Thursday, April 2, 2020

Seetamma Mayamma song tyagarajar- Story

ராமநவமி ஸ்பெஷல் !

ஸ்வாமி ''
வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி , கண்களை மூடியவாறு ராம ஜபம் செய்து கொண்டிருந்த தியாகராஜர் , குரல் கேட்டு சட்டென்று கண் விழித்தார் !
எதிரே ஒரு வயதான தம்பதி !
அருகே ,கூப்பிய கரங்களுடன் ஒரு இளைஞன் !,
மெல்லிய குரலில் அந்த முதியவர் இப்போது பேச ஆரம்பித்தார் ;..
'' ..ஸ்வாமி ...நாங்கள் வடக்கே ரொம்ப தூரத்திலிருந்து கால்நடையாய் ஷேத்ராடனம் பண்ணிண்டு வரோம் !.நாளை ராமேஸ்வரம் போகணும் !..இன்று ஒரு ராத்திரி மட்டும் உங்க க்ருஹத்துல தங்கிவிட்டு , காலை பொழுது விடிந்ததும் கிளம்பிடறோம் !.தயவுசெய்து ஒத்தாசை பண்ணணும் !''
கம்மிய குரலில் , பேசினார் அவர்;
வயதான அந்த தம்பதியின் அழுக்கு படிந்த உடைகள் , முகங்களில் தெரிந்த களைப்பு , வாட்டம் மற்றும் , பேச்சில் தெரிந்த ஆயாசம் ..இவையெல்லாவற்றையும் தாண்டி , அம்மூவரின் முக லாவண்யமும் , தெய்வீக அம்சமும் தியாகராஜரை என்னவோ செய்ய ...அவருக்கு ஒரு வித பக்தி மயக்கம் ஏற்பட்டது !
ஒரு கணம் நிலை தடுமாறியவர் பின் , மெலிதான புன்னகையுடன் , இரு கரங்களையும் கூப்பி அவர்களை வணங்கினார் ;
'' அதற்கென்ன ... பேஷாய் தங்கலாம் !...இரவு போஜனம் பண்ணிட்டு நிம்மதியாய் தூங்குங்கோ !''
அவர்களை உள்ளே அழைத்து சென்று அமர செய்தவர் பின் , அடுக்களையை நோக்கி , உரத்த குரலில் ,
'' கமலா ...குடிக்க தீர்த்தம் கொண்டு வா ..''
என்றார் ;
அடுத்த கணம் தீர்த்த சொம்பு சகிதம் அங்கே வந்த கமலாம்பாளின் கண்கள் , அங்கு அமர்ந்திருந்த புதியவர்களை கண்டு வியப்பில் விரிந்தன !
' யார் இவர்கள் ?'
'' கமலா ...''
தியாகராஜரின் குரல் அவளை தட்டியெழுப்பியது ;
'' கமலா .....இவர்கள் நமது விருந்தாளிகள் ..! .இன்று நமது கிருஹத்தில் தங்க போகிறார்கள் ..இரவு உணவை இவர்களுக்கும் சேர்த்து தயார் செய் ! ''
தீர்த்த சொம்பை அவளிடமிருந்து வாங்கியவாறே இயல்பாய் பேசினார் அவர் ;
' ....அடடா ..வீட்டில் இரண்டு பேர்களுக்கு போதுமான அரிசியே இல்லை .. !..இப்போது , .ஐந்து பேர்களுக்கு உணவு தயாரிக்க வேண்டுமானால் அரிசிக்கு என்ன செய்வது ?...பக்கத்து வீட்டுக்கு சென்று அரிசி வாங்கி வர வேண்டியது தான் '
உள்ளுக்குள் எண்ணியவள் , பின் எதையும் வெளிக்காட்டாமல் , புன்னகையுடன் அவருக்கு தலையசைத்து விட்டு , அடுக்களையை நோக்கி விரைந்தாள் ;
போன வேகத்திலேயே ,அங்கிருந்த பாத்திரங்களில் ஒன்றை கையில் எடுத்தவள் , பின் அதை யார் கண்ணிலும் படாமலிருக்க புடவையால் மறைத்தவாறு அங்கிருந்து வெளியே வந்த அக்கணம் ....
அந்த சிறிய கூடத்தில் அமர்ந்திருந்த அந்த முதியவரின் குரல் அவளை தடுத்து நிறுத்தியது ;
'' அடடா ...எங்கே செல்கிறீர்கள் அம்மா ?........எங்களுக்காக சிரமப்பட வேண்டாம் .! ....எங்களிடம் , வேண்டிய அளவு தேனும் , தினை மாவும் இருக்கிறது .....இரண்டையும் பிசைந்து ..ரொட்டி தட்டி , நாம் அனைவரும் சேர்ந்தே சாப்பிடலாம் !''
அவளின் மனதை படம் பிடித்து காட்டியது போன்று பேசியவரை , வியப்புடனும் , தர்மசங்கடத்துடனும் அவள் பார்த்து கொண்டிருக்கும் போதே, அவள் சற்றும் எதிர்பாராத கையில் , தேனும் , தினை மாவும் அடங்கிய ஒரு சிறிய பையை அவளிடம் நீட்டினார் அந்த முதியவர் ;....!
தயக்கத்துடனும் , சங்கோஜத்துடனும் அதனை பெற்று கொண்ட அவள் , உணவுத்தயாரிக்கும் பொருட்டு , அடுக்களையை நோக்கி விரைந்தாள் ...
அன்று இரவு ,அனைவரும் அந்த ரொட்டியை சாப்பிட்டு பசியாற .....
.தியாகராஜர் , அவர்களுடன் விடிய விடிய பேசிக்கொண்டிருந்து விட்டு , பின் , ஒரு கட்டத்தில் உறங்கி போனார் .. ..
.. பொழுது விடிந்தது !
காலைக்கடன்களை முடித்து விட்டு , கூடத்தில் அமர்ந்து , வழக்கம் போல கண்களை மூடியவாறு , ராம நாமத்தை ஜபித்தவாறிருந்த தியாகராஜர் , குரல் கேட்டு கண்களை திறந்தார் .
" ஸ்வாமி .. ..! "..
எதிரே புன்னகையுடன் அந்த முதியவர் !
அருகே , அவரின் பார்யாளும் , மற்றும் அந்த இளைஞனும் ...!
அந்த முதியவர் தொடர்ந்தார் ....;
'' ரொம்ப சந்தோஷம் .....நாங்க காவேரியில் ஸ்நானம் பண்ணிட்டு அப்படியே கிளம்பறோம் .....இரவு தங்க இடம் கொடுத்து ....வாய்க்கு ருசியாய் ஆகாரமும் கொடுத்து ...அன்பாய் உபசரித்ததற்கு மிக்க நன்றி ..''
கூப்பிய கரங்களுடன் அந்த முதியவர் பேச ..
அருகே அந்த மூதாட்டியும் , இளைஞனும் அவரின் வார்த்தைகளை ஆமோதிப்பது போன்று தலையசைத்தவாறு நின்றிருந்தனர் ..
சொல்லி விட்டு மூவரும் அங்கிருந்து கிளம்ப ......
.தியாகராஜரும் அவர்களை வழியனுப்பும் நிமித்தமாய் , அவர்களுடன் வாசலுக்கு வந்தார் ...
அவர்கள் மூவரும் வாசலை கடந்து , தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிக்க ...
அவர்கள் செல்வதையே கண் இமைக்காமல் பார்த்தவாறு நின்றிருந்த தியாகராஜரின் கண்களில் ' சட்டென்று ' ஒரு தெய்வீக காட்சி இப்போது !
அந்த வயோதிகர் , ஸ்ரீ ராமனாகவும் .
அந்த மூதாட்டி , சீதையாகவும் ,
அந்த இளைஞன் , ஸ்ரீ அனுமனாகவும் தோற்றமளிக்க .....
அவருக்குள் இனம் புரியாத ஒரு பதைதைப்பு !
கண்கள் பனிசோர ..நா தழுதழுக்க .. ... தன்னை மறந்து பக்தி பரவசத்தில் ஆனந்த கூத்தாடினார் !
'' என் தெய்வமே ....தசரதகுமாரா ....ஜானகி மணாளா ....நீயா என் கிருஹத்துக்கு வந்தாய் ?..... என்னே நாங்கள் செய்த பாக்கியம் ...அடடா .....வெகு தூரத்திலிருந்து நடந்து வந்ததாய் சொன்னாயே ... உன் காலை பிடித்து அமுக்கி , உன் கால் வலியை போக்குவதை விடுத்து , ..உன்னை தூங்க விடாமல் ..விடிய விடிய பேசிக்கொண்டே இருந்தேனே ...மகா பாவி நான் ! .....என் வீட்டில் தரித்திரம் தாண்டவமாடறதுன்னு தெரிஞ்சு , ஆகாரத்தையும் கொண்டு வந்ததுடன் , ஒரு தாய் , தகப்பனாயிருந்து எங்கள் பசியையும் போக்கினாயே ! உனக்கு அநேக கோடி நமஸ்காரம் ! ''
நடு வீதி என்பதையும் மறந்து கண்ணீர் மல்க கதறி அழுதார் தியாகராஜர் !
அப்போது அவர் திருவாயினின்று , அனிசையாய் ,
'' சீதம்ம.....மாயம்ம...''

என்கிற கீர்த்தனை பிறந்தது !

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !

  

No comments:

Post a Comment