Wednesday, March 13, 2019

Srimad Bhagavatam skanda 8 adhyaya 9,10,11 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 8-அத்தியாயம் 9, 10 ,11

அத்தியாயம் 9
மோகினியைக் கண்ட அசுரர்கள் அவளிடம் சென்று தங்களுக்குள் ஏற்பட்ட கலகத்தைக் கூறி அம்ருதத்தை தங்களுக்கும் தங்கள் தாயாதிகளான தேவர்களுக்கும் சரியாகப் பங்கிட்டளிக்க வேண்டினர். மோகினி வேஷத்தில் இருந்த பகவான் நகைத்துக் கூறினார்.

கதம் கச்யபதாயாதா: பும்ஸ்சல்யாம் மயி ஸங்கதா: 
விஸ்வாஸம் பண்டிதா: ஜாது காநீஷு நயந்தி ஹி
"கச்யப தாயாதிகளே ,, (பும்ஸ்சலீ) ஆண்களை ஏமாற்றும் என்னிடம் நீங்கள் எவ்வ்விதம் நம்பிக்கை கொண்டீர்கள்? அறிவாளிகள் ஒருபோதும் காமினிகளிடம் நம்பிக்கை வைக்க மாட்டார்களே?"

கச்யபதாயாதி என்ற சொல்லுக்கு இரு அர்த்தங்கள். தேவர்களும் அசுரர்களும் கச்யபமுநிவருக்கு திதி அதிதி என்ற மனைவியரிடம் பிறந்த புத்திரர்கள் ஆதலால் தாயாதிகள். ஆனால் கஸ்ய என்றால் மது என்று ஒரு பொருள். ஆதலால் கச்யப என்பது குடிகாரன் என்று பொருளாகும்.

தாய என்றால் விளையாடுவது. அது அசுரர்களை குறித்து சொல்லப்படும்போது குடியினால் மதி இழந்தவர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். அதாவது (விஷ்ணு மாயையால்) மயக்கம் அடைந்துள்ளார்கள் அதனால் அவர்கள் ஏமாறப்போகிறார்கள் என்று பொருள்.

பும்ஸ்சலீ, என்பது பகவானையே குறிப்பிடுவதாகக் கொள்ளலாம் எப்படி என்றால் புமாம்ஸம் சலயதி இதி பும்ஸ்சலீ, எதிரிகளின் மனதை நடுங்க வைப்பவர் என்று பொருள் கொள்ளலாம்.

மோகினி கூறியதை விளையாட்டுச் சொல்லாக எடுத்துக்கொண்டு அசுரர்கள் பலமாக சிரித்து அவளை மீண்டும் அம்ருதத்தை பங்கிடுமாறு வேண்டினர். மோகினியும் அம்ருத பாத்திரத்தை கையில் வாங்கி " நான் செய்வது எதுவாயினும் நீங்கள் ஒப்புக்கொள்ளவேண்டும் ." என்று கூறினாள். அவளுடைய அழகினால் மோகமுற்ற அவர்கள அப்படியே செய்வதாக வாக்களித்தனர்

பிறகு மோகினி உருவத்தில் இருந்த ஹரியானவர் தேவர்களையும் அசுரர்களையும் தனித்தனி வரிசைகளில் அமர்த்தி அசுரர்களைத் தன் சாகசத்தினால் வஞ்சித்து தேவர்களுக்கு அம்ருதத்தை அளித்தார் .

பிறவியிலேயே கொடியவர்களான அசுரர்களுக்கு அம்ருதத்தைக் கொடுத்தால் அது பாம்புக்குப் பால் வார்ப்பது போன்ற செய்கை என்று எண்ணி அச்சுதர் அவர்களுக்கு அளிக்கவில்லை. அசுரர்கள் அவளிடம் கொண்ட மயக்கத்தால் சச்சரவு செய்யவில்லை.

ஆயினும் ஸ்வர்பானு (ராஹு) என்ற அசுரன் நிகழ்ந்ததை உணர்ந்து தேவர்கள் வரிசையில் போய் உட்கார்ந்து அம்ருதத்தைப் பருகி விட்டான். அதைக் கண்ட சூரியனும் சந்திரனும் பகவானிடம் அவனைச் சுட்டிக்காட்ட அவர் உடனே சக்ராயுதத்தால் அவன் தலையைத் துண்டித்தார். 
ஆனால் அம்ருதம் அவன் கழுத்தில் இறங்கி இருந்ததால் அவன் கீழ் பாகம் துண்டாகி விழுந்தது ஆனாலும் அவன தலை உயிருள்ளதாக இருந்தது. அது ராஹு என்ற கிரகமாக ஆகி சூரியனையும் சந்திரனையும் கிரகண காலத்தில் பீடிக்கிறது .

அத்தியாயம் 1௦/11
தேவர்களுக்கு அம்ருதத்தை அளித்த பின் பகவான் தன் சுய ரூபத்தை அடைந்தார். பின்னர் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பயங்கரமான யுத்தம் உண்டாயிற்று. அப்போது பலியின் மாய யுத்தத்தால் மனம் கலங்கிய தேவர்கள் பகவானைப் பிரார்த்திக்க அவர் கருடன் மேல் தோன்றினார். உடனே மாய சக்தி அனைத்தும் மறைந்தது.

இந்திரன் சம்பன், பாகன் நமுசி இவர்களைக் கொன்றான். விஷ்ணு கால்நேமியை அழித்தார். தேவர்கள் எவரும் அம்ருதம் உண்ட படியால் இறக்கவில்லை

பிரம்மாவால் தேவர்களிடம் அனுப்பப்பட்ட நாரதர் அசுரர்களின் அழிவைக் கண்டு தேவர்களை போரிலிருந்து தடுத்து நிறுத்தினார். உடல் அவயவங்கள் இழந்த அசுரர்களை சுக்ராச்சாரியார் பிழைப்பூட்டினார்.இந்திரனின் வஜ்ராயுதத்தால் அடிக்கப்பட்டு நினைவிழந்த மகாபலி சுக்ராச்சாரியாரின் ஸ்பரிசத்தால் மீண்டும் தன்னிலை அடைந்தான். தான் ஜெயிக்கப்பட்டபோதிலும் உலகத்தின் தத்துவத்தை அறிந்தவனாதலால் வருந்தவில்லை.

No comments:

Post a Comment