ஸ்ரீமத்பாகவதம்- ஸ்கந்தம் 9-அத்தியாயம் 8
ரோஹிதனின் வம்சத்தில் தோன்றியவன் பாஹுகன். அவன் எதிரிகளால் தோற்கடிக்கப்பட்டு வனம் புகுந்தான். பிறகு மூப்படைந்து இறந்தான். அவன் பட்டமஹிஷியான சுமதி உடன் கட்டையேற விரும்புகையில் அவள் கர்ப்பமாயிருப்பதை அறிந்த ஔர்வ மகரிஷியால் தடுக்கப்பட்டாள். அவளுடைய சக்களத்திகள் பொறாமையினால் அவளுக்கு விஷம் கொடுக்க அந்த விஷத்துடன் பிறந்தவன் ஸகரன்.
(கரம் என்றால் விஷம்) ஸகரன் சக்கரவர்த்தியானான். அவன் ஹரியை அஸ்வமேத யாகங்களால் ஆராதித்தான். யாகத்தில் அவிழ்த்து விடப்பட்ட குதிரையை இந்திரன் அபகரித்தான்.
அவன் புத்திரர்கள் குதிரையைத் தேடி நாலாபக்கமும் சென்று பூமியை தோண்டினார்கள். அதனால் உண்டானதுதான் ஸாகரம் எனப்படும் சமுத்திரம். அவர்கள் குதிரையைத்தேடி பாதாளத்துக்குச் சென்று வடகிழக்கில் கபிலாஸ்ரமத்தின் அருகில் அதைக் கண்டனர். அங்கு தியானத்தில் இருந்த கபிலறிக் கண்டு அவர்தான் குதிரையை கவர்ந்ததாகக் கருதி அவரை எதிர்க்க முற்பட்டனர். அவர் கண்விழிக்க அவருடைய உடலில் இருந்து கிளம்பிய தீயால் சாம்பலாயினர்.
ஸகரனின் மற்றொரு மனைவியின் புதல்வன் அஸமஞ்சஸன். அவன் பித்தனைப்போல தன்னைக் காட்டிக்கொண்டு குழந்தைகளை சரயு நதியில் எறிந்ததால் நாடுகடத்தப்பட்டான். பிறகு தன் யோகசக்தியால் அவர்களை பிழைப்பித்தான். அவன் புதல்வனான அம்சுமான் பாட்டனாரின் விருப்பப்படி குதிரையைத் தேடிச்சென்று கபிலரின் அருகே குதிரையையும் சாம்பற்குவியலையும் கண்டு அவரை நமஸ்கரித்தான்
. விஷ்ணுவின் அவதாரமான கபிலர் அவனிடம் அருள் புரிந்து யாகக்குதிரையை எடுத்துப் போகுமாறு கூறினார். அத்துடன் அவனுடைய பித்ருக்களின் சாம்பலை கங்கை நீரில் கரைத்தால் அவர்கள் நற்கதி அடைவார்கள் என்றும் கூறினார்.
அம்சுமானும் குதிரையை அழைத்துச்சென்று அவனுடைய பாட்டனாரின் யாகம் முடிவுறச் செய்தான். ஸகாரர் அவனிடம் அரசை ஒப்படைத்து ஔரவர் உபதேசத்தின்படி உயர்ந்த கதியை அடைந்தார்.
No comments:
Post a Comment