Friday, December 6, 2019

Stomachache & Tirupati venaktesa perumal

வயிற்று வலிக்கு மருந்து... J K SIVAN

ஏன் திருப்பதி வெங்கடாசல்பதியை மட்டும் தேடிக்கொண்டு எங்கிருந்தெல்லாமோ கோடானு கோடி பக்தர்கள் வருகிறார்கள். மணிக்கணக்காக நின்று ஒரு வினாடி தரிசனம் ரொம்ப தூரத்திலிருந்து பெறுகிறார்கள்.கிட்டே போகக்கூட முடியவில்லை... காரணம் அவன் ஒருவன் தான் கலியுக வரதன் என்று நிரூபிக்கிறவன் என்று லக்ஷம் குரல்கள் கேட்கிறதா? தீராததை தீர்த்து, முடியாததை முடித்து, ஆபத்திலிருந்து காப்பாற்றி, வேண்டியதை தந்திடும் வெங்கடேசன். நமக்கு மட்டும் அல்ல ஹிந்து அல்லாத வெள்ளைக்காரனுக்கு கூட அருள் புரிந்தவர்.

வெள்ளைக்கார அரசாங்க கவர்னர் தென்னையில் தாமஸ் மன்றோ. ஐலண்ட் கிரௌண்ட் எனும் தீவுத்திடலில் ஜம்மென்று குதிரை மேல் நூற்றுக்கணக்கான வருஷங்களாக உட்கார்ந்து இருக்கிறாரே அவரைப் பற்றி தான் சொல்கிறேன்.
ஆந்திராவில் சித்தூரில் கலெக்டராக இருந்தபோது திருப்பதி அவர் ஜில்லாவில் கட்டுப்பாட்டில். கலெக்டர் சர்வாதிகாரி. திருப்பதி கோவிலுக்கு நிறைய பக்தர்கள் வருகிறார்கள். காணிக்கைகள் நிரம்புகிறது. அவற்றுக்கு நேர்மையாக கணக்கு காட்டுகிறார்களா என்று கண்காணிப்பார். திடீர் திடீரென்று பார்வையிடுவார். அந்த க்ஷேத்திரத்தின் பெருமை பற்றி மக்கள் பேசுவதை பற்றி கேள்விப்பட்டதோடு சரி. திருப்பதியில் நாள் தோறும் எவ்வளவு பணம் சேர்ந்து வெள்ளை அரசாங்கத்துக்கு செல்கிறது என்று தான் அக்கறை.

மன்றோ பெருமாளை ஒரு நாளும் பார்க்கா தவன். மன்றோவின் பேர் சொன்னாலே கோவில் நிர்வாகிகள் பயந்தனர். ஈவிரக்க மில்லாமல் தண்டிப்பான். எல்லோரையும் சந்தேகிப்பான். திட்டுவான். தப்பு கண்டு பிடிப்பான். தண்டனை கொடுப்பான். பாவம், அந்த அர்ச்சகர்கள், கோவில் நிர்வாக அதிகாரிகள், தங்கள் தங்கள் வருத்தத்தை, ஏமாற்றத்தை வெங்கடேசா நீ தான் தீர்க்கவேண்டும் என்று வேண்டுவார்கள்.
ஒரு கோரமான சம்பவம் சொல்கிறார்கள். அது உண்மையாம்.

திருப்பதியில் முடி காணிக்கை கொடுப்பவர்களை ஏசி, அவமானப்படுத்து வானாம் மன்றோ. ரெண்டு மொட்டை தலைகளை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பானாம். கோவில் பக்தர்கள், அதிகாரிகள், வேலையாட்கள் கண்களில் ரத்தம் வடிப்பார்கள் . என்ன செய்ய முடியும்.யாரிடம் சொல்லமுடியும், பெருமாளைத் தவிர?

நேரம் வந்துவிட்டது மன்றோவை தண்டிக்க.
ஒருநாள் வழக்கம்போல் திருப்பதிக்கு வந்த மன்றோ உண்டியல், காணிக்கைகள் வரவு செலவு எல்லாம் கணக்கு பார்க்க வந்தவன், ஆலயத்தை சுற்றி மேற்பார்வை இட்டான்.
ஒரு மூலையில் கோவில் பிரசாதம் நெய் ஒழுகும் வெண் பொங்கலை சுடச் சுட சிலர் தரையில் உட்கார்ந்து எதிரில் இலையில் வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்ததை பார்த்தான்.

அருவருப்பாகி விட்டது. வயிறு குமட்டியது அதை பார்க்கவே. கோபம் தலைக்கேறியது. பக்தர்களை கண்டபடி திட்டினான்.
'' சீ சீ உணவா இது. பார்க்கவே வாயிலெடுக்க வருகிறதே. இதை எப்படி சாப்பிடுறீங்க. வியாதி வரவழைச்சுக்காதீங்க. துப்புங்க உடனே '' என்றான். எதிர்பாராத இந்த கட்டளை பக்தர்களை .நடுங்க வைத்தது. சிலர் அவன் அடி உதைக்கு பயந்து துப்பினாலும் மற்றவர்கள் வெங்கடேசன் பிரசாதம் என்று விழுங்கினார்கள்.
என்ன நடந்ததோ தெரியவில்லை. அங்கிருந்து மன்றோ நடந்தான். திடீரென்று சில நிமிஷங்களில் மன்றோவிற்கு தீரா வயிற்று வலி. கோவிலைத் தாண்டவில்லை. அதற்குள் பொறுக்க முடியாமல் துடித்தான். கத்தினான். அவனுடன் இருந்த வெள்ளைக்கார அலுவலர்கள், ஆலய நிர்வாகிகள் பணியாட்கள் அவனை தூக்கிக் கொண்டு அவன் பங்களாவுக்கு அழைத்து சென்றார்கள். இரவு வரை வலி தாங்கமுடியாமல் திணறினான். கத்தினான். .ஆங்கிலேய டாக்டர்கள் மருந்து மாத்திரை கொடுத்தார்கள். வலி நிற்கவில்லை, வலிக்கு காரணமும் தெரியவில்லை. தூக்கத்துக்கு ஊசி போட்டார்கள். தூங்க முடியவில்லை அவனால்.
நாட்கள் இப்படியே ஓடின.

ஒருநாள் திருப்பதி ஆலய தலைமை அர்ச்சகர் மன்றோவை அவன் கட்டளையிட்டபடி வேலை விஷயமாக பார்க்க வந்தார், அவரிடம் '' என்னால் எதையும் இப்போது பார்க்க முடியாது. நான் பலநாட்களாக வயிற்று வலியால் தவிக்கிறேன்'' என்று அழுதான் மன்றோ.

''ஐயா மன்றோ துரை , நான் ஒரு வார்த்தை சொல்லலாமா? கோவிக்காமல் அனுமதி கொடுப்பீர்களா? என்கிறார் அர்ச்சகர் தயங்கி தயங்கி. பயமும் பக்தியும் சேர்ந்து பேச்சு விட்டு விட்டு தான் வந்தது.. .

'' உம்ம்.. என் வலி தீர ஏதாவது தெரிந்தால் வழி சொல்லுங்கள் உடனே.''

' சில தினங்களுக்கு முன்பு வேங்கடேச பெருமாள் பிரசாதத்தை நீங்கள் அவமதித்து கண்டபடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசியதால் தான் இந்த துன்பம் உங்களுக்கு. இதுக்கு ஒரே ஒரு நிவாரணம் நீங்கள் அந்த பிரசாதத்தை கொஞ்சம் மதித்து எனக்கு இது நல்லது செய்யட்டும் என் துன்பம் தீரட்டும் என்று வேண்டிக்கொண்டு சாப்பிடுவது தான். சாப்பிட்டால் வலி குணமாகிவிடும்''

''எனக்கு கோபமில்லை. உடனே கொண்டுவாருங்கள் அந்த பிரசாதத்தை .சாப்பிடுகிறேன்'' என்றான் மன்றோ.

அர்ச்சகர் வெறுமே வரவில்லை.அவர் கை பையில் கொஞ்சம் அன்று காலை நைவேத்யம் செய்த வெங்கடேச பிரசாதம் வெண் பொங்கல் ஒரு பாத்திரத்தில் கொண்டு
வந்திருந்தார். ஆர்வத்தோடு அதை வாங்கிக்கொண்டான் மன்றோ. கண்களை மூடினான். மனதில் என்னவோ வேண்டினான். கையில் வாங்கிய பொங்கலை முழுவதும் ஆர்வத்தோடு மகிழ்ச்சியோடு சாப்பிட்டான்.
கை கழுவிக்கொண்டு படுக்கையில் அமர்ந்தான். சாப்பிடும் முன் வரை இருந்த வயிற்று வலி எங்கே போயிற்று?

''ஆச்சர்யமாக இருக்கிறதே. எங்கள் வெள்ளைக்கார டாக்டர்கள் என்னென்னவோ மருந்து மாத்திரை ஊசி போட்டார்கள். பல நாளாக என்னை வாட்டிய வயிற்றுவலி எப்படி இந்த பிரசாதம் சாப்பிட்டவுடன் மட்டும் தீர்ந்தது. பிரசாதத்தை நான் குறை சொல்லிய குற்றம் வலியை தந்தது. அதே பிரசாதம் அந்த வலியை நீக்கி விட்டது. இந்த ஆச்சர்யம் என் உயிருள்ள வரை மறக்கமாட்டேன். எல்லோரிடமும் சொல்வேன்.. '' என்றான் மன்றோ.

இது வெங்கடேசனின் கருணை என்றும் புரிந்து விட்டது.

''இனி நான் சும்மா இருக்கமாட்டேன். உடனே ஒரு வேலை செயகிறேன்'' என்றான். அதிகாரிகளை கூப்பிட்டான்.

''திருப்பதி திருமலையில் வேங்கடேசன் கோயிலில் வெண்பொங்கல் பிரசாதம், காலா காலத்துக்கும் பெருமாளுக்கு நைவேத்யமாக அளிக்கப்பட்டு எண்ணற்ற பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்பட வேண்டும். இதற்காக திருப்பதி அருகே உள்ள வயல்பாடு தாலுகாவில் உள்ள 'கோடபாயல்' எனும் ஊரில் வசூலாகும் பணம் அத்தனையும் கணக்கு தவறாமல் திருப்பதி பெருமாள் ஆலயத்துக்கு பொங்கல் தயாரிக்க பயன்பட வேண்டும். இதை எவரும் மீறக்கூடாது '' என்று ஆணையிட்டான்.

பின்னர் மன்றோ வெங்கடேச பெருமாள் பக்தர்களில் ஒருவன் என்று சொல்லவே வேண்டாம்.நிறைய அந்த கோவில் நிர்வாகம் பண்டிகைகள் நடத்த உதவினான்.

இன்றைக்கும் கோடபாயல் கிராம வரி வசூல் வருமானம் பொங்கல் ப்ரசாதத்துக்கு ''மன்றோ கங்காளம்'' என்ற பெயரில் மானியமாக
உதவுகிறதென்று கேள்விப்பட்டு ஆச்சர்யமாக இருக்கிறது. நல்ல நிர்வாகம். பொங்கலோடு கிராமத்தையும் சாப்பிடவில்லை.

உலகெங்கும் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கட்டுகிறார்கள் . வெள்ளைக்காரர்கள் நம்மைவிட அதி பக்தியாக உழைக்கிறார்கள். எல்லாம் பெருமாள் செயல். கலியுக வரதன் என்று தான் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேனே .

No comments:

Post a Comment