிறது.
No comments:
Post a Comment