Monday, November 11, 2019

Janajaswant- Power of Rama bhakti

தெவிட்டாத விட்டலா 2ம் பாகம். J K SIVAN
(TODAY BECAUSE OF RAMJANMA BHOOMI COURT JUDGMT A STORY ON RAMA BAKTHI AS SPECIAL FOR YOU)

இன்னொரு மத்ஸ்யாவதாரம்

விட்டலன் பக்தர்கள் அன்றும் இன்றும் என்றும் எண்ணற்றோர். கணக்கிலடங்காதவர்கள். ஒரு எல்லைக்குள் உட்படாமல் எங்கும் அவனைப்போலவே நிறைந்திருப்பவர்கள். அத்தனை பேரையும் நமக்கு தெரியாத தால் அவர்களைப்பற்றி ஒரு எழுத்து கூட எழுதமுடியாது. ஆகவே ஜனஜஸ்வந்த் என்ற ஒரு பக்தர் பற்றி தெரிந்துகொண்டு எழுதுகிறேன்.
எத்தனையோ விட்டல பக்தர்கள் ஆவலோடு இதை தெரிந்து கொள்ள காத்திருக்கிறார்கள். க்ரிஷ்ணனைப் பற்றி, அவனருள் பெற்ற பக்தர்களை பற்றி சொல்லவோ, எழுதவோ முன் ஜென்மத்தில் நான் புண்யம் செய்திருக்கவேண்டும். எல்லோருக்குமா இந்த பாக்யம் கிட்டும்?
ஜனஜஸ்வந்த் ஒரு வியாபாரி. கோடிஸ்வரன். சிறந்த ராம பக்தன். அவனுக்கு ஐந்து பிள்ளைகள். அவன் வீடு மாளிகை போல் செல்வத்தில் திளைத்து இருந்தது. இருந்தும் அவன் இரவும் பகலும் ராமனை நினைக்க, வழிபட, மறக்கவில்லை. யார் வந்தாலும் அவர்களுக்கு வயிறு நிறைய சாப்பாடு. துறவிகள் பண்டாரங்கள், யாத்ரிகள் வந்தால் விழுந்து உபசரித்து உணவு உடை பொருள் எல்லாம் கொடுப்பான். அவன் வீட்டுக்கு வந்து விட்டு எவனும் வெறுங்கையோடு, பசியோடு திரும்பியதில்லை தான தர்மங்கள் நிறைய செய்வான்.
அதற்கு நேர் மாறாக அவன் பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள். தீயவர்கள். புலஸ்தியர் வீட்டில் ராவணன் பிறந்தமாதிரி அவனுக்கு இப்படி பிள்ளைகள். அப்பா இப்படி தான தர்மங்களுக்கு காசை வாரி வீசி எறிவது எரிச்சலை தந்தது. கோபமும் கூட. ''இந்த பைத்தியக்கார கிழவனை என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள்? ஜனஜஸ்வந்த் மகன்களோடு அவர்கள் மனைவிகளும் சேர்ந்துகொண்டார்கள்.
''இந்த அப்பன் நமக்கு துரோகி. நமது செல்வத்தை அழிக்கிறான். திட்டமிட்டு ஒரு நாள் ராத்திரி அப்பாவின் பணம், நகைகள் எல்லாம் எடுத்து எங்கோ ஒழித்து வைத்து விட்டார்கள். எல்லோரும் அந்த ஊர் ராஜாவிடம் சென்றார்கள். அப்பனை எப்படியாவது கொன்றுவிடவேண்டும் என்று விரும்பினார்கள். ராஜாவிடம் அப்பாவைப் பற்றி புகார் சொன்னார்கள்:
''எங்கள் தந்தை அறிவில்லாதவர். வீட்டில் இருக்கும் செல்வத்தை எல்லாம் வருவோர் போவோர்க்கெல்லாம் வாரி வீசுகிறார். ராஜா, நாட்டில் எல்லோருடைய செல்வமும் ராஜாவின் செல்வம். ராஜாவின் பாதுகாப்பு இல்லாவிட்டால் செல்வம் எல்லோருக்கும் களவு போய்விடும். உயிரும் போகும். உங்கள் செல்வத்தை ஒருவன் வீணடித்தால் நீங்கள் தண்டிக்க வேண்டாமா? எங்கள் அப்பாவை அழைத்து வரச் சொல்லி தண்டனை கொடுங்கள்'' என்று அழுதார்கள்..
ராஜாவும் எடுப்பார் கை பிள்ளை. சொந்த மதி இல்லாதவன். ஆட்களை விட்டு ஜனஜஸ்வந்த்தை பிடித்து கொண்டு வர சொன்னான். இந்த மாதிரி ராஜாவுக்கு மந்திரிகளும் அவ்வாறே கொடியவர்களாக அமைவது சுலபம்.
'''நீ தான் ஜனஜஸ்வந்த் என்பவனா? எதற்காக பிடிவாதமாக இருக்கிறாய்? உன் பிள்ளைகள் சொத்தை பிச்சைக்காரர்களுக்கு தூக்கி எரிய உனக்கு என்ன உரிமை? எல்லா பணத்தையும் காலி செய்துவிட்டாயாமே.
''ராஜா, நான் யாரையும் ஏமாற்றுபவனில்லை. சாஸ்திரத்தில் சொல்லியபடி என் உழைப்பில் சம்பாதித்த ஊதியத்தை ஏழைகள் எளியவர்கள் , சாதுக்களுக்கு தான் அன்னமிட்டு ஆடை அளித்து வருகிறேன். தர்மம் தானம் செய்வது தான் பணத்தின் பலன் என்று பெரியோர்கள் முன்னோர்கள் காட்டிய வழியில் வாழ்ந்து வருகிறேன். ராமனுக்கு என்னால் ஆன அணில் சேவை செய்து வருகிறேன்.'' ராஜா ஆத்திரத்தில் கண்கள் சிவக்க என்னெதிரிலேயே இவன் தானம் தர்மம் என்று பணத்தை வாரி வீசுகிறேன் என்று சொல்கிறானே. நீங்கள் சொல்வது சரி. இந்த மனிதனின் பிள்ளைகளே நீங்கள் சரி என்று சொன்னால் இவனை இப்போதே கொல்ல உத்தரவிடுகிறேன்'' என்றான் ராஜா. தீய கொடிய பிள்ளைகள் எப்போது அவன் சாவான் என்று எதிர்பார்ப்பவர்கள் சந்தர்ப்பத்தை விடுவார்களா. ராஜா ''இவர் எங்கள் அப்பா இல்லை. துரோகி. இவனை கையை காலை கட்டி ஆழ் கடலில் போட்டாலும் சம்மதம் தான் '' என்றார்கள் அவன் பிள்ளைகள்.
ராஜாவின் உத்தரவு ப்படி கையை காலை கட்டி ஒரு பாறையோடு அவனை சேர்த்து கட்டி ஆழமான பெரிய ஒரு குளத்தில் ஜனஜஸ்வந்த் தூக்கிபோடப்பட்டான். ''ராமா எல்லாம் உன் செயல், கட்டளைப்படியே நடக்கும்'' என்று ஜனஜஸ்வந்த் ராமனை வேண்டிக்கொண்டு குளத்தில் வீழ்ந்தான்.
அந்த குளத்தில் ஒரு பெரிய ஆமை தன் மேல் பொத்தென்று ஜனஜஸ்வந்த் விழுந்ததைக்கண்டு அவனை முதுகில் தாங்கிக்கொண்டது. அப்படியே அவனை நீர் மேல் ஸ்வாசிக்கும்படியாக தெப்பம் போல் தூக்கிக்கொண்டு மிதந்தது. மன வருத்தத்தோடு ஜஸ்வந்த் சாவதை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அவன் ஆச்சர்யமாக ஆமைமுதுகில் சவாரி செய்வதை கண்டு பார்த்தார்கள். மந்திரிகளுக்கு பயம் வந்துவிட்டது. ;ஒரு நல்ல ஆன்மீக பக்தனுக்கு இப்படி தண்டனை வாங்கிக் கொடுத்தோமே கடவுள் அவன் பக்கம் இருக்கிறார். இனிமேலாவது நாம் அவன் காலடியில் விழுந்து மன்னிப்பு கேட்டு திருந்தவேண்டும் என்று முடிவெடுத்தார்கள். ராஜாவுக்கும் செய்தி சென்றதும் அதிசயித்தான். தான் செய்த தப்பு புரிந்தது. வருந்தினான். உடனே குளத்துக்கு ஓடினான். ஆமை கரை நோக்கி ஜஸ்வந்த்தை கொண்டு சேர்த்தது. நீருக்குள் குதித்தான். தனது கையால் கட்டுகளை அவிழ்த்தான். ஜனஜஸ்வந்த் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.
ராஜா ஜனஜஸ்வந்த் பிள்ளைகளை பிடித்து சிறையிலிட்டான். ஜன ஜஸ்வந்த் அவர்களை விடுவிக்க கோரினார், அவருக்காக அந்த பிள்ளைகளை விடுவித்தான் ராஜா. அவர்களும் தாங்கள் திருடிய செல்வத்தை எல்லாம் ராஜா முன் கொண்டுவந்து கொட்டி உயிர் பிச்சை கேட்டு தந்தையிடம் மன்னிப்பு வேண்டினார்கள். தந்தையைப் போல் அவர்களும் ராமன் மஹிமை உணர்ந்து சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.

No comments:

Post a Comment