ஸ்ரீமத்பாகவதம்- ஸ்கந்தம் 1௦
அத்தியாயம் 7 சகடாசுர, திருணாவர்த்த வதம்
ஒருநாள் குழந்தை கவிழ்ந்து கொண்டபோது ஜன்ம நக்ஷத்திரமும் கூடி இருக்க யசோதை கோபஸ்த்ரீகளை எல்லாம் அழைத்து வாத்தியமும் கீதமும் வேதியர்களின் மந்திரகோஷமும் முழங்கக் குழந்தைக்கு மங்கள ஸ்னானத்தை செய்வித்தாள்.
அந்தக் கோலாஹலத்தில் குழந்தை பாலுக்காக அழுததை அவள் கேட்கவில்லை.
கண்ணன் அப்போது ஒரு வண்டியின் அருகில் சயனித்துக் கொண்டிருந்தான். அவன் அழுது கொண்டே பாதங்களை உயரக்கிளப்பி உதைக்க இளந்துளிர் போன்ற பாதங்களால் உதைக்கப்பட்ட அவ்வண்டி குடை சாய்ந்து விழுந்து. ரஸமான பொருட்கள் அடங்கிய குப்பிகளும் பாண்டங்களும் நொறுங்கி சக்கரமும் அச்சும் குடமும் சிதறின.
எல்லோரும் அங்கு வந்து எப்படி இந்த வண்டி தானாக குடை சாய்ந்து விழுந்தது என்று ஆச்சரியப்படும்போது அங்கிருந்த சிறுவர்கள் அழுதுகொண்டிருந்த குழந்தையால் காலால் உதைக்கப்பட்டு இது தள்ளப்பட்டது என்று கூறியதை யாரும் நம்பவில்லை.
யசோதை குழந்தையின் கால்களுக்கு அடி பட்டிருக்குமோ என்று கால்களைத் தடவிப் பார்த்தாள்.இது க்ரஹபீடையாக இருக்குமோ என்று நந்தர் அந்தணர்களைக் கொண்டு ஸ்வஸ்தி வாசனம் செய்வித்தார்.
இது கம்சனால் அனுப்பப்பட்டு வண்டியின் சகடத்தில் ஒளிந்து கொண்டிருந்த அசுரனைக் கொல்வதற்காக கண்ணன் செய்த திருவிளையாடல் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.
பாகவதத்திலும் சகடாசுரானைப் பற்றி கூறப்படவில்லை. ,.ஆனால் ஹரிவம்சத்தில் சகடன் என்ற அஸுரன் வண்டிச்சக்கரம் உருவில் க்ருஷ்ணனைக் கொல்வதற்காக வந்தான் என்று காண்கிறோம். யாதவாப்யுதயத்திலும் நாராயணீயத்திலும் சகடசுரவதம் கூறப்பட்டிருக்கிறது,.
விதாரிதஸ்தஸ்ய பதாக்ரயோகாத் விகீர்யமாண: பஹுதா ப்ருதிவ்யாம்
சப்தாயமான:சகடாக்ய தைத்ய: சம்க்ஷோபயாமாஸ ஜகந்தி அகீர்ணம்
(யாத. 4.12 )
அந்த சகடன் என்ற அசுரன் குழந்தையின் கால் முனை பட்ட மாத்திரத்திலேயே பிளப்புண்டு தரையில் பல சிதறலாகச் சிதறி ஓசையை உண்டுபண்ணி உலகங்களையே உலுக்கிவிட்டான்.
நாராயணீயத்தில் பட்டாத்ரி கூறுகிறார்.
அநோநிலீன: கில ஹந்துமாகத:
ஸுராரிரேவம் பவதா விஹிம்ஸத:
ரஜோ அபி நோ த்ரஷ்டும் அமுஷ்ய தத் கதம்
ஸ சுத்தஸத்வே த்வயி லீனவான் த்ருவம் (நாரா.42.10)
"வண்டியில் ஒளிந்துகொண்டு உம்மைக் கொல்ல வந்த அசுரன் உம்மால் இவ்விதம் கொல்லப் பட்டான். அந்த அசுரனுடைய பொடி கூடக் காணப்படவில்லை. அது ஏன் என்றால் நிச்சயமாக அவன் சுத்த ஸத்துவ ஸ்வரூபியான உம்மிடம் லயித்துவிட்டான் அல்லவா!"
பின் ஒரு சமயம் யசோதை திடீரெனக் குழந்தை மலை போல் கனக்கவே அவனை பூமியில் விட்டு விட்டுத் தன் வேலையில் ஈடுபட்டாள்.அப்போது கம்சனால் ஏவப்பட்ட திருணாவர்த்தன் என்ற அசுரன் சுழற்காற்று வடிவில் வந்து குழந்தையைத் தூக்கிச் சென்றான்.
கண்ணனைத் தூக்கிக் கொண்டு ஆகாயத்தில் சென்றவன் மிகுந்த பாரத்தால் வேகம் குறைந்தவன் ஆனான். பாரம் மிகுதியால் அவ்வற்புதக் குழந்தையை விட்டுவிட விரும்பியபோதும் கண்ணன் அவன் கழுத்தை இறுகப் பிடித்திருந்ததால் விட முடியவில்லை. கழுத்தில் இறுக்கப்பட்டதால் செயலற்றுக் கண்பார்வை மங்கி அவ்வசுரன் கோகுலத்தில் குழந்தையுடன் விழுந்தான்.
மலை போன்ற அந்த உடலின் மேல் விளையாடிக் கொண்டிருந்த கிருஷ்ணனை கோபர்கள் எடுத்து வந்தனர். இதை நாராயண பட்டாத்ரி பெரிய மலையில் இருந்து ஒரு நீல ரத்தினத்தை எடுப்பதுபோல எடுத்தனர் என்கிறார்.
No comments:
Post a Comment