Thursday, October 31, 2019

Arrival of Soota mahrishi - Garuda purana in tamil

கருட புராணம் J K SIVAN

1 மகரிஷி சுதரின் வருகை

நைமிசாரண்யம் எப்போதுமே ரிஷிகள் மயமாக இருக்கும் . அடிக்கடி கூடுவார்கள் நாட்கணக்கில், மாதக்கணக்கில், ஏன் வருஷந்தோறும் அங்கே ரிஷிகள், யோகிகள், முனிவர்கள் கூடி தனித்தனியாக தவமும் இருப்பார்கள். வேதாந்த விசாரத்தில் தர்க்கம் பரிவர்த்தனையும் நடக்கும்.

ஒரு நாள் சுதர் என்கிற மகரிஷி நைமிசாரண் யம் வரப்போகிறார் என்ற சேதி காற்றில் வந்தது. சௌனகர் அவரிடம் மிக்க பக்தி கொண்டவர். இவர்கள் இருவருமே நல்ல மனப்பக்குவம் வாய்ந்த மஹரிஷிகள். சௌனகரும் மற்ற சில ரிஷிகளும் நைமிசாரண்ய எல்லைக்கு சென்று காத்திருந்தனர். சௌநகரின் கவனம் மேலே சில கருடன்கள் பறபதில் லயித்தது. ஏதோ வெகுநாளாக அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றை நினைவு படுத்துகிறதா? .
அவர் இப்படி சிந்தனையில் ஆழ்ந்திருந்தபோது அருகே சில ரிஷிகள் பேசுவது காதில் விழுகிறதை கேட்போமா?

''பரமாத்மா, பிறப்பு இறப்பு இல்லா , அழிவில்லா முடிவில்லா, ஞானமயம். பரிசுத்தமான ப்ரம்ம ஸ்வரூபம். அருவமானவர் சர்வமயமானவர். சகலத்திலும் உள் நின்று ஒளிர்பவர். ஹரி ஹரி ஹரி, நாராயணன் என்று அவரை போற்று கிறோம்.

''நாராயணா, மனம் வாக்கு காயம் யாவிலும் நீயே . ஹரி நீயே ருத்ரன், நீயே ப்ரம்மா. நீயே சிருஷ்டி ஸ்திதி சம்ஹார மூர்த்தியாக திரி மூர்த்தியானவன்''.

இதோ சுதர் வந்துகொண்டிருக்கிறார். நெருங்கிவிட்டார். சுதர் சிறந்த விஷ்ணு பக்தர். எங்கெல்லாமோ தீர்த்த யாத்திரை க்ஷேத்ராடனம் செய்துவிட்டு நைமிசாரண்யம் வந்திருக்கிறார். சௌனகர் மற்ற ரிஷிகள் சூழ, சுதரை வரவேற்று உபசரிக்கிறார்.

''சுத மகரிஷியே, உங்கள் வருகை மஹத்தானது. ப்ரம்ம ஞானி அல்லவா தாங்கள். உங்களிடம் தான் எங்கள் ஸந்தேஹங்கள் சிலவற்றை தெளிவு படுத்திக்க கொள்ளவேண்டும். இது போன்ற அற்புதமான சந்தர்ப்பம் பகவான் கொடுத்தது. ''ஈஸ்வரன் யார், யாரை வழிபடவேண்டும்? பிரபஞ்ச காரணன் யார்? அதை ஸ்ரிஷ்டித்து, காத்து, சம்ஹரிப்பவன் யார்? தீமைகளை தீங்குகளை, தீயவர்களை ஒடுக்குபவர் யார்? எந்த யோகத்தின் மூலம் அவரை த்ரிப்திபடுத்தி அடையமுடியும்? அவர் அவதாரங்கள் என்ன குடும்பம் என்ன ? இதெல்லாம் எங்களுக்கு விவரமாக உபதேசிக்கவேண்டும்''

சுத மகரிஷி புன்சிரிப்புடன் பதிலளிக்கிறார்:
''சௌனக மகரிஷி, நீங்கள் கேட்ட வினாவுக்கு எல்லாம் ஒரே விடை ஒரு புராணத்தில் இருக்கிறது. அதை சொல்கிறேன். அதன் பெயர் கருட புராணம். விஷ்ணுவை பற்றி சகலமும் அதில் இருக்கிறது. கருடன் இதை காஸ்யப மகரிஷிக்கு சொல்ல, நான் வியாச மஹரிஷியிடமிருந்து இதை தெரிந்துகொண்டேன்.

தேவாதி தேவன் நாராயணன் தான். அவரே ஸ்ரிஷ்டிக்காக பிரம்மாவை தோற்றுவித்தவர். காப்பதற்கு தானே வாசுதேவனாக உருவெடுத்தவர். கௌமாரனாக அவதரித்ததும் அவரே. பிரம்மச்சர்ய ஸ்வரூபம். வராஹமாக உருவெடுத்து பூமியை பாயாய் சுருட்டி கடலடியில் ஹிரண்யாக்ஷன் ஒளித்து வைத்தபோது அவனைக் கொன்று பூமியை மீட்டவர்.ப்ரம்ம ரிஷியாக எல்லா ரிஷிகளுக்கும் சாத்வீகத்தை போதித்தவர். ஹரி இதோடல்லாமல் நர நாராயணர்களாக பல காலம் தவத்திலும் இருந்து தவ மஹிமையை, வலிமையை போதித்தவர். கபிலராக உருவெடுத்த மஹா சித்தர். சாங்க்ய யோக தத்வம் கற்பித்தவர். அவருடைய ஆறாவது அவதாரம் ஞாபகம் இருக்கிறதா? அத்ரி மஹரிஷியின் புத்திரனாக பிறந்தவர். அனசூயாவிடமிருந்து அன்விக்ஷிகி (metaphysics ) மந்திரம் உபதேசம் பெற்றவர். சயம்புவ மன்வந்தரத்தில் அவருடைய ஏழாவது அவதாரம் யஞம் என்பதாகும். எட்டாவதாக அவர் தோன்றியது மேருதேவ்யா வில் நாபி யின் மகனாக பிறந்ததாகும். ரிஷிகள் வேண்டுகோளுக்கிணங்க அவர் பிரித்துவாஸ் எனும் ஒன்பதாவது அவதாரம் எடுத்தவர். பிராம்மணர் முதலாக சகல ஜீவராசிகளும் மூலிகைப் பாலினால் தோன்றியது ஹரியால் மட்டுமே.

சக்ஷுச மன்வந்தரத்தின் முடிவில், பூமி நீருக்கடியே மறைந்தபோது ஹரி என்ன பண்ணினார் தெரியுமா. ஒரு பெரிய மத்ஸ்யமாக ( மீனாக) உருவெடுத்து மனு வைவஸ்தனை ஒரு படகில் வைத்து பிரளய ஜலத்தை கடக்க வைத்தார். பதினோராவது அவதாரமாக அவர் எடுத்தது ஒரு ஆமை வடிவம். தனது முதுகில் மந்தர மலையை தாங்கி நிற்கவைத்து அதை வாசுகியால் தேவர்களும் அசுரர்களும் கடையும் மத்தாக நிலை நிறுத்தினார். பன்னிரண்டு பதிமூன்றாவது அவதாரமாக நாராயணன் எடுத்தது மோகினியாக. அசுரர்களிடமிருந்து அம்ருதத்தை பாதுகாத்து தேவர்களுக்கு அளிக்க. பதினான்காவது அவதாரம் விசித்திரமானது. பாதி நரன் பாதி சிம்மம். தைத்யர்களின் தலைவன் ஹிரண்ய கசிபுவை தனது விறல் நகங்களால் கிழித்து கொல்வதற்கு. ரொம்ப சிறிய உருவினைக் கொண்ட பிராமண சிறுவனாக வந்தது வாமன அவதாரம் எனும் பதினைந்தாவது உருவம். மகாபலியை ஒடுக்கி மண்ணும் விண்ணும் இரண்டடியாக்கி மூன்றாவது அடியை மஹாபலியின் சிரத்தில் வைத்து அவனை பாதாள லோகத்திற்கு அனுப்பியது.
பிராமணர்கள் ரிஷிகள் ஆகியோரை சில க்ஷத்ரிய பலம் மிக்க அரசர்கள் வதைத்ததை தடுக்க அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி நாராயணன் எடுத்த பதினாறாவது அவதாரம் கோபக்கார ரிஷியாக பரசுராமர். இருபத்தொரு முறை க்ஷத்ரியர்களை பூண்டோடு அழித்தவர். பதினேழாவது அவதாரமாக வந்தது தான் சத்யவதி எனும் செம்படவ பெண்ணுக்கும் பராசர மகரிஷிக்கும் புத்திரனாக வந்து வேதங்களை தந்தது. வேதவியாச அவதாரம். ''வியாஸாய விஷ்ணு ரூபாய '' என்று சொல்கிறது நாராயணனின் இந்த அவதாரத்தில் தான் வேதத்தை நான்காக பகிர்ந்து மக்கள் அறிந்து கொள்ள வகை செய்தது. பதினெட்டு புராணங்களை தொகுத்து தந்தது. இதிகாசமான மஹா பாரதத்தை தந்தது. தேவர்களின் குறைகளை இன்னும் மீதி இருப்பதை குறைக்க தான் அடுத்ததாக ஸ்ரீ ராமராக தசரத மன்னனின் குமாரனாக உருவெடுத்தது. இலங்கைக்கு செல்ல சேதுவை தடுத்து பாலம் அமைத்த அதிசயம். பதினெட்டாவது பத்தொன்பதாவது அவதாரம் தான் ராமனாக கிருஷ்ணனாக வந்தது. பூமியின் பாரத்தை குறைத்தது. ராக்ஷஸர்களை அழித்து அமைதியை நிலைநாட்டியது. அப்புறம் தான் இந்த கலியுகம். மக்கள்மனதில் அமைதியை தெளிவை த்தர எடுத்த புத்தாவதாரம் . இனி வரும் காலத்தில் கொடுமை தீமை மேலோங்கும்போது அரசர்கள், நாட்டை ஆள்வோர் எல்லை மீறும்போது அழிவை நெருங்கும்போது நாராயணன் விஷ்ணுஜஸன் மகன் கல்கியாக அவதரிப்பார். ஹரியின் அவதாரங்களுக்கு கணக்கேது? சத்வ சத்ய சுரங்கம் அல்லவா அவர்.வேதங்களை
உணர்ந்த மனுக்கள் எல்லோருமே ஹரியிட மிருந்து தோன்றியவர்கள் அதிலிருந்து
உற்பத்தியானது தான் சிருஷ்டி. அப்படிப் பட்டவர்களை நாம் யாக யஞங்கள் மூலம் போற்றி வணங்க வேண்டும்.

மஹரிஷிகளே , உங்களுக்கு நான் சொல்லவந்த கருட புராணம் பெரியது. 8800 ஸ்லோகங்கள் கொண்டது. வியாசரால் இயற்றப்பட்டது. அவரால் எனக்கு சொல்லப்பட்டது என்றால் புரிந்துகொள்ளுங்கள்.''

சுதர் சொல்லியதை கேட்ட மஹரிஷிகள் மகிழ்ந்து அவரை வணங்கி மேற்கொண்டு அவர் சொல்வதை கேட்க தயாரானார்கள்.


No comments:

Post a Comment