Tuesday, June 30, 2020

Uddhava gita hamsakyanam part 5 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

உத்தவகீதை - ஹம்சாக்யானம் 5

அடுத்து பகவான் ஹம்ச ரூபத்தில் சனகாதியருக்கு உபதேசித்தது பற்றிக் கூறுகிறார்.

பிரம்மாவின் மானஸ புத்திரர்களாகிய சனகாதியர் யோகத்தின் ரகசியத்தையும் அதன் மார்கத்தையும் கேட்டார்கள். அவர்கள் கூறியது,

மனம் விஷய சுகங்களை நாடுகிறது. விஷய சுகங்கள் மனதை ஆக்கிரமிக்கின்றன. இதிலிருந்து விடுபடுவது எவ்வாறு?

பகவான் கூறினார். 
ஆனால் பிரம்மா தானே தோன்றியவரும் ஸ்ருஷ்டிகர்த்தாவுமாக இருந்தபோதிலும் கர்மத்தில் நாட்டம் உடையவர் ஆதலால் இதற்கு விடை தெரியாமல் என்னை நினைத்தார். நான் ஹம்சரூபத்தில் அவர்கள் முன் சென்றேன். பிரம்மா என்னை நீங்கள் யார் என்று கேட்க நான் கூறியதைக் கேட்பாயாக.

" முனிவர்களே , உங்கள் கேள்வி ஆத்மாவைப் பற்றியதா? தேகத்தைப் பற்றியதா? உங்களுடையவும் என்னுடையவும் ஆத்மா ஒன்றே ஆதலால் முதல் வகைக் கேள்விக்கே இடமில்லை. தேகத்தைப் பற்றிய கேள்வியானால் எல்லோருடைய தேகமும் பஞ்ச பூதங்களால் ஆனதாகையால் 'நீங்கள் யார்,' என்ற கேள்விக்கு அர்த்தம் இல்லை.

மனதாலும் வாக்காலும் பார்வையினாலும் மற்ற இந்த்ரியங்களாலும் அறியப்படுபவன் நானே என்று தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள் . குணங்கள் சித்தத்தில் புகுகின்றன. அதனால் சித்தம் குணவசப்படுகிறது. இந்த்ரியங்கள், மனம் இரண்டும் சேர்ந்து ஜீவனின் தேகமாகிறது. ஜீவன் உண்மையில் என்னுடைய அதாவது ஆத்ம ஸ்வரூபமே. ஆகையால் ஆத்மாவிடம் ஒன்றி குணங்கள் சித்தம் இவற்றை விடவேண்டும்.

விழிப்பு, உறக்கம் , ஆழ்ந்த நித்திரை இம்மூன்றும் முக்குணங்களோடு ஒன்றிய சித்தத்தின் நிலைகள். ஆத்மா இவைகளில் இருந்து மாறுபட்டு சாக்ஷி மாத்திரமாக நிற்கிறது. குணங்களால் பந்தம் ஏற்படுகிறது. என்னிடம் ஒன்றிய நிலையில் இந்த்ரியங்கள் மனம் இவைகளில் இருந்து விடுபட முடியும்.

( ஒன்றிய நிலை என்பது விழிப்பு , தூக்கம், ஆழ்ந்த நித்திரை இவைகளுக்கு மேற்பட்ட துரீயம் என்னும் சமாதி நிலை.)

அஹங்காரத்தால் ( நான் எனது என்னும் உணர்வு) ஏற்ப்படும் பந்தம் ஆத்மாவை அறிவதில் இடையூறு என்று அறிந்து துரீயம் என்ற சமாதி நிலையில் இருந்து கொண்டு சம்சார பந்தத்தை ஒழிக்க வேண்டும்.

காணப்படும் பொருள்களில் இருந்து சிந்தையைத் திருப்பி ஆசையை ஒழித்து ஆத்மாவிடம் ஆனந்தம் கொண்டு எதையும் வேண்டாமல் இருக்க வேண்டும். விடப் பட்டது உடல் விழும் வரை நினைவில் இருந்தாலும் அதனால் யோகியானவன் பாதிக்கப் படுவதில்லை.

யோக மார்கத்தில் ஏறிச் சென்று சமாதியை அடைந்து பரம்பொருளிடம் விழிப்புற்றவன் மீண்டும் கனவுக்கொப்பான இந்த தேகத்தை பஞ்ச பூதவடிவான இந்த உலகத்தோடு பற்றுக்கொண்டு நாடமாட்டான்.

ஆத்மஞானம் மூலம் அடையும் இலக்கு நானே என்று அறிவீர்களாக. உங்களுக்கு உபதேசிக்க வந்த விஷ்ணுவே நான்.

சமத்துவம் வைராக்கியம் முதலிய முக்குணங்களுக்கு அப்பாற்பட்ட பாவங்கள் நிர்குணனும், வேண்டுதல் வேண்டாமை இல்லாதவனும் ஜீவர்களின் பிரிய நண்பனுமான என்னை அடைவிக்கின்றன. "
இவ்வாறு அவர்களுக்கு உபதேசம் செய்த பின் அவர்களால் பூஜிக்கப்பட்டு என் இருப்பிடம் சென்றேன் என்று பகவான் உத்தவரிடம் கூறினார்.

  

உத்தவகீதை - ஹம்சாக்யானம் -5

பகவான் மேலும் கூறுகிறார்.
'சத்வம் ரஜஸ் தமஸ் என்ற குணங்கள் புத்தி சம்பந்தப்பட்டதே அன்றி ஆத்மாவுக்கில்லை. சத்வத்தின் மூலம் ரஜஸ் தமஸ் இவைகளை கட்டுப்படுத்தி பின்னர் சத்வத்தைக் கொண்டே சத்வத்துக்கும் அப்பால் செல்ல வேண்டும்.'

(சத்வ குணமானது சுத்தமானதானாலும் சுகம் ஞானம் இவற்றில் பற்றுக்கொள்ளச் செய்கிறது. அதாவது அறிவுத்தாகம் எழ அதன் காரணமாக அடுத்த பிறவிக்குக் காரணமாகிறது. ஆயினும் ரஜஸ் , தமஸ் இவை காரணமாக் எழும் பற்றை விட இது மேலானது. 
சத்வகுணத்தினால் ஏற்படும் பற்றையும் ஒழிப்பதற்கு சத்வமே காரணம் ஆகிறது. எப்படிஎன்றால் நல்ல செய்கைகள் ஞானம் அடையும் வேட்கை இவற்றையும் பகவானுக்கே சமர்ப்பணம் செய்வதற்கு சத்வத்தின் உதவி தேவை. இதனால் சத்வ குணத்திற்கும் அப்பால் சென்று குணாதீதன் ஆகிறான்.)

'சாஸ்திரம், ஜலம், ஜனங்கள், தேசம், காலம், கர்மம், பிறப்பு, தியானம், மந்த்ரம், ஆசாரத்தூய்மை இவை பத்தும் குணங்களை வருத்தி செய்கின்றன. இவைகளில் சத்வத்தை வளர்ப்பவைகலையே கடைப் பிடிக்க வேண்டும்.'

இதன் விளக்கம் பின்வருமாறு.

1.சாஸ்திரம்- நிவ்ருத்தி அல்லது மோக்ஷ மார்க்கத்தை உபதேசிக்கும் சாஸ்த்ரங்களையே பின் பற்றவேண்டும்., பிரவ்ருத்தி அல்லது கர்ம மார்ககததி உபதேசிப்பவை ரஜோ குணத்தையும், செய்யக்கூடாதவைகளைக் கூறும் ( செய்வினை சூனியம் வைத்தல் உயிர்பலி கொடுத்தல் இவை அதர்வண வேதத்தில் காணப்படும்)

2. ஜலம்- புண்ய தீர்த்தங்கள் சாத்விகம். வாசனை ஊட்டப்பட்டவை ராஜசம். மது முதலியவை தாமசம்.,

3. ஜனங்கள்- சாது ஜனங்களையே நாடவேண்டும். உலக விஷய ஈடுபாட்டை வளர்க்கும் ஜனசங்கம் ராஜசம். துஷ்டர்களின் சங்கம் தாமசம்.,

4. தேசம் – 'விவிக்த தேச சேவித்வம் அரதி: ஜனஸம்ஸதி ,' என்றா கீதை வாக்கியப்படி, ஏகாந்தமான தேசம்தான் சாத்விக பாவத்தை வளர்க்கும். கூட்டம் உள்ள இடம் ரஜஸ்ஸையும் சூடும் இடம் போன்றவை தமஸ்ஸையும் தூண்டிவிடும்.

5.காலம் – விடியற்காலை போன்ற அமைதியான காலத்தில் சத்வ குணம் மேலோங்கும். மற்ற சமயங்களில் மனம் அமைதியுறாது. பரபரப்பான நேரமோ தூக்கம் வரும் நேரமோ சரியானதல்ல.

6. கர்மம்- கடமையைச்செய்தல் , சுயநலமில்லாத செயல்கள் இவை சத்வகுணத்திற்கு அடையாளம். ஆசையின் விளைவான, சுயநலமான செயல்கள் , அடாத செயல்கள் இவை முறையே ரஜஸ் தமஸ் இவைகளின் விளைவுகள்.

7.பிறவி- ரஜஸ் தமஸ் இவை பிறவியை கொடுப்பவை. ஹிம்சை இல்லாததும் ஆடம்பரம் இல்லாததுமான வழிபாடே சத்வ குணத்தின் அடையாளம். அதுதான் பிறவிச்சுழலில் இருந்து காப்பாற்றும்.

8.தியானம் –பகவானைக் குறித்து செய்யும் தியானம் சாத்விகம். தியான்ம என்றால் தொடர் சிந்தனை . இது உலக விஷயங்களைப் பற்றியும் இருக்கலாம் அது ராஜசம். அல்லது எதிரியை எப்படி வீழ்த்துவது என்றும் இருக்கலாம் , அது தாமசம்
.
9. மந்த்ரம்- பிரணவம் போன்ற மந்த்ரங்கள் சாத்விகம். இஷ்டாபூர்த்திக்காக ஜபிக்கபடுவது ராஜசம், மற்றவர் அழிய ஜபிப்பது தாமஸம்.

1௦. ஆசாரத்தூய்மை- மனத்தூய்மை சத்வத்தை வளர்க்கும். உடல் தூய்மை மட்டும் இருந்தால் அது ரஜஸ். இரண்டும் இல்லையேல் அது தமஸ்.

பிறகு பகவான் கூறினார். 
இந்த யோகம் என்னால் சனகாதியருக்கு உலக விஷயங்களில் இருந்து மனதைத்திருப்பி என்னிடம் லயிக்க உபதேசிக்கப்பட்டது.

அடுத்து பகவான் ஹம்ச ரூபத்தில் சனகாதியருக்கு உபதேசித்தது பற்றிக் கூறுகிறார்.

  

No comments:

Post a Comment